Go to concordance
[Version 2l (TRANSITORY): latest modification at 11:14 on 23/04/2017, train Hamburg-Paris]
{Entry: M13c__01}
பருவ மாகவி தோகன மாலையே // பொருவி லாவுழை மேவன கானமே // மருவு மாசைவி டாகன மாலையே // வெருவ லாயிழை பூவணி காலமே.
இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவு மெழுதி, அவ்வரி இரண்டையும் மேலுங் கீழும் ஒன்றிடையிட்டுக் கோமூத்திர ரேகைவழிப் படிக்க, ஒன்றுவிட் டொன்று மாறடி அச்செய்யுளே முடியுமாறு காண்க.
{Entry: M13c__02}
அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர் // தெருளின்மரு வாருசிர்ச் சீரே - பொருவிலா // வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு // குன்றே தெருள வருள்.
மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு // பெருகொளியான் றேயபெருஞ் சோதி - திருநிலா // வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த // மயரு மளவை யொழி.
இவ்விரண்டு பாட்டும் இரண்டு நாகங்களின் தலை நின்று தொடங்கி வால்முனைக ளிறுதியாக இடையிடையே தத்தம் உடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாச் சந்திகளினின்ற எழுத்தே மற்றை யிடங்களினு முறுப்பாய் நிற்க, ஒவ்வொரு பாம்பிற்கும், மேற்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், கீழ்சுற்றுச் சந்தி நான்கினும் நான்கெழுத்தும், இரண்டு பாம்பிற்கும் நடுச்சந்தி நான்கினும் இரண்டு பாட்டிற்கும் பொருந்த நான்கெழுத்துமாகச் சித்திரத்தி லடைபட்டு முடியுமாறு காண்க.
{Entry: M13c__03}
மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே.
இது, ‘மே’ என்னும் எழுத்து நடுவே நின்று ஆர்மேல் ஒவ்வோரெழுத்து நின்று சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவுநின்று கீழாரின் வழி யிறங்கி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடு வடைந்து முதலடி முற்றி, மறித்தும் நடுவுநின்று அவ்வாரின் வழித்திரும்பி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடி முற்றி, அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளும் வலஞ்சென்று முற்றிய வாறு காண்க.
{Entry: M13c__04}
தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த
கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த
பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க
தண்மை யகத்துப் பதுமத்த மாதர் தடங்கண்களே.
இது, ஆறாய் நடுவே ரகரம் நின்று ஆர் ஒன்றுக்கு ஒன்பதொன்ப தெழுத்தாய், குறட்டின்மேல் ‘போதிவானவன்’ என்னும் பெயர் நின்று, சூட்டின்மேல் இருபத்து நான்கெழுத்து நின்று, இடக்குறுக்காரின் முனை தொடங்கி அதனெதிராரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்த வலக்கீழாரின் முனைநின்று அதனெதிராரின் முனை யிறுதிசென் றிரண்டாமடி முற்றி, அடுத்த வலக்கீழாரின் முனைநின்று எதிர்த்த மேலாரின் முனையிறுதி சென்று மூன்றாமடிமுற்றி அதற்கடுத்த வலக்கீழாரின் முனைநின்று வட்டைவழி வலஞ்சுற்றி நான்காமடி முடிதல் காண்க.
‘கண்மலர்’ என்ற அடிமுடிவில் வட்டையில் நிற்கும் தகரத்தை இவ்வடிக்கு உயிர்மெய்யாகவும், வட்டைசுற்றி வாசிக்கும் நான்காமடிக்கு மெய் யாகவும் கொள்க. தகர வுயிர்மெய்யில் (த) என் னும் மெய் இருத்தலான் இங்ஙனம் கொள்ளற்கு நியாயம் ஏற்பட்டதென்க. இன்னும் இவ்வடியை வாசிக்கும்போது நடுவே நிற்கும் ரகரவுயிர்மெய்யை மேற்கூறிய நியாயப்படி மெய் (ர்) ஆகக் கூட்டிக் கொள்க.
{Entry: M13c__05}
மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க
மடமயி லியற்றக மாதிரம் புதைத்து
வளைந்து புகன்மே வல்லிருண் மூழ்க
வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி
மன்னுமா மடமொழி வடிவாள் வளவன்
கன்னித் துறைவன் கனகச் சிலம்பே.
இது, எட்டாராய், ஆர் ஒன்றுக்கு அவ்வாறெழுத்தாய், நடுவே ககரம் நின்று குறட்டின்மேல் ‘அறமே தனமாவது’ என்னுஞ் சொல் நின்று, சூட்டின்மேல் முப்பத்திரண்டு எழுத்து நின்று, இடக் குறுக்காரின் முனை நின்று தொடங்கி அதனெதிர் முனையி னிறுதி சென்று முதலடி முற்றி, முதல் தொடக்கத்துக்கு வலக்கீழாரின் முதற் றொடங்கி எதிரேறி இரண்டாமடி முற்றி, அதற்கடுத்தது அவ்வாறே ஏறி மூன்றாமடி முற்றி, அதற்கடுத்தது அவ்விதமே ஏறி நான்காமடி முற்றி, முதல் தொடங்கிய ஆரின் முதலெழுத்திலிருந்து வட்டைமேல் வலஞ்சுற்றி ஐந்தாவது ஆறாவது அடிகள் முடிந்தமை காண்க.
{Entry: M13c__06}
கவிமுதி யார் பாவே
விலையரு மா நற்பா
முயல்வ துறு நர்
திருவ ழிந்து மாயா
இது, செவ்வே யெழுதிய நாலடி நான்கு வரியுள், முதலடி முதலெழுத்தினின்றும் சுழி ரேகை வழியே மேனின்று கீழிழிந்தும், கீழ்நின்று மேலேறியும், புறநின்று வந்துள் முடிய இடஞ்சுற்றிப் படிக்க நாலடியு முடியுமாறு காண்க.
{Entry: M13c__07}
மாவா நீதா தாநீ வாமா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா.
இது, நாற் புறமும் தலைப்பாக வைத்து வரிசையாகப் படித்தாலும்,மடக்கிப் படித்தாலும், நான் கடிகளையும்மேனின்று கீழிறக்கியும்,கீழ்நின்று மேலேற்றியும் படித் தாலும் சொரூபங் கெடாமல் மாலை மாற்றாய் முடியுமாறு காண்க.
{Entry: M13c__08}
கான வாரண மரிய வாயினனே
தான வாரண மரிய வாயினனே
மான வாரண மரிய வாயினனே
கான வாரண மரிய வாயினனே
இது, மேலிரண்டடிகளுந் தம்முட் கோமூத்திரியாகவும், கீழிரண்டடிகளுந் தம்முட் கோமூத்திரியாகவும், சிறுவார் போக்கி, மேல்வரி மற்ற மூன்று வரி களிலும் கீழுற்று மீண்டு மேனோக்கவும், கீழ்வரியும் அவ்வாறே மற்ற மூன்று வரி களிலும் மேலுற்று மீண்டு கீழ்நோக்கவும் பெருவார் போக்கி, இந்தவார் நான்கும் நான்கு வரிகளாகவும் முடியுமாறு காண்க.
{Entry: M13c__09}
மாறா மாலாலே மாறாமா
மாறா மாவேளே மாறாமா
மாறாமா கோவா மாறாமா
மாறாமா வாதே மாறாமா.
இது, நடுப் பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத் துள்ள அகவிதழ் புறவிதழ் சென்று வலமே அடுத்த புற விதழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ் வழிபுறவிதழ்சென்று முதலடிமுற்றி, மறித்தும்பொகுட்டி னின்றும் கீழ் வலக் கோணத்துள்ளஅக விதழ் புறவிதழ்வழி அடுத்த கீழ்க் கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள புறவிதழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மேலிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன்புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி, மறித்தும் பொகுட்டினின்று மேலிடக்கோணக் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவிதழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து முதலடி தொடங்கிச் சென்ற கோணத்திதழ்களிற் சென்று நான்காமடி முற்றியவாறு காண்க.
{Entry: M13c__10}
நாராரா ராய நயன யணாவிண்ண்
ணாராம ணாயனில மாயவா - சீராய
நன்கா நமநம நன்கா நமநம
மன்காமன் றாதாய் நம.
மாயவனே! வேத மதியே! வயநாக
பாயவனே! தே!நளின பாதா! பராபரா!
தூயவனே! காரணா! பூரணா! தோணிலமா
னாயகனே! சீராக நாராய ணாய நம.
இவற்றுள் முதற்பாட்டு, மேற் பாதியின் சிகரத்தி னின்றும் இருமருங் கிலுமிடையிலும் நாராயணாயநம வென்னும் மந்திரம் நிற்க வலமிடமாக மடங்கியிறங்கி முடியுமாறும், பிற் பாட்டு, கீழ்ப்பாதி யின் மேற்றளத்தின் முதலறை தொடங்கி வலமிடமாக மடங்கி யிறங்கி அடியறையி னின்று நடுப்பத்தி யில் நாராயணாய நமவென் றேழ் தளத்தும் மாறாடியேறி முடியுமாறுங் காண்க. இதனுள் விண்ண் என்னுமொற்றளபெடை யோரெழுத்தாதலால் அறிகுறியொழிய வோரறையுள் நின்றது.
{Entry: M13c__11}
நாதா மானதா தூய தாருளா
ணீதா னாவா சீராம னாமனா
போதா சீமா னாதர விராமா
தாதா தாணீ வாமனா சீதரா.
இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு மேனின்று கீழுங் கீழ்நின்று மேலுமாக எழுதத் தோன்றிய பத்தெழுத்துவரி மூன்றினுள் இடைவரியாய் மறைந்து கிடைப்பது காண்க.
{Entry: M13c__12}
கோல நிலமேலழகு கூடு நெடு வீடுற மா
மூலம்எனச் சென்று உதவு முன்னோனே! - நீலமணி
வண்ணா! வடமலையா! மாதவா! கஞ்சமலர்க்
கண்ணா! சரணாகதி.
இது, முகப் பின் பூட்டுவாய் தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி, மறித்து மவ்வறை யின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறா மறைவரை சென்று, அதன்கீழறை யிறங்கி மறித்தும் முன் போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே சுற்றி யிறுதியறைசென்று முடியுமாறு காண்க.
{Entry: M13c__13}
நாகநக ராகநிதி நாகரிக ராகநிறை
ஏகநக ராசிஇணை யில்லா - தார்கணிகழ்
தென்அரங்கன் ஆளாய சீராளரா ஞான
நன்னரங்கர்க் கேஅடியேன் நான்.
இது, பூட்டுவாய் நின்று வலப்பக்கமிரண்டாமறைசென்று கீழறையினிறங்கி அவ்வழியே மேலறையிலேறியிறங்கி வலஞ்சென்று இடையிடையேயுள்ள குண்டுகளாகிய நான்கறைகளிலுஞ்சென்று மீண்டுமிறுதியறைசென்று முடியுமாறு காண்க. (இப் பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும் சுத்தபாடந் தோன்றாமையாலும் பந்தத்திற்குப்பொருந்து மாறு இங்குச் சிறிது வேறுபடுத்தியெழுதப்பட்டிருக்கிறது.)