Section P16b inside TIPA (Tamiḻ Ilakkaṇap Pēr Akarāti)

Go to concordance

List of 21 alphabetical subsections

  1. அ section: 42 entries
  2. ஆ section: 33 entries
  3. இ section: 23 entries
  4. ஈ section: 16 entries
  5. உ section: 19 entries
  6. ஊ section: 1 entries
  7. எ section: 14 entries
  8. ஏ section: 4 entries
  9. ஐ section: 2 entries
  10. ஒ section: 14 entries
  11. ஓ section: 6 entries
  12. ஒள section: 1 entries
  13. க section: 65 entries
  14. ச section: 39 entries
  15. ஞ section: 4 entries
  16. த section: 44 entries
  17. ந section: 69 entries
  18. ப section: 96 entries
  19. ம section: 79 entries
  20. ய section: 6 entries
  21. வ section: 33 entries

P16b

[Version 2l (transitory): latest modification 2017/04/19, 08:51, Hamburg time]

பாயிரம், மரபியல் (610 entries)

[Part 2 of TIPA file P16 (and pages 193-376 in volume printed in 2004)]

அ section: 42 entries

அஃகா வன்பு -

{Entry: P16b__001}

பெருக்கத்தைக் குறையாதவாறு செய்யும் வலியுடைத்தாகிய அழுக்காறின்மை. இஃது ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப்பாயிரத்துள் நல்லாசிரியனுக்குரிய பண்புகளிடை ஒன்று. வன்பு, வலி என்பன ஒரு பொருளன.

‘அஃகா அன்பு’ என்றல் பொருந்தாது. அன்பு முதலாயின ஆசிரியனுக்குரிய முதல்உறுப்பு ஆகிய குடிப்பிறப்பின் பொது இயல்பின்கண் அடங்கும். பிற உறுப்பினுள் அழுக்காறாமை கூறப்படவில்லை. அழுக்காறிலாமை இன்றேல், ஏனைய உறுப்பெல்லாம் ஒருங்கு இருப்பினும் பயனின்று. புறப்பொருள் வெண்பா மாலையுள் ‘அவையமுல்லை’ பற்றிய வெண்பா விலும் அன்பு கூறப்படாமல் அழுக்கா றாமையே கூறப்பட் டுள்ளது. ஆதலின் ‘அஃகாவன்பு’ என்பதே நல்லாசிரியன் பண்பினுள் ஒன்றாகும். (பா. வி. பக். 15,16)

அகக்காழிற் குரியன -

{Entry: P16b__002}

அகக்காழ் - மரத்தினுள்ளே உறுதியான (வயிரப்) பகுதி. அகக்காழ் உடையது மரம். அதற்குரிய உறுப்புக்களாவன : இலை, குருத்து, தளிர், மலர், தோடு, கப்பு, கம்பு, கொத்து, கொம்பு, நனை, இதழ், தாது, அல்லி, புல்லி, முளை, கிழங்கு, காய், பழம், தோல், செதில், வீழ் என்பன. (தொகை.)

இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை என்பன. (தொ. பொ. 642 பேரா.)

கோடு, காழ், தழை, கப்பு, வளார், தளிர், முருந்து, முகை, மலர்க் கொத்து, இலை, பயின், மொட்டு, மலர் (தாது, தேன், அகவிதழ், புறவிதழ் என்பன பூவின் உறுப்புக்கள்), முளை, வேர், கிழங்கு, விதை, பிஞ்சு, பசுங்காய், பழம், தோல் முதலாயின. (பிங். 2795-2831)

அகத்தியமும் இணைநூல்களும் -

{Entry: P16b__003}

“அகத்தியன் அருளிச்செய்த சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இருநூலும் தமிழிற்குச் செயற்கை முதல்நூல் ஆயின.”

“நாரதன் முதலியோரும் அகத்தியனை வழிபட்டுத் தலைவர் ஆயினார் ஆவர் ஆகலின், பிறிதொரு செயற்கை நூலின் வழித்தாக நூல் செய்யார் ஆகலானும், நாரதன் இசைத்தமிழ் ஒன்றே முற்றக் கூறினான் எனவும் ஏனையோர் ஒரு தமிழா யினும் முற்றக் கூறாது சிற்சில பகுதியே கூறினார் எனவும் பிறநூல்களான் அறியப்படலானும், அவ்வாசிரியர் செய்த நூலெல்லாம் அகத்தியத்துக்கு இணையாகிய செயற்கை முதல்நூல் எனப்படும்.” (பா. வி. பக். 97)

அகத்தியனுக்கு மாணாக்கர் பன்னிருவர். தொல்காப்பியன் முதலான அவருள்ளே, தொல்காப்பியன், அவிநயன் முதலா யினார் முதல்நூலாகிய அகத்தியத்தினின்று இயற்றமிழை வேறுபிரித்து வழிநூல் செய்தனர். பெருநாரை, பெருங்குருகு முதலாய நூலுடையார் இசைத்தமிழை வேறுபிரித்து வழி நூல் செய்தனர். அவ்வழிநூல்கள் எல்லாவற்றினும் சிறந்தது சிகண்டி செய்த இசை நுணுக்கம். முறுவல், சயந்தம், குண நூல், செயிற்றியம் முதலாய நூலுடையார் நாடகத்தமிழை வேறுபிரித்து வழிநூல் செய்தனர். இசைநுணுக்கம் போலவே, தொல்காப்பியத்தின் முன்னர்த் தோன்றிய வழிநூல்கள் பூதபுராணமும் மாபுராணமும் ஆம். தொல் காப்பியன் முதற் பன்னிருவரும் ஓரொருவர் ஓரொரு படலமாகப் பன்னிருபடலம் என்னும் வழிநூல் ஒன்றும் செய்தனர். (பா. வி. பக். 104.)

முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் இயற்றிய நூல்கள் செயற்கை முதல்நூல் எனப்படுவன. செயற்கை முதல்நூலெல்லhம் முனைவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழி இயற்றப் பட்டமையின், அவற்றுள் முடிந்த நூலாகிய அகத்தியத்திற்கு ஏனையவை இணைநூல் ஆயின. (பா. வி. பக். 98)

அகப்பாட்டெல்லை -

{Entry: P16b__004}

அகப்பாட்டெல்லையாவது ஒரு பரப்பின் கிடக்கையினை அகப்படுத்தும் எல்லை. இவ்வாறு அகப்பாட்டெல்லை என்று வேங்கடம் குமரியைச் சுட்டுவது பொருந்தாது என இளம்பூரணரையும் நச்சினார்க்கினியரையும் அரசஞ்சண் முகனார் மறுப்பார். குமரியை யாறு என்றல் பொருந்தாது. வடக்கின்கண் எல்லையாக ஒருமலை கூறினார்க்குத் தெற்கின்கண்ணும் நிலையுடைத்தாய ஒருமலை கூறலே முறையென்று கருதுவார் சண்முகனார்; தொல்காப்பியரும் பிற ஆசிரியரும் அகப்பாட்டெல்லை புறப்பாட்டெல்லை என யாண்டும் கூறாமையைச் சுட்டுவார். குமரியை அவ்விரு வரும் குமரியாறு எனக் கொண்டனர். (பா. வி. பக். 201)

வடவேங்கடம் தென்குமரி : நிலம் கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும் வேங் கடத்தை எல்லையாகக் கூறினார்; குமரியும் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார்; இவ்விரண்டனையும் காலையே ஓதுவார்க்கு நல்வினை உண்டாமென்று கருதி இவற்றையே கூறினார்; இவை இரண்டும் அகப்பாட்டெல்லையாயின. (தொ. சிறப்புப் பாயிரம். நச்.) எனவே, ஒரு நிலப்பரப்பின் வெளி எல்லைகள் அதற்கு அகப்பாட்டு எல்லையாகும்.

அகல உரை -

{Entry: P16b__005}

உரைவகைகளுள் அகலமும் ஒன்று; இன்றியமையாத யாவையும் விளங்க ஐயம்நீங்கக் கடாவிடைகளால் பரந்துபட உரைப்பது. இவ்வுரை, அகலம் என்றே கூறப்படும். விருத்தி யுரை என்பதும் அது. (தொ. பொ. 659 பேரா.)

அகலா நடைத்தாதல் -

{Entry: P16b__006}

நூலுக்கு அழகாம் பத்தனுள் இதுவும் ஒன்று. அஃதாவது சூத்திரம் சில்வகை எழுத்தால் செறிந்து மிகவும் விரிந்து கிடவாத நடையை யுடையது ஆதல். (மா. அ. 24.)

அணிந்துரை -

{Entry: P16b__007}

நூலை அணிந்து முன்னர் உரைக்கப்படுதலின், பாயிரம் அணிந்துரை என்னும் பெயர்த்தாயிற்று; புனைந்துரை என்பதும் அது. (நன். 1)

அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிதல் -

{Entry: P16b__008}

அதங்கோட்டாசானுக்குக் குற்றம் அற ஆராய்ந்து கூறல்.

அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவருள் அதங்கோட்டாசிரியரும் ஒருவர்; தொல்காப்பியனார்க்கு ஒருசாலை மாணாக்கர். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, “நீர் தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க” என்று கூறுதலானும், தொல்காப்பியனாரும் பல்காலும் சென்று, “யான் செய்த நூலைக் கேட்டல் வேண்டும்” என்று கூறுத லானும், “இவ்விருவரும் வெகுளாமல் இருக்க, இந்நூற்குக் குற்றம் கூறிவிடுவல்” எனக் கருதிப் பல வினாக்களை எழுப்ப, தொல்காப்பியனார், கூறிய வினாவிற்கெல்லாம் விடை கூறுதலின் ‘அரில்தப’ என்றார். (தொ. சிறப்புப். நச்.)

அதங்கோட்டாசான் -

{Entry: P16b__009}

அகத்தியனாருடைய மாணாக்கர் பன்னிருவருள் இவரும் ஒருவர்; தொல்காப்பியனார்க்கு ஒருசாலை மாணாக்கர்; நான்மறையும் நன்கு கற்றவர். அதங்கோடு என்கிற ஊரில் தோன்றிய ஆசிரியர் ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர் நச்சினார்க்கினியர். இவர் கூறிய வினாவிற்கெல்லாம் தொல் காப்பியனார் குற்றமற விடையிறுத்தார். (தொ. சிறப்புப். நச்.)

‘அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து’ என்பது தொல் காப்பியச் சிறப்புப்பாயிரஅடி. அதங்கோடு இக்காலத் திரு விதாங்கூர் என்ப.

அதர்ப்பட யாத்தல் -

{Entry: P16b__010}

அஃதாவது நெறிப்பட யாத்தல். வழியின்வகை நான்கனுள் ஒன்று ‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’. மொழி பெயர்த்தலாவது பிற பாடையாற் செய்யப்பட்ட பொரு ளினைத் தமிழ்நூலாகச் செய்தல். மொழிபெயர்த்துச் செய்யுமிடத்து அது கிடந்தபடியே செய்யப்பட வேண்டு மன்றித் தொகுத்தும் விரித்தும் தொகைவிரியாகவும் செய்தல் ஆகாது. அவ்வாறு செய்யின் அஃது இருமொழியார்க்கும் பயன்படாது. (தொ. பொ. 652 பேரா.)

அதர்ப்படுதல் -

{Entry: P16b__011}

நெறிப்படுதல். ‘அதர்ப்பட யாத்தல்’ காண்க.

(தொ. பொ. 652 பேரா.)

அதிகரித்தல் -

{Entry: P16b__012}

அ) அதிகரித்தலாவது அதிகாரம் செலுத்துதல். அஃது இருவகைப்படும். ஒன்று, வேந்தன் இருந்த இடத்தே இருந்து கொண்டு தன் நிலம் முழுதும் தன் ஆணைப்படி நடக்குமாறு செய்வது போல, ஒரு சொல் தன்னிடத்தேயே நின்று கொண்டு பல சூத்திரங்களும் இயல்களும் தன் பொருளையே கருதி வருமாறு செய்வது; மற்றொன்று, சென்று படை நடத்தும் சேனைத்தலைவர் போல, ஓரிடத்தே நின்ற சொல் பல சூத்திரங்களொடும் சென்று இயைந்து தன்பொருளைக் கொடுக்கச் செய்வது. (நன். எழுத். முன்னுரை சிவஞா. )

ஆ) பதினான்கு வகையால் நூலுக்கு உரை உரைக்கப்படுவன வற்றுள் அதிகாரம் என்பதும் ஒன்று. அஃதாவது அதிகாரத் தொடு பொருந்த உரைக்கவேண்டு மிடத்தே உரைத்தல். (நன். 21)

இ) அதிகரித்தலாவது கற்றல், ‘அவைநீ அதிகரித்தற் குரியை’

அரிசமய, பராங்குச. 78 (L)

அதிகாரச் சூத்திரம் -

{Entry: P16b__013}

சூத்திரவகை ஆறனுள் அதிகாரம் என்பதும் ஒன்று. அஃதாவது ஆற்றொழுக்கு, அரிமான் நோக்கு, சார்ச்சிவழி ஒழுகுதல் (பருந்தின் வீழ்வு), தவளைப் பாய்த்து என்னும் நால்வகைச் சூத்திர நிலையுள் ஒன்று ஏற்கும் வகையான் இயைந்து பொருள் விளைப்பது. (யா. க. சிறப்புப். உரை)

அதிகாரப் புறனடை -

{Entry: P16b__014}

அதிகாரவிறுதியிற் கூறும் புறனடைச் சூத்திரம்.

எ-டு : ‘செய்யுள் மருங்கினும்’ (தொ. சொ. 463) என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரப் புறனடை

அதிகாரம் -

{Entry: P16b__015}

அதிகாரம் என்னும் சொல் முறைமை, இடம், உரிமை (தொ. பொ. 665 பேரா.) எனவும், தகுதி (வேதா. சூ. 19) எனவும், நூற் பிரிவு எனவும், நூல் எனவும் பொருள்படும்.

‘அதிகரித்தல்’ காண்க.

அதிகார முறைமை -

{Entry: P16b__016}

தொல்காப்பியனார் சுட்டும் உத்திவகைகளுள் இரண்டா வது. முன்நின்ற நூற்பாவின்பொருள் பின் வரும் நூற்பாக்க ளுள் ஒன்றற்கோ பலவற்றிற்கோ தேவைப்பட்ட அளவு தொடர்பு கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)

எ-டு : ‘குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்’ (எ.33) என்ற நூற்பா விலுள்ள ‘நிற்றல் வேண்டும்’ என்ற தொடரைக் குற்றியலுகரம் வல்லா றூரர்ந்தே. (எ. 35) என்ற நூற்பாவிற்கும் கொள்ள வைத்தல்.

எழுத்ததிகாரத்தொடு சொல்லதிகாரத்திற்கும், சொல்லதி காரத்தொடு பொருளதிகாரத்திற்கும் இயைபு கூறுதலும், அதிகாரத்துள் ஓத்துப் பலவாதலின், அவை ஒன்றன்பின் ஒன்று வைக்கப்பட்டதற்கு இயைபு கூறுதலும் போல்வன அதிகார முறைமை என்ற உத்திவகைக்கு இனம் என்று கொள்ளப்படும்.

உடன்பிறந்தாருள் ஒருவர்க்கு உரியது வழித்தோன்றி னாருக்கும் ஒருவழி உரியவாமாறு போல, முன்னர் நின்ற விதி பின்னர் வந்ததற்கும் வேண்டியவழிக் கொள்ளப்படும் என்பது உத்திவகை யாயிற்று. பேரா.

முன்னர்ப் பலபொருள் அதிகரித்தவழிப் பின்னும் அம்முறை யினானே விரித்து உணர்த்துதல். (656 இள.)

எ-டு : ‘உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே’ (சொ.1) என்று கூறியதற் கேற்ப, உயர்திணையவாம் ஆடூஉ அறிசொல், மகடூஉ அறிசொல், பல்லோர் அறிசொல் என்பனவற்றை முன்னர் முறையே கூறிப் பின்னர் ஒன்றறிகிளவி, பலவறிகிளவி என்னும் அஃறிணையவாம் பால்களை அடுத்து நிரலே கூறுதல்.

ஓரிடத்து நின்ற சொல் அடுத்து வரும் நூற்பாக்களோடு இயைதலும் அதிகார முறையாகும் என்பர் மாறனலங்கார உரையாசிரியரும். அது, ‘அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்’ (எ. 203) என்ற நூற்பாவிலுள்ள ‘வேற்றுமை அல்வழிக் கசதபத் தோன்றின்’ என்ற தொடரினை, அடுத்து வரும் ‘வினையெஞ்சு கிளவியும்’ என்ற நூற்பாவின்கண்ணும் கொள்ளுதல் போல்வது.

இதனை நன்னூல் ‘ஓத்து முறை வைப்பு’ எனவும் (14), மாறனலங் காரம் ‘உரைமுறை வைப்பு’ எனவும் (25) கூறும்.

அதிகாரி -

{Entry: P16b__017}

இச்சொல், உரிமையுடையவன், தகுதியுடையவன், கற்றற் குரியவன் எனப் பொருள்படும். (நன். சிறப்புப். சிவஞா. விரு.) (L)

அதிதேசம் -

{Entry: P16b__018}

மாட்டெறிந்தொழுகல். பி.வி. 37

1) ஒன்றற்குரியதை மற்றொன்றிற்கு ஏற்றிக் கூறுகை. 2) ஒப்புமையா னுணர்த்துகை. ‘அதிதேச வாக்கியம்’ (தர்க்கபா. 29) (L )

அதிவியாப்தி -

{Entry: P16b__019}

இலக்கிய மல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லும் குற்றம் இது. பசுவுக்குக் கொம்புண்டு எனின், கொம்புடைய மான் முதலிய பிற விலங்கின்மேலும் இவ்விலக்கணம் செல்லுதலின், இஃது அதிவியாப்தி என்னும் குற்றமாம். மிகைபடக்கூறல் என்பதும் அது.

அந்தணர் இயல் -

{Entry: P16b__020}

அந்தணர் - அழகிய தண்ணளியை யுடையார் எனப் பரி மேலழகரும் (குறள். 30), அந்தத்தை (வேதாந்த தத்துவத்தை) அணவுவார் (-அறிவார்) என நச்சினார்க்கினியரும் (கலி. கடவுள்.1) பொருளுரைப்பர்.

முந்நூலாகிய முப்புரிப்பூணூலும், குண்டிகையாகிய கமண்டலுவும், முக்கோலாகிய திரிதண்டமும், ஆமையின் மேற்புறம் போன்ற அமைப்பாகச் செய்த ஆமைமணையாகிய மரஇருக்கையும் போல்வன அந்தணர்க்கு உரியன. (இ. வி. பாட். 164)

குடையும் செருப்பும் கூறலும்உண்டு. துறவிகளான ஹம்ஸர், பரமஹம்ஸர் ஆகியோர் ஒருகோலுடையார். அவர்கள் நூல் களிற் கூறப்படார். முக்கோல் கொண்டவர்கள் பஹூதகர், குடீசகர் என்பார். அன்னோர் உலகியலால் துறவாது, பிச்சை கொண்டும் பிற இடத்திருந்து தமது உண்டும் வாழ்வார். அவர்களே ஈண்டுக் கூறப்பட்டாராவார்.

வெண்பாப் பாட்டியல் கூறும் அந்தணர் இயல்.

வேதங்கள் நான்கும் அங்கம் ஆறும் கற்றிருப்பதும், கோவ ணம் உடுத்தலும், ஆஹவநீயம் கார்ஹபத்யம் தக்ஷிணாக்னி என்னும் முத்தீ ஓம்பலும், நல்வேள்வி வேட்டலும், குடை - சமித்து எனும் புரசு அரசு ஆகியவற்றின் சுள்ளிகள் - குண்டிகை - தருப்பை - என்னுமிவற்றை எப்போதும் கையில் வைத்திருத்தலும், தமக்கெனக் கோத்திரம் ஒன்றுடைமையும் போல்வன அந்தணர் இயல்பு. மேலும், எப்போதும் சிவன் சேவடிகளைப் போற்றும் செயலுடையார் அந்தணர். அன்னார்க்கு உவமையாகத் தீயையும் பிரமனையும் கூறுதல் மரபு. அவர்க்கு உரிய தொழில் நான்மறைகளை ஓதலும், பிறர்க்கு அவற்றை ஓதுவித்தலும், பலவகை வேள்வியைத் தாமே வேட்டலும், பிறரை வேட்பித்தலும், பிறர்க்குத் தக்கிணை கொடுத்தலும், தாமும் தானம் முதலியன ஏற்றலும் என ஆறு. (வெண்பாப். பொது. 12, 13)

நவதீதப்பாட்டியலும் இக்கருத்துக்களையே நவிலும். (12) ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல் என ஆறு புரிந்து ஒழுகும் அந்தணர் எனப் பதிற்றுப்பத்துக் கூறும். (பதிற். 24 : 6- 8)

அந்தணர்க்கு உரிய அல்லாதன -

{Entry: P16b__021}

பரிசில்கடாநிலையும் பரிசில்விடையும் போல்வனவும், பாடாண்திணைக்குரிய கைக்கிளைப் பொருள் பற்றியும் கொடைத் தொழில் பற்றியும் பெறும் பெயர்களாகிய காளை, இளையோன், நெடுந்தகை, செம்மல் முதலாயினவும், இன்ன பிறவும், அந்தணர்க்கு இயல்பு வகையான் உரிய அல்ல. புனைந்துரை வகையான் ஒரோவழிக் கூறவும்படும். (தொ. பொ. 628 பேரா.)

அந்தணர்க்குச் சிறப்பு விதி -

{Entry: P16b__022}

அந்தணாளர்க்கு அரசுரிமை எய்தி நிற்றல் விலக்கப்படாது. அரசர் இல்லாத விடத்தே அந்தணரே அவ்வரசியல் பூண்டு ஒழுகலாம் என்பது. (தொ. பொ. 637 பேரா.)

அந்தணர்மாலை, கொடி, பொருள் -

{Entry: P16b__023}

அந்தணர்மாலை - தாமரை; கொடி- வேதம்; பொருள் தருப்பை, முஞ்சிப்புல், சமித்து. (பிங். 730, 731)

அப்பர் -

{Entry: P16b__024}

ஆண்ஆட்டினை வழங்கும் மரபு பற்றிய பெயர் இது. ஆண்பால் மரபு பற்றிய பெயராகிய இது குரங்கினைக் குறித்தலும் உண்டு என்பர் பேராசிரியர். (தொ. மர. 2, 47)

அயிந்திரம் -

{Entry: P16b__025}

ஐந்திரம் என்னும் இந்திரனால் இயற்றப்பட்ட வடமொழி இலக்கணநூல். அயிந்திரம் (உத்தர.ரா.அனும.46) ‘ஐந்திரம்’ காண்க. (L)

அரங்கேற்றம் -

{Entry: P16b__026}

புதுநூல், நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பித்தல். அரங்கேற்று - அரங்கேற்றுதல். (சிலப். 3) அரங் கேற்றுப்படி எனினும் ஒக்கும். (L)

அரங்கேறுதல் -

{Entry: P16b__027}

புதுநூல் முதலாயின சபைக்குமுன் அங்கீகாரத்திற்கு வருதல். (அங்கீகாரம் - ஏற்றுக்கோடல்) (L)

அரசர் இயல் -

{Entry: P16b__028}

படையும், குடையும், கொடியும், முரசும், நடைநவின்ற குதிரையும், யானையும், தேரும், போர்ப்பூ தார்ப்பூ என இருவகைப்பட்ட மாலையும், முடியும், கவரி அரியணை அரண் முதலிய பொருந்துவன பிறவும் அரசர்க்கு உரியன என்பது. (தொல். பொ. 626 பேரா. இ. வி. பாட். 165)

அரிமா நோக்கம் -

{Entry: P16b__029}

சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. அஃதாவது முன்னும் பின்னும் நோக்கிச் செல்லும் சிங்கம் போல, முன்னரும் பின்னருமாகச் சொல்லப்படும் செய்திகளை நோக்கியவாறு அமைவது, நன்னூலுள் பொதுவியல், முன்சொன்ன பெயர் வினைச் சொற்களுக்கும் பின்சொல்லும் இடை உரிச்சொற்க ளுக்கும் பொதுவான இலக்கணங்களைச் சொல்லுதலின் வினையியல் இடையியல்களுக்கு இடையே வைக்கப்பட் டமை அரிமாநோக்கம் ஆம். (நன். 19)

இஃது இலக்கியத்துள்ளும் பொருந்தும். அறத்துப்பாலிறுதிக் கண் அமைந்த ஊழியல், முற்கூறிய அறத்திற்கும், பிற்கூறும் பொருளின்பங்கட்கும் இன்றியமையாமைப்படுதல் நோக்கி ஆண்டு அமைந்தமை சிங்கநோக்கம் ஆம்.

அவதாரிகை -

{Entry: P16b__030}

நூல்முகத்து உரைக்கப்படும் முன்னுரை. இத்தோற்றுவாய் நூலின் உட்பகுதிகளிலும் அமையும். (L)

அவாவின்மைக்கு உவமை -

{Entry: P16b__031}

புலம் வென்ற காட்சியுடையார்க்கு “யாம் வறியம்” என்னும் கருத்தின்மையான் (குறள் 174), ஆசிரியன் திங்களும் ஞாயிறும் போலச் சிறிதும் அவா இல்லாத (வெஃகா) உள்ளம் உடையன். (பா. வி. பக். 70)

அவாவின்மையின் வகை -

{Entry: P16b__032}

பிறன் வேண்டும் பொருளை வெஃகுதலும் (-அவாவுதலும்), பிறன் வேண்டும் உரிமையை வெஃகுதலும், பிறன் செய்யும் பணியை வெஃகுதலும், பிறன் கூறும் முகமன் மொழியை வெஃகுதலும் என, அந்நான்கனது இன்மை பற்றி அவா வின்மை நான்கு வகைப்படும். (பா. வி. பக். 69)

அவையின்கண் கடியப்பட்டார் -

{Entry: P16b__033}

மொழியப்படுவதனை உணரமாட்டாதார், முன்னர் இருந்து கொண்டு காரணம் இல்வழியும் சினப்பார், பொய்ம்மை பல பேசுவார், அடிக்கடி நகுதல் செய்வார், நிலைப்படாது தடுமா றும் மனத்தார், தீயவற்றையே செவிகொடுத்துக் கேட்கும் விருப்பமுடையார் என இவ்வறுவரும் அவையின்கண் நீக்கப் படத்தக்கவராவர். (பா. வி. பக். 136)

அவையின்கண் கடியப்பட்டாரின் முறை -

{Entry: P16b__034}

மொழிவது உணரும் ஆற்றல் இல்லாவிடத்து மனம் சென்ற வாறே சொல்நிகழ்ந்து இடர் விளைக்கும் ஆதலின், ‘மொழிவ தனை உணரமாட்டாதார்’ முதற்கண் கடியப்பட்டார். அவ்வாற்றல் இருப்பினும், சினம் கொள்வாராயின் மாறுபா டாகிய கலாம் நிகழுமாதலின், ‘முன்னர் இருந்து கொண்டு சினப்பார்’ அடுத்துக் கடியப்பட்டார். அவ்வாறு சினவாராயி னும் பொய் சொல்லின் அவைக்கு இழுக்காம் ஆதலின், ‘பொய்ம்மை பல பேசுவார்’ அடுத்துக் கடியப்பட்டார். அவ்வாறு பொய் கூறாராயினும் அடிக்கடி நகுதல் அவமதிப் பைக் காட்டுமாதலின், ‘நகுதல் செய்வார்’ அடுத்துக் கடியப் பட்டார். நகுதல் செய்யார் ஆயினும் நிலையில்லா மனத்தார் முற்றும் கேளாமல் நடுவேயும் தாம் நினைந்தவாறு சென்று அவையினது கட்டளை கடப்பாராதலின் ‘தடுமாறு மனத் தார்’ அடுத்துக் கடியப்பட்டார். தடுமாறாத மனத்தராயினும் தீயவற்றை எண்ணுவராயின் கேள்வியால் பயனெய்த மாட்டாராதலின் ‘தீயவை செவிகொடுத்துக் கேட்பார்’ இறுதியாகக் கடியப்பட்டார். (கடியப்படுதல் - நீக்கப்படுதல்) (பா. வி. பக். 136, 137)

அவையோர் நூல் கேட்டற்குக் காரணம் -

{Entry: P16b__035}

தவத்தான் மனம் தூய்மை பெறாதோர் எத்துணைக் கல்வி உடையராயினும் ஊழ்வயத்தான் மயங்குவார்; தவமுடை யார் மயங்கார். தவம் உடையரே நூல் செய்தற்கு உரியர் என விதிப்பின் குற்றம் ஆய்வாரைக் கூறல் வேண்டா எனின், அவ்வாறு விதிப்பின் அகத்தே தவவொழுக்கம் முற்றிய காரணத்தால் ஊழ்வயப்பட்டு மயங்காமல் குற்றமின்றி நூல் செய்த வள்ளுவர் முதலாயினார்க்கும் புறத்தே தவவேடம் இல்லாமையால் அவர் போல்வார் செய்த நூலின்கண்ணும் குற்றங்கள் உள என்று தவறாகக் கொள்ளப்படும்; அகத்தே தவவொழுக்கம் முற்றாமையால் ஊழ்வயப்பட்டுக் குற்றம் உளவாக நூல் செய்த பவணந்தி முனிவர் சிவஞானமுனிவர் முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் உள்ளமையால் அவர் போல்வார் செய்த நூல் எல்லாம் குற்றம் இல்லாதன என்றும் தவறாகக் கொள்ளப்படும் ஆதலின், யாவர் செய்த நூலாயினும் அறிவுடையார் பலராகிய அவையோர் கேட்டு நூலினது குற்றம் இன்மையை ஆராய்தலே வேண்டப்பட்டது என்பது. (பா. வி. பக். 191)

அழுக்காறிலாமைக்குக் காரணம் -

{Entry: P16b__036}

அழுக்காறின்மைக்குக் காரணமாவது வாய்மையே ஆதலின், ‘ஞாயி றன்ன வாய்மையும், யாவதும் அஃகா வன்பும்’ என வாய்மையை அடுத்து (அஃகா வன்பு ஆகிய) அழுக்கா றின்மை கூறப்பட்டது. (பா. வி. பக். 69)

அழுக்காறிலாமையின் வகை -

{Entry: P16b__037}

அழுக்காறிலாமையானது, பிறன் ஆக்கமாகிய செல்வமும் - கல்வியும் - புகழ் முதலாய கனமும் - என இவற்றைப் பேணா மையும், பிறனது கொடை பேணாமையும் என அந்நான்கனது இன்மைபற்றி நான்கு வகைப்படும். (பா. வி. பக். 68)

அளகு -

{Entry: P16b__038}

அளகு என்னும் மரபுப்பெயர் கோழி கோட்டான் மயில் இவற்றது பெண்பாலை யுணர்த்தும்.(தொ. பொ. 610, 611 பேரா.)

அறியாது உடன்படல் -

{Entry: P16b__039}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளில் ஒன்று. ஆசிரியன் முற்ற வுணர்ந்த அறிவன் அன்மையின், தான் வரையும் இலக் கணத்தினும் வேறுபட வருவனவும் உளவாகும் என்பதனைத் தெளிவாக மனம்கொண்டு அவற்றையும் நூல் பயில்வோர் நுனித்துக் கொண்டுணருமாறு புறனடை முதலிய நூற்பாக் களை இயற்றுதல். (தொ. பொ. 665 பேரா.)

“கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும், கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே” (தொ. சொ. 119 நச்.) என்றாற் போலப் புறனடை கூறுதல் இதற்கு எடுத்துக்காட்டாம்.

‘இறந்தது காத்தல்’ ஆசிரியன் தான் துணிந்து கொள்ளப் பட்ட பொருளாகும். ஆயின் இது தன்னால் துணியப்படா தாகித் தான் நூல் செய்த காலத்துத் தன்னால் கூறப்படாது விடுக்கப்பட்ட செய்திகள் பற்றியதாகும். (பேரா.)

‘தக்கவழி அறிதல் வழக்கத் தான’ (எ. 270 நச்.) ‘ஒல்வழி அறிதல் வழக்கத்தான’ (எ. 246 நச்.) என்றாற் போல ‘வழக்கு நோக்கி அறிக’ என்ற கருத்தில் கூறுதல் இவ்வுத்தியின் இனம். (பேரா.)

தான் அறியாத பொருளைப் பிறர் கூறியவாற்றான் உடன் படுதல் என்பர் இளம்பூரணர். (656)

ஏழாம் நரகம் இத்தன்மைத்து எனச் சான்றோர் கூறியவழித் தனக்கு அது புலப்படாதாயினும் தான் அதற்கும் உடன்படல் இது. வழிநூலாசிரியர்க்கும் இஃது உரித்து. ‘மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’ (தொ. சொ. 389) என்றாற் போல்வன கொள்க. (இள.).

அறுவகை அறிவுகள் -

{Entry: P16b__040}

ஓரறிவாவது தன்னின் வேறாய பிறிதொன்று மெய் உறலால், வன்மை மென்மை முதலியன அறிதலாம்; இரண்டறிவாவது அதனொடு, வாயால் சுவையறிதலாம்; மூவறிவாவது அவ்விரண்டறிவுடனே, மூக்கால் கந்தத்தினை அறிதலாம்; நான்கறிவாவது அம்மூவகையறிவுடனே; கண்ணால் உருவத் தினை அறிதலாம்; ஐந்தறிவாவது அந்நால்வகையறிவுடன், செவியால் சத்தத்தினை அறிதலாம்; ஆறறிவாவது ஐவகை இந்திரியங்கள் அறியும் அறிவானன்றி, ஞாபக ஏதுக்களான் நுண்ணிய பொருள்களை மனத்தான் உணர்தலாம்.

(இ. வி. பாட் 152; தொ. பொ. 582 பேரா.)

அறுவகை அறிவு பெறும் உயிர்கள் -

{Entry: P16b__041}

புல்லும் மரனும் ஊற்றுணர்ச்சி ஒன்றே யுடையன. நந்தும் முரளும் நாவுணர்வோடு, ஒன்று தாக்கியபோது அறியும் ஊற்றுணர்வும் உடையன. சிதலும் எறும்பும் உற்றுணர்தல் நாச்சுவை கோடல் இவற்றுடன், மோந்தறிதலாகிய மூக்குணர்வும் உடையன (இவை ஒன்று தாக்கிய வழியல்லது அறியாமையின் கண்ணுணர்வும், உரப்பியபோது ஓடாமை யின் செவியுணர்வும் உடையன அல்ல) நண்டும் தும்பியும் மெய்யுடைமையின் ஊற்றுணர்வும் இரை கோடலின் நாவுணர்வும், நாற்றம் கோடலின் மூக்குணர்வும், கண்ணுடை மையின் கண்ணுணர்வும் உடையன.

மக்களுள் ஐயறிவுடையார் மாக்கள் எனவும், ஆறறிவு உடையோரே மக்கள் எனவும் கூறப்படுவர். மாக்கள் (மா + கள்) எனப்படும் விலங்குகள் ஐயறிவே யுடையன. (இ. வி. பாட். 153)

தும்பி முதலிய உயர்ந்த வண்டுகளுக்குச் செவியறிவும் உண்டு என்பார் நச்சினார்க்கினியர். (சீவக. 892, 893)

‘அறுவகை அறிவுபெறும் உயிர்கள்’ என்பதன் புறநடை -

{Entry: P16b__042}

அறுவகை அறிவுறும் உயிர்கட்கு உரிய கிளையும் பிறப்பும் அவ்வறிவு பெறும் என்பர் ஆசிரியர்.

ஓரறிவு கிளை - புதலும் கொடியும் போல்வன.

பிறப்பு - மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் ஓரறிவினவாய பருவமும், என்பு இல் புழுவும், முதலியன.

ஈரறிவு கிளை - கிளிஞ்சலும் முற்றிலும் முதலிய கடல்வாழ் சாதியும், பிறவும்.

பிறப்பு - மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் ஈரறிவினவாகிய பருவம்

மூவறிவு கிளை - ஈயல், மூதாய் போல்வன.

பிறப்பு - மக்கட்குழவியும் விலங்கின் குழவியும். மூவறிவினவாகிய பருவம்.

நாலறிவு கிளை - வண்டு, தேனீ, குளவி முதலியன

பிறப்பு - மக்கட் குழவியும், விலங்கின் குழவியும் நாலறிவினவாய பருவம்.

ஐயறிவு கிளை - எண்கால் வருடையும் குரங்கும் போல்வன

பிறப்பு - கிளியும் பாம்பும் முதலாயின.

ஆறறிவு கிளை - தேவர் தானவர் முதலாயினார்

பிறப்பு - குரங்கு முதலியவற்றில் சென்ற பிறப்பின் நல்வினையான் மனவுணர்வுடையன.

(இ.வி. பாட். 54)

ஆ section: 33 entries

{Entry: P16b__043}

அஃறிணைப் பெண்பாற் பெயர்களுள் ஒன்று.

இது பெற்றம் எருமை, மரை இவற்றின் பெண்பால் விலங்குகளை உணர்த்து வது.

எ-டு : ‘புனிற்றா பாய்ந்தெனக் கலங்கி’ - அகநா. 56

‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்’ - அகநா. 46

‘மரையா மரல்கவர மாரி வறப்ப’ - கலி. 6

(தொ.பொ. 615 பேரா.)

ஆக்கியோன் -

{Entry: P16b__044}

நூல் செய்தவன் (நன். 47)

ஆக்கியோன்பெயர் -

{Entry: P16b__045}

நூல் செய்த ஆசிரியனது பெயர்; இது முதலாகிய எட்டுச் செய்தியினையும் வாய்ப்பக் காட்டுவது சிறப்புப் பாயிரத்து இலக்கணம். (நன். 47)

ஆக்கியோன் பெயர் முதலியன சிறப்புப்பாயிரத்தில் அமையும் காரணம் -

{Entry: P16b__046}

நூல் கேட்பான்புக்க மாணாக்கன் இந்நூல் உயர்ந்தோன் செய்ததோ அன்றோ என ஐயுற்று இடர்ப்படுதலைத் தவிர்க்க வும், அவனைக் கற்றற்கண் ஊக்கவும் ‘ஆக்கியோன் பெயர்’ கூறல் வேண்டும்.

ஆக்கியோன் உயர்ந்தோனாயினும் பிறிதொரு கோட்பாடு பற்றி முனைவன் நூலொடு முரணுமாறு தானே படைத்து நூல் செய்தானோ என்னும் ஐயத்தைக் களைய, இன்ன நூலின் வழித்தாகச் செய்தான் என ‘வழி’ கூறல் வேண்டும்.

ஊழிவிகற்பத்தால் சிற்சில ஊழியில் சில முந்துநூல்கள் மக்கள் அறிந்து பயன் கோடலின்றிக் கிடக்குமாதலின், அங்ஙனம் மக்களால் அறிய முடியாமையில் வழங்கப்படாத நூலோ, அறிந்து பயன் கொள்ளுதலின் வழங்கப்படும் நூலோ என்னும் ஐயத்தைக் களைய, இந்நூல் இன்ன எல்லையுள் நடக்கும் என ‘எல்லை’ கூறல் வேண்டும்.

நூல் செய்தானால் நூல் பெயர் பெறுதலே யன்றிச் செய் வித்தான் முதலாய பிற காரணத்தானும் பெயர் பெறுதல் கூடுமாதலின், அக்காரணம் விளங்க ‘நூற்பெயர்’ கூறல் வேண்டும்.

முந்து நூலிருக்க இவ்வழிநூலை யாது காரணத்தாற் செய்தான் என ஐயுறும் நிலையைக் களைய, அம் முதல் நூற்பொருளையே உணர்தற்கு ஏற்ற வகையால் பயன்படு மாறு, தொகுத்தல் முதலாய வகையினுள் இவ்வகையாற் கூறினான் என ‘யாப்பு’க் கூறல் வேண்டும்.

‘நுதலிய பொருள்’ இன்னதென முன்னர்க் கூறாவிடின், ஆசிரியன் “இந்நூலைக் கற்க” எனக் கூறினும், அந்நூல் எப்பொருள் நுதலிற்றோ, அதன்கண் தான் விரும்பிய பொருள் உளதோ என மாணாக்கன் ஐயுற்று விருப்பத்தொடு முய லான் ஆகலின், அது கூறல் வேண்டும்.

புலமை நிரம்பிய முதியோராயினும் ஊழ்வயத்தால் மயங் கலும் இயற்கை ஆதலான், இந்நூலகத்தும் அவ்வாறு குற்றமுளதோ என ஐயுறும் மாணாக்கற்கு அதனைக் களைய இன்னார் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்தாரென, ‘கேட் போர்’ கூறல் வேண்டும்.

இந்நூல் கற்க இன்ன பயனுண்டு என அறியானாயின் கற்றற்கண் ஊக்கம் செல்லாமையின், ‘பயன்’ கூறல் வேண்டும்.

ஆக்கியோனும் கேட்போரும் எக்காலத்தினர், யாண்டிருந் தனர், யாது காரணத்தால் இந்நூற் செய்தான் என்று அறியுமாறு மாணாக்கர்க்கு விருப்பம் செல்லுதல் இயல்பு; நூல் செய்த காலத்தோ பிற்காலத்தோ அரங்கேற்றப்பட்டது என வினா எழுதலும் இயல்பு; முந்துநூலைத் தொகுத்தல் முதலிய யாப்பின் காரணத்தைத் தவிரப் பிற காரணமும் உண்டோ என்னும் ஐயமும் நிகழும். அவை பற்றி, காலம், களன், காரணம் என்னும் இம்மூன்றும் கூறல் இன்றியமை யாதது என ஒருசார் ஆசிரியர் வேண்டுவாராயினர்.

எல்லை என்பது நூல் இன்ன அளவிற்று என்று கூறுவது என்பாரும் உளர். (பா. வி. பக். 187-192)

ஆசாற்கு இன்றியமையாது இயையும் குணன் -

{Entry: P16b__047}

கல்வி அளிக்கும் நல்வினை உடைய ஆசாற்கு இன்றியமை யாமல் பொருந்தும் குணங்களாவன. அன்பு ஈனும் ஆர்வம், அவ்வார்வம் ஈனும் நண்பு, அன்பு செய்யப்பட்டாரிடத்துத் துன்பம் கண்டவிடத்தே புன்கணீர் பொழிந்து புறந்தோன் றும் தன்மை, மாணாக்கர்க்கு வேண்டாத செய்கை யுளதாகிய விடத்தே மேற்சென்று இடித்தல் ஆகிய இவற்றை உடைமை. (பா. வி. பக். 84)

ஆசிரிய மதம் -

{Entry: P16b__048}

ஆசிரிய மதம் ஆவன மறுத்தல், உடன்படுதல், பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல், தாஅன் நாட்டித் தனாஅது நிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல், பிறர்நூற் குற்றம் காட்டல், பிறிதொடு படாஅன் தன்மதம் வகுத்தல் - என ஏழும் ஆம். (நூலாசிரியர்தம் கொள்கை ஆசிரியமதம் ஆவது. நன். 11.) (வீ. சோ. 180 உரை)

ஆசிரியர் அல்லாதார் இயல்பு -

{Entry: P16b__049}

பாடம் சொல்லும் குணமின்மை, இழிந்த குணங்கள் பலவுடைமை, பிறர்ஆக்கம் கண்டு பொறாமை - பிறர் பொருள் மேற் செல்லும் ஆசை - வஞ்சனை - பிறரை அஞ்சுவித்தல் - போன்ற இயல்புடைமை, கழற்குடம் - மடல் விரிந்த பனை - பஞ்சு அடைத்த குடுக்கை - வளைந்த தெங்கு - என்னும் நான்கனையும் ஒத்த முரண்பட்ட இயல்புடைமை எனப்பட்ட இவை ஆசிரியர் அல்லாதார்தம் இயல்புகள். (நன். 31)

ஆசிரியருக்கு இன்றியமையாது இயையும் அகத்தொழில் -

{Entry: P16b__050}

கைம்மாறு கருதாமல் ஒப்புரவு செய்தல்; வறியவர்க்கு இல்லையென்னாது ஈயும் வண்மை; அவர்கள் தாம் தீநெறியை நாடிய விடத்தே கொடுக்காமல், அவர்கள் குறிக்காதவற்றையும் கொடுத்தலன்றி, அறநெறி வழுவாமல் அன்னோர் வேண்டியவற்றையே விரும்பி அளித்தல்; ‘இலன்’ என்னும் அத்துன்பச் சொல்லை அவர் உரையாததன் முன்னரே குறிப்பறிந்து அவர் கொள்ளும் அளவின வாகப் பொருளைக் குறையாது கொடுத்தல் - இந் நான்கும் ஆசார்க்கு இன்றியமையாது இசையத்தகும் அகத்தொழி லாம். (பா. வி. பக். 87)

ஆசிரியருக்கு மாறனலங்காரம் கூறும் உவமைகளின் பொருத்தம் -

{Entry: P16b__051}

வாடாக் கற்பகம், மணம் மலி பொற்பூ, கொற்றவன் நிதியறை, வான்சுவை மருந்து, ஆயிரவாய்ச் சேடன் என இவ்வைந்தும் நல்லாசிரியர்க்கு உவமைகள்.

மாணாக்கர்க்கு அவர் வேண்டிய நூற்பொருளை வேண்டி யாங்கு முகமலர்ச்சியொடு வழங்குதலின், வாடாக் கற்பகம் உவமையாயிற்று.

முந்து நூல்களை ஆராய்ந்து, அமைவுடைய கல்வியும் கவிபாடும் ஆற்றலும் வாய்க்கப்பெற்று, அக்கற்றதை உணர விரித்துரைக்கும் ஆற்றலுடைமையின் மணம் நிறைந்த பொற்பூ உவமையாயிற்று.

அறத்தான் ஈட்டிய பல பொருளும் நிறைதல், பிறர் நிதியறை யினும் மிக்க செல்வவளமை, ஒருவரால் அளத்தற்கு அருமை, வறியோர் நாளும் வேண்டுவன கொண்டு செல்லவும் தான் குறைவில்லாமை என்னும் நான்கு இயல்பும் அமைந்த செங்கோல் வேந்தனது நிதியறையானது, அறம் முதலாய நாற்பொருளாம் கல்வி நிறைவுடைமை, பிறரது ஆராய்ச்சியி னும் மேம்பட்ட கல்வி நிறைவுடைமை, ஒருவரால் அளத்தற் கரிய கல்வி மேம்பாடு, பிறர் தம்பால் கல்விச்செல்வம் கொள்ளினும் அக்கொடையால் குறைவுறாத கல்விவளம் - என்னும் இந்நான்கும் அமையப்பெற்ற ஆசிரியர்க்கு உவமை யாயிற்று.

சிறப்புப்பாயிரத்தோடே, பருப்பொருளின்றி நுண் பொருளைக் கூறுவனவாகிய பல் நூற்பொருள்களையும் மாணாக்கர் பலர்க்கும் ஒரு காலத்தே ஒருங்கே இருள் தீர மனம் கொள்ளு மாறு சொல்லுதலின், ஆயிரவாய் ஆதி சேடன் உவமை யாயிற்று. (மா. அ. 29 : 33)

ஆசிரியரும் ஆமையும் -

{Entry: P16b__052}

ஆமை தான் எங்குச் செலினும் தன் பார்ப்புக்களை நினைத் துக்கொண்டேயிருத்தலின் அந்நினைப்பாற்றலால் அவை நலனும் வளர்ச்சியும் உறும் என்ப; அதுபோல, நல்லாசிரி யரும் யாண்டிருப்பினும் தம் மாணாக்கர் நலத்தையே நினைவராதலின் அம்மாணாக்கரும் அப்பயன் எய்துவர். அது பற்றியே ஆசார்க்கு ஆமை உவமையாயிற்று. (மா. அ. 39)

ஆசிரியரும் பறவையும் -

{Entry: P16b__053}

தாய்ப்பறவை தன் பார்ப்புக்களைச் சிறகரால் அணைத்துக் கொள்ளுமாறு போல, நல்லாசிரியரும் தம் மாணாக்கரை அருகழைத்து இன்சொலால் தழுவி அன்பு காட்டிப் பாடம் பயிற்றுதலின், அவர்க்குப் பறவை உவமையாயிற்று.(மா.அ. 39)

ஆசிரியரும் புனிற்றாவும் -

{Entry: P16b__054}

ஈன்று அணிமைத்தாகிய புனிற்றாவானது தன் புதுக் கன்றினை விட்டகலாமலும், அக்கன்றுள்ள விடத்தே பல முறை தான் செல்வதாயுமிருக்கும். அதுபோலவே, நல்லாசி ரியரும் தம் மாணாக்கரைப் பெரும்பான்மையும் விட்டு நீங்காமையும், ஒரோவழி நீங்கியுறைய வேண்டியவிடத்தே அடிக்கடி அம்மாணாக்கரைத் தாம் சென்று கண்டு உசாவி வருதலும் உடைமை பற்றி, அவர்க்குப் புனிற்றா உவமை யாயிற்று. (மா. அ. 39)

ஆசிரியரும் மீனும் -

{Entry: P16b__055}

மீன் தன் முட்டைகளைக் கண்ணாற் பார்த்த அளவிலேயே அவற்றினின்று குஞ்சுகளை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது என்ப. அதுபோல, நல்லாசிரியரும் தம்மாணாக்கர் நலத்தில் கண்ணும் கருத்துமாயிருத்தலின், மீன் உவமை ஆயிற்று. (மா. அ. 39)

ஆசிரிய வசனம் -

{Entry: P16b__056}

மேற்கோள். பதினான்கு வகைப்பட்ட உரைகளுள் ஆசிரிய வசனமும் ஒன்று. (நன். 21)

ஆசிரிய வழிபாடு -

{Entry: P16b__057}

குளிர் காயுமவன் தீயினை மிக விலகுதலும் மிக அணுகுதலு மின்றி இடைநிகர்த்ததாய இடத்தின்கண் இருத்தல் போல, ஆசிரியனை மிக விலகுதலும் மிக அணுகுதலுமின்றி, அவன் பால் பயபக்தி கொண்டு, நிழலைப்போல நீங்காதவனாய், அமைவுற்ற மனத்தோடே, ஆசான் உவக்கும் திறத்தின்வழி அறத்தொடு மாறுபடாவகை ஒழுகுமதே மாணாக்கனுக்கு உரிய ஆசிரியவழிபாடாம். (நன். 46)

ஆசிரியன் -

{Entry: P16b__058}

நூலாசிரியன்; புலவன் (L)

நூலாசிரியன், உரையாசிரியன், போதகாசிரியன் என்ற மூவர்.

(இலக். கொ. 6)

ஆசிரியனது வரலாறு -

{Entry: P16b__059}

நல்ல குலனுடைமை, அருளுடைமை, தெய்வ வழிபாடு, தனக்கென உயர்ந்த கொள்கையுடைமை, மானத்தின் இழுக்கா மேம்பாடு, நூல்களைக் கற்றுவல்ல தெளிவு, அவற்றை மாணாக்கர் உணர விரித்துரைக்கும் ஆற்றல், நிலம் - மலை - நிறைகோல் - மலர் - இவற்றைப் போன்ற மாட்சி, உலகியல் அறிவுடைமை என்பனவும் இவைபோன்ற பிற நல்லியல்புகளும் அமைபவன் நூலுரை ஆசிரியன் ஆம். (உரைத்தல் - பாடம் சொல்லுதல்)

தெரிவரிய பெருமையும்-திண்மையும்-அகழ்வாரைத் தாங்கும் பொறையும்-பருவமறிந்து தன்பால் முயலும் அளவிற்கு உழவர்க்கு உதவலும்-உடைய நிலம்போல, ஆசிரியனும் பிறரால் அளத்தற்கரிய கல்விப்பெருமையும், திண்மையும், மாணாக்கர் பிழை செய்தவழிப் பொறுத்தலும், மாணாக் கர்தம் கல்விப் பயிற்சியளவிற்குத் தகத் தான் பயன்படுதலும், உடையான்.

அளக்க முடியாத அளவும்-பொருள்நிறைவும்-அசைக்க முடியாத நிலைபேறும்-தொலைவிற்காணும் தோற்றமும்-ஏனை நிலப்பகுதி வறண்ட வற்கடக் காலத்தும் தான் வளம் சுரத்தலும்-உடைய மலை போல, ஆசிரியனும் பிறரால் வரை யறுக்கக் கூடாத கல்வியளவும், கலைப்பொருள் நிறைவும், வாதுபோரில் மாற்றாரால் வெல்லப்படாத நிலைபேறும், தொலைவிலுள்ளாராலும் தன் கல்விப் பெருமை பற்றி அறியப்படும் நிலைஇய தோற்றமும், தன்பாற் பொருட் செல்வம் வறப்பினும். கல்விச்செல்வத்தைச் சுரக்கும் வண்மையும், உடையான்.

தன்கண் வைத்த பொருளின் பாரத்தை ஐயம் தீர வரை யறுத்தலும்-நடுவாக நிற்றலும் - உடைய துலாக்கோல் போல, மாணாக்கர் தன்பால் வினவிய பொருளை ஐயமற உணர்த்த லும், எஞ்ஞான்றும் நடுவுநிலை கோடாமையும் உடையான் ஆசிரியன்.

மங்கலப் பொருளாய் எக்காலத்தும் இன்றியமையாததாய், யாவரும் மகிழ்ந்து தலைமேற் சூடிக்கொள்ளுமாறு மென்மை யுடைத்தாய், உரிய செவ்வியில் மலர்தலையுடைய பூப்போல, மங்கலமுடையவனாய், எக்காலத்தும் எக்காரணத் துக்கும் தான் இன்றியமையாதவனாய், யாவரும் தன்னை மகிழ்ந்து மதிக்கும் வண்ணம் இன்குணமுடையோனாய், பாடம் சொல்லுங்காலத்தே மனக்கவலை பிற புறத்தே தோன்றாத வாறு முகமலர்ச்சி யுடையனாய், விளங்குவான் ஆசிரியன். (நன். 26 - 30)

ஆசிரியனிடம் மாணாக்கன் பழகும் திறம் -

{Entry: P16b__060}

‘ஆசிரிய வழிபாடு’ காண்க.

ஆசிரியனுக்குரிய எண்வகை உறுப்பின் முறைவைப்பு -

{Entry: P16b__061}

ஆசிரியனுக்குரிய எண்வகை உறுப்பினுள் ஏனைய உறுப்பிற் குக் குடிப்பிறப்பே காரணமாதலின் அது முன்னர்க் கூறப்பட்டது.

மனம்தூய்மை முதலாயவற்றிற்கு இனம்தூய்மை வேண்டும்; அதுதனக்குச் சிற்றினம் அஞ்சல் வேண்டும்; அதுதனக்குக் குடிப்பிறப்புக் காரணம் ஆம். ஆதலின், அம்முறையானே குடிப்பிறப்பின் பின்னர்த் ‘தூய்மை’ கூறப்பட்டது.

ஒழுக்கத்திற்கு இனம்தூய்மையும், அது பற்றுக்கோடாக உளவாகும் பிற தூய்மையும் காரணமாதலின், தூய்மையின் பின் ‘ஒழுக்கம்’ கூறப்பட்டது.

கற்பவை கசடறக் கற்றால்தான் அக்கல்வி பயன்படுதலன்றி, அந்நெறியின் வழுவியவிடத்தே பயன்படாமையின் கல்விப் பயனுக்கு ஒழுக்கம் காரணமாம். ஆகவே, ஒழுக்கத்தின் பின்னர்க் ‘கல்வி’ கூறப்பட்டது.

நன்மை பயப்பின் பொய்யும் மெய்யாகியும் தீமைபயப்பின் மெய்யும் பொய்யாகியும் திரிதலானும், அவ்வேறுபாடுணர் தற்குக் கல்வியே கண்ணாம் ஆதலானும், வாய்மை இலக்கணம் உணர்தற்குக் கல்வி காரணமாதலின், கல்வியின் பின்னர் ‘வாய்மை’ கூறப்பட்டது.

அழுக்காறின்மைக்கு வாய்மையே காரணமாதலின், வாய்மை யின் பின்னர் ‘அழுக்காறிலாமை’ (அஃகா வன்பு) கூறப்பட் டது.

அழுக்காறின்மையை இயல்பாக உடையவனுக்கு, பிறன் பொருள்-உரிமை-பணி-முகமன் - என்னும் நால்வகையுள் யாதாயினும் வெஃகுதல் என்பது குற்றமெனத் தோன்றும் ஆதலின், அழுக்காறிலாமையின் பின்னர் ‘வெஃகா உள்ளம்’ கூறப்பட்டது. (வெஃகாமை - பிறன் பொருளிடத்தில் அவா வின்மை.)

இனி அழுக்காறிலாமையும் அவாவின்மையும் காரணமாக நால்வகைய நடுவுநிலைமையும் உளவாம் ஆதலின், அவற்றின் பின்னர்ச் ‘சமநிலை’ கூறப்பட்டது. (நண்பு-நண்பன்மை, மேல்-மேலன்மை, சுற்றம் - சுற்றமன்மை, கல்வி - கல்லாமை என்னும் பகுதிகள் பற்றி அந்நான்கு வகையின்கண்ணும் வழுவாமல் ஒப்ப நிற்றலால் சமநிலை நால்வகைப்பட்டது.) (பா. வி. பக். 58-73)

ஆட்டின் பொதுப்பெயர் -

{Entry: P16b__062}

ஆட்டின் பொதுப்பெயராவன மறி, உதள், மோத்தை, மேழகம், வருடை, கொறி, தகர், கடா, கொச்சை, மேடம், துருவை, செம்மறி, பள்ளை, வெள்ளை, புருவை, வற்காலி, மை என்பன. (திவா. பக். 54)

இனி, துள்ளல், அசம், வெறி, அருணம், சாகம் என்பனவும் உள. (பிங். 2479)

ஆண் -

{Entry: P16b__063}

ஆண் என்பது பொதுப்பெயராயினும் மரீஇ வந்த வழக்கான உயர்திணைக்கே உரியது. (தொ.பொ. 624 பேரா.)

ஆண்பாற் பெயர்கள் -

{Entry: P16b__064}

ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கடுவன், கண்டி, என்பனவும் பிறவும் மரபு பற்றி வரும் ஆண்பால் பெயர்கள்.

(தொ. மர. 2)

ஆண்பாற்பிள்ளைத் திருநாமம் -

{Entry: P16b__065}

தோன்றல், புத்திரன், சேய், சுதன், மதலை, ஏயன், மருமான், தனையன், செம்மல், புதல்வன், பாலன், செல்வன், சந்ததி, குட்டன், சிறுவன், காதலன், குமாரன், மைந்தன், நந்தனன் என்பன ஆண் மகனுக்கு உரிய பிள்ளைப் பெயர்கள். (நாம.நி. 195) கான்முளை என்பதும் அது.

ஆணை கூறல் -

{Entry: P16b__066}

இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று. அஃதாவது ஆசிரியன் தன் நூலில் தான் குறிப்பிடும் சில செய்திகளை வேறு காரணம் எதுவும் கூறாது, “இக்கருத்தை எல்லீரும் கொண்மின்; இஃது எம் ஆணை” என்றே கூறி விடுத்தல். (தொ. பொ. 665 பேரா.)

எ-டு : ‘அம்மின் இறுதி கசதக் காலை, தன்மெய் திரிந்து ங ஞ ந ஆகும்’ (தொ. எழுத். நச். 129) என்று கூறி, வருமொழி பகரம் வருவழி இயல்பாகும் எனப் பெறப்பட வைத்துப் பின்னர், ‘அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும்’ (எழுத். நச். 314) என, மகர ஈற்று அல்வழிப் புணர்ச்சிக்கு விதி கூறி, மரம் + பெரிது = மரம் பெரிது என மகரம் திரிபின்றிப் புணர்தலைக் கொள்ள வைப்பது ஆணை கூறல் என்னும் உத்திவகை யாம்.

“வேற்றுமையும் இருவகை எச்சமும் எதிர்மறுத்து மொழியி னும் தத்தம் பொருள் நிலை திரியா” (தொல். சொல். 107, 236 சேனா.) என்று கூறுவதும் ஆணை கூறலாம்.

“பலவகையாகப் பரந்து வரும் உரிச்சொற்களை யாம் கூறியுள்ள வழிகளைக் கடைப்பிடித்து, யாம் கிளவாதவற் றைக் கிளந்தனகொண்டு அறிக என்பது எம் ஆணை” என, ‘ஓம்படை ஆணையின் கிளந்தவற் றியலான், பாங்குற உணர்தல்’ (சொ. 396 சேனா) என்றாற் போலக் கூறுவன இவ்வுத்திவகையின் இனம்.

தன்கோட் கூறல் நூல் செய்யும் பகுதிக்கண்ணது; இது கருவிகளை விளக்கிக் கூறும் இடத்தின்கண்ணது.

ஆத்திரையன் பேராசிரியன் கூறும் ஆசிரியன் இலக்கணம் -

{Entry: P16b__067}

வலம்புரிமுத்தினைப் போன்ற நற்குடிப்பிறப்பும், ஆகாய கங்கையைப் போன்ற தூய்மையும், அவ்யாறு நிலவுலகிற்குப் பயன்படுமாறு இழிந்துவந்தது போன்று பிறர்நலம் கருதி நற்கருமம் புரியும் ஒழுகலாறும், பதினாறுகலையும் நிறைந்த முழுமதி போன்ற கல்வியும், திங்களும் ஞாயிறும் காலம் தவறாது தோன்றிச் செயற்படுமாறு போலக் காலம் தவறாது கடனாற்றும் வாய்மையும், அழுக்காறிலாமை என்னும் பண்பும், பிறர்பொருளைக் கள்ளக் கருதா உள்ளமும், துலாக் கோலின் நாவினை ஒத்த நடுவு நிலைமையும் ஆகிய எண்வகை உறுப்பினையும் உடையராகி, உறுதியாகப் பிறர்க்கு உதவும் வாழ்க்கையும், அதற்கு ஏற்ற முயற்சியும், உலகியலை அறிந்து அதற்கேற்றவாறு நடப்பதற்கு உளதாம் அறிவும், கல்விப் பொலிவோடு உருவின்மிக்கதோர் உடம்பும், போற்றாரையும் பொறுக்கும் பொறுமையும், மறை பிறர் அறியாமை நெஞ் சினை நிறுத்தற்கு உளதாம் நிறையும், மறக்கக் கூடாத கல்விச்செய்தியை மறவாமையும், கண்டோர் போற்றத்தக்க அறிவும், வேண்டார் அஞ்சத்தக்க பீடும், பிறர் மதிக்கத்தக்க ஆற்றலும், அதனால் உளதாம் புகழும், சொற்பொருளைக் கேட்டார் உணரத்தக்க வகையால் அரிதாம் பொருளையும் எளிதாக்கி உளம் கொளும்வகை உரைக்கும் நாவன்மையும், தன்னிடம் கற்க வந்த மாணாக்கர் தன்பால் கற்றலையே பெரிதும் விரும்பும்வகை பாடம் சொல்லும் ஆற்றலும் ஆகிய தொன்மை மரபு கூறும் பெருஞ்சிறப்புடைய ஒருவனே நல்லாசிரியன் எனப்படுவான்.

ஆத்திரையன் பேராசிரியன் கூறும் மாணாக்கன் இலக்கணம் -

{Entry: P16b__068}

ஆசிரியனுக்குக் கூறிய உறுப்புக்களில் தனக்கும் ஏற்புடைய குடிப்பிறப்பு, தூய்மை, வாய்மை, அழுக்காறின்மை, பிறர் பொருளைக் கள்ளக்கருதாமை என்பவற்றை யுடையனாய், ஆசிரியன் பாடம் சொல்லியவற்றைக் கேட்கும்போது மனத்தைச் சென்ற இடத்தால் செல்ல விடாது பாடத்திலேயே செலுத்திக் கூறியவாறே மனங்கொண்டு பின் சிந்தித்து உள்ளவாறே உணர்தலும், செய்நன்றி அறிதலும், தீயவர் நட்புக் கொள்ளாமையும் போன்ற இயல்புகள் உடையவனே நன்மாணாக்கன் ஆகும்.

ஆயெருமை உவமையாதல் -

{Entry: P16b__069}

கற்பிக்கப்படாதோனுக்குக் காட்டும் உவமங்கள் ஆறனுள் ஆயெருமையும் ஒன்று. ஆயெருமையாவது கன்று ஈன்று இழந்த தாய்எருமை. ஆய் - தாய். (பா. வி. 140, 150)

ஆயெருமை, பல நாள் இரைகொடுத்து ஒருநாள் மறவியால் இரையிடாவிடினும், அஃதொன்றே கருதிக் கட்டுத்தறியினை யும் முறித்துத் தான் நின்ற நிலையை நீங்கிப் பிறிதிடம் செல்ல முயலும்; முன்னை நாள்களில் நொய்யும் நொறுங்கும் தவிடும் முதலாயவற்றுள் ஒன்று அளித்துப் பிறகு ஒருநாள் அது கொடாவிடின், அதனை நினைந்து பால் கறவாமை யுடையது; அதுபோல்வனவற்றைச் சிலநாள் மறவாமையுடை யது.

அவ்வாறே மாணாக்கன் ஆகத் தகாதோன், ஆசிரியன் ஒரோவழி மறவியான் கல்விப்பொருள் புகட்டத் தவறியவழி, தான் மற்றோர் ஆசிரியனை நாட நினைத்து முயல்வான்; கல்விப் பொருள் விசேடமாக வழங்கும் ஆசான் ஒருநாள் அவ்வாறு வழங்கத் தவறியவழி, தான் அதனையே நினைந்து அவனுக்கு வழிபாடு செய்தலில் குறைபாடு காட்டுவான்; அன்று ஆசான் செய்த அதனையே சிலநாள் மறவாமலிருந்து மனத்தில் வேறுபாடு கொள்வான்.

ஆழமுடைத்தாதல் -

{Entry: P16b__070}

நூலழகு பத்தனுள் இதுவுமொன்று; பொருள் மேற்பட்ட நிலையிற் காணப்படுதலன்றி, ஆழமும் உடைத்தாதல் ஓரழகாம். (நன். 13)

இரட்டுற மொழிதலாக வரும் நூற்பாக்கள் இவ்வழகினை யுடையன.

ஆற்றொழுக்கு -

{Entry: P16b__071}

ஆறு மடங்காது ஒருமுகமாக ஒழுகுமாறுபோல, கிடந்த வரிசையில் சூத்திரங்கள் தொடர்ந்து பொருள் கொள்ள நிற்கும் நிலை; சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. இலக்கண நூல்களில் இங்ஙனம் அமையும் சூத்திரங்களே பெரும்பான் மையன . (நன். 19)

எ-டு : ‘அஇ உஎ ஒக்குறில் ஐந்தே’ (நன். 64)

‘ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில்’ (நன். 65)

போல்வன.

ஆறறிவுயிர் -

{Entry: P16b__072}

ஐம்பொறியுணர்வொடு மனவுணர்வுமுடைய மக்கள்.

தேவரும் தானவரும் முதலாயினார் ‘கிளை’ யெனப்படுவார்; குரங்கு முதலிய விலங்கினுள் மனவுணர்வுடைய உளவாயின் அவை பிறப்பு எனப்படும்.

நல்லறிவுடையார் என்று கூறற்குச் சிறந்தவர் மக்களே என்பது சூத்திரக் கருத்து. (தொ. பொ. 588 பேரா.)

ஆறுவிகற்பம் -

{Entry: P16b__073}

ஆறு விகற்பமாவன : எடுத்துக் காட்டல், பதம்காட்டல், பதம்விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல் என்பன. (யா. க. பாயிரம் உரை.)

ஆனந்தரியம் -

{Entry: P16b__074}

இவை ஆராய்ந்த பின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு.

(நன். சிறப். சிவஞா. விரு.)

ஆனேறு மாணாக்கனுக்கு உவமம் ஆதல் -

{Entry: P16b__075}

ஆனேறாவது இடபம்; மாணாக்கன் செப்ப முடையனாதல் வேண்டும் என்றற்குக் காட்டப்படும் உவமம். ஆனேறு, வெகுளி தோன்றின் கொம்பு முதலியவற்றாலும், உவகை தோன்றின் முக்காரம் முதலியவற்றாலும் அகத்துள்ளவற் றையே புறத்தும் காட்டும் இயல்புடையது. ஆதலின் செப்பம் உடையது. மாணாக்கனும் எண்ணமும் செயலும் ஒத்திருத்தல் ஆகிய செப்பமுடையனாதல் வேண்டும். (பா. வி. பக். 144)

இ section: 23 entries

இடைநூல் -

{Entry: P16b__076}

ஈரதிகாரம் கொண்ட நன்னூல் போல்வனவற்றை இடைநூல் என்ப. (பா. வி. பக். 111)

இடைமாணாக்கரும் கிளியும் -

{Entry: P16b__077}

சொன்னதைச் சொல்வதன்றிப் பிற சொல்லல் அறியாத கிளி போல ஆசான் கற்பித்ததைக் கற்பித்த வண்ணமே கூறுத லன்றி அதனைத் தம் நுண்ணுணர்வான் மேலும் இழைத் துணர மாட்டாத இயல்பினர் இடைமாணாக்கர் ஆவர். (நன். 38 உரை)

இடைமாணாக்கரும் நிலனும் -

{Entry: P16b__078}

நிலம் தன்னை உழுவோனுடைய உழைப்பின் அளவு மிகுதியாகவோ குறைவாகவோ பயன் கொடுக்குமாறு போல, ஆசான் தமக்குப் பாடம் பயிற்றிய புலமையளவிற்கேற்பவே தாமும் அக்கல்விப்பயன் பெறுபவராவர் இடைமாணாக்கர். (நன். 38 உரை)

இயற்கை முதல்நூல் -

{Entry: P16b__079}

இயற்கை முதல்நூலாவது, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனால் காணப்பட்டதாய்த் தனக்கொரு காரணமின்றித் தானே பிற நூற்குக் காரணமாகிய நூலாம். அதனால் அது தனக்கு ஒரு முதல்நூலையும் இணைநூலை யும் பெறாமல், தானே இணையாய நூல் எனப்படும். அது முனைவன் ஆதியில் கண்டனவாகிய மாகேச்சுர சூத்திரமும் வேதாகமங்களும் முதலாய ஆரிய முதல்நூல்களும், இசை நுணுக்கமும் களவியலும் முதலாய தமிழ் முதல்நூல்களும் போல்வது. (பா. வி. பக். 90)

இரட்டுற மொழிதல் -

{Entry: P16b__080}

32 தந்திர உத்தியுள் இதுவும் ஒன்று. அஃதாவது இரண்டு பொருள்பட உரைத்தல்.

எ-டு : ‘ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா’ (நன். 398)

என்புழி, ‘சிறப்பினின்’ என்னும் சொல் செவிக்கின்பம் தந்து சிறத்தலான் எனவும், அப்பொருளைச் சிறப்பித்து நிற்றலான் எனவும் இரட்டுற மொழியப்பட்டது. (நன். 14)

இரண்டு கூறு (உரை வகை) -

{Entry: P16b__081}

தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்துரைத்தல் என இவை சூத்திரப் பொருளுரைக்கும் உரை வகையுள் இரண்டு கூறாம். (யா. க. பாயிரம் உரை)

இரலை -

{Entry: P16b__082}

மரபு பற்றி வரும் ஆண்பாற் பெயர்களுள் ஒன்று; புல்வாய்க்கு உரியது. புல்வாய் - மான்.

‘புல்வாய் இரலை நெற்றி அன்ன’ (புறநா. 374)

எனவரும் (தொ. பொ. மர.44 பேரா.)

இருதிணை ஐம்பால் மரபு -

{Entry: P16b__083}

நிலம் வலிது, தீ வெய்து, நீர் தண்ணென்றது, வளி எறிந்தது, ஆகாயம் அகலியது - என அஃறிணை வழக்கின ஆயினும் இவ்வைம்பெரும்பூதங்கள் கலந்தவிடத்தும் அஃறிணை வாய்பாட்டால் வழங்காமல், உயர்திணை வாய்பாடு வேறாக வும் அஃறிணை வாய்பாடு வேறாகவும் அவற்றின் பகுதியவா கிய ஐம்பாற் சொற்களும் வெவ்வேறாகவும் வழங்குகிற வழக்கிற்குக் காரணம் மரபுதானன்றிப் பிறிதில்லை என்பது.

(தொ. பொ. 644 பேரா.)

இருவகை உரை -

{Entry: P16b__084}

காண்டிகைஉரையும் விருத்திஉரையும் இருவகைப்பட்ட உரையாம். சூத்திரத்துட்பட்ட இலக்கணம் ஒன்றும் மறையாது முடியச் செய்வது காண்டிகையாம். சூத்திரம் மிகப் பரந்துபட்ட தாயிருப்பின், முதலும் இறுதியும் சொல்லி, “இச்செய்திகளை நுவல்வது இந்நூற்பா” என்று கூறலும் உண்டு. “பலவும் கொள்க” என்று காண்டிகையுரை செய்த லும் உண்டு. முற்காலத்தே இவ்வாறு சுருக்கமாகக் காண் டிகை எழுதி உதாரணங்கூடக் காட்டாத நிலையிலும் மாணாக்கர் உணரும் திறன் இருந்தது. இனிக் “காந்தள் முதலாகக் கூறப்பட்ட இருபத்தொரு துறையும் கரந்தை” என்று கூறுவதும் உண்டு. (தொ. பொ. 656 பேரா.)

இக்காண்டிகை சற்று விரித்துக் கூறப்படுவதும் உண்டு. சொல்லிலக்கணம் தொடரிலக்கணம் முதலியன கூறாமல் சொற்பொருள் மாத்திரம் கூறி, “இச்சூத்திரம் நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம்” என்றாற் போலச் சூத்திர அமைப்பினைச் சுட்டி, அதனை விளக்கக் காரணங்கள் கூறி, அச் சூத்திரம் நன்கு புலனாதற்கு மேற்கோளோ எடுத்துக் காட்டுக்களோ கூறி, ஆசிரியர் கொண்ட கருத்தை விளக்கி வைப்பது அது. (தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் உரைத்த காண்டிகை இவ்வகையினைச் சேர்ந்தது)(657 பேரா.)

விருத்தியுரை தொல்காப்பியத்துள் உரை என்றே குறிப்பிடப் படுகிறது. நூற்பாவில் கூறப்பட்ட பொருளேயன்றி அவ்விடத் துக்கு இன்றியமையாத எல்லாவற்றையும் கூட்டிச் சொல்வது ‘உரை’ எனப்படும்.

எ-டு : ‘இயற்கைப் பொருளை இற்றெனக்கிளத்தல்’ (தொ. சொல். 19-சே)

“தன் தன்மையான் நிகழ் பொருளை இன்ன தன்மைத்தென்று சொல்லுக என்றவாறு. அது நிலம்வலிது, நீர் தண்ணிது, தீவெய்து, வளி உளரும், உயிர் உணரும் என்றாற் போல்வன” என்ற காண்டிகையுரையோடு அமையாது, சூத்திரத்தில் கூறப்படாத போதும், ‘நிலம் வலிதாயிற்று என்பது வழு வமைதி’ என்பதனை விளக்கிக் கூறுதலும் உரையின் அமைப்பாம். (658 பேரா.)

இவ்வுரை இன்னும் விரிவாகவும் அமையும். மறுதலையான செய்திகளை இடை செறித்து, வினாவுதலும், அதற்கு விடை கூறுதலும், தன்நூல் மேற்கோளையும் முதல் நூல் மேற்கோ ளையும் எடுத்துக்காட்டி, ஐயமும் திரிபும் நீக்கிப் பொருள் தெளிவாகக் கவர்த்தல் இன்றி அறியுமாறு செய்யும் விரிவுரை யும் இவ்வுரையின் பகுதியாக அடங்கும். (659 பேரா.)

இருவகைக் காண்டிகை -

{Entry: P16b__085}

‘இருவகை உரையுள்’ முதல் இருபத்தி காண்க. இவற்றைக் ‘கரப்பின்றி முடியும் காண்டிகை’, ‘மேவாங்கமைந்த மெய்ந் நெறிக் காண்டிகை’ எனலாம். (தொ. பொ. 656, 657 பேரா.)

இருவகை நூல்கள் -

{Entry: P16b__086}

மரபுநிலை திரியாமையைத் தமக்குக் குணமாகக் கொண்டு உரைக்கப்படும் நூல் முதல்நூல் எனவும் வழிநூல் எனவும் இருவகைப்பட்ட இலக்கணத்தை யுடையன.

(தொ. பொ. 648 பேரா.)

இருவகைப் பாயிரத்துக்கும் பொது உவமை -

{Entry: P16b__087}

இருவகைப் பாயிரத்துக்கும் உவமம் ஆவன கொழுவும், வாயில் மாடமும், பாவையும். துன்னூசி நுழைதற்குக் கொழு வழி ஆக்கலுடைத்து; நகர்க்குள் செல்லுதற்கு வாயில்மாடம் வழி ஆக்கலுடையது; பாவை சுவர்க்கு அணி செய்த லுடையது. இவை போலவே பாயிரம் நூலுள் நுழைதற்கு வழியாக்கலும் நூலுட் செல்லுதற்கு வழியாதலுடன் நூற்கு அணி செய்தலும் உடையது. (பா. வி. பக். 3)

இருவகைப் பாயிரம் -

{Entry: P16b__088}

பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமுமெனப் பாயிரம் இருவகைப்படும் அவற்றுள், பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்முகத்தும் உரைக்கப்படும். சிறப்புப்பாயிரம் என்பது தன்னான் உரைக்கப்படுகின்ற நூலுக்கு இன்றியமை யாதது. நூற்குப் புறமாவன கூறுதலால் புறவுரையாம் என்பது. (பா. வி. பக். 3, 2)

இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு -

{Entry: P16b__089}

எழுவகை மதங்களுள் ஒன்று; ஒன்றற்கொன்று முரணாக இருவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு செய்திகளுள் ஒன்றை நீக்கி மற்றொன்றைத் துணிந்து தழுவிக் கொள்ளுதல். (நன். 11)

இது 32 உத்திகளுள் ‘ஒருதலை துணிதல்’ எனப்படும். ஏழ் என்ற எண்ணினை ஒற்று ஈற்று மொழியாகக் கொண்டார் (நன். 14) தொல்காப்பியனார் (எ. 388 நச்.); பிறர் ‘ஏழு’ என முற்றுகர ஈற்று மொழியாகக் கொண்டனர். நன்னூலார் ஏழு என முற்றுகர ஈற்று மொழியாகக் கொண்டமை இம்மதம் பற்றியதாம். (நன். 188 சங். உரை)

இலக்கண விளக்க நூலார் மாணாக்கர் பற்றிக் கூறும் உவமங்கள் பொருந்தாமை -

{Entry: P16b__090}

இலக்கணவிளக்க நூலார் முதலாயினார் ‘பாலும் நீரும் பாற்படப் பிரித்தல், அன்னத்துக் கியல்பு’ என்றார். மதிநுட்பத் தொடு நூலறிவும் வாய்க்கப்பெறாமல் கல்வி கற்கப் புகுந்த மாணாக்கர்க்குக் குணம்குற்றத்தையேனும் பிறவற்றையேனும் பிரித்துணரும் ஆற்றல் உளதாகாமையால் அது பொருந் தாது.

அவர் ‘கிளந்தவா கிளத்தல் கிளியினது இயல்பு’ என்றார். ஆசிரியன் சொல்லிய பொருண்மையைச் சொல்லியவாறு ஆய்ந்துணர்ந்து கோடல் மாணாக்கர் இயல்பு ஆவதன்றி, கிளந்தவாறு கிளத்தலால் பொருளுணர்ந்தார் என்பது பெறப்படாமையானும், பொருள் உணராவிடில் கல்விப் பயன் இன்மையானும் பொருந்தாது.

நன்னீரம் என்னாது நன்னிறம் என்று அவர் பாடமோதி ‘எந்நிறம் தோய்தற்கும் ஏற்றது நன்னிறம்’ என்றார். உவம வியல் நூற்பாக்கட்கு அது பொருந்தாது. நன்னிறம் பண்பும் மாணாக்கன் முதலும் ஆதலின் முதலொடு முதலும் சினையொடு சினையும் என்றாவது முதலொடு சினையும் சினையொடு முதலும் என மாறியாவது உவமமும் பொரு ளும் வருதலின்றிப் பண்பும் முதலும் என அவை மயங்கல் கூடாமையின் தொல்காப்பியர்க்கு அது கருத்தன்று. வெண்மை முதலிய நிறம் நல்லன தீயன எனப் படுதலின்றி, இது நன்னிறம் இது தீய நிறம் என்னும் வழக்கு யாண்டும் இன்று; நன்னிறம் எனப் பொதுமையாகக் கூறி, அஃது எந்நிறமும் தோய்தற்கு ஏற்றல் என்பது ஏலாமையான் அதுவும் பொருந்தாது.

அவர் ‘நல்லவை அகத்திட்டு நவைபுறத்து இடுவது நெய்யரி’ என்றார். நல்லவை, நவை என்பன யாவை எனத் துணிதற் கின்றி மயக்கம் நிகழ்கிறது. நல்லன இவை நவை இவை என உணர்தல் நூலறிவானன்றி, கற்கப் புகுந்த மாணாக்கர்க்கு இயலாது; இத்தன்மையுள் அவர்கூறிய அன்னத்து இயல்பு அடங்குதலின் அதனை வேறாகக் கூறுதலால் பயனின்று. ஆதலின் அது பொருந்தாது.

அவர் ‘குழூஉப் புறந்தருதல் குஞ்சரத்தியல்பு’ என்றார். அஃது இல்வாழ்வான் தன்மையாகிய சுற்றந்தழால் ஆவதன்றி மாணாக்கனது தன்மையாகாமையின் பொருந்தாது.

அவர் ‘பிறந்த ஒலியின் பெற்றி ஓர்ந்துணர்தல் ஆனேற்றின் செய்தி’ என்றார். ஒலியின் பெற்றி உணர ஆனேற்றினும் சிறந்த அசுணம் மான் முதலாய பிறவற்றை விடுத்துச் சிறப் பில்லாத அதனைக் கூறுவது பொருந்தாது.

அவர் ‘குரங்கு எறி விளங்காய்’ எனப்பாடமோதி, ‘கல்லால் எறிந்து கருது பயன் கொள்வோன், குரங்கெறி விளங்காயாம்’ எனத் தன்மையும் கூறினார். குரங்கு எறிகாய் பிறவற்றை நீக்கி விளங்காய் என ஒரே காயினைச் சுட்டற்குச் சிறப்பியல்பு இல்லை; ‘கல்லால் எறிந்து கருதுபயன் கோடல்’ என்றமை யான், அத்தன்மை எக்காய்க்காயினும் ஒப்புமைக் குணம் ஆகாமல், காய் கொள்வோர் குணமாகவே முடிகிறது. அவ்வாறு கொள்வோர் தன்மையை ஒப்புமைக் குணமாக்கல் கூடாமையானும் அது பொருந்தாது.

இன்னும் அவர் ‘விலங்கி வீழ்ந்து வெண்ணீர் உழக்கிக், கலங்கல் செய்து அருந்தல் காரா மேற்றே’ என்றார். சுனைநீர் முதலாயின அவ்வாறு எருமை கலக்கினும் கலங்கா; கலங்கிய நீர் அருந்தினாலும் அதனால் எருமைக்குக் கேடொன்று மின்றி விடாய் தீரும்; ஆசான் தனக்குக் கேடுறினும் அது கருதாமல் மாணாக்கனது நன்மையே கருதுவான். ஆதலின் அது பொருந்தாது.

இன்னும்அவர் ‘ஒன்றிடை ஆர உறினும் குளகு, சென்று அருந்தல் யாட்டின் சீரே’ என்றார். ஆடு சென்றுசென்று அருந்தினும், ஒன்றிடை அருந்தும் ஏனைய விலங்கு போலவே பசி தீர்தல் ஆகிய பயன்பெறுவதன்றி அதனால் அதற் கென்று கேடொன்றுமில்லை; பலர்பால் சென்று வினாதல், வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொள்வது நன்மாணாக்கர் கடனாதலைப் புராண இதிகாசங்களுள் சுகன் அருச்சுனன் முதலியோரிடத்துக் காண்கிறோம். ஆதலின் அதுவும் பொருந்தாது.

இனி அவர் ‘நீரிடையன்றி நிலத்திடை ஓடாச், சீருடையதுவே தோணி’ என்றார் எல்லாத் தன்மையும் முற்ற உடையதொரு பொருள் யாண்டும் இல்லை. அவ்வாறே யாதானும் ஒரு தன்மையின்மை பற்றி மாணாக்கன் ஆகாதான் என்று ஒருவனைத் தள்ளுதல் முடியாது; முடியுமாயினும், தோணி போலவே கடல் ஓடாத நெடுந்தேரும் பிறவும் இருப்பத் தோணி ஒன்றனையே சுட்டுதல் சிறப்பின்று. ஆதலின் அதுவும் பொருந்தாது. (பா. வி. பக். 140, 141; 150 - 152)

இளம்பூரணர் முதலாயினார் வேங்கடம் குமரியை அகப் பாட்டெல்லையாகக் கூறியது பொருந்தாமை -

{Entry: P16b__091}

வடக்கே எல்லையாக வேங்கடம் என ஒருமலை கூறிய பனம்பாரனார்க்குத் தெற்கேயும் நிலையுடைத்தாகிய ஒருமலை கூறுவதே முறை. ஓரிடத்தில் நிலைபெறாது நெடுகச் செல்லும் யாற்றினைக் கூறுதல் எல்லை ஆகாது. பிற்காலத்தே நூல் செய்த சிறுகாக்கை பாடினியார் முதலாயினார் தெற்கே பிறநாடின்றித் தமிழ்நாடே ஆமாறு கடல் சூழ்ந்தமையான் நிலையுடைய மலையினை விதந்து கூறல் வேண்டாமையால் கடலையே எல்லை கூறினர். தொல்காப்பியரும் பிறரும் அகப்பாட்டெல்லை புறப்பாட்டெல்லை என யாண்டும் கூறி னாரல்லர். தொல்காப்பியர் ‘வண்புகழ்மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயர் எல்லை யகத்தவர்’ எனப் பொதுப் படவே கூறினார். தலைச்சங்கம் இரீஇய தென்மதுரையை அகவெல்லையுட்படுத்தாது புற எல்லையுட்படுத்துதல் கூடாது; அக் காலத்தே குமரியாற்றின் வடக்கே பாண்டியர்க்குத் தலைநகரமும் சங்கமும் இன்றி, பெரும்பான்மை காடாகக் கிடந்த அந்நாட்டினை அகப்பாட்டெல்லை என்றலும் கூடாது. இவ்வாற்றால் வேங்கடங் குமரியை அகப்பாட் டெல்லை யாகக் கூறியமை பொருந்தாது. (பா. வி. பக். 201)

இளமை மரபுப்பெயர்கள் -

{Entry: P16b__092}

பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்ற ஒன்பதும் இருதிணையிலும் இளமைத் தன்மை யுணர்த்தும் பெயர்கள். (தொ. மர. 1)

இனி, பல்வேறு நிகண்டுகள் குறிப்பன -

{Entry: P16b__093}

மழவு, நவ்வி, சேய், போதகம், மஞ்சு, குழவு, குருளை, கயம், இளை, புருவை, முருகு, கருணம், பீழ், பருவம், சேடு, கொம்மை, வெண்மை, நாகு - (திவா. பக். 189)

மழவு, முருகு, தருணம், மஞ்சு, குழவு, விளர், கொம்மை, புருவை, கோமளம், போதகம் (பிங். 1948)

குருளை, மழவு, வெண்மை, குழவு கோமளம், கொம்மை, புருவை, யௌவனம், நாகு, போதகம், தருணம், நவ்வி, முருகு, கிளை. (சூடா. பக். 151)

சேய், போதகம், மஞ்சு, மீளி, குருளை, மீள், சேடு, கயம், நவ்வி, பருவம், தருணம், மழவு, கொம்மை, குருகு, புரு, கோமளம், முருகு, குழவு. (கயா. நி. 336)

மஞ்சு, கோமளம், முருகு, போதகம், குருளை, பிள்ளை, பருவம், விளரி, விளா, மண்ணை, யௌவனம், விளவு, நவ்வி, குருகு, இளை, சேய், நாகு, தருணம், புருவை, கயம், விளைச்சு, கொம்மை, மழவு குழவு, சேகு, பீரு, விளை, வீண், செவ்வி. (ஆ.நி. 192)

இளமை மரபுப்பெயருக்குப் புறனடை -

{Entry: P16b__094}

இப்புறனடைச் சூத்திரத்தான் இளமைப் பெயருள் முன் விதந்து கூறப்படாத நாகு என்ற இளமைப் பெயர் ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக வழங்குதல் முதலியன கொள்ளப் படும். (தொ. பொ. 581 பேரா.)

இறந்தது காத்தல் -

{Entry: P16b__095}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; முன் நூற்பாவில் கூறிய பொருள்களில் ஒன்றனை வேறொரு நூற்பாவில் நீக்குதல். (தொ. பொ. 665 பேரா.)

முற்கூறப்பட்ட சூத்திரத்தால் பெறப்படாத பொருளைப் பின் வருகின்ற சூத்திரத்தால் அமைத்தல். (656 இள.)

நோயும் இன்பமும் மிகுங்காலத்துத் தலைவனையும் தலைவியையும் போல, கனவு காண்டல் அவரோடு தொடர் புடைய நால்வர்க்கு முரித்து என்ற கருத்தில் ‘பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே’ (பொருளியல் 5) என்று கூறிப் பின் தோழி பாங்கன் இவர்களை விலக்குதற்கு, “நட்பின் நடக்கை ஆங்கலங் கடையே” (பொருளியல் 6) என்ற நூற்பா யாத்தல் இவ்வுத்திவகை. நூற்புறனடையும் ஓத்துப் புறனடை யும் அதன் இனம். (பேரா.)

வழிநூற்குக் கூறிய சூத்திரத்தில் வழிநூலானாகிய பயன் கூறாது, ‘வழியின் நெறியே நால்வகைத் தாகும்’ (தொ. பொ. 651) என்று வகை மாத்திரம் கூறிப் பின் ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து, அதற்பட யாத்தலோ டனைமர பினவே’ (652) என வழிநூலானாகிய பயனை வேறொரு நூற்பாவினுட் கூறல். (இள. மா. அ. 25 உரை.)

ஓரியலுள் கூறியதோர் இலக்கணத்தைப் பிறிதோர் இயலின்கண் கூற நேர்ந்தவிடத்து, முற்கூறிய நெறி தவறாது காத்துரைத்தல். (தொ. மர. 109 ச. பால)

எ-டு : ‘ஐ ஒடு கு இன் அதுகண் என்னும், அவ்வா றென்ப வேற்றுமை யுருபே’ (எழுத். 113) எனக் கூறிய இலக்க ணத்தைக் ‘கூறிய முறையின் உருபு நிலை திரியாது, ஈறு பெயர்க்கு ஆகும்’ (வேற்றுமை - 8) எனக் காத்துரைத் தல்.

இறந்தது விலக்கல் (1) -

{Entry: P16b__096}

(1) இது தொல்காப்பியர் கூறாதொழிய, நன்னூலார் கூறும் 32 உத்திகளுள் ஒன்று. அஃதாவது முன்பு உள்ளதாய்ப் பின்பு வழங்காதாயின் அதனை விலக்கல்.

ஆந்தை பூந்தை முதலாய புணர்ச்சிமுடிவுகளைத் தொல் காப்பியர் கூறியிருப்பவும் (தொ.எழுத். 347, 348 நச்.) நன்னூ லார் கூறாதொழிந்தமை இவ்வுத்தி. (நன். 14)

இன்னதல்லது இதுவென மொழிதல் -

{Entry: P16b__097}

இது தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் உத்திகளுள் ஒன்று. “யாம் குறிப்பிடுவது இஃதன்று, இதுவே” எனத் தெளிவாகக் கூறுதல்

‘பன்னீ ருயிரும் க ச த ந ப ம வ ய

ஞ ங ஈ ரைந்துயிர் மெய்யும் மொழிமுதல்’ நன். 102

மொழி முதற்கண் மெய் வாராது உயிர்மெய்யே வரும் என்று விளக்கிக் கூறுதலின் இதன்கண் இவ்வுத்தி வந்தவாறு. (நன். 14, வீ.சோ. 180 உரை)

இன்னாச் சொற் பெறல் -

{Entry: P16b__098}

மாறனலங்காரம் சுட்டும் பத்துக் குற்றங்களில் ஒன்று. அஃதாவது கேட்டோர்க்கு இன்னா யாப்பிற்றாயிருத்தல்.

(தொ. பொ. 663 பேரா.)

சூத்திரச் செய்யுள் கேட்போர்க்கு இன்னா திசைப்பச் செய் தல் என்னு மிக்குற்றம் நல்லாசிரியர் நூலுள் காணப்படாது. (மா. அ. 23)

ஈ section: 16 entries

ஈகைக்கு இன்றியமையாக் குணன் -

{Entry: P16b__099}

ஆர்வமுடைமையும், நண்பும், தம்மால் அன்பு செய்யப் பட்டார்கண் துன்பம் கண்டவிடத்தே உளதாகும் வாட்ட மும், நட்டாரது மிகுதி கண்டவிடத்தே இடித்துரைத்தலும் என ஈகைக்கு இன்றியமையாக் குணம் நான்கு வகைப்படும்.

(பா. வி. பக். 83)

ஈதல் இயற்கை -

{Entry: P16b__100}

ஆசிரியன் பாடமுரைக்கும் முறைமை; அஃதாவது பசியால் இரப்போர்க்கு அவர் பசியளவறிந்து முகமலர்ந்து இன்சொற் கூறி உணவு அளித்தாற்போல மாணாக்கர்க்கு அவன் அளிக்கும் முறைமை. (பா. வி. பக். 5)

ஈதல் நிகழாக்காலம் -

{Entry: P16b__101}

மாணாக்கனும், ஆசிரியனும், இருவரும் சில காரணத்தால் பிரிதலின் ஈதலாகிய நூற்பொருளுரைத்தல் அப்பிரிவுக் காலத்தே நிகழாது. வேனிலும் நண்பகலும் முதலாகிய காலத்தே அறிவு கூரியரது சிந்தையும் கூம்பும்; வைகறை எற்பாடு இடையாமம் என்னும் சிறுபொழுதுகள் முறையே நித்த கருமத்திற்கும், உலகியற்கும், உறக்கத்திற்கும் இன்றியமை யாது வேண்டப்படுவன. நூற்பொருள் அளித்தற்குரிய ஏனைய பெரும்பொழுது சிறு பொழுதுகளில் உவா முதலிய காலத்தை நூல் விலக்குகிறது. ஈதல் நிகழாக்காலம் இவை என்பது. (பா. வி. பக். 122)

ஈதல் பற்றி ஈவாற் கியலும் துணைவினை -

{Entry: P16b__102}

நூற்பொருள் கொள்வோனாம் மாணாக்கன் உணரும் திறத்தான் பல உபாயங்களைச் சூழ்தல், அவனுள்ளத்தே நூற்பொருட் பரப்பு முதலியவற்றான் உளதாகும் அச்சமுறச் செய்யாமை, பல நாள்களுக்கன்றி அந்நாளுக்குரிய வகையால் அளவறிந்து வழங்கல், ஐயம் திரிபு அறியாமை எனும் முக்குற்றத்துள் அவனுளம் அகப்பட்டலையாவாறு பாடப் பொருளை அவனுளம் கொளுவுதல் என்னும் இவை நான்கும் நூற்பொருளை ஈதல் தொழிலிடத்தே ஆசிரியனுக்கு இயலும் துணைவினையாம். (பா. வி. பக். 79)

ஈதல் பற்றி ஈவோற்கியலும் முதற்காரண வினை -

{Entry: P16b__103}

மாணாக்கற்கு வழங்குமாறு வாய்த்த பல திறக் கலைச் செல்வமுடைமை, “மாணாக்கனுக்கு யான் ஈவேன்” என்றிருக் கும் மனப்பான்மை, பாடஞ்சொல்லுதற்கண் துணியும் குண முடைமை, அவ்வாறு ஈதற்கண் தடையின்றி வழங்கும் பெற்றி என்னும் இந்நான்கும் ஈதல் பற்றி ஆசிரியனுக்கு இயலும் முதற் காரண வினையாம். (பா. வி. பக். 77)

ஈதல் பற்றிக் கொள்வோற் சார்ந்த துணைவினை -

{Entry: P16b__104}

கொள்வானாம் மாணாக்கனை ஆசிரியன் தன் கீழிருந்து நூற்பொருள் கேட்பித்தல், தன் ஏவலான் அவனை உள்ள மும் உடலும் அசைத்தலின்மை, அவன் தானாகவேனும் அவ்வாறு அசையச் செய்யாமை, தானும் அசைதலின்மை என்னும் நான்கும் ஈதல் பற்றி மாணாக்கனைச் சார்ந்த துணைவினையாம். (பா. வி. பக். 82)

ஈதல் பற்றிச் செயப்படுபொருளில் நிகழும் துணைவினை -

{Entry: P16b__105}

நூற்பொருள் தொகையானும் வகையானும் இத்துணைத்து என வரையறுத்துப் பொருண்மை காட்டலும், சொல்லப் படுமவற்றுள் முன்னரும் பின்னரும் சொல்லிய பொருள் தம்முள் வேறுபடுமாற்றை விளங்கச் சுட்டுதலும், பொதுவாம் தன்மை சிதையாவாறு பல வகைத்தாக உணர்த்தலும், அவற்றது சிறப்பினையும் தனித்தனியே விதந்து புலப்படுத்த லும் என நான்கும் ஈதல் தொழிலிடத்தே செயப்படுபொரு ளில் நிகழும் துணை வினையாம். (பா. வி. பக். 801)

ஈதலைச் செய்யாது தள்ளப்படுவோர் -

{Entry: P16b__106}

சோம்புதலுடையான், அகந்தையுடையான், மறவிமிக்கான், காமுகன், கள்வன், பிணியாளன், நீங்காத கோபமுடையான், தொன்னூல் பரப்பினை யஞ்சித் தடுமாறு உள்ளத்தான் எனப்படும் எண்மர் ஆசிரியனால் ஈதல் செய்யப்படமாட் டாது நீக்கப்படுவோர். (பா. வி. பக். 137)

ஈதற்குரிய நூல்கள் -

{Entry: P16b__107}

அறநூலும் அறத்தொடுபட்ட பொருள்நூலும், அறத் தொடும் பொருளொடும் பட்ட இன்பநூலும், தீயவும் பயனிலவும் ஆகாமல் அறம்பொருளின்பம் பயக்கும் கருவி நூலும் என அவை, ஆசிரியன் மாணாக்கற்கு ஈதற்குரிய நூல்களாம். (பா. வி. பக். 116)

ஈரறிவுயிர் -

{Entry: P16b__108}

நந்தும் முரளும் ஊற்றுணர்வும் நாவுணர்வுமாகிய ஈரறி வுடைய உயிர்கள்; பிறவும் அக்கிளைப் பிறப்பு உள.

(நந்து - சங்கு; முரள் (ண்) - சிப்பி) இவற்றுக்குக் கிளையாவன கிளிஞ்சிலும் முற்றிலும் முதலாகிய கடல்வாழ்சாதியும் பிறவும் ஆம். (தொ. பொ. 584 பேரா)

ஈவோற்பற்றி இசையும் இடம் -

{Entry: P16b__109}

ஆசிரியன் இருக்கையிடனும், நூற்பொருள் அளித்தலைப் பொருந்தும் இடனும் நிலையுடையன ஆதல், அவன் முகம் மாணாக்கர் காணுமாறு அமைவதாதல், அவர் முகமும் அவன் காணுமாறு அமைவதாதல் என ஈவோற்பற்றி இசை யும் இடம் நான்காம். (பா. வி. பக். 119)

ஈவோன் தன்மை -

{Entry: P16b__110}

ஈவோனாகிய ஆசிரியன் தன்மையாவது, ஈதல்தொழில் நடை பெற வேண்டின் இரப்போன் வேண்டும் பொருளுடையனாம் தன்மையும், அதனை ஈதற்குக் காரணமாகிய இரக்கம் முதலிய குணனுடையனாம் தன்மையும் ஈவோற்கு இன்றியமையா திருத்தல் வேண்டுமாதலின், ஆசிரியன் அவற்றை உடைய னாதல். (பா. வி. பக். 5)

ஈவோன்தன்மை இருவகைத்தாதல் (1) -

{Entry: P16b__111}

ஈவோன் தன்மை பொதுவியல்பெனவும் சிறப்பியல்பெனவும் இருவகைத்து. ஈவோரது தன்மை பலவற்றுக்கும் பொதுவாக நிற்பது பொதுவியல்பு; அப்பலவற்றுள் ஈதல் வினை ஒன்றற்கே உரிமையாக நிற்பது சிறப்பியல்பு.

அவற்றுள் பொதுவியல்பாவது சான்றோரியல்பு எனப்படும் உறுப்பு வகை எட்டும், அவற்றுள் முதலாவதாகிய குடிப்பிறப் பின் வகை எட்டும் ஆம். அவ்வுறுப்பு வகை எட்டாவன: குடிப்பிறப்பு, தூய்மை, ஒழுக்கம், கல்வி, வாய்மை, அழுக்கா றிலாமை, அவாவிலாமை, நடுவுநிலை என இவை. (பா. வி. பக். 13)

குடிப்பிறப்பின்வகை எட்டாவன : ஈகை, நகை, இன்சொல், இகழாமை, அன்பு, பணிவு, செம்மை, நாணம் என இவை.

(பா. வி. பக். 17)

சிறப்பியல்பாவது அக்குடிப்பிறப்பின் முதலாவது வகையுள் முதற்குணமாகிய ஈதல் தொழிலுக்குக் காரணம் எனப்படும் முதல் நிலை வகை எட்டும் அவற்றின் விகற்பமும் ஆம். ஈதற் றொழிலுக்கு முதல்நிலையாவன வினையும், செய்வதும், செயப்படு பொருளும், நிலனும், காலமும், கருவியும், இன்ன தற்கு என்பதும், இது பயன் என்பதும் என எட்டாம். (பா. வி. பக். 76)

ஈவோன்தன்மை இருவகையாதல் (2) -

{Entry: P16b__112}

ஈவோன் ஆகிய ஆசிரியன் தன்மை, மாணாக்கற்குப் பயன்படு தலும் பயன்படாமையும் பற்றி, கற்கப் புகுதற்குத் தகுதி யுடைத்து ஆகலும் தகுதியுடைத்து ஆகாமையும் ஆகிய காரணத்தான், கற்கப்படு தன்மையும் கற்கப்படாத் தன்மையும் என இருவகைப்படும். (பா. வி. பக். 7)

ஈவோனது தொழிலும் அகத்தொழிலும் -

{Entry: P16b__113}

ஈவோனது தொழில் அகத்தொழிலும் புறத்தொழிலும் உரைத் தொழிலுமென மூவகைப்படும்.

அகத்தொழில் கைம்மாறு வேண்டாக் கடப்பாடும், வறி யார்க்கு ஈகையும், நல்லவற்றுள் அவர் நாடின கொடுத்தலும், கற்கும் அளவிற்குறையாது கொடுத்தலும் என நான்காம்.

(பா. வி. பக். 85)

ஈவோனது புறத்தொழில் -

{Entry: P16b__114}

ஈவோனது புறத்தொழில் பருவமுடையராகி விரும்பின் பகைவராயினும் உடனளித்தல், பருவம் எய்தளவும் தாழ்த்தல், பருவமுடையராகி அறிவறிந்து ஆள்வினையுடையராயிருப் போர்க்கே அவர் பலநாள் பழக்கமில ராயினும் எல்லாம் அளித்தல், செருக்கும் மானமும் இன்றி ஏக்கற்றுக் கற்கும் பணிவுடையார் சேய்மைக்கண் இருப்பினும் அளித்தல் என நான்காம். (பா. வி. பக். 88)

உ section: 19 entries

உடம்பொடு புணர்த்தல் -

{Entry: P16b__115}

இதனைத் தொல்காப்பிய உத்திவகைகளுள் ஒன்றாக இளம்பூரணர் கூறுகிறார். (பேராசிரியர் ‘உடம்பொடு புணர்த்தல்’ என்ற தொடருக்கு மாறாக ‘முறை பிறழாமை’ என்று பாடம் கொண்டார்.) இலக்கண வகையான் ஓதுத லின்றி ஆசிரியன் சூத்திரத்தின்கண்ணே ஒரு சொல்லை வைப்பானாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் கோடல் இது.

‘ஆரும் அருவும் ஈரொடு சிவணும்’ (தொ. சொல். 138 சேனா.)

‘ஆரும் அரும்’ என, ஆர் அர் என்பவற்றுக்கு உம்மையான் இணைப்புத் தரல் வேண்டும். அர் + உம் = அரும்; ஆயின், அரு + உம் = ‘அருவும்’ என்று நூற்பாவில் அமைத்து, ‘அர்’ என்பதனை உகரம் கொடுத்து ‘அரு’ என்றும் சொல்லலாம் என்பதற்குத் தனியே விதி கூறாது, தம் சூத்திரத்தில் அமைத் துத் தொல்காப்பியனார் பெறப்பட வைத்தது, உடம்பொடு புணர்த்தல் என்ற உத்தி வகையாம். (தொ. பொ. 656 இள.)

சொல்லதிகாரம் 1, 7, 57, 74, 131, 228ஆம் சூத்திரங்கட்கு நச்சினார்க்கினியர் உரையுள் இவ்வுத்திவகை புலப்படுத்தப் பட்டுள்ளமை காண்க.

உடன்படல் -

{Entry: P16b__116}

எழுவகை மதங்களைத் தழுவி நூல் இயற்றப்படும் என்ற அம் மதங்களுள் ஒன்று; அஃதாவது பிறர் மதத்திற்குத் தான் உடன்படுதல்.

‘உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா’ (தொ. எ. 60)

என்ற தொல்காப்பியர் மதத்தை உடன்பட்டு,

‘பன்னீ ருயிரும் கசதந பமவய

ஞஙஈ ரைந்துயிர் மெய்யும் மொழிமுதல்’ (நன். 102)

என்று கூறுதல் போல்வன. (நன். 11)

உத்தி -

{Entry: P16b__117}

நூற்செய்திகளைச் செவ்வனம் சொல்லுதல் உத்தி என்பார் பேராசிரியர். சூத்திரச் செய்திகளைச் செவ்வனம் கூறாது தம் நுண்ணறிவு தோன்றவும், கற்பார்க்குச் சுவையும் எளிமையும் பயக்கவும் கையாளப்படும் நுட்பமான வழிகளை உத்தி என்பார் பிறர். பேராசிரியர் அவற்றை ‘உத்திவகை’ என்பர். தொல்காப்பியனாரும் மாறன் அலங்கார ஆசிரியரும் உத்தி வகை என்று குறிப்பிடவும், நன்னூலாரும் இலக்கண விளக்க நூலாரும் உத்தி என்றே குறிப்பிடுவர்.

தொல்காப்பியர் கூறும் உத்திவகை முப்பத்திரண்டாவன :

என்பன. (தொ. பொ. 665 பேரா.)

இவ்வுத்திவகைளுக்கு இனமும் கூறுவர் தொல்காப்பிய உரையாளர் பேராசிரியர். இனித் தொல்காப்பியத்துள் சொல்லப் படாது நன்னூல் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடும் உத்திகள் சில வருமாறு :

நன்னூல் -

1. முடித்துக் காட்டல், 2. முடிவிடம் கூறல், 3. தானெடுத்து மொழிதல், 4. சொற்பொருள் விரித்தல், 5. தொடர்சொற் புணர்த்தல், 6. இரட்டுற மொழிதல், 7. மாட்டெறிந்தொழு கல், 8. முன்மொழிந்து கோடல், 9. பின்னது நிறுத்தல், 10. விகற்பத்தின் முடித்தல், 11. முடிந்தது முடித்தல், 12. எடுத்துக் காட்டல், 13. எடுத்த மொழியின் எய்த வைத்தல், 14. இன்னது அல்லது இதுவென மொழிதல், 15. எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், 16. தன் குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல், 17. ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பன. (நன். 141)

மாறனலங்காரம் -

1. விரிந்தவை இவையென விழுமிதின் காட்டல், 2. மாட்டுறுப் பினவா மனங்கொளக் கூறல், 3. தீபக வகையால் சிறப்புறக் கூறல் என்பன (மா. அ. 25)

உரையாசிரியர் கொள்வன. (தொ. பொ. 656)

1. யாற்றெழுக்கு, 2. தேரைப் பாய்த்துள், 3. அரிமாநோக்கு, 4. பருந்து விழுக்காடு, 5. ஆதி விளக்கு, 6. மத்திம விளக்கு, 7. இறுதி விளக்கு, 8. உரையிற் கோடல், 9. மாட்டெறிதல், 10. சொற்பொருள் விரித்தல், 11. ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல் என்பன.

நச்சினார்க்கினியர் கொள்வன :

1. ஒன்றென முடித்தல், 2. தன்னினம் முடித்தல், 3. ஏதுவின் முடித்தல், 4. ஒருதலை துணிதல், 5. சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், 6. உடம்பொடு புணர்த்தல், 7. அருத்தாபத்தி, 8. வேண்டாது கூறி வேண்டியது முடித்தல், 9. விரிந்தது தொகுத்தல் என்பன (தொல்காப்பிய உரைப் பகுதிகள்)

உதள் -

{Entry: P16b__118}

ஆண்ஆட்டினைக் குறிக்க மரபாக வழங்கும் பெயர்.

(தொ. பொ. 602 பேரா.)

உய்த்துக் கொண்டுணர்தல் : உத்திவகை இலக்கணம் -

{Entry: P16b__119}

உய்த்துக் கொண்டுணர்தல்

இது தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று.

ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஓதியவழி அதற்குப் பொருந்தா வகையுளதாகக் தோன்றின் அதற்குப் பொருந்து மாறு விசாரித்துணர்தல். (தொ. பொ. 656 இள.)

ஓரிடத்தில் ஒருபொருள் பற்றி நூற்பா ஒன்று யாத்தவழி, அந்நூற்பாவின் கண்மற்றொரு பொருளையும் கொள்ளுதற்கு வாய்ப்பளித்து நூற்பா யாத்தல். (665 பேரா.)

எ-டு : ‘பனி என்னும் சொற்குச் சாரியைகள் அத்தும் இன்னும் என்னும் கூறப்பட்டனவேனும், பனியத்துக் கொண் டான் என ‘அத்து’ வருமிடங்களையும் பனியிற்சென் றான் என ‘இன்’ வருமிடங்களையும் வழக்கு நோக்கி உய்த்துணர்ந்து அறிதல் போல்வன (இள.)

(நச். உரையுள் கண்டுகொள்க. சொல். 11, 460 நச்.)

‘நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும், குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே’ (தொ. எ. 36 நச்.) என்று இடமும் பற்றுக்கோடும் கூறிக் குற்றியலுகரம் அறுவகைப்படுதலைப் பெறப்படவைத்தலும்,

‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொ.எ. 67 நச்.) என மொழி முதற் குற்றிய லுகரம் கூறும் நூற்பாவிலேயே அதற்கு இடனும் பற்றுக் கோடும் சேர்த்துக் குறிப்பிடுதலும் போல்வன இவ்வுத்தி வகை. (பேரா.)

பெயர் வினைக்கு ஓதிய இலக்கணம் ஒழிந்த இடை உரிக்கும் ஏற்ற பெற்றி கோடல் இவ்வுத்தி வகையின் இனமாம். (பேரா.)

நுதலியது அறிதல், பயனில்லாதது போலக் கூறியநூற்பாவின் கருத்து இன்னதுபோலும் என்று அறிய வைக்கும். உய்த்துக் கொண்டுணர்தல், கூறிய கருத்தின் மேலும் மீண்டும் ஒரு கருத் தினை உணரவைக்கும். உய்த்துக்கொண்டுணர்தலை யுடைய நூற்பா, சில்வகை எழுத்தின் செய்யுட்டாக இருக்கும். ஞாபகங் கூறலையுடைய நூற்பா, அரிதும் பெரிதுமாக அமைந்திருக்கும். (பேரா., நச். உரையுள் கண்டுகொள்க.) (பொ. 213, 226; சொல் 279 நச்.)

உய்த்துக்கொண்டுணர்தல் : உத்திவகை இலக்கணம் -

{Entry: P16b__120}

சொல் பல்காமல் சுருக்கமாகக் கூறியவழி, அதன் விரிவெல் லாம் உணர்ந்துகொள்ளும்படியாகக் கூறல். (தொ. மர. 109 ச. பால)

எ-டு : ‘நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும்

குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே’ (எழுத். 36)

பின்னர்த் ‘தொடர்மொழி’ என்றதனால், நெட்டெழுத்து என்றது ஈரெழுத்தொருமொழியை என உய்த்துணர்தல்.

உய்த்துணர வைப்பு -

{Entry: P16b__121}

நன்னூல் கூறும் முப்பத்திரண்டு உத்திகளுள் இறுதியாகச் சொல்லப்படுவது; சில சூத்திரவிதிகளைக் கொண்டு ஆராய்ந்து அறியும்படி ஒருபொருளை வைத்தல்.

‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும் ’ நன். 96. ஈற்று மகரம் குறுகுதற்குரிய ஈற்றயலெழுத்துக்களாகிய ணகர னகர மெய்கள், உகரஉயிர் கெட்டு நின்ற ஈற்றயலெழுத்துக்களாகிய ளகரலகரங்கள் திரிந்த ணகரனகரங்கள் என்பதனை ‘லள மெய் திரிந்த னணமுன் மகாரம், நைந்து ஈரொற்றாம் செய்யு ளுள்ளே’ (நன். 120) என்ற நூற்பாவைக் கொண்டு தெளிதல் உய்த்துணர வைப்பு என்ற உத்தியாம்.

உரைகளிற் காணும் உத்திவகைகள் -

{Entry: P16b__122}

‘உத்தி’ காண்க.

உரைகாரன் -

{Entry: P16b__123}

உரையாசிரியன்; இவனுக்கும் ஒரு நூலுக்குச் சிறப்புப்பாயிரம் வரையும் தகுதி உண்டு என்பர் நன்னூலார். (51) (L)

உரைகாரன் சிறப்புப்பாயிரம் கூறல் -

{Entry: P16b__124}

உரைகாரன் நூல் செய்தோன் காலத்தனாயின் சிறப்புப் பாயிரம் கூறற்கு உரியனாம்; பிற்காலத்தனாயின், ஆக்கி யோன் பெருமை முதலாயின முற்றும் உணரானாகலின் அவனுரிமை சிறப் புடைத்தன்று. (பா. வி. பக். 159)

உரைகோளாளன் -

{Entry: P16b__125}

ஆசிரியன் நூற்குச் சொல்லும் உரையை மனங்கொள்ளுமாறு உணர வல்லோன்; மாணாக்கராதற்கு உரியாருள் இவனும் ஒருவன். (நன். 37) (L)

உரைத்தாம் என்றல் -

{Entry: P16b__126}

நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; முன்னே ஒரு நிமித்தத்தினால் சொல்லப்பட்டதைப் பின்னே சொல்ல வேண்டுமிடத்தே இதனை முன்னே சொன்னோம் என்பது தோன்ற, அங்கே மீளவும் சொல்லாது விடுதல். (நன். 14)

‘மூன்று உயிரளபு’ (நன். 99) என்ற நூற்பாவில் உயிர்மெய்க்கு மாத்திரை கூறப்படவில்லை. முன்னர் உயிர்மெய் மாத்தி ரையை ‘உயிர் அளவாய்’ (நன். 89) என்று கூறினமையின், ‘உரைத்தாம்’ என்னும் உத்தி பற்றி அச்சூத்திரத்தில் கூறாதொழிந்தார்.

உரைத்தும் என்றல் -

{Entry: P16b__127}

நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; பின்னே சொல்லப்படுவதை முன்னே ஒரு நிமித்தத்தால் சொல்ல வேண்டின், இதனைப் பின்னே சொல்வோம் என்பது தோன்ற, அங்கே சுருக்கிச் சொல்லுதல். (நன். 14)

சொல்லதிகாரத்துப் பெயரியலில் கூறப்படும் பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் பற்றிய பெயர்களையும், வினையியலில் கூறப்படும் தெரிநிலை வினைகளையும், பகுபதங்களின் பாகுபாடு கூறும் எழுத்ததிகாரப் பதவியலில் ‘பொருளிடம் காலம் சினை குணம் தொழிலின், வருபெயர் பொழுது கொள் வினைபகு பதமே’ (நன். 132) என்று முன்னர் எடுத்துக் கூறியது, ‘உரைத்தும்’ என்றல் என்ற உத்தி பற்றியதாம்.

உரைத்தொழில்வகை -

{Entry: P16b__128}

பொதுப்பாயிரத்தன்மை யுரைத்தல், சிறப்புப்பாயிரத் தன்மை யுரைத்தல், நூல்வகை யுரைத்தல், நூலது உறுப்பின் வகை யுரைத்தல், சூத்திரத்தின் கிடக்கைவகை யுரைத்தல், சூத்திரத் தின் சூத்திரப் பயன் வகை யுரைத்தல் என ஆசிரியனது உரைத்தொழில்வகை அறுவகைப்படும். (பா. வி. பக். 91)

உரையிற் கொள்ளுதல் -

{Entry: P16b__129}

மூலத்திற் சொல்லப்படாததனை உரையில் தழுவிக் கொள் ளுதல். ‘உரையிற் கோடல்’ காண்க.

காண்டிகை உரையில் கூறப்படாததனை விருத்தியுரையில் கொள்க; அல்லது அதற்கு உரையினை நுண்ணறிவால் கண்டு கொள்க என்ற கருத்தும் ஆம். (L)

உரையிற் கோடல் -

{Entry: P16b__130}

சூத்திரத்துச் சொல்லப்படாது விடுக்கப்பட்ட இன்றியமை யாச் செய்திகளை உரையாளர் தம் உரையிற் குறிப்பிடுதல். இது தொல்காப்பியனார் சொல்லாத ஓர் உத்திவகையாம். எழுத்ததிகாரத்துள் நச்சினார்க்கினியர் 130 , 227, 382ஆம் சூத்திரத்துள் இதனை ஆள்வர்; சொல். 222 ஆம் சூத்திரத்தும் கொள்வர்.

‘அம்மின் இறுதி க ச த வரும்வழி மகரம் முறையே ங ஞ ந ஆகும்; மென்கணமும் இடைக்கணமும் வருமொழி முதலில் வருவழி மகரம் கெட்டு விடும்’ என்னும் (தொ. எ. 129, 130) நூற்பாக்களையுட் கொண்டு, 130ஆம் நூற்பா உரையில், ” புளியவிலை - என உயிர்வருவழி, ஈறு கெடுதலும், புளியிலை என ‘அம்’ முழுதும் கெடுதலும் கொள்ளப்படும்” என்று வரைந்தார் நச்சினார்க்கினியர்.

உரையினது பொதுவிலக்கணம் -

{Entry: P16b__131}

மூலபாடம் எடுத்துரைத்தல், கருத்துரை, சொற்களைப் பிரித் துரைத்தல், சொல்லுக்கும் பொருளுரைக்கும் பதவுரை, தொகுப்பாக எழுதும் பொழிப்புரை, உதாரணம் எடுத்தோ தல், வினவிக்கொள்ளுதல், தன் வினாவிற்குத் தானே விடை கூறல், விசேடஉரைகளைத் தந்துரைத்தல், வேண்டுவன எல்லாம் விரித்துரைத்தல், அதிகாரத்தொடு பொருந்தக் காட்டியுரைத்தல், ஐயமுற நின்ற விடத்தே இதற்கு இதுவே பொருளெனத் துணிந்துரைத்தல், இதனால் பயன் இதுவென் றுரைத்தல், ஆன்றோர் நூலினின்று மேற்கோள் காட்டி யுரைத்தல் என உரை பதினான்கு வகைத்தாகச் செய்யப்படும். (நன். 21)

உரை வரையும் முறை -

{Entry: P16b__132}

கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டி அகலம் கூறல் என உரைவரையு முறை நான்கு வகைப்படும். கண் ணழித்தல் - பதப்பொருள் கூறல்.

(இறை. அ. 1 உரை, பா. வி. பக். 160)

உலகம் மலையாமை -

{Entry: P16b__133}

நூற்குச் சொல்லிய அழகு பத்தனுள் ஒன்று; உயர்ந்தோர் வழக்கத்தொடு மாறுபடச் சொல்லாமை.

‘அம்முதல் ஈராறு ஆவி; கம்முதல்

மெய்மூ வாறுஎன விளம்பினர் புலவர்’ (நன். 63)

சான்றோர் வழக்கத்தொடு சொல்லிய இந்நூற்பா உலக மலையாமை என்ற அழகுடையது. (நன். 121)

ஊ section: 1 entries

ஊர், பெயர் முதலியன கூறல் -

{Entry: P16b__134}

நால்வகை வருணத்தார்க்கும் அவரவர் பிறந்த ஊர், அவரவர்தம் பெயர், அவரவர் வருணத்திற்கு உரியன என்றற் கேற்ற கருவிகள் என்பன உரியனவாகக் கொள்ளப்படும். ஊரும் பெயரும் எல்லா வருணத்தாருக்கும் ஒப்பச் செல்லும்.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் அந்தணர்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் }

உறையூர்ச் சோழன்

மதுரைப் பாண்டியன் } அரசர்

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் } வணிகர்

அம்பர்கிழான் நாகன்

வல்லங்கிழான் மாறன் } வேளாளர்

நான்கு வருணத்தாருக்கும் ஊர்ப்பெயர் அடைமொழிகள் ஆயினவாறு.

உடைத்தொழிற்கருவி என்பன: அந்தணருக்கு நெய்முகந்து ஓமம் செய்யும் கருவியாகிய சுருவையும், சமிதை குறைக்கும் கருவியும் முதலாயின. அரசருக்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின வணிகருக்கு நாவாயும் இரத்தினங்களும் மருந்துப் பொருள்களும் முதலாயின. வேளாளருக்கு கலப்பையும் சகடமும் முதலாயின.

நான்கு வருணத்தாரையும் தலைமைக்குணங் கூறுங்கால் அந்தணரைப் பிரமனொடு கூறியும், அரசனைத் திருமா லோடு கூறியும், வணிகரை நிதியின் கிழவனாகிய குபேர னொடு கூறியும், வேளாண் மாந்தரை வருணனொடு கூறியும் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும். (தொ. பொ. 629, 630 பேரா .)

எ section: 14 entries

எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் -

{Entry: P16b__135}

சொல்லாது விடப்பட்டவற்றிற்கும் சொல்லியவற்றான் இலக்கணம் பொருந்தச் சொல்லுதல், நன்னூல் குறிக்கும் 32 உத்திகளுள் ஒன்று; தொல்காப்பியம் குறிப்பிடாதது.

‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ (நன். 109)

உயிர்மெய் ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து வரும் முறைக்கேற்ப (நன். 89) அக்கலப்பெழுத்தின் முதற்கண் மெய்யும் அடுத்து உயிரும் வரும் என்று கூறப்படவே, ஏனைய உயிரும் ஒற்றும் ஆய்தம் முதலாய பிற சார்பெழுத்துக்களும் தனித்தனியே ஓர் எழுத்து ஆகலின், அவற்றிற்கு அவையே முதலும் ஈறுமாம் என்று கொள்ள வைத்தமை இவ்வுத்தி. (நன். 14)

எடுத்த மொழியின் எய்த வைத்தல் -

{Entry: P16b__136}

இது தொல்காப்பியம் சுட்டாது நன்னூல் சுட்டும் 32 உத்தி களுள் ஒன்று. தான் எடுத்துக் குறிப்பிடும் சொற்களுக்கேயுரிய விதி கூறுதல்.

செம்மை சிறுமை (நன். 135) என்று எடுத்துக் கூறிய ‘பண்பிற் பகாநிலைப் பதங்களுக்கே’ ‘ஈறு போதல்’ (நன். 136) முதலிய விதிகளை எடுத்தோதுவது இவ்வுத்தியாம். (நன். 14)

எடுத்துக்காட்டல் -

{Entry: P16b__137}

தொல்காப்பியம் சுட்டாமல் நன்னூலில் இடம் பெறும் 32 உத்திகளில் இஃது ஒன்று. நூற்பாவால் எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவது.

‘செம்மை சிறுமை’ (நன். 135) என்ற நூற்பாவில் பண்பிற் பகா நிலைப் பதங்களுக்குப் பல எடுத்துக்காட்டுத் தந்து விளக்க லின் இதன்கண் இவ்வுத்தி வந்தது. (நன். 14)

எதிர்நூல் (1) -

{Entry: P16b__138}

தன் கோள் நிறீஇப் பிறன் கோள் மறுக்கும் நூல்.

(இறை. அ. 1 உரை)

எதிர்நூல் (2) -

{Entry: P16b__139}

முதல்வன் நூலுள் முடிந்த பொருளை ஆசிரியன் ஒருவன் யாதானும் ஒரு காரணத்தால் பிறழ வைத்தால், அதனைக் கருவியால் திரிவு காட்டி ஒருவாமை வைத்தற்கு, ஒள்ளியோ னாகிய புலவன் ஒருவனால் உய்க்கப்படுவது.

(யா. வி. பாயிரம். உரை)

எதிர்நூல் (3) -

{Entry: P16b__140}

எதிர்நூல் என்பது, முதல் நூலின் முடிந்த பொருளை ஒருவன் யாதானும் ஒருகாரணத்தான் பிறழவைத்தால், அதனை உலகம் மெய்யெனக் கொண்டு மயங்காமைப் பொருட்டுக் கருவியான் திரிவுகாட்டி அவனது கோள்மறுத்து, முதல்நூற் பொருளையே தன் கோளாக நிறுத்தி ஒள்ளியான் ஒருபுலவன் செய்யும் நூல். அதுவும் முதல்நூலை நோக்க வழிநூலாயி னும், பிறன்கோள் மறுக்கும் வேறுபாடு உடைத்தாகலின் எதிர்நூல் எனக் கூறுதல் பொருந்தும். (பா. வி. பக். 102, 103)

எதிர்பொருள் உணர்த்தல் -

{Entry: P16b__141}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளில் இஃது ஒன்று. முதல்நூல் ஆசிரியன் சொல்லியவற்றுள் சில தன் காலத்துத் திரிந்து வருதலைத் தானே கண்டுணரும் ஆசிரியன், தான் கூறுவனவற்றுள்ளும் சில பிற்காலத்தில் திரிபுபடுதலும் கூடும் என்பதனை உட்கொண்டு, அத்திரிபுகளையும் காலம் நோக்கி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று தெரிவித்தல். (தொ. பொ. 665 பேரா.)

இனிக் கூற வேண்டுவது இதுவென வுணர்த்தல் தான் கூறிய இலக்கணம் காலம் மாறுபடுந்தோறும் திரிபுபடும் என்ப தனை உட்கொண்டு, ‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’ (சொல். 452 சேனா. ) என எதிர்காலத்துப் படைக்கப்படும் சொற்களையும் கொள்ளுதல் போல்வன இவ்வுத்திவகை.

‘பொய்யும்......... என்ப’ (கற்பியல் 4) எனப் பின்நிகழ்ச்சிக்குக் காரணம் கற்பித்துக் கூறல் அதன் இனம். இது தான் அறிந்தே கூறலின், அறியாது உடம்படுதலின் வேறாயிற்று. (பேரா.)

‘இவையும் உளவே அவையலங் கடையே’ (மெய்ப். 12) என முற்கூறிய மெய்ப்பாடுகள் இல்லாதவழி இனிக் கூறப்படும் மெய்ப்பாடுகள் கொள்ளப்படும் என்று கூறல் போல்வன இவ்வுத்தி வகையாம். (இள.)

ஒரு பொருளைக் கிளந்து அதன் பண்பியல்புகள் இவை என இலக்கணம் கூறுதலன்றி, இனி எதிர்நோக்கி வருவதொன்று பற்றிக் கருத்துணர்த்துதல்,

எ-டு : ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ (எச்ச. 56) (தொ. மர. 109 ச. பால.)

எதிர்மறுத்து உணர்த்தல் -

{Entry: P16b__142}

மாறனலங்காரம் கூறும் பத்துக் குற்றங்களுள் ஒன்று; “பாவம் செய்வான் நிரையம் புகுவான்” எனக் கருதிக் கூறவேண்டி அதனை எதிர்மறுத்துத் “தவம் செய்வான் சுவர்க்கம் புகும்” என்றாற் போன்றதொரு நூற்குற்றம். இவ்வாறு கூறின் கருதிய பொருள் தோன்றாமையின் குற்றமாம் என்பது. (மா. அ. 23)

எதிரது போற்றல் -

{Entry: P16b__143}

இது தொல்காப்பியத்தில் குறிக்கப்படாமல் நன்னூல் சுட்டும் உத்தி 32இல் ஒன்று. முன்பு இல்லாததாய்ப் பின்பு வழங்கி வருமாயின் அதனைத் தழுவிக் கொள்ளுதல் இவ்வுத்தி. (நன். 14)

‘அன்’ என்னும் விகுதி படர்க்கை ஆண்பாற்கே உரியதாய்த் தொன்றுதொட்டு வருவது. அவ்விகுதி தன்மை ஒருமைக் கண்ணும் வருதல் தொன்றுதொட்டதன்றிப் பிற்காலத்து இலக்கியங்களிற் பயின்று வருதல் கண்டு அதனை எதிரது போற்றல் என்னும் இவ்வுத்தியால் நன்னூலார் தழுவிக் கொண்டமை தோன்றச் சூத்திரத்துப் பின்னும் வலியுறுத்தி இரண்டாம் முறையாகச் சுட்டினார்.

வருமாறு :

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்

அஆ குடுதுறு என்ஏன் அல் ன் ’ (நன். 140)

‘குடுதுறு என்னும் குன்றிய லுகரமோடு

அல் அன் என்ஏன் ஆகும் ஈற்ற

இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை’ (நன். 331)

எரி தீமாணாக்கற்கு உவமையாதல் -

{Entry: P16b__144}

எரி கடுஞ்சொல் போலும் சுடும் இயல்பிற்று ஆகலின், இன்சொல் இன்று; உணவாக எதனை இட்டாலும் ஏற்றலின் இகழ்தல் இன்று. ஆதலின் பிண்டஉவமமாகக் கூறப்படும் ஆறனுள், மாணாக்கன் அல்லாதானுக்கு நெருப்பு உவமை யாயிற்று. (பா. வி. பக். 145)

எருமையின் பொதுப்பெயர் -

{Entry: P16b__145}

மேதி, காரான், மயிடம், கவரி என்பன. (திவா. பக். 53)

எல்லை சிறப்புப்பாயிரத்தே இடம்பெறும் இயைபும் காரணமும் -

{Entry: P16b__146}

இந்நூல் உயர்ந்தோனான் முந்துநூல் வழித்தாகச் செய்யப் படினும் ஊழிவிகற்பத்தான் சிற்சில ஊழியில் சில முந்துநூல் மக்கள் அறிந்து பயன்கோடலின்றிக் கிடக்குமாகலின், அங்ஙனம் மக்களான் அறிதற்கு அருமை பற்றி வழங்கப்படாத நூலோ, அறிந்து பயன்கோடலின் வழங்கப்படும் நூலோ என வும் மாணாக்கன் ஐயுறுமாகலின் அதனை நீக்க வேண்டிப் ‘பயன்படுமாற்றான் நூல் இன்ன எல்லையுள் நடக்கும்’ என எல்லை சிறப்புப் பாயிரத்துள் கூறப்படல் வேண்டும் என்பது.

(பா. வி. பக். 188)

இனி எல்லை என்பது நூலமைப்பான் இத்தனைப் பட லங்கள், இயல்கள், சூத்திரங்கள் என்று வரையறுத்துக் கூறுதல் என்ற கருத்தும் உண்டு.

எழுவகை மதம் -

{Entry: P16b__147}

பிறர்மதத்திற்குத் தான் உடன்படுதலும், பிறர்மதத்தை மறுத் தலும், பிறர்மதத்தை ஒருவாறு ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்துவிடுதலும், தானே ஒருபொருளை யெடுத்து நிறுவி அதனை இடம்தோறும் வலியுறுத்தலும், ஒன்றற் கொன்று முரண்பட்ட இருவரால் கொள்ளப்பட்ட இரண்டு செய்திகளுள் ஒன்றை நீக்கி மற்றொன்றைத் துணிந்துகோட லும், பிறர் செய்த நூல்களிலுள்ள குற்றங்களை எடுத்துக் காட்டலும், பிறர் மதத்தொடு தான் கலவாது தன்மதத்தையே கொள்ளுதலும் என இவை.

இவற்றை ஏற்ற பெற்றி தழுவி நூல் இயற்றப்படும்.

(நன் - 11; யா. க. பாயிரவுரை)

‘என்ன வகையினும் மனங்கோள் இன்மை’ -

{Entry: P16b__148}

நூலுக்கு ஆகா எனப்பட்ட பத்து வகையான குற்றங்களுள் ஒன்று; எவ்வகையானும் கேட்போர் மனம் கொள்ளாதிருக்க கூறுதல் என்ற குற்றம். (தொ. பொ. 663 பேரா. இ. வி. பாட். 137)

ஏ section: 4 entries

ஏதுவின் முடித்தல் -

{Entry: P16b__149}

நன்னூல் குறிக்கும் உத்தி 32இல் இதுவும் ஒன்று; தொல் காப்பியத்தில் இடம் பெறாதது. முன் காரணம் விளங்கப் பெறாத ஒன்றனைப் பின் காரணத்தால் முடிவு செய்தலாகிய உத்தி.

இன எழுத்துக்கள் இதற்கு இது என முன்னர்க் கூறி (நன். 71) அடுத்த சூத்திரத்தான் மேல் இனம் என்றற்குக் காரணம் உணர்த்தியமை (நன். 72) இவ்வுத்தியின் பாற்படும்.

‘ஐ ஒள இஉச் செறிய முதலெழுத்து

இவ்விரண்டு ஓரின மாய்வரல் முறையே’ (நன். 71)

‘தான முயற்சி அளவுபொருள் வடிவு

ஆனஒன்று ஆதிஓர் புடையொப்பு இனமே’ (நன். 22)

ஏற்புழிக்கோடல் -

{Entry: P16b__150}

தொல்காப்பியம் நன்னூல் இவற்றில் குறிக்கப் பெறாமல் உரையாசிரியர்களால் எடுத்துச் சுட்டப்படும் ஓர் உத்தி.

நன்னூல் 71ஆம் சூத்திரத்துள் இனவெழுத்துக்கள் அடைக் கும் ஆசிரியர் ‘முதலெழுத்து இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே’ என்று சுருங்கச் சொல்லல் என்னும் அழகுபற்றிக் கூறினாரேனும், ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியால், ‘இவ்விரண்டு ஓரினமாய் வரல்’ இடையினம் ஒழிந்த ஏனைய வற்றிற்கே என்பது கொள்ளப்படும். கூறிய இலக்கணத்தை ஏற்ற இடத்திற்கு மட்டுமே கொள்ளுதல் என்பது இவ்வுத்தி யின் பொருள் விளக்கமாகும்.

ஏற்றை -

{Entry: P16b__151}

ஆண்பால் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று. (தொ. பொ. 557 பேரா.) ஆற்றலொடு கூடிய ஆண்பால் உயிரினங்கட் கெல்லாம் பொதுவாய் வருவது.

‘இரும்புலிக் கோள்வல் ஏற்றை’ (நற். 36.)

‘செந்நாய் ஏற்றை’ (அகநா. 111)

‘முதலைக் கோள்வல் ஏற்றை’ (குறுந். 324)

‘பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய்’ ஏற்றை (அகநா. 246)

‘புன்தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை’ அகநா. 133 - எனப் புலி, நாய், முதலை, நந்து, எலி என்பனவற்றின் ஆற்றலுடைய ஆண்பால்கள் ஏற்றை எனப்பட்டன.(தொல். பொ. 604 பேரா.)

ஏறு -

{Entry: P16b__152}

ஆண்பால் மரபு பற்றிய பெயர்களில் ஒன்று. (தொ. மர. 2); பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா இவற்றின் ஆணினத்தைக் குறிப்பது. (தொ. மர. 38, 39, 40) துருவை (பொருந. 103) புலி, சங்கு இவற்றின் ஆணும் ஏறு எனப்படும்.

புலி, உழை, மரை, ஆ, புல்வாய், எருமை, பன்றி சுறா, சங்கம் என்னும் இவற்றின் ஆண்பால் ஏறு எனப்படும். (பிங். 2565)

கவரி, பன்றி, மரை, உழை, புல்வாய், எருமை, எருது, சுறவு என்பனவும், துருவாடும் ஏறெனப்படும். (திவா. பக் : 58)

‘துராய் துற்றிய துருவை’ (பொருந. 103) என, செம்மறியாட்டுக் கிடாய் துருவை எனப்பட்டது.

ஐ section: 2 entries

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் -

{Entry: P16b__153}

ஐந்திரம் என்பது வடமொழிக்கு இலக்கணம் கூறும் நூல். தமிழேயன்றி வடமொழியும் நிறைந்தான் என்பது விளங்க, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்றார். ‘விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே’ (தொ. சொல். 63) என்று இந்திரன்கோளைத் தன்கோளாகக் கூறியமையான், இவ் வாசிரியனுக்கு ஐந்திரம் அளித்த ஆசிரியன் அகத்தியனாம் என்பது பெறப் பட்டது. தமிழின்கண் உள்ள முந்துநூலே தொல்காப்பியத்திற்கு முதல்நூலாம் என்பது உணர்த்துவதற் பொருட்டு, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என ஐந்திர மாகிய வடமொழி நூலைப் பெயர்க்கு (தொல்காப்பியன் என்ற பெயர்) விசேடணமாக்கி, ‘முந்துநூல் கண்டு’ என அவற்றை முதல்நூல் எனக் கோடற்குச் செயப்படுபொரு ளாக்கிக் கூறினார். (பா. வி. பக். 185, 187, 188)

ஐயறிவுயிர் -

{Entry: P16b__154}

பரிச உணர்ச்சி, நாவினாற் சுவை கோடல், மூக்கினான் மோந்தறிதல், கண்ணான் பார்த்தல், காதால் கேட்டல் என்னும் ஐந்தறிவினையுடைய விலங்குகளும் பறவைகளும், மனஉணர்வில்லாத மனிதர்களும், பாம்பும் முதலாய உயிர்கள். (தொ. மர. 32 பேரா.)

ஒ section: 14 entries

ஒத்த சூத்திரம் -

{Entry: P16b__155}

செய்யுளியலுள் சூத்திரத்தின் இலக்கணநெறி பின் வருமாறு கூறப்பட்டது : “சூத்திரமாவது, (கவி) ஆடியின்கண் பரந்த பொருள்கள் குவிந்து நுணுகித் தோன்றும் நிழல் போல, கூறப்படும் பொருளின் பரப்பெல்லாம் அறியும் வண்ணம் தோன்றி, ‘இதுவோ? அதுவோ?’ என்று ஐயுற்று ஆராய்தல் வேண்டுவது இன்றி, பொருளின் கூறுகள் யாவும் நனி விளங்க ஆசிரிய முதலாய யாப்பினுள் யாதாயினும் ஒன்றன் யாப்பு முறை தோன்ற யாக்கப்படுவதாகும்.” (செய். 168) (கவி ஆடி Convex mirror )

இவ்விலக்கணத்தொடு பின் வரும் மரபியல்பும் சூத்திரம் பெற்றிருத்தல் வேண்டும்.

“சூத்திரம் சில்வகை எழுத்தானாகும் செய்கையுடையதாய், எடுத்து விளக்குங்கால் உள்நின்று அகன்ற உரையெல்லாம் அகத்தே செறிந்ததாய், நோக்கநோக்க ஆழ்ந்து செல்லும் நுட்பத்தொடு கூடியதாய், மாறுபடுவார் தம் கடாவினான் அசைத்தற்காகாத திண்மையுடையதாய், இவ்வளவே என வரையறுப்பதற்கு ஆகாத பொருளையுடையதா பல்லாற் றானும் பொருள் விளக்க முடையதாயிருத்தல் வேண்டும்.”

இவ்வியல்புகளுடைமை பற்றியே சூத்திரம் ‘ஒத்த சூத்திரம்’ என விசேடிக்கப் பெற்றது. (தொ. மர. 97 ச. பால)

ஒப்பக் கூறல் -

{Entry: P16b__156}

தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று. ஒரு சொல்லுக்குக் கூறும் விதி இரட்டுற மொழிதலான் இரு சொல்லுக்கு அமையுமாறு கூறுதலும், ஒன்றன் இலக்க ணத்தைப் பிறிதொன்ற னொடு மாட்டெறிதலும் போல்வன. ‘மாட்டெறிந்து ஒழுகல்’ என இதனை நன்னூலார் தனி உத்தியாகக் கூறினர். (தொ. பொ. 665 பேரா.)

ஒரு பொருள் எடுத்து இலக்கணம் கூறியவழி அது போல்வன வற்றையும் இவ்விலக்கணத்தால் முடித்தல்.

(தொ. பொ. 656 இள.)

‘இன்னின் இகர மாவின் இறுதி, முன்னர்க் கெடுதல் உரித்துமாகும்’ என்ற நூற்பாவினை ஆவின் இறுதிக்கும் மாவின் இறுதிக்கும் (தொ.எ. 120 நச்.) கொண்டு, ஆவினை ஆனை மாவினை மானை என்று கொள்வது இவ்வுத்திவகை.

‘வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்

என வென் எச்சமும் சுட்டின் இறுதியும்

ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்

ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே’ (தொ. எ. 204 நச்.)

எனப் புணர்ச்சி இயைபு பற்றி வினைச்சொற்களையும் இடைச்சொற்களையும் இணைத்து நூற்பா யாத்தல் இவ்வுத்தி வகையின் இனம். (665 பேரா.)

‘ஈறு போதல்’ (நன். 136) என்ற நூற்பாச் செய்தியைப் பண்புப் புணர்ச்சியொடு பதப்புணர்ச்சிக்கும் கொள்வது ஒப்பக் கூறலாம். இதனை ஒப்பின் முடித்தல் என்பர் நன்னூலார். 136, 137, 176, 209, 243 ஆம் சூத்திரத்தில் இவ்வுத்தி அமைந்துள்ளது.

இவ்வுத்திவகை இலக்கணம் -

ஒன்றற்கு இலக்கணம் கூறுமிடத்து அதன் பகுதிகளுக்கும் அவ்விலக்கணம் பொருந்தும் வண்ணம் கூறல்.

(தொ. மர. 109 ச. பால)

எ-டு : ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’ (எழுத். 15) என மெய்யெழுத்துக்கள் ஒலிப்புறுங்கால் சாரியை பெற்று நிற்குமிடத்துக் கொண்ட ஒரு மாத்திரை நீங்கி அரைமாத்திரை ஒலிபெறும் என்பதைக் குறிக்கும் புள்ளி என்னும் சொற்குறியீடு வரிவடிவிற்கும் ஏற்பக் கூறியது.

ஒப்பின் முடித்தல் -

{Entry: P16b__157}

நன்னூலார் கூறும் 32 உத்திகளுள் ஒன்று; அங்கே சொல்லக் கூடாதாயினும் ஒன்றற்குத் தான் சொல்லும் இலக்கணம் வேறொன்றற்கும் ஒத்துவருமாயின், அதற்கும் அதுவே இலக் கணமாக இயைபில்லாததையும் அவ்விடத்து உடன்கூட்டி முடிவு செய்தல். (நன். 14)

எ-டு : ‘ஈறுபோதல்’ (நன். 136) என்னும் சூத்திரம், பண்பு அதி காரப் பட்டமையால் பதப்புணர்ச்சிக்கும் விதி உடன் கூறியது, ‘ஒப்பின் முடித்தல்’ என்னும் உத்தி பற்றி.

ஒருசார் விலங்கிற்குப் புறனடை -

{Entry: P16b__158}

மக்கள்யாக்கையிற் பிறந்து ஆறறிவுற்ற உயிரினங்கள் வினை வயத்தான் விலங்காய்ப் பிறந்துழியும் முன்னை ஆறறி வுறுதலும் ஒரோவழியுண்டு என்பார் ஆசிரியர். (இ. வி. பாட். 155. உரை)

எ-டு : கசேந்திரன், சடாயு போல்வார் விலங்காயும் பறவையாயும் தோன்றினரேனும், பண்டைப் பிறப்பின் நினைவால் மனவுணர்வு உடையராயினார் என்பது.

ஒருத்தல் -

{Entry: P16b__159}

ஆண்பாலைக் குறிக்கும் மரபு பற்றிய பெயர். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை இவற்றின் ஆணினை இது குறிக்கும்; நவ்வி, கரடி இவற்றின் ஆணினை யும் குறிக்கும் என்ப. (தொ. மர. 35-37 பேரா.)

ஒருதலை அன்மை -

{Entry: P16b__160}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று. ஓர் இலக்கணத்தைக் கூறி “இஃது யாண்டும் வாராது; வருமிடம் நோக்கி அறிக” என்று கூறி விதந்து கூறாது வாளா விடுதல்.

(தொ. பொ. 665 பேரா.)

இளம்பூரணர் ‘ஒருதலை அன்மை முடிந்தது காட்டல்’ என இரண்டனை ஒன்றாகக் கொண்டு, ஒரு பொருளை ஓதியவழிச் சொல்லுவதற்கே உரித்தன்றிப் பிறபொருட்கும் பொதுவாக முடிந்தமை காட்டல் என்றுரைப்பர். (656)

‘குறியதன் முன்னர் ஆய்தப்புள்ளி, உயிரொடு புணர்ந்த வல்லாறன்மிசைத்தே’ (தொ. எழுத். 38 நச்.) என, ஆய்தம் குறியதன் முன்னர் வருதல், உயிரொடு புணர்ந்த வல்லாறன் மேலதாய் வருதல் என்பது ஒருதலையன்று; ஆய்தம் வரும் போது குறியதன் முன்னர்த்தாய் உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தாய் வரும் என்று கொள்ளவைத்தல் போல்வன இவ்வுத்தி வகை.

சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட முதல் வேற்றுமையையும், விளி வேற்றுமையையும் எழுத்ததிகாரத்தில் ‘அல்வழி’ என்று கூறுதல் (112 நச்.) போல்வன இவ்வுத்திவகை இனம். (பேரா.)

‘ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம், ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப’ (பொ. 604 பேரா.) என்று கூறியவழி, ‘இடு காட்டுள் ஏற்றைப்பனை’ எனக் காயாப்பனைக்கும் ஏற்றை என்ற சொல் வருமாறு குறிப்பாகக் கொள்ள வைத்தல். (இள.)

ஒருதலை துணிதல் -

{Entry: P16b__161}

நன்னூல் குறிக்கும் 32 உத்திகளுள் ஒன்று; ஆசிரியர் இருவ ரால் ஒன்றற் கொன்று விரோதமாகக் கொள்ளப்பட்ட இரண்டு கொள்கைகளுள் ஒன்றனைத் துணிந்து எடுத்துக் கொள்ளல். ‘இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு’ (நன். 11) என, எழுவகை மதத்துள் ஒன்றாக இஃது அடங்கும்.

‘ஏழ்’ என மெய்யீறாகத் தொல்காப்பியர் கொண்ட எண்ணுப் பெயரினை நன்னூலார் ‘ஏழு’ என உயிரீறாகக் கொண்டமை (188) போல்வன இவ்வுத்தியாம். (நன். 14)

ஒருதலை மொழிதல் -

{Entry: P16b__162}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று. ஓரதிகாரத் தில் கூறவேண்டிய இலக்கணத்தை வேறோர் அதிகாரத்தில் கூறி, அக்கூறப்பட்டதனையே கூறப்பெறாத அதிகாரத்திற்கும் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)

இஃது ஏகாக்கரம் என்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது சூத்திரத்துக்குப் பொருள் கவர்த்துத் தோன்றின், அதனைத் துணிந்து கூறல். (656 இள.)

‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ (தொ. எழுத். 31 நச்.) ‘ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை’ (எழுத். 303) இவை எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டுச் சொல்லதிகாரத்தும் கொள்ளப்படுதல் இவ்வுத்திவகை.

பெண்பாற் பெயர்களுள் ஆ என்பதனைக் கூறாது பின் ‘பெற்றமும் எருமையும் மரையும் ஆவே’ (பொ. 615) எனச் சிறப்பு நூற்பாவில் குறிப்பிட்டதுகொண்டு ஆ என்பதனை யும் பெண்பாற் பெயராகக் கொள்ளுமாறு உடம்பொடு புணர்த்துக் கூறுதல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம். (பேரா.)

இரண்டு கருத்து உள்வழி ஒன்றனைத் துணிந்து கூறலுக்கு ஏழ், ஏழு என்ற இருவகை வடிவங்களில் நன்னூலார் ஏழு என்ற முற்றியலுகர வடிவத்தைத் தாம் ஏற்றுக் கொண்டு விதி கூறுவது போல்வன (நன். 188) இவ்வுத்திவகை.

‘உயிர் ஒள எஞ்சிய இறுதியாகும்’ (தொ. எ. 69) என்று கூறிய ஒளகாரத்தை மீண்டும் ‘ஈரள பிசைக்கும் இறுதியில் உயிர்’ (தொ. சொல். 283 நச்.) என்று கூறுதல் போல்வனவும் அது. (நச். உரை)

ஒரு படலத்தில் கூற வேண்டிய இலக்கணம் மற்றொரு படலத்தில் கூறப்படுதல் -

{Entry: P16b__163}

முதல்நூல், சார்பு நூல் வழிநூல்கட்கு ஒருமருங்கு ஒப்ப எடுத்துக் கொண்டு முடிவு ஒன்றாகக் கூறுமாறு வேறுபா டுடையது என்றார். அவ்வேறுபாடுகளுள் ஒன்று ஒரு படலத்தில் கூறும் இலக்கணத்தை மற்றொரு படலத்தில் கூறுதல்.

எ-டு : செய்யுளியலுள் கூற வேண்டும் ஒற்றளபெடையை எழுத்தியலுள் கூறுதல். அஃதாவது பொருளதிகா ரத்துச் செய்தியை எழுத்ததிகாரத்துள் கூறுதல்.

(இ. வி. பாட். 142 உரை.)

ஒழுக்கத்திற்கு வான்யாறு நிலம் படர்தல் உவமையாதல் -

{Entry: P16b__164}

ஐந்தவித்தான் விதித்தன செய்தலும், அவன் விலக்கியன ஒழிதலும், உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றால் ஐந்தவித் தான் சொல்லியவற்றுள் அக்காலத்திற்கு ஏலாதன ஒழிதலும், அவன் சொல்லாதவற்றுள் ஏற்பன கொள்ளலும் என ஒழுக்கம் நால்வகைப்படும். மனம்தூய்மை, இனம்தூய்மை, சொல் தூய்மை, செயல்தூய்மை என்னும் நால்வகைத் தூய்மையும் காரணமாக இடையறாது ஒழுகலான், ஆசிரியன் வான்யாறு நிலம் படர்ந்தாற் போல நலம்படர் நால்வகை ஒழுக்கமும் உடையான் என்பது. (பா. வி. பக். 61, 62)

ஒழுக்கத்தின் சிறப்பு -

{Entry: P16b__165}

‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம், இழிந்த பிறப்பாய் விடும்’ (குறள். 133) எனவும், ‘குலத்தளவே ஆகும் குணம்’ (மூதுரை 7) எனவும் சான்றோர் கூறினர். ஆதலின் ஒழுக்கத் தின் தவறாது நிற்பின், கீழ்ப்பால் வருணத்தான் ஆயினும் அவ்வருணத்துள் உயர் குலத்தவன் ஆவான்; மேற்பால் வருணத்தான் ஆயினும் ஒழுக்கம் தவறின் கீழ்ப்பால் குலத்த வன் ஆதல் மாத்திரமன்றிக் கீழ்ப்பால் வருணத்தானும் ஆவான் ஆதலின் பிறப்பினும் இழிந்தான் அவன். (பா. வி. பக். 24)

ஒழுக்கத்தின் வகை -

{Entry: P16b__166}

‘ஒழுக்கத்திற்கு வான்யாறு.................. ஆதல்’ காண்க.

ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் -

{Entry: P16b__167}

விதியால் ஒற்றுமை உடையவற்றை ஒருங்கே சேர்த்து முடித்தல்; அஃதாவது ஒன்றைச் சொல்லுமிடத்தே அதற்கு இனமாகிய மற்றொன்றையும் கூட்டி முடித்தலாம்.

உயிர் பற்றிக் கூறி வரும் அதிகாரத்தில் உயிர்மெய் ஆகிய ‘யா’ வினாவையும், உயிராகிய எ, ஆ, ஓ, ஏ, என்னும் வினாக்க ளோடு உடன்கூறுதல் இவ்வுத்தி. (நன். 67)

தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் முப்பத் திரண்டு உத்திகளுள் இதுவும் ஒன்று. ‘ஒன்றென முடித்தல்’ என்பதனைத் தனி உத்தியாக நச்சினார்க்கினியர் கொள்வார். நூற்பாவுள் கூறிய விதியினை இயைபுடைய பிறவற்றிற்கும் கோடல் இவ்வுத்தியாம். தொல்காப்பிய எழுத்ததிகாரத்துள் 138, 177 சொல்லதிகாரத்துள் 34, 44, 49, 53ஆம் எண்ணுடைய சூத்திரங்களுள் அவரது உரையில் இவ்வுத்தி நயம் காணப் படும்.

‘தன்னினம் முடித்தல்’ என அவர் தனிஉத்தியாகக் கொள் வார். நூற்பாவில் கூறப்பட்ட செய்திக்கு இனமான செய்தி யென உரையில் இணைத்துக் காட்டுதல் இது. எழுத்ததிகாரத் தில் 31, 157, 328, சொல்லதிகாரத்துள் 16, 36, 38, 45, 57, 62, 142, 215, 252, 436, 454 ஆம் எண்ணுடைய சூத்திரங்களுள் அவரது உரையில் இவ்வுத்தி நயம் காணப்படும்.

எ-டு : ‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ (தொ. எ. 31) என்னும் சூத்திரத்தே ‘தன்னினம் முடித்தல் என்ற உத்தியால், எகரம் வினாப் பொருள் உணர்த்துதல் உடன்கொள் ளப்பட்டது.’

ஒன்றென முடித்தல் -

{Entry: P16b__168}

தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடாத இவ்வுத்தியை நச்சினார்க்கினியர் தம்முரையில் மிகுதியாகப் பயன் கொண்டு உரைவரைந்துள்ளார். ஒரே இலக்கணத்தன என்று, நூற்பாவிற் கூறப்படாதனவற்றையும் உரையில் உடன் இணைத்துக் கோடல் இவ்வுத்தி.

எ-டு : தொ. எ. 138, 177, தொ. சொல் 37, 44, 49, 53 நச்.

‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது

மெய்யொடு சிவணும் அவ்வியல் கெடுத்தே’ (தொ.எ. 138)

என்பதன்கண், இயல்பாய் நின்ற புள்ளியீற்றுமுன் உயிர்முதல் மொழி வரின் புணருமாறு கூறினார். ‘ஒன்றென முடித்தல்’ என்றதனால் இயல்பல்லாத (விதியால் முடிந்த) புள்ளியீற்று முன்னும் இவ்விதி கொள்ளப்பட்டது. (நாழி + உரி > நா + உரி > நாட் + உரி = நாடுரி என வருமாறு.)

ஓ section: 6 entries

ஓசை இனிமை -

{Entry: P16b__169}

நன்னூல் குறிப்பிடும் அழகு பத்தனுள் ஒன்று. நூல் (நூற் பாக்கள், செய்யுள்கள்) சந்த இன்பம் உடைய ஆதல். ‘நடவா மடிசீ’ (நன். 137) என்னும் சூத்திரம் ஓசை இனிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. (நன். 13)

ஓத்தின் இலக்கணம் ஒரு சூத்திரத்திற் கிடத்தல் -

{Entry: P16b__170}

முதல்நூற்கும் வழிநூற்கும் ஒருமருங்கு ஒப்ப எடுத்துக் கொண்டு முடிபு ஒன்றாகக் கூறுமாறு வேறுபாடுடையது சார்பு நூலாம் என்றார். அவ்வேறுபாடுகளுள் ஒன்று இது.

‘மொழி முதற் காரணமாம்’ (இ. வி. 3) எழுத்தியல் இலக்கணம் ஒரு சூத்திரத்தில் கிடந்தது.

‘எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும்’ (38) பதவியலின் இலக்கணம் கிடந்தது.

‘மெய் உயிர் முதலீறு ஆமிரு பதங்களும்’ (58) புணரியலின் இலக்கணம் கிடந்தது.

‘பெயரெனப் படுபவை தெரியுங் காலை’ (176) பெயர்ச் சொல்லியல் இலக்கணம் கிடந்தது.

‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது’ (227) வினைச்சொல்லியல் இலக்கணம் கிடந்தது.

‘வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்’ (251) இடைச் சொல்லியல் இலக்கணம் கிடந்தது.

‘குறிப்பும் பண்பும் இசையும் தோற்றி’ (280) உரிச்சொல்லியல் இலக்கணம் கிடந்தது.

‘அதுவே, கைக்கிளை ஐந்திணை’ (376) அகத்திணையியல் இலக்கணம் கிடந்தது.

‘வெட்சி வஞ்சி உழிஞை தும்பை’ (600) புறத்திணையியல் இலக்கணம் கிடந்தது.

‘அணியெனப் படுவது’ (620) அணியியல் இலக்கணம் கிடந்தது.

‘செய்யு ளென்பது’ (710) செய்யுளியல் இலக்கணம் கிடந்தது.

‘எஞ்சிய இலக்கணம்’ (761) பாட்டியல் இலக்கணம் கிடந்தது.

இவ்வாறு ஒரு சூத்திரத்திலேயே அஃது அமைந்த ஓத்தின் இலக்கணம் கிடந்தமை அறியப்படும். (இ.வி.பாட். 142 உரை)

ஓத்தினது இலக்கணம் -

{Entry: P16b__171}

மணியை நிரல்பட வைத்தாற் போல, ஓரினப் பொருளை யெல்லாம் ஒருவழியே தொகுப்பது; ஒரு சாதியினும் தம்மின் ஒத்தனவே கூறல் வேண்டும். (தொ. செய். 170 நச்.)

ஓத்து முதலாய மூன்று -

{Entry: P16b__172}

ஓத்தும் படலமும் பிண்டமும் ஆவன. விளக்கம் அவ்வத் தலைப்பிற் காண்க. (பா. வி. பக். 111)

ஓத்து முறைவைப்பு -

{Entry: P16b__173}

ஒரு படலத்துள் இயல்களை முறைப்படி வைத்தல் ஆகிய உத்தி; நன்னூல் கூறும் 32 உத்திகளுள் ஒன்று. (நன். 14)

நன்னூல் எழுத்ததிகாரத்துள் முதற்கண் அடிப்படையாகிய எழுத்துப் பற்றிய எழுத்தியலை வைத்தார்; எழுத்தாலாகியது பதமாகலின் அது பற்றிய பதவியலை அடுத்து வைத்தார்; அப்பதங்கள் தம்மொடு தாமும் பிறவும் புணர்தலைப் பற்றிய புணரியலை மூன்று கூறாகப் பின்னர் வைத்தார்; உயிரும் மெய்யும் ஆகிய முறை பற்றி, உயிரீற்றுச் சொற்கள் புணர் வதைப் பற்றி உயிரீற்றுப் புணரியலின்கண்ணும் மெய்யீற்றுச் சொற்கள் புணர்வதைப் பற்றி மெய்யீற்றுப் புணரியலின்கண் ணும் உயிரீறு மெய்யீறு என இவற்றுள் பொதுப்பட அடங் கும் உருபு புணர்தலைப் உருபுபுணரியலின்கண்ணும் இவ்வாறு முறைப்பட ஓதினார். இவ் வகையான் இயல்களை முறையாக வைத்தமை ஓத்துமுறை வைப்பு என்னும் உத்தியாம்.

ஓரறிவுயிர் -

{Entry: P16b__174}

ஊற்றுணர்ச்சி ஒன்றுமேயுடைய புறக்காழனவாகிய புல்லும், அகக்காழனவாகிய மரமும் ஆம்; அக்கிளைப் பிறப்பாகியன புதலும் கொடியும் போல்வனவும், விலங்கு மக்கள் ஈன்ற குழவி ஓரறிவின ஆகிய பருவமும், எக்காலத்தும் ஓரறிவின வாகிய என்பில் புழுவும் என இவை. (தொ. பொ. 583 பேரா.)

ஒள section: 1 entries

ஒளசித்தியம் -

{Entry: P16b__175}

வடநூலார் உசிதமாக (தகவுடைத்தாக) ப் பேசுவதனை ஒளசித்தியம் என்ப. காலமும் இடமும் பிற பொருத்தமும் ஆகிய சூழ்நிலைக்கு ஏற்ப, நன்மை தீமை எனுமிவற்றுள் ஒரு பயன் விளையும் வகை (தனக்கு நன்மை, பிறர்க்குத் தீமை என்க.), சொற்கள் நுண்மையும் உறுதியும் உடையவாமாறு ஒன்று (அவையில்) பேசுவது ஒளசித்தியம் என்னும் தகவுரை ஆம் என்பர் (தென். அயி. 46)

க section: 65 entries

கடமை -

{Entry: P16b__176}

ஆட்டின் பெண்ணினத்தை குறிக்கும் மரபு பற்றிய ஒருபெயர்; மூடு என்பதும் அது. (தொ. பொ. 619. பேரா.)

கடவுட்கு ஆசனமாவன -

{Entry: P16b__177}

தீக்கடவுள் ஒளித்துப் புக்கமையின் அரசும், இரதத்துக்கு (இரதம் - இரசம், சுவை) இருப்பிடம் என வேதம் புகழ்வதால் அத்தியும், துறக்கத்திலிருந்து, நிலவுலகத்துப் போந்தமையால் புரசும், அக்கடவுளின் குரோதத்தைச் சமம் செய்தலால் சமி எனப்படும் வன்னியும், அக்கடவுளின் ஒளி இருத்தலால் களாவும், மேகத்தின் இயைபான் ஓரொளி தங்கலின் இடிவீழ் மரனும், யாகபதியாகிய மாயோன் இருப்பிடம் ஆதலின் தாமரையிலையும் என அவ்வேழும் அக்கடவுட்கு ஆசன மாதற்கு உரியவாயின. (பா. வி. பக்.25)

கடவுள் வணக்கமும் அதிகாரமும் -

{Entry: P16b__178}

கடவுளை வணங்குதலும், இன்னது கூறுவேன் என்று நுதலிப்புகுதலும்.

எ-டு : “பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த

நான்முகற் றொழுதுநன்(கு) இயம்புவன் எழுத்தே” (நன். 56)

இதன்கண், ‘அருகதேவனைத் தொழுது’ என்பது கடவுள் வணக்கம்; ‘எழுத்திலக்கணம் இயம்புவேன்’ என்பது அதிகாரம். இவ்விரண்டும் இதன்கண் ஒருங்கே வந்தன.

‘கந்தமடிவில்’ என்னும் யாப்பருங்கலக் காரிகையது தற்சிறப்புப் பாயிரமும் அது.

கடுவன்

{Entry: P16b__179}

குரங்கின் ஆணினை மரபாகக் குறிக்கும் ஒருபெயர். (தொ. பொ. 623 பேரா.)

கடைமாணாக்கர்க்கு உவமைகள்

{Entry: P16b__180}

அடி ஓட்டைபட்ட குடம், ஆடு, எருமை, பன்னாடை இவை நான்கும் போல்வர் கடைமாணாக்கர். எத்துணை நீர் நிறைப் பினும் புறத்தே ஒழுக விடும் இல்லிக்குடம் போல, நல்லாசான் எத்துணை மிகுதிப்பட, காலம்பட நூற்பொருள் உரைப்பி னும், அவற்றை மனம் கொள்ளாமல் அறிவு வெளிறுபடக் கல்வியறிவு இல்லோராகவே முடிவர் கடை மாணாக்கருள் ஒருசாரார்.

ஒரு செடிக்கண் தன் வயிறு ஆர மேயத்தகும் தழைகள் இருந்து வைத்தும் அவற்றை அவ்வொன்றன்கண்ணேயே தொடர்ந்து உண்ணாமல், பல செடிக்கண்ணும் சென்று சிறிது சிறிது முயன்று மேய்ந்து பசிதீராது உழலும் ஆடு போல, தாம் கல்வியறிவு நிரம்புதற்கேற்ற நல்லாசான் ஒருவன்பாலே தொடர்ந்து கல்லாமல் பலரிடத்தும் சென்று சிறுகச் சிறுகப் பயின்று முடிவில் கல்வியறிவு நிரம்பாது முடிவர் கடைமாணாக்கருள் ஒருசாரார்.

தெளிந்த நீரினையும் கலக்கியே பருகும் எருமை போல, தன் வினா முதலியவற்றால் நல்லாசானது மனத்தைக் கலங்கச் செய்து வெறுப்புற்று அவன் பாடம் சொல்ல அதனால் பயன்கொள்வர். கடைமாணாக்கருள் ஒருசாரார்.

இனி நெய்யரியாகிய பன்னாடை தன்மீது பெய்யப்படும் தேன், கள் போன்றவற்றின் தூய இனிய பகுதியைக் கீழே போகட்டுத் தன்பால் கசடுகளையே கொள்ளுமாறு போல, ஆசிரியன் உரைப்பனவற்றுள் வேண்டத்தக்கவற்றை மனம் கொள்ளாது போக்கிவிட்டு, அவன் தாமதகுணவயத்தால் ஒரோவழி மொழிந்த வேண்டத்தகாதவற்றையே தம்மனத்தே இருத்திக் கொள்வர் கடைமாணாக்கருள் ஒருசாரார்.(நன்.38)

குரங்கு, எரி, விலங்கு, ஆயெருமை, யாடு, தோணி என்பன தொல்காப்பியப் பாயிரத்துள் இளம்பூரணர் உரையுள் நன்மாணாக்கர். ஆகாதார்க்கு உவமைகளாக நூற்பாவில் சுட்டப்பட்டுள. எரி-நெருப்பு, விலங்கு - வேந்தனது ஆணை யால் குற்றம் செய்தாரது காலினும் கையினும் புனையும் புனை; ஆய் எருமை - கன்று ஈன்று இழந்த எருமை. (பா. வி. பக். 140)

குரங்கு எறி விளங்காய் போல்வாரும், பந்தினை ஏற்கும் சுவரும் முகவையும் போல்வாரும் மாணாக்கர் ஆகத்தகாதவர் எனச் சில இலக்கணநூலார் கூறுதலின், அவையும் கடைமாணாக்கர்க்கு உவமை சொல்லப்படும். (இ. வி. பொதுப்பாயிர உரை; சாமி-6, மா. அ. 49, 50)

கண்டி -

{Entry: P16b__181}

எருமையுள் ஆணினைக் குறிக்கும் மரபால் வரும் பெயர். (தொ. பொ.6 23 பேரா)

கண்ணழித்தல் -

{Entry: P16b__182}

பதம்பதமாகப் பொருளுரைத்தல் (இறை. அ. உரை)

கண்ணழிவு என்பதுமது (L)

கண்ணழித்துரை -

{Entry: P16b__183}

பதவுரை, ‘கண்ணழித்துரை பற்றிச் சூத்திரத்துக்குப் பதப் பொருள் கூறுதும்’ (சி. போ., சிற். பக்.12) (L)

கண்ணி -

{Entry: P16b__184}

1. கண்ணியாவது அந்தணர் அரசர் வணிகர் என்னும் இம்முத்திறத்தாரும் சூடும் பூ; வேந்தர் கொடுப்பின் வேளாண் மாந்தர்க்கும் கண்ணிபெறும் பொருளாகச் சொல்லப்படும். வைசிகருக்கு அவரவர் குடிக்கு (இப்பர், கவிப்பர் பெருங் குடியர்) ஏற்பக் கண்ணிகள் வேறுபடும். அவர்கள் அரசனிடம் பெறாமல் தாமே சூடிக் கொள்ளும் உரிமை உடையர். (தொ. பொ. 634, 636 பேரா.)

2. இனி, செய்யுட்கண் கண்ணி என்பது ஒத்த எதுகைத்தாய் (பெரும்பான்மையும்) வெண்டளை பொருந்தி அளவடியாய் நிகழும் இவ்விரண்டடி. உலா, தூது போன்ற பிரபந்தங்களில் ஒவ்வொரு கண்ணியும் முடிவில் தனிச்சீர் பெற்று வெண் டளை பிறழாமல் வரும். பராபரக்கண்ணி, பரஞ்சுடர்க் கண்ணி போன்றவை கண்ணியமைப்பாகவே (உலா முதலிய வற்றுள் வரும் தனிச்சீர் பெறாது) இவ்விரண்டடியாக நிகழ்வன.

கரப்பின்றி முடியும் காண்டிகை -

{Entry: P16b__185}

சூத்திரத்துட்பட்ட இலக்கணத்துள் ஒன்றும் மறையாது முடியச் செய்யும் காண்டிகையுரை.

கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டிக் கூறுதலாகிய இம்முப்பகுதியும் காண்டிகையுரையாம். (பா. வி. பக். 162; தொ. பொ. 656. பேரா.)

கருவி வகை -

{Entry: P16b__186}

கருவி - காரணம். பிற காரணமெல்லாம் இருப்பினும் ஈவோ னாகிய ஆசானது அருள் இன்றேல் ஈகையாகிய பாடம் சொல்லுதல் நிகழாமையால், அவ்வருள் அவ்வீகைக்குக் கருவியாம். அதுதான், காரணம் இன்மையானாகிய இயற்கை யருளும், குறிப்பறிந்தொழுகல் முதலாய பணிசெய்தலானும் பொருள் முதலியன கொடுத்தலானும் - இன்சொற் கூறலா னும் ஒன்றற்கொன்று மிகுதல் பலவாகிய மூவகைச் செயற்கை யருளும், என நான்காம். (பா. வி. பக். 123)

கருவி வகைக்கு உவமம் -

{Entry: P16b__187}

மலை, இயற்கையருளான் அருவி நீர் ஈதலுடையது.

நிலன், உழவு முதலாய பணி நன்கு செய்யின் அதற்குத் தக மிகக் கொடுக்கும் செயற்கையருள் உடையது.

பூ, இசைபாடித் தன்னுட் புகும் தும்பிக்கு மிகக் கொடுக்கும் செயற்கையருள் உடையது.

துலாக்கோல், விலைகொடுத்தார்க்குத் தன் பொருளை இனிது நிறுத்து அளிக்கும் செயற்கை அருள் உடையது.

இவ்வாறு காரணமின்மையானாகிய இயற்கையருளுக்கு மலை உவமம்; பணி செய்தல், இன்சொற் கூறல், பொருள் கொடுத்தல் என இவற்றால் ஒன்றற்கொன்று மிகுதல் தன்மையுடையவாகிய செயற்கையருளுக்கு முறையே நிலனும் பூவும் துலாக்கோலும் உவமம். (பா. வி. பக். 124)

கல்விக்குத் திங்கள் உவமமாதல் -

{Entry: P16b__188}

பொறிவாயில் ஐந்தவித்தானது பொய்தீர் ஒழுக்க நெறி யின்கண் வழுவாது நிற்றலுமுடைமையே ஆசானது கல்விச் சிறப்பு. அதன் வளர்ச்சிக்குக்குத் தக, அம்மாசறு காட்சி அகத்திருளாகிய அறியாமையை நீக்கி இன்பம் பயத்தலான், கலையது வளர்ச்சிக்குத் தகப் புறத்திருளை நீக்கி இன்பம் பயக்கும் திங்கள் அதற்கு உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 64)

கல்வி நிரம்பும் வழி -

{Entry: P16b__189}

ஒரு நூலை ஒருமுறை பாடம் கேட்டவன் அவ்வளவில் அமையாமல் இரண்டாமுறை கேட்பின், அவன் அந்நூலில் தவறுபடுதல். பெரும்பான்மையும் இலனாவான்; மூன்று முறை கேட் பின், ஆசிரியன் கற்பித்த முறைமையை அறிந்து தான் பிறர்க்குச் சொல்லவல்லனாவான். ஆசிரியன் கற்பித்த நூற்பொருளை மாணாக்கன் தன் அறிவில் நிரம்பக் கற்றுக் கொள்ளினும், ஆசிரியனது புலமைத்திறத்தில் கால் பங்கு பெறுவனேயன்றி அதற்கு மிகுதியாகப் பெறான்; தன்னோடு உடன்பயிலும் மாணாக்கர்களொடு பழகும் வகையால் ஒருகால் பங்கும், தன் மாணாக்கர்க்கும் அவையினர்க்கும் தான் ஒழுங்காகச் சொல்லுதலால் எஞ்சிய அரைப்பங்கும் நிரம்பப் பெறவே, இவ்வாறாகக் குற்ற மற்ற புலமைத் திறம் நிரம்பலுறும். (நன். 42-45.)

கல்விப் பொருளது குற்றமின்மை வகை -

{Entry: P16b__190}

தீயனவும் பயனில்லனவும் ஆகாமல் நன்மை பயத்தல், இனத்தியல்பால் தன்னியல்பு கெடாமை, இனத்தியல்பைத் தன் இயல்பு ஆக்கல், ஈவோனைப் பின்னும் ஈவோன் ஆக்கல் - என அவ்வகை நான்காம். (பா. வி. பக். 116)

கல்வியால் எய்தும் பயன் நான்கு -

{Entry: P16b__191}

கல்வியை மாணாக்கற்கு அளித்த பின் ஆசிரியனது அவ்வீகை எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல், மாணாக்கனால் நன்கு மதிக்கப்படுதல், அதனை அவன் பெற்றடைந்த பயன் காரண மாக ஆசிரியனுக்கு இம்மைக்கண் உளதாகிய பயன், ஈதல் காரணமாக இம்மை மறுமை இரண்டினும் ஆசிரியனுக்குள தாகிய பயன் என அப்பயன் நான்காம். (பா. வி. பக். 126)

கல்வியின் இயல்பு -

{Entry: P16b__192}

தீயவும் பயனில்லனவும் செய்யாது நன்மை செய்தல், தூய அறம் பொருள் இன்பங்களைத் தோற்றுவித்தல், இனத்தியல் பால் தன்னியல்பு நீங்காமை, அவ்வினத்தியல்பைத் தன்னியல்பு ஆக்குதல் - எனக் கல்வியின் இயல்பு நான்காம். (பா. வி. பக். 117)

கல்வியின் வகை -

{Entry: P16b__193}

இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாகிய அற நூலும், இம்மை மறுமை என்னும் இரண்டனையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மை ஒன்றனையே பயப்ப தாகிய இன்பநூலும், அம்மூவகை நூல்களின் சொல்லையும் பொருளை யும் உள்ளவாறு அளந்து காட்டும் கருவிநூலும் எனக் கல்வியின் வகை நான்கு. (பா. வி. பக். 62)

கலை (1) -

{Entry: P16b__194}

ஆண்பாலை மரபினால் குறிக்கும் பெயர்களுள் ஒன்று; புல்வாய், உழை, முசு, குரங்கு இவற்றின் ஆணினைக் குறிக்கும். [ குரங்கினை அப்பர் என்றும் கூறுப. 602 பேரா. ] (தொ. பொ. 599-601 பேரா.)

கழல்பெய்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முகத்தெங்கு - இவற்றின் தன்மை -

{Entry: P16b__195}

அ) கழல்பெய்குடத்தின் தன்மை

தன்னுள்ளே முன்னர் இடப்பட்ட முறையானன்றி, முன்னிடப் பட்டவும் பின்னிடப்பட்டவும் அம்முறை மாறிப்போம் வகை, கீழே உகுக்கும்போது விரைவில் தன்னுள்ளிட்ட கழற்காய் களைக் கொடுக்கின்ற செய்கை கழற்காய் பெய்து வைக்கப் பட்ட குடத்தின் தன்மையாம்.

கழற்குடம் ஆசிரியர் ஆகத்தகார்க்கு அமைந்த உவமமாதலின், தாம் கற்றுக்கொண்ட முறையினான் அன்றி அம்முறை முன்பின்னாக மாறிப் போம்படி பயிற்றுங்காலத்தே தம்முட் கொண்ட நூற்பொருளை விரைவில் தரும் செய்கை, ஆசிரியர் ஆகாதவர்க்கு அமைந்த குற்றம் என்பது.

ஆ) மடற்பனையின் தன்மை

தன் பழங்களைத் தானே கொடுப்பக் கொண்டாலன்றித் தன்னிடம் ஒருவர் நெருங்கி ஏறிவந்து அவற்றைப் பறித்துக் கொள்ள இடம் கொடாதது, தன் வடிவம் முழுதும் கூரிய கருக்கு வாய்ந்த மடல்கள் விரியப் பெற்ற பனையினது தன்மை யாம். அவ்வாறே, தாமே தம்மிடமுள்ள நூற்பொருளைச் சொல்லப் பிறர் அறிந்து கொள்ளினன்றி, ஒருவர் தம்பால் அணுகி வினவி அறிந்துகொள்ள இடங்கொடாமை, ஆசிரியர் அல்லாதாரது தன்மை.

இ) பருத்திக் குண்டிகை தன்மை

பஞ்சினைத் தன்பால் கொண்டபோதும் மிக முயன்று சிறிது சிறிதாக உட்செலுத்தக் கொண்டு, அப்பஞ்சினைப் பிறர்க்குக் கொடுக்கும்போதும் எளிதின் ஈயமாட்டாதது பருத்திக் குண்டிகை. அப்பெற்றி போலவே, நூற்பொருளைத் தாம் பயின்ற காலத்தும் வருத்தத்தொடு சிறிது சிறிதாகக் கற்பிக்கக் கொண்டு அதனைப் பிறர்க்குப் பயிற்றும்போதும் எளிதிற் கொடுக்க மாட்டாமை ஆசிரியர் அல்லாதாரது தன்மை.

ஈ) முடத்தெங்கின் தன்மை

நீர் அட்டுதல் முதலாய பலவகையாலும் தனக்கு உதவிப் பேணி வளர்க்கும் தன்மையினின்றும் நீங்கிய அயலார்க்குத் தன் காய்களை உதவுவது, வேலிக்குப் புறம்பே வளைந்துள்ள தெங்கினது தன்மை. அதுபோலவே, பொருள் கொடுத்தல் முதலாய பல்லாற்றானும் உதவித் தமக்கு வழிபாடு ஆற்றி வரும் தம் மாணாக்கர்க்குப் பயிற்றாது அல்லாதார்க்குத் தம் கல்வியைப் பயிற்றுதல் ஆசிரியர் அல்லாதாரது தன்மை. (நன். 32-35)

களம் கடியப் படுவார் -

{Entry: P16b__196}

மாணாக்கர்க்கு வேண்டும் ஒழுக்கம் புறத்தோற்றத்தினும் காணப்படாதவர், பொறாமைக்குணம் உடையவர், காரண மின்றிப் பலகாலும் நகுபவர், நாணமின்றி வேண்டாத வொன்றைப் பேசுபவர், ஆசிரியன் கூறுவதைக் கேட்டு அதனால் கல்விப் பயன் சிறிதும் உறாதவர், வாய்ப்புள்ள விடத்தே சூதாடும் களத்தில் இருப்பவர் - என்று இன்னோர், பாடஞ்சொல்லும் இடத்தினின்று நீக்கப்படுவார்.

‘அவையின்கண் கடியப்பட்டார்’ காண்க. (மா. அ. பாயி. 53)

களிறு -

{Entry: P16b__197}

ஆண்பாலை மரபு பற்றிச் சுட்டும் பெயர்களுள் ஒன்று; யானை, பன்றி இவற்றின் ஆணினைக் குறிக்கும். (தொ. பொ. 589 பேரா.)

யானை, பன்றி, சுறா - இவற்றின் ஆணினைக் குறிக்கும்.

(சூடா. பக். 67)

பன்றி, கெளிற்றுமீன், யானை, அஸ்த நட்சத்திரம், சுறவு இவற்றைக் குறிக்கும். (பொதிகை. 663)

கற்கப்படாதோருக்கு உவமைகள் -

{Entry: P16b__198}

கழற்பெய்குடம், மடற்பனை, முடத்தெங்கு, குண்டிகைப் பருத்தி என்பன நான்கும் ஆம். (பா. வி. பக்.8)

பருவத்தில் மலர்ந்தும் பரிமளம் எய்தாத முருக்கமலர், பாம்பின் வாய் மணி, பொது மகள் நலன், சிறியவன் பாற் செறிதரு பொருள் என்பன நான்கும் ஆம். (மா. அ. 35-38)

கற்பிக்கப்படாதோர் -

{Entry: P16b__199}

காமுகன், கட்குடியன், கடுஞ்சொலன், சினமுடையோன், சோம்புதலுற்றோன், தொன்னூற்கு அஞ்சித் தடுமாறும் உளத்தோன், மறவி மிகவுடையோன், துயிலுவோன், மாறு பாடுடைய மனத்தோன், கள்வன், பொய்யன், மாண்பின் நீங்கிய மானமுடையோன், பிணியன் என்னுமிவர். (மா.அ. 46)

கற்பிக்கப்படாதோர் இயல் -

{Entry: P16b__200}

ஆடு, பந்துறுசுவர், பொருளை அளந்தறியும் முகவை, கரை யில்லாத ஏரி - இவை போன்ற இயல்களுடையார் கற்பிக்கப் படாதோர், சிறிது சிறிதாகக் கற்றுக் கல்வி முற்றாமை, ஆசிரிய னால் தம் மனத்தில் பற்ற உரைக்கப்பட்ட கல்வியையும் மனப்பற்றின்றி வறிய மனத்தராதல், ஆசிரியன் உரைத்த வற்றுள் மிகச் சிறிதே தம் மனத்தில் பற்றுதல், ஆசிரியன் அளித்த கல்வியை முற்றப் பற்றாது புறம் போக விட்டுக் கல்வியிற் சிறியராய்த் தமக்கும் பிறர்க்கும் இனிமைப் பயன் நிரம்பாமை - என்பன முறையே அவ்வியல்புகள். (மா. அ. 47)

கற்பிக்கப்படுவார்க்கு உவமைகள் -

{Entry: P16b__201}

அன்னம், கிளி, நல்ல நீர், நெய்யரியாகிய பன்னாடை, யானை, ஆன் ஏறு (- இடபம்) என்பன ஆறும் ஆம். (பா. வி. பக். 139)

பளிங்கு, அன்னம், பரவை, மேகம் என்பன நான்கும் ஆம். (மா. அ. 41)

இனி அவை உவமை ஆமாறு :

வெண்ணிறத்தினையுடைய அன்னம் நகையுடையது. கிளி இன்சொல் உடையது. நன்னீர் தன்னிடத்தெய்தியவர் எத்தன்மையராயினும் அவர் மாசு போக்கும் இகழாமை உடையது. யானை பாகற்கு அடங்கி நடத்தலின் பணிவு உடையது. ஆனேறு வெகுளிதோன்றின் தன்கோடு முதலிய வற்றானும், உவகை தோன்றின் முக்காரம் முதலியவற்றானும் அகத்துள்ளவற்றையே புறத்துக் காட்டும் செப்பம் உடையது. இவை போலவே நன்மாணாக்கர் நகை, இன்சொல், இகழாமை, அன்பு, பணிவு, செப்பம் என்னும் ஆறு குணமும் ஒருங்குடையார். இது குடிமை பற்றிய உவமைப் பொருத்தம். (பா. வி. பக். 144) (இனி, தூய்மை முதலாய பிற பொதுவியல்பு பற்றிச் சண்முகனாரது பாயிர விருத்தி பாரித்துச் செல்லும்).

பளிங்கு நின்மலமாய் விளங்குவது; தன்னையடுத்த பொருள் களின் குணங்களைத் தனது குணமாகக் கொண்டு காட்டுவது; அதுபோல, நன் மாணாக்கர் தாம் களங்க மற்று விளங்கிய நுண்ணறிவோடு ஆசிரியன் அளித்த பல்வகைக் கல்விப் பொருளையெல்லாம் தம் உணர்வில் ஊட்டிப் புறத்தே தோற்றுவிப்பர்.

அன்னம் பாலையும் நீரையும் கலந்து வைத்துழி, நீரை நீக்கிப் பாலையே உண்ணும் தன்மைத்து; அதுபோல, நன்மாணாக் கர் ஆசிரியன் சொல்லுவனவற்றுள் அசாரத்தை நீக்கிச் சாரத்தையே உட்கொள்வர்.

பரவை (-கடல்) கங்கை முதலாய பல நதிகள் தன்னுட் புகவும் தான் அவற்றைப் புறத்தே கக்குதலின்றித் தன்னகத்து அடக்கிக் கொள்வது; அதுபோல நன்மாணாக்கர் ஆசிரியன் அறிவித்த அனைத்துக் கல்விப்பொருளையும் புறம் போக விடாது அகத்தே உட்கொள்வர்.

மேகம் தான் படிந்த கடல்நீரை உவர் போக்கி உண்டு அந் நன்னீரைப் பல துளியாகப் பொழிந்து உலகிற்கு உதவும்; அதுபோல, நன்மாணாக்கர் தம் ஆசிரியன் பலவாக மொழிந்த பலதிறப்பட்டவற்றுள்ளும் சாரமான நூற்பொரு ளையே மனங்கொண்டு, அக்கல்வியைப் பலரும் அறிய வழங்கி உதவுவர். (மா. அ. 42 - 45)

கன்று -

{Entry: P16b__202}

இஃது இளமையை மரபு பற்றி யுணர்த்தும் பெயர்களுள் ஒன்று.

யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், மான், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், தாவரம் முதலியவற்றின் இளமைப் பெயராக இது வருகிறது. (தொ. பொ. 570 - 573 பேரா.)

கயந்தலை, களபம் - இவை யானைக் கன்று என்னும் பெயர்க் கொடைக்கு உரியன. (நா. நி. 203)

கடமை, யானை, குதிரை, கழுதை, மரை, எருமை, மான், ஒட்டகம், கவரி, கராம் இவற்றை யுணர்த்தும் இளமைப் பெயர் கன்று. (திவா. பக். 61)

காண்டிகை -

{Entry: P16b__203}

கருத்து, பதப்பொருள், எடுத்துக்காட்டு என்னும் இவற்றா னும், இவற்றொடு வினா எழுப்பி விடை கூறிச் செல்லும் திறத்தானும் இலக்கணச் சூத்திரத்தினது உட்பொருளைத் தோற்றுவிக்கும் உரை. (நன். 22)

‘சூத்திரம் புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்’ என்னும் தொல்காப்பியம். (பொ. 654 பேரா.)

காண்டிகை - கண்டம்பட நிற்றல். அஃதாவது சூத்திரத்தி லமைந்த சொற்களும் சொற்றொடர்களும் தம் கூறுகள் விளங்க நிற்றல்.

காண்டிகை என்பது சூத்திர அமைப்புப் பற்றியதோர் இலக்கணமேயாம். அக்காண்டிகைப்பகுதிகளுக்கு உரைக்கும் பொருள் காண்டிகையுரை எனப்படும். காண்டிகை என்பதே உரையாகாது என்க.

செய்யுளியலுள் ஓதிய இலக்கணமும் இவ்வியலுள் கூறப் பட்ட மரபுகளும் பற்றிக் குற்றமில்லாத சூத்திரம் நிகழும். இச்சூத்திரம் தான் உணர்த்தக் கருதிய இலக்கணங்களுள் யாதொன்றையும் மறைத்தலின்றிப் பொருள் நனி விளங்கும் சொற்களானும் தொடர்களானும் முடிந்து நிற்பது காண்டிகை.

காண்டிகையானது, நுதலிய பொருள் விடுபட்டுப் போதலும் மிக விரிவுறுதலுமின்றி விளக்கத்தொடு பொருந்தி, யாப்புற அமைத்த சூத்திரம் தன் குறிக்கோளை முடித்தலைக் கருதிய தாக ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் பொருந்துமாறு அமைந்த பொருள் நெறியினையுடைத்து. (தொ. மர. 97, 98, 100, 101 ச. பால.)

காண்டிகை உரையின் இருவகை -

{Entry: P16b__204}

கருத்துரைத்துக் கண்ணழித்து (-பதவுரை கூறி)ப் பொழிப்புத் திரட்டுதலாகிய இலக்கணத்துள் ஒன்றும் கரவாது முடியச் செய்வது காண்டிகையுரையின் ஒருவகை (656). பதம் பிரித்துப் பொருள் கூறலால் அகன்று படாமல், தொடர்மொழிகளை இஃது இன்ன வேற்றுமைத் தொடர் முதலாக விரித்துக் கூறாமல், இது நியமச் சூத்திரம் அதிகாரச் சூத்திரம் என்றாற் போல முதற்கண் சொல்லிய சூத்திரப்பெயரினை அவ்வா றாகி முடிந்த முடிபு சொல்லுதற் பொருட்டாக, காரணம் கூறும் வழக்கினானும் அக்காரணத்திற்கு ஏற்பது ஒன்றாயி னும் உதாரணமாயினும் முதல்நூல் மேற்கோளாயினும் ஒன்று பற்றியும் சூத்திரம் செய்த ஆசிரியன் விரும்பியதே சொல்லிவிடும் பொருள் இலக்கணத்ததாகச் செய்வது காண்டிகையுரையின் மற்றொருவகை. (தொ. பொ. 656, 657 பேரா.)

காண்டிகை உறுப்பு ஐந்து -

{Entry: P16b__205}

கருத்து, பதப்பொருள், எடுத்துக்காட்டு, வினா, விடை என்ற ஐந்தும் காண்டிகை உறுப்புக்களாகும். (நன். 23)

காண்டிகைப் பகுதி -

{Entry: P16b__206}

கருத்துரைத்தல், கண்ணழித்தல், மொழிப்புத்திரட்டல் என்னும் இம்முப்பகுதியும் காண்டிகை எனப்படும். (பா. வி. பக். 162)

காண்டிகை ‘விட்டகல்வின்றி’ இருக்குமாறு -

{Entry: P16b__207}

காண்டிகையானது நுதலிய பொருள் விட்டுப் போதலும் மிக விரிவுறுதலுமின்றியிருத்தல் வேண்டும் என்றார். அஃதாவது யாவற்றையும் கூறின் சூத்திரம் நெடிதாகிச் செல்லும் எனக் கருதிச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாது விடுதலின்றி இருத்தல் வேண்டும்; நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க வேண்டுமென்று கருதிச் சொற்களைப் பெருக்கிக் கூறுதலு மின்றி இருத்தல் வேண்டுமென்றவாறு. (தொ. மர. 101 ச. பால.)

காலம் களம் காரணம் கூறற்குக் காரணம் -

{Entry: P16b__208}

நூலை ஆக்கியோனும் கேட்போரும் எக்காலத்தினர், யாண்டிருந்தனர், யாதுகாரணத்தான் இந்நூல் செய்தான் என்று அறியுமாறு மாணாக்கர்க்கு விருப்பம் செல்லுதல் இயல்பு அன்றியும், நூல்செய்த காலத்தோ அல்லாத பிற்காலத்தோ அஃது அரங்கேற்றப்பட்டது எனக் கடா நிகழ்தல் கூடும். மேலும், முந்து நூலைத் தொகுத்தல் முதலாய யாப்புப் பற்றிய காரணமன்றிப் பிறகாரணமும் உளவோ என்றும் ஐயம் தோன்றலும் உண்டு. ஆதலின் இக்காரணங்கள் பற்றிக் காலம் முதலிய மூன்றும் கூறல் இன்றியமையாதது என ஒருசார் ஆசிரியர் வேண்டினர் என்பது. (பா. வி. பக். 191, 192)

காலவரைவு -

{Entry: P16b__209}

‘வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது’ (தொ. பொ. 188 நச்.) என்பதும் பிறவும் குறித்து மாணாக்கனும், வேள்வியும் பிறவும் குறித்து ஆசிரியனும், நோய் முதலாயின குறித்து இருவரும் பிரிவர். ஆதலின் பாடம் சொல்லுதல் ஒழிதற்பால தாகிய பிரிவு வரைவு என ஒன்று;

வேனிலும் நண்பகலும் முதலாய காலத்துக் கூர்மையுடை யோர் சிந்தையும் கூம்பும் ஆதலானும், வைகறை எற்பாடு இடையாமம் என்னும் சிறுபொழுது மூன்றும் முறையே நித்த கருமத்திற்கும் உலகியற்கும் உறக்கத்திற்கும் இன்றியமை யாது வேண்டப்படும் ஆதலானும், பாடஞ்சொல்லுதல் ஒழிதற் பாலதாகிய பெரும் பொழுது வரைவும் சிறுபொழுது வரைவுமெனப் பொழுது வரைவு இரண்டு;

பாடம் அளித்தற்குரிய காலத்திலும் உவாமுதலிய காலத்தை நூல் விலக்குதலால், அவ்விலக்கு வரைவு என ஒன்று; இவ்வாறு பாடத்தை மாணாக்கற்கு ஈகை ஒழிதற்பாலதாகிய காலவரைவு நான்காம். (பா. வி. பக். 122)

காலவேறுபாட்டால் பெறுவன -

{Entry: P16b__210}

சார்புநூலாவது முதல்நூற்கும் வழிநூற்கும் ஒரு மருங்கு ஒப்ப எடுத்துக்கொண்டு, முடிபு ஒன்றாகக் கூறுமாறு வேறுபாடுடைத்தாய் வருவது என்றார்; அவ்வேறுபாடு களுள் இதுவும் ஒன்று.

எ-டு : அகரத்தொடு கூடிச் சகரம் மொழிக்கு முதலாம் எனக் கூறுதலும்

(இ. வி. 27)

‘சொல் வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்’ (தொ. சொ.463) எனத் தொல்காப்பியனார் பாதீடு இட்ட (பகுத்துக் கூறிய) சொல்லை விகுதிப்புணர்ச்சி என விரித்துக் கூறுதலும்,

அவர் உவமம் ஒன்றனையே கூறவும், இவர் குணவணி என்றும் பொருளணி என்றும் சொல்லணி என்றும் வடநூலார் கூறியவற்றை மொழிபெயர்த்துக் கூறுதலும் என இவை முதலாயின. (இ. வி. பாட். 142 உரை.)

கிடக்கைப்பயன் வகை -

{Entry: P16b__211}

யாற்றது, ஒழுக்கம், தேரைப்பாய்வும், சீயநோக்கும், பருந்தின் வீழ்வும் என நான்கு. (பா. வி. பக். 113)

குட்டி -

{Entry: P16b__212}

இது மரபு பற்றி இளமையுணர்த்தும் பெயர்களுள் ஒன்று.

இது மூங்கா, வெருகு, எலி, அணில் (தொ. பொ. 561 பேரா.) நாய், பன்றி, புலி, முயல், நரி (563 பேரா.) குரங்கு (568.பேரா). இவற்றது இளமைப் பெயராக நிகழ்கிறது.

குடிப்பிறப்பிற்கு வலம்புரி முத்து உவமையாதல் -

{Entry: P16b__213}

ஆசிரியன், தாய்மரபும் தந்தைமரபும் என்னும் இருவகைக் காரணமும் குற்றமின்றிப் படைப்புக்காலம் தொட்டு மேம் பட்டு வருதலான், அவனது குடிப்பிறப்பிற்கு, வலம்புரியும் மழைத் துளியும் ஆகிய இருவகைக் குற்றமுமின்றி மேம்பட்ட வலம்புரி முத்து உவமையாயிற்று. (பா. வி. பக். 20)

குடிப்பிறப்பின் பொது இயல்பு -

{Entry: P16b__214}

வறியார் சென்றவழி முகம் மலரும் நகை, ஈகை, இன்சொற் சொல்லுதல், இல்லாரை இகழாமை, அன்பு, பணிவு, கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாத செம்மை, இழிந்த கருமம் காரணமாகப் பழிபாவங்களின் மடங்கும் நாணம் - என இவை எட்டு. (பா. வி. பக். 17)

குடிப்பிறப்பின் பொது இயல்பு இயற்கை -

{Entry: P16b__215}

குடிப்பிறப்பின் பொதுஇயல்புகளாகிய நகை ஈகை முதலிய எட்டும் இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உள ஆகுதலானும், பெருக்கம் பற்றியும் அவர் அவ்வியல்பின் வேறுபடார் ஆதலானும், நற்குடிப் பிறவாத பிறர்க்காயின் கற்பித்தவழியும், அவ்வியல்புகள் நெடிது நில்லாமையானும் இவ்வியல்புகள் இயற்கையாம் என்பது அறியப்படும். (பா. வி. பக். 22, 23)

குடிப்பிறப்பின் வகை -

{Entry: P16b__216}

இல்லறநிலைக்கும் துறவறநிலைக்கு முரிய பொதுஇயல்பு எனவும், இல்லறநிலைக்குரிய அந்தணரியல்பு அரசரியல்பு வணிகரியல்பு வேளாளரியல்பு எனவும், துறவற நிலைக்குரிய தவத்தின் இயல்பு யோகத்தின்இயல்பு ஞானத்தின்இயல்பு எனவும் எட்டு. (பா. வி. பக். 17)

குடிப்பிறப்பின் வகை எட்டற்கும் முறை -

{Entry: P16b__217}

குடிப்பிறப்பாவது குடிப்பிறந்தாரது இயல்பு. அவ்வியல்பின் வகை பொதுவியல்பு முதலாக எண்வகைப்படும்.

அக்குடிப்பிறப்பு வகை எட்டனுள், இல்நிலை துறவுநிலை இரண்டற்கும் காரணமாயது பொதுவியல்பு ஆகலின் அது முன்னும் ஏனைய பின்னும், துறவுநிலை வகைக்கு இல்நிலை வகையே காரணம் ஆகலின் இல்நிலைவகை முன்னும் ஏனைய துறவுநிலைவகை பின்னும்,

இல்நிலைவகை நான்கனுள், அந்தணராகிய உயர்ந்தோர் கற்பித்தவழியே ஏனைய மூவகை வருணத்தாரும் நடத்தல் வேண்டும் ஆகலின், அந்தணர் இயல்பு முன்னும் ஏனைய மூன்றும் பின்னும், அரசன் காவலானன்றி ஏனையோரது தொழில் நிலை பெறாமையின் அரசரியல்பு முன்னும் ஏனைய இரண்டும் பின்னும், அரசுகாவலொடு வாணிகமும் உழவும் நடைபெறற்கொரு காரணம் ஆகலின் வணிகரியல்பு முன்னும் ஏனைய வேளாளரியல்பு பின்னும்,

துறவுநிலை மூன்றனுள் யோகத்திற்கும் ஞானத்திற்கும் தவம் காரணம் ஆகலின் தவத்தியல்பு முன்னும் ஏனைய இரண்டும் பின்னும்.

ஞானத்திற்கு யோகம் காரணம் ஆகலின் யோகத்தியல்பின் பின் ஞானத்தியல்பும் இவ்வாறு முறையானே உரைக்கப் பட்டன. (பா. வி. பக். 58)

குண்டிகை குடுக்கை ஆகாமை -

{Entry: P16b__218}

‘குண்டிகைப் பருத்தி’ என்பது நீர்க்கரகத்துள் பெய்து வைத்த பருத்திக் காயினைக் குறித்தது. இதனை யுணராது நன்னூலார் முதலாயினார் குண்டிகைப் பருத்தி என்பதனைப் ‘பருத்திக் குண்டிகை’ என மாற்றி, பஞ்சு அடைத்ததாகிய மிகச் சிறிய வாயினையுடைய குடுக்கையெனப் பொருள்கொண்டனர்.

குண்டிகை என்பது யாண்டும் வாய் அகன்ற நீர்க்கரகத்தை யன்றி நீர் வறிதாய் பிறிதொன்றனை உணர்த்தாது; ‘குண் டிகைப் பஞ்சு’ எனினும் சூத்திரம் அமைதலின், அங்ஙனம் கூறாமையே அப்பருத்தி பஞ்சினை உணர்த்தாது என்று அறிவிக்கிறது. வழக்கின்கண், குடுக்கையுள் அடைத்தற்பால தாகிய இலவம் பஞ்சினை விலக்கிப் ‘பருத்திப் பஞ்சு’ எனக் கூறுவதால் விளைந்த பயன் பிறிதொன்று இல்லை. இக்கார ணங்களால் குண்டிகை என்பது குடுக்கையைக் குறியாது என்பது. (பா. வி. பக். 11, 12)

குமரியாறன்று, மலையே -

{Entry: P16b__219}

‘வடவேங்கடம் தென்குமரி’ என்புழி, வடக்கின்கண் நிலைபே றுடைய மலையைக் கூறினார்க்குத் தெற்கின்கண்ணும் நிலையுடைத்தாகிய ஒருமலையைக் கூறலே முறை; ஓரிடத்தே நிற்றலின்றி நீளச்செல்லும் யாற்றினைக் கூறின் அஃது எல்லையாகாது.

கடல்கொண்ட பிற்காலத்து நூல்கள் செய்த சிறுகாக்கை பாடினியார் முதலாயினார், தெற்கின்கண் பிற நாடின்றித் தமிழ்நாடே ஆமாறு கடல் சூழப்பட்டமையால், நிலை யுடைய மலையை எல்லையாகக் கூறவேண்டாமல் கடலே எல்லை கூறினர்.

தொல்காப்பியனாரும் பிற ஆசிரியரும் அகப்பாட்டெல்லை புற எல்லை என யாண்டும் கூறிற்றிலர்.

தொல்காப்பியனார் செய்யுளியலின்கண், ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும், யாப்பின் வழியது என்மனார் புலவர்’ எனப் பொதுப்படவே கூறினார்.

தலைச்சங்கம் இரீஇய தென்மதுரையை அகஎல்லையுட் படுத்தாது புறஎல்லையுட் படுத்துதல் பொருந்தாது.

அக்காலத்துக் குமரியாற்றின் வடபால், பாண்டியர்க்குத் தலைநகரமும் சங்கமுமின்றிப் பெரும்பான்மையும் காடாகவே கிடந்த அந்நாட்டினை அகப்பாட்டெல்லை என்றல் பொருந்தாது.

இன்ன காரணங்களால் ‘தென்குமரி’ தெற்கேயுள்ள குமரி மலை ஆதல் வேண்டும் என்பது. (பா. வி. பக். 202)

குமரிமலை இக்காலத்து இன்மை -

{Entry: P16b__220}

தொல்காப்பியனார் தம்நூல் இயற்றிய பின்னர்ப் பல யாண்டுகள் கழிந்த பிற்காலத்தே, தென்கடலின் வடபால் பிறமொழிகள் வழங்கிய நாட்டையும், அதன் வடபாலுள்ள குமரிமலையையும், அதன் வடபாலுள்ள பஃறுளியாற்றையும், அதன் வடபாலுள்ள எழுநூற்றுக்காவதப் பரப்புடைய நாற்பத்தொன்பது தமிழ்நாடுகளையும், அவற்றின் தலைநகர மாகிய தென்மதுரையையும், கடல்கொண்டது. பலயாண்டு கழியப் பின் ஓரூழியில் கபாடபுரத்தையும் குமரியாற்றையும் இன்னோரன்ன யாறுமலை பிறவற்றையும் அக்கொடுங் கடலே கொண்டது. இவ்வாறு தொல்காப்பியர் காலத்தின் பின் காலவிகற்பத்தால் குமரிமலை கடலுள் மூழ்கிற்றாதலின், ஆசிரியர் தென்பால் எல்லையாகக் கூறிய குமரிமலை இக்காலத்துத் தோன்றாதாயிற்று. (பா. வி. பக்.165, 166)

குரங்கு, எரி, விலங்கு, ஆயெருமை, ஆடு, தோணி மாணாக்க ராகாதார்க்குப் பிண்ட உவமம் ஆதல் -

{Entry: P16b__221}

குரங்கு வலிமுகத்ததாதலின் நகையின்று; சிறு குரலுடை மையின் இன்சொல் உடைத்து.

தீ கடுஞ்சொல் என்னச் சுடும் இயல்பிற்றாகலின் இன்சொல் இன்று; உணவாக யாது இட்டாலும் ஏற்றலின் இகழலின்று. விலங்கு வேந்தனால் ஒறுக்கப்பட்டாரை இவர்குற்றம் செய் தோர் எனக் காட்டலின் இகழலுடைத்து; பிறர் விலக்கி னன்றித் தானாக நீங்காமையின் அன்புடைத்து.

ஆயெருமை கன்று இழந்தபின்னும் பால் கறக்கும் இயல்பிற் றாகலின் கன்றின்மேல் வைத்த அன்பால் பால் சுரத்தல் இன்மையின் அன்பு இன்று; மேய்ப்போற்கு அடங்கி அவன் குறிப்பின் அடங்கி இரை கோடலின் பணிவுடைத்து.

யாடு மேய்ப்போற்கு அடங்காது தான் நினைத்தாங்குச் சென்று இரை கோடலின் பணிவின்று; அகமும் புறமும் மாறின்மையின் செப்பமுடைத்து.

தோணி கரைச் செல்லும் இயல்பின்றென்னத் தன்னைப் புறத்தே காட்டிச் சமயம் நேர்ந்துழிக் கடலுள் ஆழ்த்தும் இயல்பிற்று ஆகலின் அகமும் புறமும் மாறாய வாற்றால் செப்பமின்று.

இவ்வாற்றான் குரங்கு முதலிய ஆறும் மாணாக்கன் அல்லா தாற்குப் பிண்ட உவமம் ஆகலின், எரி முதலிய ஐந்தும் இன் சொல் முதலாகிய ஐந்து குணத்தையும் களைதலின் நகை யின்மை முதலிய ஆறு குற்றமும் ஒருங்கு உடையான் மாணாக் கன் ஆகாதான் என்பது பெறப்படும். (பா. வி. பக். 145)

‘குரங்கு எரி விலங்கு ஆயெருமை’ - பொருள் -

{Entry: P16b__222}

குரங்கு - வானரமாகிய விலங்கு. எரி - தீ. விலங்கு - வேந்தன் ஆணையால் குற்றம் செய்தாரது காலினும் கையினும் புனையும் விலங்கு.

ஆய் எருமை - கன்றழிந்த தாயெருமை; ‘கற்றா’ என்றாற் - போல, கன்றொடு புணர்க்காமல் ‘ஆய்எருமை’ என்றதனால், கன்றின்றித் தாய் என்னும் தன்மையொன்றேயுடைய எருமை என்பது பொருள் ஆயிற்று. (பா. வி. பக். 140)

குரங்கெறி விளங்காய், எருமை, ஆடு, தோணி இவை மாணாக்கரா காதார்க்கு உவமம் ஆதல் -

{Entry: P16b__223}

விளமரத்திலிருக்கும் குரங்குமீது கல்லெறிந்து அது மரத்தி னின்று பறித்தெறியும் விளங்காயைப் பெறுவான் போல, ஆசிரியனுடைய அறிவுத்திறத்தில் பல குற்றங்களைக் கூறி, அதனால் துன்புற்று மனம் கிளர்ந்த ஆசிரியன் தன் அறிவு புலப்படும் வகையால் கூறும் அருங்கருத்துக்களைத் தான் விரும்பியவாறு பெறுவோன் மாணாக்கன் ஆகத் தகாதவன்.

தெளிந்த குளத்து நீரையும் தான் அதில் வீழ்ந்து கலக்கியே பருகும் எருமை போல, களங்கமற்ற நல்லாசான் மனத்தையும் தன்னுடைய சொற்செயல்களால் வருத்திக் கலக்கமுறுவித்து அவன்பால்நின்று கல்வியறிவு பெறுவோன் மாணாக்கன் ஆகத் தகாதவன்.

தான் வயிறார மேய்தற்குரிய தழைகளை ஓரிடத்துக் கண்டு வைத்தும் அங்கே நிரம்ப உண்ணாது பலவிடத்தும் திரிந்து சிறிது சிறிதாகக் காணப்படுமவற்றையே மேய்ந்து பசியோடு அலமரும் ஆடு போல, ஆசான் ஒருவன்பால் தான் கல்விச் செல்வம் நிறைதற்கேற்ற புலமை கண்டுவைத்தும் அவன் பாலேயே தங்கிக் கல்வியறிவு பெறாமல் புலமை குறைந்த ஆசார் பலர்பால் சென்று சிறிதே பயின்று முடிவிற் கல்வி யறிவு நிரம்பாதவன் மாணாக்கன் ஆகத்தகாதவன்.

நீரில் அன்றி நிலத்தில் ஓடாத தோணி போலத் தான் செல்லும் வழியிலேயே சென்று கல்விப்பயன் கொள்ளும் இயல்பினைத் தவிர, ஆசிரியன் செலுத்தும் நல்வழியிலெல் லாம் சென்று கல்விப்பயன் கொள்ளும் ஆற்றலில்லாதவனும் மாணாக்கன் ஆகத்தகாதவன். (இ. வி. பொதுப்பாயிரம்.)

குருளை -

{Entry: P16b__224}

மரபு பற்றி இளமையை உணர்த்தும் பெயர்களுள் ஒன்று.

நாய், பன்றி, புலி, முயல், நரி, அரவு, முசு என்பவற்றின் இளமைப் பெயராக இது நிகழ்கிறது. (தொ. பொ. 563, 564, பேரா.உரை)

குழவி -

{Entry: P16b__225}

இஃது மரபுவகையான் இளமையை யுணர்த்தும் பெயர்களுள் ஒன்று.

குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மனிதர், தாவரம் என்ற உயிர்களின் இளமைப்பெயராக வருகிறது.

குழவிவேனில், குழவித்திங்கள், குழவிஞாயிறு என்றாற் போலத் தொடக்க வேனில், உதயசந்திரன், உதயசூரியன் இவற்றைக் குறிக்கவும் இது பயன்படுகிறது. (தொ. பொ. 574-579 பேரா. உரை)

குறைபடக் கூறல் -

{Entry: P16b__226}

நூற்கு ஆகா என விலக்கப்பட்ட பத்துக் குற்றங்களுள் ஒன்று; அஃதாவது குன்றக் கூறல்; குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களிற் குறைவு படச்சொல்லுதல்.(மா. அ. 23)

இதனை நன்னூல் ‘குன்றக் கூறல்’ என்னும் (12). தொல் காப் பியமும் அவ்வாறே கூறும் (பொ. 663 பேரா.) இஃது அமைக் கப்படாக் குற்றங்களுள் ஒன்று. (தொ. பொ. 663 பேரா.)

குன்றக்கூறல் -

{Entry: P16b__227}

நூலிற்கு ஆகா என விலக்கப்பட்ட ஈரைங்குற்றங்களுள் ஒன்று; சொல்லப்புகுந்த பொருளினை ஆசறக் கூறாது ஒழியப் போதல். இஃது ஒரு பயன்படாக் குற்றம். (தொ. பொ. 663 பேரா. நன். 12)

கூறியது கூறல் -

{Entry: P16b__228}

நூற்கு விலக்கப்பட்ட ஈரைங் குற்றங்களுள் ஒன்று; முன்னொருகால் சொல்லிய பொருளைப் பின்னும் ஒருகால் கூறுதல். இது பயன்படும் குற்றம்.

தொல்காப்பியத்தில்

‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே

உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே’ (தொ. பொ. 56 நச்.)

என்று கூறி, மீண்டும்

படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி ....

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

வந்த ஈரேழ் வகையிற் றாகும்’ (தொ. பொ. 58 நச்.)

என்று கூறுதல் கூறியது கூறலாம்.

இவ்வாறு இருமுறை ‘ஈரேழ் துறைத்து’ என்று கூறி, அதனால் நிரை கொள்ளச் செல்லும் வெட்சியார்க்கும் நிரை மீட்கச் செல்லும் வெட்சியார்க்கும் தனித்தனி இப்பதி னான்கு துறைகளையும் கொள்ளவைப்பதனைப் பெறப்படச் செய்ததனான், இவ்விடத்தே இது, ‘கூறியது கூறல்’ என்னும் குற்றம், வேறொரு பொருள் பயந்து பயன்படுதல் பற்றிக் குற்றமன்றாய்த் தழுவிக் கொள்ளப்பட்டது. (தொ. பொ. 663 பேரா.)

‘தன்மை உவமை உருவகம் தீவகம்’ என்று ஒரு சூத்திரத்தில் அணிகளின் பெயர்களைத் தொகைபடக் கூறி நிறீஇ, மீண்டும் ஒரு முறை ‘தன்மை உவமை உருவகம் தீவகம்’ என்று எடுத்துக்கூறுதல் ‘கூறியது கூறல்’ என்னும் குற்றம் ஆம்; அமைத்துக் கொள்ளப்பட மாட்டாது. (663. பேரா.)

கூறிற்று என்றல் -

{Entry: P16b__229}

இது தொல்காப்பியர் கூறும் உத்தி வகைகளுள் ஒன்று. அஃதாவது முன் கூறப்பட்டதோர் இலக்கணத்தினை, பின் மற்றொரு பொருளுக்கும் விதிக்க வேண்டியநிலை ஏற்பட்ட விடத்தே, அதனையே மீண்டும் எடுத்துக்கூறாது முன்னரே கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிடுதல். (தொ. பொ. 665 பேரா.)

பலபொருளாய் அதிகரித்தவற்றுள் சில பொருளை மேற் சொல்லப்பட்டன என்றல். (656 இள.)

அகத்திணையியல் மெய்ப்பாட்டியல் இவற்றுள் கூறப்பட்ட செய்திகளைச் செய்யுளியலில் குறிப்பிடும் இன்றியமை யாமை ஏற்பட்டவிடத்தே, ‘கைக்கிளை முதலா எழு பெருந் திணையும். முற்கிளந்தனவே முறைநெறி வகையின்’ (497 பேரா) ‘எண்வகை இயல்நெறி பிழையா தாகி, முன்னுறக் கிளந்த முடிவின ததுவே’ (517 பேரா.) என்று (திணையையும் மெய்ப்பாட்டினையும் பற்றிக்)கூறுவது இவ்வுத்தி வகை.

செய்யுளியலில் செய்யுள் உறுப்புக்களாகிய மாத்திரை எழுத்தியல் இவற்றைக் குறிப்பிடும் இன்றியமையாமை ஏற்பட்டவிடத்தே ‘மாத்திரை அளவும் எழுத்தியல் வகையும், மேற்கிளந்தன்ன என்மனார் புலவர்’ (செய்.2 பேரா.) என முற்கூறிய மாத்திரையும் எழுத்தும் பிறவாற்றான் செய்யுட்குப் பயன்படும் வகையில் வேறுபட்டதல்லது அவை முற்கூறிய மாத்திரையும் எழுத்துமே என்று பெறப்பட வைத்தல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம்.

கேட்போர் என்ற பன்மைக்குக் காரணம் -

{Entry: P16b__230}

கேட்போர் (2) - நூல் அரங்கேறும் அவைக்கண் கேட்போர்.

ஒருவன் இருந்து கேட்பின் அவனும் ஊழ்வயத்தால் மயங்கி யாயினும் நட்பு முதலிய பிற காரணத்தானாயினும் குற்றத்தை நன்று எனக் கூறினும் கூறுமாகலின், அறிவுடையோர் பலர் இருந்து கேட்பின் ஊழ்முதலாய காரணத்தால் சிலர் மயங்கினும் ஏனையோர் மயங்காமையின் பலர் கேட்டல் வேண்டும் என்றற்குக் ‘கேட்போர்’ என்று பன்மை கூறினார். (பா. வி. பக். 190)

கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாதல் -

{Entry: P16b__231}

செவிக்கு இன்னா ஓசையுடையதாகச் சூத்திரம் அமைத்தல். இது பயன்படாக் குற்றங்களுள் ஒன்று. மொழிக்கு முதலாம் எழுத்துக் கூறுமிடத்தே,

‘கதந பமவெனும் ஆவைந் தெழுத்தும்’ (எழுத். 61. நச்.)

என இன்னா ஓசைத்தாக நூற்பா யாத்தல். (தொ. பொ. 663. பேரா.)

கேட்போர் பாயிரம் கூறாமைக்குக் காரணம் -

{Entry: P16b__232}

கேட்போர் பாயிரம் கூறின், அப்பாயிரத்தை ஆராய்தற்கு அக்கேட்போரது அறிவு பிரமாணம் ஆகாமையின், அப் பாயிரத்தைக் கேட்டற்குப் பிறர் வேண்டும்; ஆதலின் கேட்போர் பாயிரம் கூறார் என்பது. (பா. வி. பக். 244)

கொழு -

{Entry: P16b__233}

கொழு என்பது ஊசித்தொளையின்மேலுள்ள கோலினை. நூல் கோத்த தொளையையுடைய ஊசியின் காதாகிய ‘துன்னூசி’ நுழைதற்குக் கொழு வழியாக்குவது. கொழுவுத லால் கோல் ‘கொழு’ எனப்பட்டது. (பா. வி. பக். 3)

கொள்வோர்க் குறித்துக் கொள்ளும் இடம் -

{Entry: P16b__234}

கொள்வோராகிய மாணாக்கரைப் பற்றிக் கொள்ளும் நிலம் நான்கு இயல்களையுடையது. கொள்வோரை வரையாமை (- நீக்காமை), அல்லாதாரை வரைதல், கொள்வோரது உடன்பாடு பெறினும் அல்லாரை வரைதல், கொள்வோரது உடன்பாடு பெறாவிடத்தும் அவருள் யாவரையும் வரை யாமை என்பன அவ்வியல்புகள். (பா. வி. பக். 119,120)

கொள்வோர்ப் பற்றிக் குறிக்கும் புறத்தொழில் -

{Entry: P16b__235}

ஆசிரியன் மாணாக்கனிடத்துத் தான் சென்று கற்பித்தால் அவன் விருப்பத்தளவு காண்டல் அரிது ஆகலின் அவனைத் தன்னிடத்து வருவித்தல், அவனை மயங்கச் செய்யாமல் கற்பித்தல், அவன் அக்கற்பித்த பொருளைத் தன் பக்கத்தே யிருந்து சிந்திக்கச் செய்தல், அவனோடு அவ்வினையாளராம் பிறமாணாக்கரும் உடனிருந்து பயிலச்செய்தல் என அப்புறத் தொழில் நான்காம். (பா. வி. பக். 91)

கொள்வோர் வரைவு நான்கு -

{Entry: P16b__236}

முயற்சியின்மையான் வரைதல் (-நீக்குதல்), காலம் அன்மை யான் வரைதல், தீவினையுடைமையான் வரைதல், அறிவின் மையான் வரைதல் என ஆசிரியன் மாணாக்கரை வரைவு நான்காம். (வரைவு - நீக்குதல்) (பா. வி. பக். 126)

கொள்வோன் -

{Entry: P16b__237}

கற்போன் ‘கொள்வோன் கொள்வகை யறிந்து’ (நன். 36) (L)

கோடல் பற்றிக் குறிக்கும் புறத்தொழில் -

{Entry: P16b__238}

பகைவராக இருப்பினும் பருவமுடையராய்க் கற்பதில் விருப்ப முடையராயிருப்பின் அவர்க்கு அளித்தலும்; நட்பினராயினும் கற்றற்குரிய பருவம் எய்தும் அளவும் தாழ்த்தலும்; பருவமுடையார் விரும்பினராயினும், நெடுநீர் மறவி மடி துயில் இவற்றை யுடையராய்க் கல்வியைப் போற்றா ராயின் அக்கல்வி பயன் படாமையின், பலநாள் பழகினும் அவர்க்கு ஒன்றும் பயிற்றாமல், பருவமுடையராய் அறி வறிந்து ஆள்வினையுடையவர்க்கே அவர் பன்னாட் பழக்க மிலராயினும் எல்லாம் அளித்தலும்; ‘ஒண்மையுடையேம்’ என்னும் செருக்குளதேல் பயன் எய்தாமையின், அச் செருக்கால் பணியாதவர் அண்மையில் இருப்பினும் அவர்க்கு அளியா மல், செருக்கும் பொய்யாகிய மானமும் இன்றி ஏக்கற்றும் கற்கும் பணிவுடையார் சேய்மையில் இருப்பினும் அவர்க்கு அளித்தலும்; எனக் கோடல் பற்றிய புறத்தொழில் ஆசிரிய னுக்கு நான்காம். (பா. வி. பக். 89)

கோடல் மரபு -

{Entry: P16b__239}

மாணாக்கன் ஆசிரியன்பால் நூற்பொருள் கேட்டல் மரபு.

கடையாமத்தில் துயிலுணர்ந்து, வைகறைக் கடன்களைக் கழித்து, ஆசிரியனது இல்லத்தின் வாயில் சென்றெய்தி, பயிலும் காலத்தையும் இடத்தையும் கருதிநின்று, ஆசான் நோக்கிய இடத்தை விரைவில் கண்ணுற்று வணக்கஒடுக்கங் ளோடே அயலில் நிற்பவே, அவன் “வருக!” என்று அழைப்ப அருகே சென்று வணங்குதலும், “இருக்க!” என்று சொன்ன பிறகே இருத்தலும் செய்து, ‘உரை’ என்று உரைத்த பிறகே இடையறாது பயின்ற நூற்பொருளை உரைத்து, அறிவு நன்கு புலனாம்படி பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் எனப் பழிப்பின்றாக அவன் நூற்பொருள் உரைப்பவே அவற்றைத் தெளிவுற உணர்ந்துகொண்டு, “இனிப்போக!” என்று. அவன் சொல்லவே எழுந்து, ஆசான் திறத்து ஒல்லும் வகையான் உதவி, அவன் தன்னை ஏவாமலேயே முற்படச் செய்த இன்பம் எய்தி, ஆசான் நடக்குமிடத்தே பகலின் பின்னரும் இரவில் முன்னருமாக அவனை அகலாது உடன்தொடர்ந்து, தன் னுள்ளத்துக் கொண்டு ஆசான் பாதமலர்களை இடைய றாது வழிபட்டு, ஆசான் உவக்கும் திறத்தால் அறத்தொடு மாறுபடாதபடர்ச்சி யுடையனாய், அளவாகத் துயின்று விரைவில் கண்விழிக்கும் கடமையுடையான் மாணாக்கன். (மா. அ. 54)

உரிய காலத்தே போய், ஆசானுக்கு வழிபாடு செய்தலில் விருப்பமுடையவனாய், அவனது குணத்துக் கேற்பப் பழகி, அவன் குறிப்பின்வழியிற் சேர்ந்து, “இரு!” என்று அவன் சொன்ன பின்னரே இருந்து, “வாசி!” என்று சொன்ன பின்னரே வாசித்து, நீர்வேட்கையுடையான் நீரினிடத்துக் கொள்ளும் விருப்பம் போலத் தான் பாடம் கேட்டலில் மிக்க விருப்ப முடையனாய், சித்திரப்பாவைபோல மனமொழி மெய்கள் அடங்கி, செவியே நூற்பொருளைப் பருகும் வாயாகவும் நெஞ்சே அப்பொருள் கொள்ளுமிடமாகிய வயிறாகவும் ஆசான்பால் கேட்ட நூற் பொருளை மறந்து விடாமல் தன் மனத்தே நிரம்ப நிலை பெறுத்திக் கொண்டு, ஆசிரியன் “போ!” என்று பணித்த பின்னரே போகுதல், மாணாக்கன் ஆசான்பால் பாடம் கேட்கும் மரபு. (நன். 40)

கோடலின் முதற்காரண வகை -

{Entry: P16b__240}

விளையாட்டிற் காலம் கழிக்காமல், பசித்தார் உணவை வேட்டவாறு போலக் கல்வியை வேட்டலும், அக்கல்வி வேட்கையொடு கற்றாரைச் சார்ந்து அகலாமையும், ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியா’ மையும், கற்றார்மாட்டும் குற்றம் சில காணப்படுமாயின் அவற்றை நீக்கிக் குணத்தையே மனம் கோடலும், அவர்பால் கேட்டவற்றுள் ஒன்றும் மறவாத இயல்புடையனாதலும், பிறர்க்குத் தான் அறிந்தவற்றை உரைத்தலும் எனக்கோடலது முதற்காரணம் ஆறுவகைப்படும். (பா. வி. பக். 147, 148)

ச section: 39 entries

சந்த இன்பம் தழுவுதல் இன்மை -

{Entry: P16b__241}

மாறனலங்காரம் கூறிய நூற்குற்றம் பத்தனுள் ஒன்று. எடுத்த யாப்பிற்கு இணங்கும் ஓசையின்றிக் கூறுதல் - இதனைக் ‘கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்’ என்ற சிதைவி-னுள் தொல்காப்பியம் அடக்கும். (தொ. பொ. 663. பேரா. 1, மா. அ. 23)

சார்பு நூல் -

{Entry: P16b__242}

முதல்நூல் வழிநூல் ஆகிய இரண்டன்கண்ணும் ஒருவழி முடிந்த பொருளை ஆசிரியன் ஒருவன் யாதானும் ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்பட வைப்பது. (யா. வி. பாயிர உரை)

சார்பு நூலாவது, செய்யுளிலக்கணம் அகத்தியத்துள் மிகவும் பரந்து கிடத்தலானும் தொல்காப்பியத்துள் மிகவும் சுருங்கி இருத்தலானும் அவ்விருவர் நூலுள்ளும் ஒருவழி முடிந்த அதனை ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்படப் பல்காப் பியனார், பல்காயனார் சிறுகாக்கைபாடினியார் முதலியோர் செய்த நூல் முதலியன போல்வது. (பா. வி. பக். 102)

தொல்காப்பியம் யாப்பினை விரித்துரைக்கிறது என்ற கருத்தும் உண்டு. (வீ. சோ. 152 உரை)

முதல்நூல் வழிநூல் என்னும் இருவகை நூல்கட்கும் பொருள் முடிவு சிறுபான்மை ஒத்து, பிற எல்லாம் ஒவ்வாமை யுடையது சார்பு நூல். (நன். 8)

முதல் நூல் வழிநூல் ஆகிய இரண்டிலிருந்தும் வேறுபட்டுக் காலத்துக்கு ஏற்ற கருத்துக்களையும் தழுவிச் செல்வது சார்பு நூல். (சாமி. 3)

தொல்காப்பியனார் சார்புநூல் என ஒன்றைக் குறிப்பிட்டா ரல்லர் - அவருக்கு முதல்நூல் வழிநூல் என்ற நூற்பகுப்புக் களே உடன்பாடு. சார்புநூல் என்ற பகுப்பு உதவாது என்ப தனைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். (தொ.பொ.648பேரா.)

சார்பு நூலும் வழிநூல் ஆகும் -

{Entry: P16b__243}

“மரபுநிலை திரியா மாட்சிய வாகி

யுரைபடு நூல்தாம் இருவகை யியல

முதலும் வழியுமென நுதலிய நெறியின.”

என மரபியலகத்து நூலிரண்டென ஓதியிருப்பச் சார்பு நூலென் ஒன்று கூறியது என்னையெனின்;- ஒன்றன் வழி யாகச் செய்வனவெல்லாம் வழியேயாயினும் அவை முன்னோர் நூலின் முடிபொருங்கொத்தலுந் திரிபுவேறுடைத் தாதலுமென இருவேறுவகைப்பட நிகழ்கின்றமையின், அதுபற்றிச் சார்பு நூலென வேறு கோடலுமமையுமென விடுக்க. அங்ஙனம் திரிபு வேறுடையதூஉம் பொருளான் ஒருங்கொத்தலின், மரபுநிலை திரியாமையின், வழிநூலென்றற்கு ஏற்புடைத்தாதலும் அறிக. (சூ.வி. ப. 7)

சிங்க நோக்கு -

{Entry: P16b__244}

நால்வகைச் சூத்திர நிலையுள் ஒன்று. ‘அரிமா நோக்கு’ எனவும் படும் (நன். 19). இளம்பூரணர் தொல்காப்பியம் மரபியல் இறுதி நூற்பாவுள் (656 இள.) ‘சூத்திரக் கிடக்கை’ என இதனையும் உத்திவகைகளொடு தழுவியுரைப்பர். சூத்திரநிலை என்றே நன்னூலார் குறிப்பர். (19)

சிங்கம் முன்னுள்ள பொருள்களையும் பின்னுள்ள பொருள் களையும் நோக்கி நடக்குமாறு போல. ஒரு நூற்பா தன் முன்னுள்ள நூற்பாக்களொடும் பின்னுள்ள நூற்பாக்க ளொடும் தொடர்புடையதாகி வருதல்.

‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ (நன். 109)

உயிர்மெய்யெழுத்தில் மெய்முதல் உயிர்ஈறாகச் கோடல் வேண்டும் என்ற செய்தி, அந்நூற்பாவின் முன்னர்க் கூறப் பட்ட முதல்நிலை இறுதிநிலைகளுக்கும், பின்னர்க் கூறப் படும் இடை நிலை மெய்மயக்கத்திற்கும் பொருந்துமாறு இருதிறத்தையும் நோக்கி வருதலின் இச்சூத்திரம் சிங்கநோக்கு ஆயிற்று.

நன்னூலுள் பொதுவியல் அமைப்பும் சிங்கநோக்குடையது. அவ்வியலுள் கூறப்படும் செய்திகள் முன்னர் வந்த பெயரியல் வினையியல் என்னும் இயல்கட்கும், பின்னர் வரும் இடை யியல் உரியியல் என்னும் இயல்கட்கும் உரியவாகி முன்னியல் களையும் பின்னியல்களையும் நோக்கி வந்தவாறு. (நன். 19)

சிதைவு எனப்படுபவை -

{Entry: P16b__245}

இலக்கண நூலுள் வரப்பெறாக் குற்றங்கள். கூறியது கூறல், மாறு கொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல், என்ன வகையினும் மனங் கோளின்மை; வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயனின்மை, முதல் நூலொடு மாறுகோடல், யாப்பினுட் சிதைதல் போல்வன. (இவற்றுள் முதலன பத்தும் தொல்காப்பியம் கூறுவன; அடுத்த நான்கும் நன்னூல் கூறுவன)

இவற்றுள் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல் என்ற ஐந்தும் பயன்படும் குற்றங்களாகி நூற்பாக்களில் அருகிக் காணப் படும். (தொ. பொ. 663. பேரா; நன். 12)

சிதைவு பத்து -

{Entry: P16b__246}

‘சிதைவு எனப்படுபவை’ காண்க. கூறியது கூறல் முதலாக என்ன வகையினும் மனம் கோளின்மை’ ஈறாய பத்தாம்.

(தொ. பொ. 663 பேரா.)

சிறப்புப் பாயிர இலக்கணம் -

{Entry: P16b__247}

நூலைச் செய்தவனது பெயர், நூல் வந்த வழி (முதல் நூல்), நூல் வழங்கும் நிலத்தின் எல்லை அல்லது நூல் அமைப் பளவு, நூலினது பெயர், தொகுத்தல் முதலிய நூல் யாப்பு, நூலிற் சொல்லப்பட்ட பொருள், நூல் கேட்டற்குரிய அதிகாரிகள் ஆவார், நூல் கற்றதனால் விளையும் பயன் என்னும் இவ்வெட்டனையும் விளங்க உணர்த்துதல். சிறப்புப் பாயிர இலக்கணம். நூல் செய்த காலம், நூல் அரங்கேறிய அவை, நூல் செய்தற்காம் காரணம் என்ற மூன்றனையும் மேற்கூறிய எட்டனொடு கூட்டிச் சிறப்புப் பாயிரம் இப்பதினொன்றனையும் புலப்படுத்துவது என்பாருமுளர். (நன். 47, 48)

சிறப்புப்பாயிரச் செய்தி முறைவைப்பு -

{Entry: P16b__248}

ஆக்கியோனும் முதல்நூலும் அது வழங்கும் எல்லையும் அல்லது அதன் பாடல் அளவும் நூல் செய்யும் முன்னரே, அந்நூலுக்குக் காரணமாக நிற்றலின் இறந்த காலத்தன ஆகிய இம்மூன்றும் முன்வைக்கப்பட்டன. வழிநூலாகிய காரியத் திற்கு இவை மூன்றும் இன்றியமையாத காரணமே ஆயினும், ஆக்கியோன் அக்காரணங்களுள் சிறந்த நிமித்த காரணன் ஆதலின் அவன் பெயர் முன்வைக்கப்பட்டது. முதல்நூல் முதற் காரணம் ஆதலின் ‘வழி’ அதனை அடுத்துப் பின் வைக் கப்பட்டது. அம் முதல்நூற்பொருளினது வழக்குப்பயிற்சியை உணர்த்தலின் ‘எல்லை’ அதன்பின் வைக்கப்பட்டது; அல்லது நூலமைப்பின் அளவு பின்னர் வைக்கப்பட்டது.

நூற்பெயரும் யாப்பும் நுதலிய பொருளும் நூலுடன் ஒற்றுமைப்பட உடன் தோன்றலின், நிகழ் காலத்தனவாகிய இம்மூன்றும் அம்மூன்றனையும் அடுத்து வைக்கப்பட்டன. யாப்பும் நுதலிய பொருளும் அறிதற்கு நூலே இடமாகலின் ‘நூற்பெயர்’ முன்னர் வைக்கப்பட்டது. நூலது வகையே யாப்பு ஆதலின், அஃது அதன்பின் வைக்கப்பட்டது; அவ் யாப்பாற் சொல்லப்பட்ட நூலிடமாக நுதலிய பொருள் அறியப்படுதலின் அஃது அதன்பின் வைக்கப்பட்டது.

கேட்போரும் பயனும் நூல் செய்யப்பட்ட பின்னரே பெறப்படுவன ஆதலின் எதிர்காலத்தன ஆகிய இவ்விரண்டும் மேல் அவற்றுக்குப் பின் அடுத்து வைக்கப்பட்டன. கேட்டற் குரியார் கேட்டு நன்று எனக்கொள்ளின்அன்றி அந்நூலை உலகம் கொள்ளாமையின், நூற் பயனை உலகம் எய்துதற்குக் கேட்போரே காரணமாதலின் ‘கேட்போர்’ முன்னும் ‘பயன்’ பின்னுமாகச் சுட்டப்படலாயின.

இனி, காலம் முதலிய மூன்றனுள், நூல் செய்த காலத்தின் பின்னரே களன் புலப்படுவது; களத்துள் நூல் அரங்கேறிய பின்னரே காரணம் புலப்படுவது ஆகலின் அம்முறையே இவை வைக்கப்பட்டன. (பா. வி. பக். 192, 193)

இனி, ‘சிவஞான முனிவரது பாயிரவிருத்தி கூறுமாறு :-

இவ்வெட்டனுள்ளும் ஆக்கியோன் பெயர் முதலிய நான்கும் ஐயம் நீக்குதற் பொருட்டாகவே வேண்டப்படுவன; ஒருதலை யாக வேண்டப்படுவன அல்ல. முதல்நூலாயின் அதன்கண் ஐயமறுத்தல் இல்லையாதலின், ஐயம் நீக்குதல் என்பது வழிநூலுக்கே வேண்டுவது. வழி என்பது முதல்நூற்கு இல்லை. ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பாயிரத் தின்கண் அன்றி, நூலின் முதல் இடைகடைகளில் எழுதப் படும்; தமது தோற்றத்தாலும் அவை உலகில் அறியப்படும். இனி, நாட்டெல்லையே நூற்கும் எல்லையாதலிற் எல்லை உணரப்படும். யாப்பு முதலியன போல இந் நான்கும் அத்துணை இன்றியமையாத சிறப்புடையன அல்ல. ஆதலின் இந்நான்கனையும் முன்னர் வைத்தார்; இன்றியமையாச் சிறப்பினவாகிய யாப்பு முதலிய நான்கனையும் இறுதிக்கண் வைத்துச் சூத்திரம் செய்தார். இக்கருத்தேபற்றி வடநூலாரும் யாப்பு முதலிய நான்கும் உணர்த்துவதே பாயிரம் என்று கொள்வர். இவற்றுள்ளும் பயன் இன்றியமையாது சிறந்தமை யின் இறுதிக்கண் வைக்கப்பட்டது. (சூ. வி. பக். 13, 14)

சிறப்புப் பாயிரத்தில் யாப்பு, கேட்போர் - விளக்கம் -

{Entry: P16b__249}

யாப்பாவது, நூல் யாப்பு; நூல் யாக்கப்படுமிடத்துத் தொகுத்தும் விரித்தும் தொகைவிரி செய்தும் மொழி பெயர்த்தும் யாக்கப்படும். கேட்போர் ஆவார் நூலைக் கேட்டு அதன்கண் குற்றம் இன்மை ஆராய்வோர். (பா. வி. பக். 6, 7)

“யாப்பாவது இன்ன நூல் கேட்டபின் இது கேட்டற்பாற்று என்னும் இயைபு; கேட்போர் நூல் கேட்டற்குரிய அதிகாரி களாகிய மாணக்கர்” என்பார் சிவஞான முனிவர்.

(சூ. வி. பக். 13, 14)

சிறப்புப் பாயிரத்துக்கு உவமை -

{Entry: P16b__250}

கரு அமைந்த மாநகர்க்கு உரு அமைந்த வாயில் மாடம், தகை மாண்ட நெடுஞ்சுவர்க்கு வகை மாண்ட பாவை, அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும், நாண் துறவாக் குலமகட்கு மாண்துறவா அணியும் ஆடையும், தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள் என்பன நூலுக்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய பாயிரத்துக்கு உவமைகளாம்.

சிறப்புப் பாயிரத்துக்கு ஞாயிறும் ஆடையும் கற்புடையாளும் உவமைகளாம். ஞாயிறு எஞ்ஞான்றும் ஒருபடித்தாக ஆகாயத்தை விளக்குமாறுபோல, சிறப்புப் பாயிரம் பெயர் மாத்திரமே உணர்த்தலின் வளர்தலும் தேய்தலுமின்றி எஞ்ஞான்றும் ஒருபடித்தாக நூலினை விளக்கும். ஆடை குலமகட்கு அணியினும் இன்றியமையாதவாறு போல, சிறப்புப்பாயிரம் தான் பிரியாது நூலொடு கூடிநிற்கும். கற்புடையாள் கணவன் கற்பித்தவழி நிற்குமாறு போல, சிறப்புப் பாயிரம், அந்நூலினது குறிப்பின் வண்ணம் தான் ஒழுகும். (பா. வி. பக். 2, 4)

சிறப்புப் பாயிரம் கூறலின் இலக்கணம் -

{Entry: P16b__251}

நூல் சொல்லிய பொருளைத் தன்னகத்தே கொண்டு, ஆசிரியப்பா வெண்பா என்னும் இவற்றால் சிறப்புப் பாயிரம் கூறப்படும். நூலாசிரியனுடைய ஆசிரியன் அவனோடு ஒருங்கு பாடம் கேட்டோன். அவனுடைய மாணாக்கன் என்னும் இம்மூவகையாருள் ஒருவனால் அது கூறப்படும். (நன்னூல் ஆசிரியர் தகும் உரைகாரனையும் கூட்டிச் சொல்லுவர்). தோன்றமாட்டாத நுட்பங்களையெல்லாம் புலப்படுத்திப் பலதுறைப்பட நூலை இயற்றினும் நூலாசிரி யன் தன்னைத்தானே புகழ்ந்து கோடல் தக்கது அன்மையின், சிறப்புப்பாயிரம் இம்மூவருள் ஒருவனாற் கூறப்பட வேண்டும் என்பது. (பா. வி. பக். 158)

சிறப்புப் பாயிரம் செய்தற்குரியார் -

{Entry: P16b__252}

நூலாசிரியனாகிய தன்னுடைய ஆசிரியன், தன்னோடு ஒரு சாலை மாணாக்கனாய்ப் பாடம் கேட்டோன், தன்னுடைய மாணாக்கன் தான் செய்த நூற்குத் தக்க உரை செய்தோன் என்ற இவர்கள். (நன். 51)

சிறப்புப் பாயிரம் மூவரேயன்றிப் பிறர் செய்யாமைக்குக் காரணம் -

{Entry: P16b__253}

தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன் தன் மாணாக்கன் என் னும் இம்மூவரேயன்றிப் பிறர் சிறப்புப் பாயிரம் கூறற் குரியர்அல்லர். அதன் காரணங்கள் வருமாறு :

1. சிறப்புப் பாயிரம் என்பது ஒரு நூலது பெருமையே கூற வந்ததாம். ஆதலின், அந்நூலது பெருமை விளங்குமாறு, அதனை ஆக்கியோன் பெருமையும், அதனைக் கேட்போர் பெருமையும் அவர்கள் காலத்தே உடனிருந்து பழகினார்க் கல்லது ஏனையோர்க்கு உள்ளவாறு அறிதல் அரிது.

2. தந்தை முதலாயினார் அவ்வாறு அறியினும் சிறப்புப் பாயிரம் செய்தற்குரிய புலமையுடையோராயிருத்தல் என்பது ஒரு தலையன்று.

3. உள்ளவாறு அறிந்துரைக்கும் இயல்பு அம் மூவர்க்கும் ஒருதலையாக உண்டு.

4. தகும் உரைகாரன் நூல் செய்தோன் காலத்தானன்றிப் பிற்காலத்தவன் ஆயின் அவற்றை முற்றும் உணர்ந்து உள்ள வாறு உரைக்கும் ஆற்றல் பெறாமையின் சிறப்புப்பாயிரம் செய்யும் உரிமை அவனுக்குச் சிறவாது. (பா. வி. பக். 158, 159)

சிறுநூல் -

{Entry: P16b__254}

சூத்திரத்தான் இயன்றது, ஓத்தினான் இயன்றது, படலத்தான் இயன்றது, பிண்டத்தான் இயன்றது என நூலினை நான்கு வகைத்தாகக் கூறுவர் அரசஞ் சண்முகனார்; இசைநுணுக்கம் போல்வதும், களவியல் போல்வதும், பன்னிரு படலம் போல்வதும், தொல்காப்பியம் போல்வதும் முறையே அவற் றுக்கு எடுத்துக்காட்டாம் என்றும் உரைப்பார். இவ்வாறு நூலினை நால்வகைத்து ஆக்காது சிறுநூல் பெருநூல் இடைநூல் என மூவகைத்தாக்கியுரைத்தல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு மாறாகும் என்பர். சூத்திரம், ஓத்து. படலம் பிண்டம் என இவற்றின் இலக்கணத்தை முறையே ஓதிய ஆசிரியர்க்கு இவ்வாறு நால்வகைத்தாகக் கூறுதலே உடன்பாடாம் என்பது. (பா. வி. பக். 111)

சுருங்கச் சொல்லல் -

{Entry: P16b__255}

சொற் சுருக்கத்தொடு பொருட்செறிவு உடையதாகக் கூறும் நூலழகு; நன்னூலார் சுட்டும் பத்து அழகுகளில் ஒன்று. (13)

எ-டு : உயிரொடு மொழிக்கு முதலில் வரும் மெய்கள் கசதநபமவயஞங என்பன பத்தும். யரழ என்றும் ஈற்று நிலைமொழிகளின் முன் வருமொழி முதலில் அப்பத்து மெய்களும் உயிரொடு கூடி மெய்ம்மயக் கத்தின்கண் வரும் என்ற கருத்தை.

‘யரழ முன்னர் மொழிமுதல் மெய் வரும்’ (நன். 116) என்று குறிப்பிட்டார். யகரத்துடன் யகரம் மயங்குதல் உடனிலை மெய்ம்மயக்கம் ஆதலின், வேற்றுநிலை மெய்மயக்கம் பற்றிய அதிகாரத்தில் யகரத்தையும் அகப்பட ‘மொழிமுதல் மெய்’ என்று சூத்திரித்தமை ‘சுருங்கச் சொல்லுதல்’ என்னும் அழகு; ‘ஏற்புழிக் கோடல்’ என்னும் உத்தியால் யகரத்தின் முன்னர் வேற்றுநிலை மெய்மயக்கத்துள் யகரம் வருதல் நீக்கிக் கொள்ளப்படும்.

சூத்திர இயல் -

{Entry: P16b__256}

சூத்திரத்தினது இயல்பு. சூத்திரமாவது, கண்ணாடியின் நிழல் போல, படித்த அளவிலே அதனாற் சொல்லப்படுகின்ற பொருள் (சொற்குப் பொருள் இதுவென) ஆராய வேண்டாமல் ஒருங்கு தோன்றுமாறு யாப்பின்கண்ணே தோன்ற யாக்கப்படுவது.

எ-டு :

‘வேற்றுமை தாமே ஏழென மொழிப

விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே’ (தொ. வேற்றுமை. 1)

தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப் படயாத்தல் என நால்வகையினும் சொல்லப்பட்ட பொருளொடு, சில எழுத்தினான் இயன்ற செய்கைத்தாய், உரைக்குங் காலத்து அவ்வுரையிற் பொருளெல்லாம் தன்ன கத்து அடக்கி, நுண்ணிய பொருண்மையொடு பொருந்திய விளக்க முடைத்தாகி, கெடுக்கலாகாத துணைச்சூத்திரங் களையுடைத்தாகி, வரையறுக்கப்படாத அரிய பொருளை யுடைத்தாகிப் பலவாற்றானும் பயனை ஆராய்தல் உடையது சூத்திரம். (தொ. பொ. 471, 646. இள.)

சூத்திரங்களின் கிடக்கை முறை -

{Entry: P16b__257}

யாற்றொழுக்கு, தேரைப்பாய்வு, சீயநோக்கு, பருந்தின் வீழ்வு என்பன. (தொ. பாயிரம் இள. மேற்.)

யாறு இடையறாது ஒழுகுமாறு போலச் சூத்திரங்கள் முன் பின்னாக அன்றித் தொடர்ந்து பொருள் கொள்ள நடப்பது யாற்றொழுக்காம்.

இடையே சிறிது இடம்விட்டுக் குதிக்கும் தேரையைப் போல, சூத்திரம் இடையிட்டுப்போய்ப் பொருள் கொள்ள நடப்பது தேரைப்பாய்வாம்.

சிங்கம் நோக்கும்போது முன்னுள்ள பொருள்களையும் பின்னுள்ள பொருள்களையும் நோக்கி நடக்குமாறு போல, ஒரு சூத்திரம் தனக்கு முன்னும் பின்னுமுள்ள சூத்திரங்க ளொடு தொடர்புடையதாய் நடப்பது சீய நோக்காம்.

பருந்து நடுவே விழுந்து தான் விரும்பிய பொருளை எடுத்துக் கொண்டு போமாறு போல, ஒரு சூத்திரப்பொருள் பல சூத்திரங்களைக் கடந்துவரும் மற்றொரு சூத்திரப் பொருளை முடித்துப் போம் இயல்பு பருந்தின் வீழ்வாம்.

அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க.

சூத்திரத்தான் இயன்ற நூல் -

{Entry: P16b__258}

ஆரியத்துள் மாகேச்சுர சூத்திரமும், தமிழின்கண் ஆதியில் அகத்தியற்கு மகேச்சுரன் உரைத்த இசைநுணுக்கமும் ஆகியன. (பா. வி. பக். 111)

சூத்திரத் தியல்பு -

{Entry: P16b__259}

1. சிறிய கண்ணாடியில் பெரிய பொருளின் நிழல் திரிபின்றிக் காணப்படுதல் போலச் சில சொற்களாலாகிய நூற்பாவில் பரந்த செய்திகள் உள்ளடக்கப்படல் வேண்டும்.

2. கண்ணாடியில் காணப்படும் பொய்த் தோற்றமாகிய பிம்பம் பொருளை நேரிற் கண்டாற் போன்ற உணர்ச்சி தருவது போலச் சூத்திரத் தொடரும் எடுத்துக்காட்டு இல்லையாயினும் எடுத்துக் காட்டுத் தந்து விளக்கினாற் போன்ற விளக்கத்தை அச்சூத்திரம் தருதல் வேண்டும்.

3. பாயிரத்துக் கூறப்பட்ட இலக்கணத்தொடு பொருந்தி யிருத்தல் வேண்டும்.

4. சில சொற்களைக் கொண்ட செய்யுளாக இருத்தல் வேண்டும்.

5. பலவகையாகப் பரந்துபட்ட செய்திகளையும் உள்ளடக்கி அமைதல் வேண்டும்.

6. பருப்பொருட்டாகிய பாயிரம் போலாது நுண்ணிய கருத்துக்களை வெளிப்படையாகக் கூறாமல் உள்ளடக்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.

7. முன்னும் பின்னும் கிடந்த நூற்பாக்களொடு பொருளான் இயைந்து அசைக்கமுடியாத இன்றியமையாமை யுடைத் தாதல் வேண்டும்.

8. அளத்தற்கு அரிய பெரும்பொருளை உடையதாதல் வேண்டும்.

9. பலவாற்றானும் பொருள் விளங்க வருவதாதல் வேண்டும். இவ்வியல்புக்கு மாறுபட வருவன சிறந்த நூற்பாக்கள் ஆகா. (தொ. பொ. 481, 655 பேரா.)

‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி

யகரமும் உயிரும் வருவழி இயற்கை’ (தொ. எழுத். 163 நச்.)

1. யகரமும் உயிரும் வருவழி எனவே, உகரமொடு புணரும் புள்ளியிறுதியாகிய நிலைமொழித் தொழில் கூறப்படு கின்றது என்பது கண்ணாடியில் காணும் நிழல்போலத் தெளிவுறக் கூறப்பட்டது.

2. நிலைமொழி வருமொழிகளைப் பகுத்துக் கூறினமையின் ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என்ற பாயிர இலக்கணத்தொடும் பொருந்திற்று.

3. ஞணநமலவளன என்ற எட்டு மெய்களையும் ‘உகரமொடு புணரும் புள்ளியிறுதி’ எனவும், வருமொழிப் பரப்பை யெல்லாம் ‘யகரமும் உயிரும்’ எனவும் கூறலின், இது ‘சில்வகை எழுத்தின் செய்யுளாயிற்று.

4. இவ்வீற்று இம்முதல் பற்றிய சொற்கள் பலவாதலின், ‘சொல்லுங்காலை உரையகத் தடக்கிற்று.

5. இச்சூத்திரப் பொருள் தொகைமரபு, உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்ற இயல்களின் கருத்தை உள்ளடக்கிக் கொண்டமையானும், பொருள் நுட்பமாக இருத்தலானும் ‘நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்’தாயிற்று.

6. ‘ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர்’ (எழுத். 296) முதலிய நூற்பாக்களுக்கு இந்நூற்பா இன்றியமையாதது; அவை யும் இதற்கு இன்றியமையாதன ஆதலின் ‘துளக்கலாகாத் துணைமை எய்தி’ற்று. உயிர் 12, ஞணநமன யரலவழள என்னும் மெய் 11, குற்றியலுகரம் ஆகிய 24 ஈறுகளும் - உயிர் 12, கசதநபமயவஞ என்னும் மெய். 9, குற்றியலுகரம் ஆகிய 22 முதலும் - பற்றி எழுந்த மொழிகளெல்லாம் வேற்று மைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் பெறும் பொருளைத் தொகுத்துக் கூறுதலின் ‘அளக்கலாகா அரும்பொருட்டு ஆகி’ற்று. (தொ. மர. 100 பேரா.)

சூத்திரம் ஆசிரியத்தானும் வெண்பாவானும் வரலாம்; பிற்காலத்தே கட்டளைக்கலித்துறையானும் வருகிறது. நூற் பாவினை ஆசிரியத்துள் அடக்குவாரும் உளர். ஓரடியிலும் நூற்பா வருதலின் நூற்பாவினைத் தனிச்செய்யுளாகக் கூறுவாரும் உளர்.

நூற்பாவில் ஐந்தசைச்சீர் வரலாம்; உதாரண வாய்பாடு ஆகிய ‘தேமாந்தண்பூநலம்’, ‘தேமாந்தண்பூஞ்சீர்’ முதலியன காண்க. (ஏழாம் இலக்கணம் யாப்பு. 3)

சூத்திரத்திலக்கணம் -

{Entry: P16b__260}

கண்ணாடி சிறிதாயினும் அகன்றுபட்ட பொருளைத் தன்னுள் பிம்பமாகக் கொண்டு காட்டினாற்போல, ஒரு பொருளை நுதலி வரும் சூத்திரமும், அப்பொருளை நுதலுங்கால் அறியத் தோன்றி ஆராய்தல் வேண்டாதபடி அவ்வகன்ற பொருளை மிகவும் விளக்குமாற்றால் செய்யுளுள் தோன்றச் செய்து முடிக்கப்படுவது. (தொ. செய். 169 நச்.)

சூத்திரம் மேற்கூறிய இலக்கணம் உடைத்தாய், பொருட்கு வேண்டும் சில சொல்லான் செய்யும் செய்கையுடைத்தாய், பொருளானும் போலியானும் உரைசொல்லுவார் சொல் லுங்கால் அவ்வுரையெல்லாம் தன்னகத்தே அடக்கி, நுண் பொருட்டாகிய நூற்பொருள் கேட்டார்க்கு வெள்ளிதன்றி உட்பொருளுடையதாய், முன்னும் பின்னும் கிடந்த சூத்திரங் களானே தன்னுட் பொருள் இன்றியமையாதது ஆதல் உடைத்தாய், அளத்தற்கு அரிய பெரும்பொருளுடைத்தாய், பலவகையானும் பொருள் விளங்க வருவது. (தொ. பொ. 655 பேரா., மர. 100 பேரா)

சூத்திரத்தின் வகை -

{Entry: P16b__261}

பெயர்ச் சூத்திரம், விதிச்சூத்திரம், விலக்கியல் சூத்திரம், நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம், ஞாபகச் சூத்திரம் என்பன. (யா. வி. பாயிர உரை)

பிண்ட சூத்திரம், தொகைச் சூத்திரம், வகைச் சூத்திரம், குறிச் சூத்திரம், செய்கைச் சூத்திரம், புறனடைச் சூத்திரம் என்பன.

(நன். 20)

சூத்திரநிலை -

{Entry: P16b__262}

ஆற்றொழுக்கு, சிங்கநோக்கு, தவளைப்பாய்த்து, பருந்தின் வீழ்வு என்பன. ‘சூத்திரங்களின் கிடக்கை’ முறை காண்க. (நன். 19)

சூத்திரப் பயன்வகை -

{Entry: P16b__263}

பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் என்பன.

பொழிப்பாவது, பதவுரையாக அன்றி, பொருந்திய பொருளைப் பிண்டமாக எடுத்துரைப்பது.

அகலமாவது, கடாவினை எழுப்பித் தன் நூலானும் பிற நூலானும் ஏற்பன விடைகூறி, நூற்பாவின் உட்பொருளே யன்றி ஆண்டைக்கு இன்றியமையா யாவையும் விளங்க விரிவாக உரைப்பது.

நுட்பமாவது தோன்றும் ஐயங்களை எடுத்துக்காட்டி நீக்கியுரைப்பது.

எச்சமாவது, அவ்வாற்றால் போந்த பொருளை யுரைப்பது.

இந்நால் வகையினையும் தொல்காப்பியனார் காண்டிகை வகை இரண்டு, உரைவகை இரண்டு என இருவகையுள் அடக்குவார். (பா. வி. பக். 114)

சூத்திரப்பா -

{Entry: P16b__264}

இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பா அகவல். (L)

சூத்திரப் புறனடை -

{Entry: P16b__265}

முன் சூத்திரங்களால் கூறப்பட்ட செய்திக்கு அடுத்து வரும் சூத்திரத்தால் புறனடை கூறுதல்.

நன்னூலார் எழுத்தியலுள் முன்னர்ச் சூத்திரங்களால் (76-87) முதல் சார்பு எழுத்துக்கட்கு முயற்சிப் பிறப்புக் கூறினார்.

‘எடுத்தல் படுத்தல்’ (88) என்னும் சூத்திரத்தால் எடுத்தல் முதலியவற்றால் எழுத்திற்குரிய ஒலிமுயற்சியால் ஒன்றற் கொன்று பிறப்பு வேறுபாடுகளும் அவ்வவற்றின்கண் சிறிதுளவாம் என்று புறனடை கூறினார். புறனடையை யுணர்த்துஞ் சூத்திரம் புறனடைச் சூத்திரம்; புறனடையாற் செய்தியை உணர்த்துவது சூத்திரப் புறனடை என வேறுபாடு அறியப்படும்.

சூத்திரப் பொருளுரைத்தல் -

{Entry: P16b__266}

சூத்திரப் பொருளை முத்திறத்தானும் ஆறு விகற்பத்தானும், பத்து விதத்தானும், பதின்மூன்று திறத்தானும், ஏழு வகை யானும், இரண்டு கூற்றானும், வழுவுகள் நீக்கி, மாண்பொடும் மதத்தொடும் பொருந்த உரைத்தல் வேண்டும்.

1 . முத்திறம் - பொழிப்பு, அகலம், நுட்பம் - என்ற இவை.

2. ஆறுவிகற்பம் - எடுத்துக் காட்டல், பதம் காட்டல், பதம் விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல் - என்ற இவை.

3. பத்துவிதம் - சொல், சொற்பொருள், சோதனை, மறை நிலை, இலேசு, எச்சம், நோக்கு, துணிபு, கருத்து, செலுத்தல் - என்ற இவை.

4. பதின்மூன்று திறம் - சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் காட்டல், ஆசிரியவசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் - என்ற இவை.

5. எழுவகை பொழிப்பு, அகலம், நுட்பம், எச்சம், பதப் பொருள் உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல் - என்ற இவை.

6. இரண்டு கூறு - தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்துரைத்தல் என்பன.

வழு - குன்றக் கூறல் முதலிய பத்து.

மா ண்பு - சுருங்கச் சொல்லல் முதலிய பத்து.

எழுவகை மதம் - உடன்படல் முதலியன. (யா. வி. பாயிர. உரை)

சூத்திரம் (1 )

1. நூற்பா - ‘சூத்திரத் திலக்கணம்’ காண்க.

2. சூத்திரவடிவில் இயன்ற நூல்; ‘வேதாந்த சூத்திரம்’ போல்வது.

3. சூத்திரத்தின் வகை; அது காண்க. (L)

சூத்திரம் (2)

ஆடி நிழலின் அறியத் தோன்றி, நாடுதலின்றிப் பொருள் நன்கு விளங்குமாறு (ஓசையற்ற வெண்பா இயலானும் ஆசிரிய இயலானும்) எடுத்துக்கொண்ட பொருளை விளக்கும் யாப்பு.

சூத்திர யாப்பு -

{Entry: P16b__267}

நூற்பா அகவல் (திவா. பக். 232) (L)

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் -

{Entry: P16b__268}

செந்தமிழ் இலக்கணம் முற்றும் நிரம்பிய தலைச்சங்கப்புலவர் இருந்த நிலம். செம்மையாவது எக்காலத்தும் விகாரமின்றி ஒரு தன்மைத்தாகி நிற்கும் மரபு; இயற்கையாவது அநாதி காலம் தொட்டு இயல்பான் அமைந்த இலக்கணம். (பா. வி. பக். 160, 173)

செய்யுட்கண் பொருளையும் சொல்லையும் புனைந்து கூறுமுறைகள் -

{Entry: P16b__269}

அவையாவன: பருப்பொருளுக்கு நுண்பொருளின் தன்மை யையும், நுண்பொருளுக்குப் பருப்பொருளின் இயல்பையும், உயிரில் பொருளுக்கு உயிர்ப் பொருளின் இயல்பையும், உயிர்ப் பொருளுக்கு உயிரில் பொருளின் இயல்பையும், அஃறிணைப் பொருளுக்கு உயர்திணைப் பொருளின் ஒழுக்கத்தையும், உயர்திணைப் பொருளுக்கு அஃறிணைப் பொருளின் செயலையும் ஏற்றிக் கூறுதலும், இல்பொருளை உள்பொருள் போலவும் உள்பொருளை இல்பொருள் போல வும் புனைந்து கூறுதலும், பிறவுமாம். (தொ. பொரு. பாயிரம். ச. பால.)

செய்வித்தான் பெயர் முதலிய கூறல் -

{Entry: P16b__270}

ஆக்கியோன் பெயரேயன்றிச் செய்வித்தான் பெயரும் உரை செய்தான் பெயரும் கூறுதலும், தன் நூலுக்கு வழிகூறலே அன்றி அதன்முதல் நூலுக்கும் வழி கூறுதலும், நூலுக்குப் பெயர் கூறலேயன்றிப் படலம் ஓத்துச் சூத்திரங்களுக்கும் பெயர் கூறுதலும், பெயரே அன்றித் தொகை முதலாயின பிறவும் கூறுதலும், ‘இன்னது நுதலிற்று’ என நூலாகிய பிண்டத்திற்குக் கூறலே அன்றி அதற்கு உறுப்பாகிய படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் ‘இன்னது நுதலின’ எனக் கூறுதலும், நூல் கேட்போரைக் கூறலேயன்றி உரை கேட்போரையும் கூறுதலும், நூற்குப் பயன் கூறலே யன்றிப் பயனுக்குப் பயன் கூறுதலும், பாயிரம் கூறினாரது பெயர் கூறலேயன்றிப் பாயிரத்துக்கு இலக்கணம் கூறுதலும், அவை போல்வன பிறவும் பாயிரத்தோடு ஒத்த இலக்கணத்தை உடையனவாகக் கொள்ளப்படும். (பா. வி. பக். 193)

செயற்கை முதல்நூல் -

{Entry: P16b__271}

தானே தலைவனாகிய ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனை’ வழிபட்டுத் தலைவர்ஆயினார், அவன் அருளால் அவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழியுடைய தாகப் பிண்டம் படலம் ஓத்து சூத்திரம் எனச் செயற்கைநலம் தோன்றச் செய்த நூல். (பா. வி. பக். 97)

செவ்வன் தெரிதல் முதலியவற்று முறை -

{Entry: P16b__272}

செவ்வனம் தெளிதல், மெய்ந்நோக்கிக் காண வல்லுதல், பல உரையும் கேட்டல், ஆசான்பால் காதலுடைமை, அவனைத் தெய்வத்தைப் போல மதித்தல், எக்காலத்தும் திரிபின்மை - என இவ்வறுவகை மாண்பும் உடையார்க்கே ஆசிரியன் நூலினைக் கற்பித்தல் வேண்டும் என்றல் ஆன்றோர் மரபு.

செவ்வனம் ஆராய்தலே உண்மைப் பொருளைக் கூர்த்து நோக்குதலுக்கும், அந்நோக்குதலே பலதிற உரைகளையும் கேட்டலுக்கும், அவ்வாறு கேட்டலே ஆசான்மாட்டுக் காதலுடைமைக்கும்; அக் காதலே தெய்வத்தைப் போல அவனை மதித்தற்கும், அம்மதிப்பே திரிபில்லாமைக்கும் காரணம் ஆதலின், இம்முறையே இவ்வாறு கூறப்பட்டன. (பா. வி. பக். 136)

சென்று தேய்ந்திறுதல் -

{Entry: P16b__273}

நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; நூற்குணங்கள் தொடக்க முதல் இறுதி வரை ஒருபடியவாக இன்றி, வரவரக் குறைந்து கொண்டே அழிதல். (நன். 12)

சே -

{Entry: P16b__274}

சே - ஆன்பாலை மரபுவகையான் உணர்த்தும் பெயர்களுள் ஒன்று. இது பெற்றத்தின் ஆண்பாலைக் குறிக்கும். (தொ. பொ. 557 பேரா.)

இப்பெயர் எருமை, புல்வாய் இவற்றின் ஏற்றினைக் குறிக்கும்.

(திவா. பக். 59)

இப்பெயர் குதிரை, எருது, புல்வாய் இவற்றைக் குறிக்கும்.

(பிங். 2562)

இப்பெயர் குதிரை, பெற்றம், புல்வாய் இவற்றைக் குறிக்கும். (சூடா. III . 32)

சேவல் -

{Entry: P16b__275}

மயில் நீங்கலான ஏனைய பறவைகளின் ஆண்பாலினை மரபான் குறிக்க வழங்கப்படும் பெயர். (தொ. பொ. 603 பேரா.) குதிரையின் ஆணினையும் இது குறிக்கும். (623 பேரா.) ‘சேவல்’ என்ற பெயர் தானே, கோழிச்சேவலை (அகநா. 103, குறுந். 107) ஒரோ வழிச் சுட்டும்.

சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் -

{Entry: P16b__276}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; நூற்செய்தி களைச் செவ்வனம் கூறுதல் என்பது உத்தி சூத்திரச் செய்தி களைச் செவ்வனம் கூறாது தம் நுண்ணறிவு தோன்றவும், கற்பார்க்குச் சுவையும் எளிமையும் பயக்கவும் கையாளப்படும் நுட்பமான வழிகள் உத்திவகை என்பர் பேராசிரியர். தொல் காப்பியரும் மாறனலங்கார ஆசிரியரும் உத்திவகை என்றே குறிப்பர்.

நேரே வெளிப்படக் கூறாது சொல்லாற்றலால் குறிப்பாகப் பெறப்பட வேண்டிய பொருளினையும், வெளிப்படையாக எடுத்தோதின் எத்தகைய தெளிவு ஏற்படுமோ அத்தகைய தெளிவு புலப்படுமாறு கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)

பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கொண்டு ஆங்குச் சொல்லியவற்றான் பொருள் கோடல். (656 இள.)

எ-டு : மொழிக்கு ஈறாவனவற்றுள் சிலவற்றை எட்டு நூற்பாக்களால் கூறி எஞ்சியுள்ளவற்றை எடுத்துத் தனித்தனி விதவாது, ‘எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே’ (எழுத். 77 நச்.) எனக் கூறியவழியும், அவற்றை எடுத்து ஓதியவற்றைப் போலச் சிறப்பாகக் கொள்க என்று கொள்ளவைக்கும் உத்திவகை இது. (பேரா.)

எச்சவியலுள் கூறிய பொருள், பெயர் வினை இடை உரி இயல்களில் கூறிய பொருளோடு ஒப்ப, ‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ (சொ. 455), ‘உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய (சொ. 456) என்றாற் போலக் கூறுதல் இவ்வுத்திவகை யினமாம். (பேரா.)

சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் -

{Entry: P16b__277}

நன்னூல் சுட்டும் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று; சொல் முடிந்தவிடத்து அதன் பொருளையும் முடியவைத்தல்.

ஒரே நூற்பாவில் ஒரு சொல்லை எடுத்துக் கூறி அதற்கு விதி கூறுதல் போல்வன இவ்வுத்தியாம்.

“ஙம்முன் கவ்வாம். வம்முன் யவ்வே’ (நன். 111)

என வேற்றுநிலை மெய்ம்மயக்க விதி கூறுதல் போல்வன. (நன். 14)

சொற்களை ஆளும் மரபு -

{Entry: P16b__278}

உலகம் எனப்படும் காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும் ஆகிய யாவும் நிலமுதலாகிய பூதங்கள் ஐந்தும் தம்முள் வெவ்வேறு அளவைகளான் கலந்துள்ள கூட்டுப்பொருள் களேயாதலின், அவற்றை அவ்வாறே கூறுதும் என்னாது, உலகியல் நடைபெறும் பொருட்டு, இருதிணையாகவும் அவற்றை ஐம்பாலாகவும் இலக்கண நெறியான் சான்றோர் வகுத்து வழங்கிய வழக்குச் சிதையாமற் பொருட்டு அவர் வகுத்தவாறே, திரிபுபடாத சொற்களான் தழுவிக்கூறல் வேண்டும். (தொ. மர. 88 ச. பால.)

சொற்பொருள் விரித்தல் -

{Entry: P16b__279}

இது தொல்காப்பியம் குறிப்பிடாது, நன்னூல் குறிக்கும் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. தொகைச் சொற்களின் பொருள் திரிபின்றிப் புலனாகுமாறு அவற்றின் உருபு முதலியவற்றை விரித்தே நூற்பா யாத்தல்.

‘பண்புப் பகாப்பதம்’ என்னாது ‘பண்பிற்பகாநிலைப்பதம்’ என்று ‘செம்மை சிறுமை சேய்மை தீமை’ முதலான சொற் களைக் குறிப்பிடுதல். (நன். 135) போல்வன இவ்வுத்தியின் பாற்படும். (நன். 14)

ஞ section: 4 entries

ஞாபகச் சூத்திரம் -

{Entry: P16b__280}

சூத்திரவகை ஏழனுள் ஒன்று. எளிதும் சிறிதுமாக இயற்றற் பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிது ஒரு பொருள் அறிவிப்பது. ‘ஞாபகம் கூறல்’ என்பதன்கண் எடுத்துக்காட்டுக் காண்க. (யா. வி. பாயிர. உரை)

ஞாபகம் -

{Entry: P16b__281}

கூறப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு தொடர் புடைய மற்றொரு செய்தியை அறிதல்.

நாள் முன்வரும் வன்முதல் தொழிற்கு, ஆனின் னகரம் றகரமாகத் திரியும் எனவே, ஞாபகத்தான், தொழிற்கண் இன்னின் னகரம் திரியும் எனவும் பெயர்க்கண் இன்னின் னகரம் திரிந்தும் திரியாமலும் வரும் எனவும் கொள்ளப்படும். (தொ. எ. 124 நச்.)

பல முதலியன தம்முன் தாம் வரின் லகரம் றகர ஒற்று ஆதலும் உடைத்தே என்புழி, லகர உயிர்மெய்யின் கண்ணுள்ள அகரம் கெடுதல் ஞாபகத்தான் பெறப்படும். (தொ. எ. 214 நச்.)

‘மாமரக் கிளவியும் ஆவும் மாவும். அவற்றோரன்ன’ என ஞாபகமாகக் கூறிய அதனால் மாங்கோடு என அகரம் இன்றியும் வரும். (தொ. எ. 231 நச்.)

‘இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய ஈற்றில் நின்றிசைக்கும் பதினோரெழுத்தும்’ (தொ. சொ. 10) என்புழி, ஈற்றின் நின்று இசைத்தல் ன், ன், ர், மார் என்பனவற்றிற்கு ஞாபகமாகக் கொள்ளப்படும். (சேனா) (ஈண்டு ஞாபகமாவது முற்கூறப் படாது இவ்விடத்தேயே அறியப்படுதல்.)

ஞாபகம் கூறல் -

{Entry: P16b__282}

இது தொல்காப்பியம் கூறும் உத்தி வகைகளுள் ஒன்று; நூற்பா இயற்றுங்கால் அதன் அழகுகளாகக் கூறப்பட்டன வற்றை யுட்கொண்டு சில்வகை எழுத்தின் செய்யுட்டாகவும் நாடுதலின்றிப் பொருள் நனி விளங்கவும் இயற்றாது, அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து அதனானே வேறுபல பொரு ளும் அறிதற்கு வாய்ப்பு அளித்துக் கூறல். (தொ. பொ. 665 பேரா.)

இரட்டுற மொழிந்து இரண்டு சொற்கும் பொருள் கோடல்.

(656 இள.)

‘மெய்பெறு மரபின்... உணர்ந்திசினோரே’ (தொ. பொ. 413 பேரா.) எனச் சூத்திரம் செய்து பல பொருண்மை கோடல். (பேரா.)

அகரச் சாரியை என்று எளிமையிற் கூறாது அக்குச் சாரியை எனப் பெயரிட்டு, அது புணரும்போது அகரம் நீங்கலாக ஏனைய கெடும் என்ற கருத்தில் ‘எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி, அக்கின் இறுதிமெய் மிசையொடும் கெடுமே, குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது’ (தொ.எழுத். 128 நச்.) என்று கூறுதல் போல்வன இவ்வுத்திக்கு இனமாம். (பேரா.)

ஒன்றற்குரிய விதியைப் பிறிதோரிடத்துக் கூறிப் பெறுமாறு வைத்தல். (தொ. மர. 109 ச.பால.)

எ-டு :

‘னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்’ (கிளவி. 5)

‘ளஃகான் ஒன்றே மகடூஉ அறிசொல்’ (க்ஷ. 6)

எனக்கூறி அவை வினைச்சொல்லின் கண் இறுதியாக நின்று பாலுணர்த்தும் என்னும் இலக்கணத்தை 10ஆம் சூத்திரத் தால் பெறப்பட வைத்தல்.

ஞாயிறன்ன வாய்மை -

{Entry: P16b__283}

நல்லாசிரியனுக்கு அமைந்த எண்வகை உறுப்புக்களுள் ஒன்று. (இஃது ஆத்திரையன் பேராசிரியன் உரைத்த பாயிரச் செய்தி) ஆசிரியன் நற்புலமையுடையானாதலின் (திங்க ளொடு) ஞாயிறன்ன வாய்மையுடையான்.

நன்மை பயக்கும் உரைக்குத் திங்களும், தீங்கு பயவா உரைக்கு ஞாயிறும் உவமம் ஆதலின், ஆத்திரையன் பேராசிரியன் திங்களொடு ஞாயிறு’ என இரண்டும் உவமம் கூறினான்.

(பா. வி. பக். 66)

த section: 44 entries

தகர் -

{Entry: P16b__284}

ஆட்டின் ஆணினை மரபினால் குறிக்க வரும் பெயர். (தொ. மர. 47)

தந்திரம் -

{Entry: P16b__285}

நூல்

தந்திரவுத்தி -

{Entry: P16b__286}

நூல் உத்தி; ‘உத்தி’ முதலிய தலைப்புக்களில் காண்க.

தந்து புணர்ந்து உரைத்தல் -

{Entry: P16b__287}

இது தொல்காப்பியம் கூறும் உத்தி வகைகளில் ஒன்று, உண்மையாக ஒருபொருண்மையுடையது அன்றாகிய ஒன்றனை ஒருபயன் நோக்கி, அப்பொருண்மையுடையது போலக் கூறுதல். (தொ. பொ. 665 பேரா.)

‘அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே’ (தொ. பொ. 329 பேரா.)

‘குறிலிணை உகரம் அல்வழியான’ (தொ. பொ. 317 பேரா.)

என அளபெடையினை எழுத்துப் போலவும், குற்றிய லுகரத்தைக் குற்றெழுத்துப் போலவும் கூறுதல் இவ்வுத்தி வகை.

‘குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின், தொடர் மொழி எல்லாம் நெட்டெழுத் தியல’ (தொ. எ. 50 நச்.) என்பதே பற்றி, குறிலிணையையும் குறில் நெடிலையும் நெட்டெழுத்துப் போலக் கொண்டு, ‘நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்’ (எ. 160) என்ற விதியைக் கொள்வது இவ்வுத்திவகையின் இனம்

முன்னானும் பின்னாயினும் நின்ற சூத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தும் கொணர்ந்து புணர்த்து உரைத்தல். (656 இள.)

தந்து கொணர்ந்துரைத்தல் என்று பொருள் கொண்டு ‘நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும், குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே’ (தொ. எ. 36 நச்.) என்ற சூத்திரத் தோடு அதற்கு முந்தைய நூற்பாவிலுள்ள ‘நிற்றல் வேண்டும்’ (தொ. எ. 34 நச்.) என்ற சொற்றொடரைக் கூட்டிப் பொருள் செய்வர் இளம்பூரணர். இதனை ‘அதிகார முறைமை’ என்பதன்கண் பேராசிரியர் கொண்டார்.

தந்துரை -

{Entry: P16b__288}

நூலிற் கூறப்படாத பிற சிறப்புச் செய்திகளைத் தந்துரைப்ப தால் பாயிரத்திற்குத் ‘தந்துரை’ என்பதொரு காரணப் பெயர். (நன். 1)

தந்துரைத்தல் -

{Entry: P16b__289}

மூலத்தில் கூறப்படாத சொற்பொருள் முதலியவற்றை இடம் நோக்கி வருவித்துரைப்பது.

தலைமாணாக்கரும் அன்னமும் -

{Entry: P16b__290}

தலைமாணாக்கர்க்கு அன்னம் உவமம் ஆம். எவ்வாறெனில், பாலையும் நீரையும் கலந்து வைப்பின், அன்னம் பாலினின்று நீரைநீக்கிப் பாலைமாத்திரம் பருகுமாறு போல, ஆசிரியன் ஒரோவழித் தாமதகுணவயத்தான் கூறிய வேண்டத்தகாத பொருளை நீக்கி, அவன் சொல்லிய வேண்டத் தகுவனவற் றையே தலைமாணாக்கன் ஏற்றுக் கொள்வான். (நன். 38)

தலைமாணக்கரும் ஆவும் -

{Entry: P16b__291}

ஓரிடத்தில் புல் நிறையக் காணின் அவ்விடத்தேயே அதனை வயிறார மேய்ந்து பின் ஓரிடம் சென்று உண்டதனை அசை யிடும் பசு, நல்லாசானொருவனிடத்தே தான் பயிலத்தகும் நூற்பொருள் நிரம்ப உளதாயவழி அவனிடத்தேயிருந்து அவற்றைக் கேட்டு, பின்னர்த் தனியிடம் மீண்டு அக்கேட்ட வற்றையெல்லாம் நினைவிற் கொணர்ந்து சிந்தனை செய்து அறிவு நிரம்பும் நன்மாணாக்கற்கு உவமம் ஆயிற்று. (நன். 38)

தலைமைச் சொல் பற்றிய மரபு -

{Entry: P16b__292}

அரசருடைய உரிமைப்பண்பு உணர்த்தும் சொற்களை அவரவர்க்கு ஏற்பச் செய்யுளகத்துக் கூறுக என்பர் ஆசிரியர்.

தானைத் தலைவரையும், அரசனால் ஏவல் பெற்றோரையும், வரிசை பெற்றோரையும், குறுநில மன்னரையும், ‘மணிமுடி கவித்த மதிவெண்குடை மன்னர்’ எனப் புகழ்தலும் செய்யுள்மரபு என்பதாம். (இ. வி. பாட். 163)

தவளைப் பாய்த்து -

{Entry: P16b__293}

சூத்திரநிலை நான்கனுள் ஒன்று தவளை பாய்கின்றவிடத்து இடையிடையே நிலம் கிடப்பப் பாய்வது போலச் சூத்திரம் இடையிட்டுப் போய் இயைபு கொள்வது. (நன். 19)

எ-கு : ஆவியும் ஒற்றும் அளவிறந் திசைத்தலும்

மேவும் இசைவிளி பண்டமாற் றாதியின்’ (நன். 101)

மூன்றுயிரளபு’ (நன்.99) என்னும் சூத்திரத்தை அடுத்து அதன் புறனடையாக நிற்க வேண்டும் இச்சூத்திரம் ‘தவளைப் பாய்த்து’ என்னும் சூத்திர நிலையால் இடையே ஒரு சூத்திரம் கிடப்ப மேலதற்குப் புறனடைநுதலிற்று.

இனித் ‘தேரைப்பாய்த்து’ என ஒரு பொருள் கோள் (யா. க. 95) உரையுள் சொல்லப் பெறும். அஃதாவது தவளை நடுவிடத்தை விடுத்துத் தத்திப் பாய்வது போல ஒரு சொல் அடுத்த சொல்லை விடுத்து அதற்கு அப்பால் உள்ள சொல்லொடு பொருள் அமைவது.

தற்சிறப்புப் பாயிரம் -

{Entry: P16b__294}

வழிபடு தெய்வத்தை வணக்கம் செய்து மங்கலமொழியை முதற்கண் வகுத்துத் தொகைவிரியான் நுதலிப் புகுதற்கு எடுத்துக்கொண்ட பொருளைக் குறிப்பிடுவதாம். (யா. க. சிறப்புப். உரை)

எ-டு:‘உமையுரு உருமடுத்து உலகிளைப்பு ஒழிக்கும்

இமையவன் அடிபணிந்து இயம்புவன் பொருளே’ (இ. வி. பொ. 1)

தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள் -

{Entry: P16b__295}

அரசவைக்கண் விடுக்கும் ஓலைப்பாசுரத்திலும், தன்னுடைய கல்வியாற்றலை உணராதவர் அவையிலும், கற்றோரவைக்கண் தான் வெல்லலுறுகின்ற போதிலும், வாதம் செய்யுமிடத்தே எதிரி தன்னைப் பழித்துப் பேசியவிடத்தும் புலவன் தன்னைத் தான் புகழ்ந்து கோடலும் தகும். (நன். 53)

தன்குறிவழக்கம் மிக எடுத்துரைத்தல் -

{Entry: P16b__296}

இது தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் 32 உத்திகளுள் ஒன்று; தான் புதிதாக இட்ட பெயரை ஆசிரியன் பலகாலும் சூத்திரங்களில் எடுத்தாளுதல் என்பது.

நன்னூலார் வடநூல் மேற்கோளாக ஒருமொழிகளை விதந்து, பகாப்பதம் பகுபதம் எனக் காரணப் பெயர் தாமே தந்து, அவற்றை ‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும்’ என்ற நூற்பா (128) முதல் 137ஆம் நூற்பா முடியப் பகாப்பதம் பகுபதம் எனப் பலகாலும் எடுத்துக் கூறுதல் இவ்வுத்தி. (நன். 14)

தன்கோள் கூறல் -

{Entry: P16b__297}

இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; சொல்லப்படாத செய்திகள் பல உளவாயினும் ஒரு நூற்கண் ஆசிரியன் தான் கூறக் கருதியவற்றையே கூறுதல். (தொ. பொ. 665 பேரா.)

பிற நூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டால் கூறுதல். (தொ. பொ. 656 இள.)

‘அகத்தெழு வளியிசை அரில்தப நாடி

அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே

அஃதிவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும்

மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (தொ. எ. 102 நச்.)

என இந்நூலுக்கு வேண்டும் வைகரிஒலிக்கு மாத்திரம் இலக்கணம் கூறுவதாகச் சொல்வது போல்வன இவ்வுத்தி வகை. (பேரா.)

மெய்யொடு மெய், மெய்யோடு உயிர், மெய்யோடு உயிர்மெய், உயிரோடு உயிர், உயிரொடு மெய், உயிரோடு உயிர்மெய், உயிர்மெய்யோடு உயிர், உயிர்மெய்யொடு மெய், உயிர்மெய்யோடு உயிர்மெய் என்ற ஒன்பதுவகை மயக்கத் துள், மெய்யொடு மெய்ம் மயக்கம் ஒன்றனையே கூறி (தொ. எ. நச்.22) ஏனையவற்றைக் கூறாமையும், புணர்ச்சியுள் வினைத் தொகையும் பண்புத்தொகையும் எடுத்தோதி முடிக்காமை யும் போல்வன இவ்வுத்திவகையின் இனம். (பேரா.)

தான் எடுத்துக்கொண்ட மொழியிலக்கணக் கொள்கை இதுவென விளங்கக் கூறுதல். (தொ. மர. 109 ச.பால.)

எ-டு : ஓரெழுத்துத் தனியே இரண்டு மாத்திரையின் மிக் கொலித்தல் இல்லை எனத் தமிழ் மரபினை உணர்த்துவார்,

‘மூவள பிசைத்தல் ஓரெழுத்தின்றே’

‘நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய

கூட்டி எழூஉதல்’ என்மனார் புலவர்’

(எழுத். 5,6) எனக் குறிப்பிடுதல். (ச. பால.)

தன் மகன் முதலிய அறுவரது முறை -

{Entry: P16b__298}

ஆசிரியன் நூற்பொருளைத் தன்மகன், ஆசான் மகன், மன்னன் மகன், பொருள் மிகக் கொடுப்போன், வழிபடு வோன், கற்பித்தவற்றை மறவாமல் கொள்வோன் - என்னும் இவ்வறுவர்க்கும் வழங்கற்பாலன்.

‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து, முந்தி இருப்பச் செயல்’ (குறள் 67) ஆதலின், தந்தைக்கே முற்றுமுரிய கடப்பாடு மகற்குக் கல்வி பயிற்றல் என்று ‘தன்மகனை’ முற்கூறினார்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந் நன்றி கொன்ற மகற்கு’ (குறள் 110) ஆதலின், தன் ஆசிரியன் செய்த நன்றி மறவாமல் அவன்மகற்கும் கற்பிக்க வேண்டும் ஆதலானும், அக்கடப்பாடு முற்றும் தனக்கே ஆகாமல் தன்னோடு உடன் பயின்ற பிறர்க்கும் உரித்து ஆகலானும், தன்மகற்குப் பின்னர் ‘ஆசான் மகனைக்’ கூறினார்.

‘முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு, இறையென்று வைக்கப்படும்’ (குறள் 388) ஆதலின், அம்மன்னன் கல்லானா யின் முறை செய்து காப்பாற்றல் முடியாது ஆதலானும், அவனைக் கற்பித்தல் கற்றோர்க்கெல்லாம் கடப்பாடாதலா னும், அக்கடப்பாடு தனக்கும் தன்னொடு கற்றோர்க்குமே யன்றிப் பிறர்க்கும் உரித்து ஆகலானும், தன்மகன் ஆசான் மகன் இவர்க்குப்பின் ‘மன்மகனை’க் கூறினார்.

கல்விக்குச் செல்வம் ஒருவகையானும் தினையளவும் நிகரா காது ஆயினும், ‘தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக், கொள்வர் பயன் தெரிவார்’ (குறள் 104) ஆதலின், அத்தினையளவாய செல்வத்தையும் பனையளவாகக் கோடல் பெரியோர்க்கு இயல்பு ஆதலானும், வேறு காரியம் மேற்கொண்டிருப்பினும் தன்மகன் முதலிய மூவரையும் மறுத்தல் முடியாமையானும், பொருள் மிகக் கொடுப் போனைத் துரோணன் ஏகலைவனை மறுத்தாற்போல யாதானும் ஒரு காரணம் பற்றி மறுத்தலும் கூடுமாகலானும், அடுத்து, ‘பொருள் நனி கொடுப்போனை’க் கூறினார்.

மேற்சொன்ன நால்வர்க்கும் கற்பித்தல் ஆசாற்குக் கடப்பா டாதல் ஒன்றே அன்றி, அவர்கள் அவனுக்கு முற்ற அறிந்தவ ராதல் ஒருதலை அன்று. வழிபடுவோன் முற்ற அறிந்தவன் ஆதலை உதங்கன், ஏகலைவன் சரிதத்தாலும், உரைகோளா ளன் முற்ற அறிந்தவன் ஆதலை இருக்குவேதத்துள் கூறிய சுவேதகேதுவும் அருச்சுனனும் முதலானோர் சரிதத்தாலும் உணர்கிறோம். இவ்விரு வகையாருள்ளும் வழிபடுவோனுக்கு உரைகோளாளன் நிகராகாமை அருச்சுனஏகலைவர் சரிதத் தால் உணர்கிறோம். கற்பித்தல் இன்றியே வழிபாட்டின் பயனாகக் கல்வி தானே உளதாதல் சிறப்புப் பற்றி, அந்நால் வரை அடுத்து ‘வழிபடுவோனை’க் கூறினார்.

‘சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்’ என்னு முறை பற்றி வழிபடுவோனை அடுத்து இறுதியாக ‘ உரைகோளா ளனை’க் கூறினார். (முன் - இடமுன்) (பா. வி. பக். 135, 136)

தன்னான் ஒருபொருள் கருதிக்கூறல் -

{Entry: P16b__299}

முன்னோரால் கூறவும்படாது வழக்கின் உள்ளதுமன்றித் தன்னுள்ளே ஒரு பொருள் படைத்துக் கூறல் என்பார் பேரா சிரியர். நூற்கு ஆகா எனக் கடியப்பட்ட குற்றங்கள் பத்தனுள், வழு அமைக்கப்படாத குற்றம் இது. (தொ. பொ. 663 பேரா., இ. வி. பாட். 137)

மலைபடுகடாத்தில் ‘தீயின் அன்ன ஒண்செங்காந்தள்’ என்னும் அடியை (நன்னன் என்னும் பாட்டுடைத் தலைவ னது இயற்பெயரை முன்னர்ச் சார்ந்து தீ என்னும் இன்னாச் சொல் புணர்தலின்) ஆனந்தக் குற்றம் என்று பிற்காலத்தான் ஒருவன் ஒரு சூத்திரம் காட்டுதலும், பழங்கால மரபுக்கு மாறாகப் பாட்டியல் என்ற இலக்கணம் கொண்டு பத்து வகைப் பொருத்தம் எனச் சில கூறலும் போல்வன இச் சிதைவுக்கு எடுத்துக்காட்டு.

தனவைசியர் பெயர் -

{Entry: P16b__300}

வைசியர் (-வணிகர்) குலம் மூன்றனுள் ஒரு குலத்தினர் தன வைசியர் (ஏனையோர் கோவைசியரும், பூவைசியரும் ஆவர்); இவர்கள் நாய்கர், எட்டியர், வணிகர், பரதர் எனும் பெயர் பெறுவர். (ஆ. நி.56)

தனிக்காப்பு -

{Entry: P16b__301}

ஒற்றைப் பாவாலாகிய காப்பு; தெய்வத்தை வாழ்த்தி, நுவலும் இலக்கியத்தையோ இலக்கணத்தையோ இனிது நிறைவேறக் காக்கும்படி வேண்டும் பாடல்.

தாஅன் நாட்டித் தனாஅது நிறுப்பு -

{Entry: P16b__302}

இலக்கண ஆசிரியன் தனது நூலுள் மேற்கொள்ளும் எழு வகை மதங்களுள் ஒன்று. தானே ஒரு கருத்தைத் தொடங்கி அதனை வலியுறுத்திப் பல நூற்பாக்கள் வரைதல்.

நன்னூலார் ‘பதவியல்’ என்ற இயல் தொடங்கிப் பகாப்பதம் பகுபதம் எனக் குறிப்பிட்டு அவற்றின் இயல்பினை அவ்விய லுள் முதற் பதினெட்டு நூற்பாக்களால் குறிப்பிடுதல் இதற்கு எடுத்துக்காட்டாம். (நன். 11)

தார்ப்பூ -

{Entry: P16b__303}

அரசர்களின் அடையாளப்பூ. சோழனுக்கு ஆத்தி, சேரனுக் குப் பனை, பாண்டியனுக்கு வேம்பு என இவை பூவாம்... தார்ப்பூ போர்ப்பூவின் வேறானது. (தொ. பொ. 60 நச்.)

தான் குறியிடுதல் -

{Entry: P16b__304}

இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; உலக வழக்கில் காணப்படாத பெயர்களை இலக்கண ஆசிரியன் தானே மனங்கொண்டு தன் நூலில் பெயரிட்டு வழங்குதல்.

உயர்திணை அஃறிணை (சொல்.1) எனவும், கைக்கிளை பெருந் திணை (பொ. 1) எனவும் சொல்லிற்கும் பொருளிற்கும் உலகவழக்கில் வழங்கியவாறன்றி ஆசிரியன் தானே பெயரிடுதல் இவ்வுத்திவகை.

‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி’ (சொல். 65 நச்.) எனத் தான் நிறுத்தமுறை உட்கொண்டு வேற்றுமைகளுக்கு

‘இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம்’ (சொல். 94 நச்.)

‘மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய’ (சொல். 93 நச்.)

‘ஆறன் மருங்கின்.... ஏழும் ஆகும்’ (சொல். 99 நச்.)

‘நான்கன் உருபின், தொன்னெறி மரபின்’ (சொல். 111 நச்.)

என்றாற் போல, இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு என்று பெயரிடுதல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம். (தொ. பொ. 665 பேரா.)

தானெடுத்து மொழிதல் -

{Entry: P16b__305}

தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் உத்தி களுள் ஒன்று; தனக்கு முன்னூலாசிரியருடைய நூற்பாக்களை வழிநூல் சார்புநூல் ஆசிரியன் தன்நூலில் திரிபின்றி எடுத்துக் கொள்ளுதல்.

எ-டு : ‘குறியதன் முன்னர்... மிசைத்தே’ (நன். 90)

இது தொல்காப்பிய நூற்பா; நன்னூலில் எடுத்தாளப் பட்டுள்ளது. 252, 317, 396, 404, 408, 439 என்ற எண்ணுடைய நன்னூல் நூற்பாக்களும் ‘தானெடுத்து மொழிதல்’ என்னும் உத்தி. (நன். 14)

திங்கள் அன்ன கல்வி -

{Entry: P16b__306}

ஆசிரியன் தான் ‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’யின்கண் வழுவாது நிற்பவன். அவ்வாறு நிற்றலது வளர்ச்சிக்குத் தக, அவன் மாணாக்கனது அகத் திருள் (-அறியாமை) நீக்கி இன்பம் பயக்கிறான். ஆதலின், தனது கலையின் வளர்ச்சிக்குத் தகப் புறத்திருளை நீக்கும் திங்கள் அவனது கல்விக்கு உவமையாயிற்று. (பா. வி. பக். 64)

துலாக்கோல் நல்லாசிரியர்க்கு உவமையாதல் -

{Entry: P16b__307}

தன்கண் வைத்த பாரத்தை ஐயம் தீர வரையறுத்துக் காட்டு தலும், முன்னர்த் தான் சமனாக நிற்றலும் உடைய துலாக் கோல் போல, நல்லாசிரியர் மாணாக்கர் தம்மை ஐயுற்று வினவியவற்றை அவ்வையம் தீரத் தெளிய உணர்த்துதலானும் எப்பொழுதும் தாம் நடுவுநிலை பிறழாமையானும். அஃது அவர்க்கு உவமை ஆயிற்று. (நன். 29)

துன்னூசி -

{Entry: P16b__308}

தைத்தல் தொழில் செய்யும் நூல் கோத்த தொளையினை யுடைய ஊசியின் காது. இலக்கண நூற்கு உவமம் துன்னூசி. ஊசித் தொளையின் மேலுள்ள கோல் கொழு எனப்படும். இருவகைப் பாயிரத்துக்கும் உவமம் கொழு. கொழுவானது துன்னூசி நுழைதற்கு வழி ஆக்குதல் உடையது. பாயிரம் நூல் நுழைதற்கு வழி ஆக்குதல் உடையது. ‘கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போலப் பருப் பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்’ என்பது. (பா. வி. பக். 3; இறை. அ. 1 உரை)

தூடணம் -

{Entry: P16b__309}

தூஷணம்; ‘அவ்வியாத்தி, அதிவியாத்தி, அசம்பவம் என்னும் தூடணங்களும்’. (இ. வி. பாட். 137 உரை) குன்றக் கூறல், மிகை படக் கூறல், மாறுபடக் கூறல் என்னும் குற்றங்கள்.

தூய்மைக்கு வான்யாறு உவமம் ஆதல் -

{Entry: P16b__310}

நல்லாசிரியனது தூய்மைக்கு ஆகாயகங்கை உவமம். ‘சிற்றினம் அஞ்சும் பெருமை; சிறுமைதான், சுற்றமாச் சூழ்ந்து விடும்’ (குறள் 451) என்றாராதலின், தன் குடிப்பிறப்பு இயற்கை யான் நல்லாசிரியன் சிற்றினம் அஞ்சி அக்கீழ்மக்களொடு கூடாமல் பெரியாரைத் துணைக்கோடலின், கீழாய நிலத் துகளொடு கூடாத வான்யாறு, அவனுக்குத் தூய்மை பற்றி உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 60)

தூய்மை வகை -

{Entry: P16b__311}

‘மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்’. (குறள் 455)

என்றார் ஆதலின், அகந்தூய்மை ஒன்றே இனம்தூயன் ஆதலும், இயற்கையாகிய அறியாமையினின்று நீங்கி விசேட வுணர்வு புலப்படுமாறு மனம்தூயன் ஆதலும், நல்வினை ஆமாறு சொல்தூயன் ஆதலும், நல்வினை ஆமாறு செயல் தூயன் ஆதலும் என நால்வகைப்படும். (பா. வி. பக். 59)

தேரைப் பாய்வு -

{Entry: P16b__312}

தவளை பாய்த்து (நன். 19); சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. ‘தவளைப் பாய்த்து’க் காண்க. (தொ. சிறப்புப். நச். உரை)

தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் -

{Entry: P16b__313}

இது தொல்காப்பியர் கூறும் உத்தி வகையுள் ஒன்று.

தான் ஒரு வாய்பாடே நூற்பா வாயிலாக எடுத்தோதி அவ்வாய்பாடே பற்றாகப் பல வாய்பாடுகளும் அதற்கு வந்து பொருந்துதற்கு வாய்ப்புக் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)

தொகுத்துக் கூறிய சொல் தன்னானே, பிறிதும் ஒரு பொருள் வகுத்துக் காட்டுதல். (656 இள.)

‘செய்யும் செய்த என்னும் சொல்லே’ (சொல். 236 நச்.) எனப் பெயரெச்ச வாய்பாடு கூறித் தமிழில் உள்ள எல்லாப் பெயரெச்சங்களையும் இவ்விரு வாய்பாடுகளுள் அடக்கிக் கோடல் இவ்வுத்திவகை.

‘உருவு என மொழிதல்’ (சொல். 24 நச்.) என்று கூறி உருவு என்பதன் பொருளவாகிய வடிவு பிழம்பு பிண்டம் என்றாற் போல்வனவும் கோடல் இவ்வுத்திவகையின் இனமாம். (பேரா.)

‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடுமுதலும்’ (எழுத். 67 நச்.)

என்று, நுந்தை என்ற சொல்லமைப்புக் கூறியதனான் தன் மொழிமுதற் குற்றியலுகரமும் கோடல் (இள.).

‘சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்’ என்பதும் அது. (இள.).

நச். சொல். 73, 230 இவற்றுள்ளும் எடுத்துக்காட்டுக் காணப் படும்.

தொகுத்தல் -

{Entry: P16b__314}

வழிநூலின் வகை நான்கனுள் ஒன்று; முதல் நூலுள் விரி வாகச் சொல்லப்பட்டதனைச் சில்வாழ்நாள் சிற்றறிவினை யுடைய மக்கட்கு அறியுமாறு சுருக்கிச் சொல்லுதல். (தொ. பொ. 652 பேரா.)

தொகுத்துக் காட்டல் -

{Entry: P16b__315}

வீரசோழிய உரைகாரர் கூறும் தந்திர உத்தி முப்பத்திரண்ட னுள் ஒன்று. செய்திகள் பலவற்றை வெவ்வேறு பயனிலை கொடுத்து ஒரு செய்யுளுள்ளேயே முடித்துக் கூறுவது.

எ-டு : ‘அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல்

பிறவினை எல்லாம் தரும்’ (கு. 321).

இதன்கண் அறவினை, கோறல் என இரண்டு எழுவாய்களும் முறையே கொல்லாமை என்ற பெயரையும், தரும் என்ற வினைமுற்றையும் பயனிலையாகக் கொண்டன. சேர்த்து எண்ணி முடிபு கொடுத்து நிறுத்தல் என்பது ‘தொகுத்துக் காட்டல்’ என்பதன் தொடர்ப்பொருள். ‘கொல்லாமை கோறல்’ தொகுத்து எண்ணப்பட்டன. இவை முறையே முடிக்கும் சொல்லாகவும், முடிக்கப்படும் சொல்லாகவும் முடிபு அமைந்தவாறு. (வீ. சோ. 180 உரை).

தொகுத்துக் கூறல் -

{Entry: P16b__316}

தொல்காப்பியம் கூறும் முப்பத்திரண்டு உத்திவகைகளுள் ஒன்று; பின்னர் விரிக்கப்பட வேண்டியவற்றை முதற்கண் தொகுத்துக் கூறுதல். (தொ. பொ. 665 பேரா.)

வகைபெறக் கூறல் வேண்டுமாயினும், அதனைத் தொகுத்துக் கூறுதல். அஃது ‘அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப’ (எழுத்து. 1) என்றாற் போல்வது. பல சூத்திரத்தான் கூறப்பட்ட பொருளை, “இத்துணையும் கூறப்பட்டது இது” என்று கூறுதலும் இதன்கண் அடங்கும். முன் ஆறு நூற்பாக்களில் விளக்கிய தூக்கு என்னும் செய்யுள் உறுப்பினை (தொ. பொ. 386-391 இள.) ‘தூக்கியல் வகையே ஆங்கென மொழிப’ (தொ. பொ. 392) என ஏழாம் நூற்பாவான் குறிப்பிடுதல் போல்வன இவ்வுத்தி வகைக்கண் அடங்கும். (656 இள.)

இனிப் பேராசிரியர் குறிப்பிடுமாறு

- எழுத்து முப்பத்து மூன்று, சொல் இரண்டு, பொருள் இரண்டு என ஆசிரியன் தானே தொகை கூறுதல் போல்வன. ‘னஃகான் ஒற்றே’ (தொ. சொல். 5) முதலிய பல நூற்பாக் களில் கூறப்பட்ட செய்தியை, ‘இருதிணை ... பதினோ ரெழுத்தும்’ (சொல். 10) என விரிந்தன தொகுத்தலும், ஒரு சூத்திரத்திலேயே, ‘அவ்வழி, அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும், என்றாற் போல விரிந்தனவற்றை, ‘ஆ வயின் மூன்றோடு அப் பதினைந்தும்’ (சொல். 162) எனத் தொகுத்துக் கூறலும் இவ்வுத்தியின் இனம் எனப்படும். (தொ.பொ. 665 பேரா.)

தொகுத்துச் சுட்டல் -

{Entry: P16b__317}

தொல்காப்பியம் ‘தொகுத்துக் கூறல்’ என்று குறித்த உத்தி வகையினை நன்னூல் ‘தொகுத்துச் சுட்டல்’ என்று பெயர் குறித்தது.

எ-டு : எழுத்திலக்கணம் இத்துணைத்து என்று தொகுத் துக்கூறும் ‘எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத் திரை, முதல்ஈறு இடைநிலை போலி என்றா, பதம் புணர்ப்பு எனப் பன்னிரு பாற்றதுவே’ (நன். 57) என்ற நூற்பாப் போல்வன இத்தந்திர உத்தியின்பாற்படும். எழுத்திலக்கணம் பத்தும் இரண்டும் எனப் பன்னி ரண்டு பகுதித்து எனத் தொகுத்துச் சுட்டியவாறு காண்க. (நன். 14)

தொகுத்துரை -

{Entry: P16b__318}

நூலுக்கு உரைக்கப்படும் பதினான்கு வகையான உரைகளுள் ஒன்று. தொகுத்துரையாவது சொற்றோறும் கூறும் பதவுரை யின்றிப் பொழிப்பாகத் திரட்டிக் கூறும் பொழிப்புரை. எ.டு. ‘அகர முதல’ என்னும் குறட்கு, “எழுத்துக்களெல்லாம் அகர மாகிய முதலையுடையன; (அது போல) ஆதிபகவனாகிய முதலையுடையது உலகு” என்றுரைப்பது. (நன். 21.)

தொகைச் செய்யுள் -

{Entry: P16b__319}

அளவான் நெடுந்தொகை எனவும் குறுந்தொகை எனவும், பாட்டான் கலித்தொகை எனவும் கூறப்படும் தொகைநிலைச் செய்யுள் பலவாம். ‘பலவாம்’ என்றதனான், வள்ளுவர் முப்பால், நாலடி, நான்மணிக்கடிகை, திரிகடுகம் சிறுபஞ்ச மூலம், ஏலாதி முதலாயின எல்லாம் ஆம் என்பது. (இ. வி. பாட். 57).

தொகைவிரி -

{Entry: P16b__320}

வழிநூலின் வகை நான்கனுள் மூன்றாவது. அஃதாவது முதல் நூலுள் விரிந்து கிடந்ததனைச் சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறலும், முதல் நூலில் தொகுத்துக் கூறப்பட்டு நுண்ணறிவினர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காது நின்றதனை விளங்கும் ஆற்றான் விரித்துக் கூறலும் ஆகிய அவ்விரண்டு நெறியும் பற்றித் தொகுத்து முன் நிறுத்தி அந்நிறுத்த முறையானே பின் விரித்துக் கூறுதல். (தொ. பொ. 652 பேரா.).

இனி, நூல்யாப்பு நான்கனுள் ஒன்றாக நன்னூலார் இதனைக் குறிப்பர் (நன். 50) சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் வழிநூல் செய்யும் இவ்யாப்பிற்கு, தொல்காப்பியத் தில் ‘குற்றியலுகரப் புணரியல்’ என விரிந்து கிடந்ததனை நன்னூலார் உயிரீற்றுப் புணரியலுள் அடக்கியமையும், அந் நூலுள் சுருங்கச் சொல்லப்பட்ட வடசொல்லினைப் பதவிய லுள் விரிவாகக் கூறியமையும் எடுத்துக் காட்டாம் (நன். 50).

தொடர்ச்சொற் புணர்த்தல் (1) -

{Entry: P16b__321}

தொடர்புடைய சொற்களைச் சேர்த்து வைத்தல். இது நன்னூலார் கூறும் 32 உத்திகளுள் ஒன்று.

எ-டு:மூன்று புணரியலின்கண்ணும் நிகழும் சூத்திரங்கள். (நன். 14)

தொடர்ச்சொற் புணர்த்தல் (2) -

{Entry: P16b__322}

தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் உத்திகளுள் ஒன்று; தொடர்பான செய்திகள் வெவ்வேறா யினவற்றை ஒரு நூற்பாவிலேயே இயைத்துக் கூறுதல்.

எ-டு : ‘எண்மூ எழுத்தீற்று ... இயல்பும்’

குறில் வழிய ... மிகலுமாம்’

ணள னல ... திரியும்’. (நன். 158)

இம்மூன்று திறமும் வெவ்வேறு செய்திகளாயினும், பொதுப் புணர்ச்சி என்ற இயைபு பற்றி ஒரு நூற்பாவின் கண்ணேயே கூறப்பட்டிருத்தல் இவ்வுத்தியாம். (நன். 14).

தொல்காப்பிய உத்திவகைகள் -

{Entry: P16b__323}

உத்தி - நோக்குக.

தொல் காப்பியக்குடி -

{Entry: P16b__324}

பழமையான காப்பியக்குடி; ‘காப்பியத் தொல்குடி கவின் பெற வளர்ந்து’ (சிலப். 30-83) என வருதல் காண்க. காப்பியக் குடியில் தோன்றித் தமிழிலக்கணநூல் இயற்றிய பெருமை தோன்ற, அக்குடிப் பெயராலேயே இவ்வாசிரியர் ‘தொல் காப்பியனார்’ எனப்பட்டார். இவரது இயற்பெயர் பற்றிய கருத்து வேறுபாடு சில உண்மையின், காரணப் பெய ராலேயே இவர் பெயர் வழங்குவது உணரப்படும்.

தொல்காப்பிய மரபியல் கூறுவன -

{Entry: P16b__325}

தொல்காப்பியத்துப் பொருளதிகாரத்து இறுதிஇயலாம் இஃது இருதிணைப் பொருட்குணனாம் இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையை யும், உயர்திணை நான்குசாதி பற்றிய மரபினையும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபினையும், அவை பற்றி வரும் உலகியல் மரபினையும், நூல்மரபினையும் உணர்த்துகிறது.

‘தொல்காப்பியன்’ என்பதன் பொருள் -

{Entry: P16b__326}

இரகுமரபில் அவதாரம் செய்த திருமாலுக்கு இராகவன் எனப் பெயர் எய்தியவாறு போல், தொல்காப்பியன் என்பது மரபு பற்றி வந்த பெயர். இவ்வாசிரியர் கவியின் மரபில் உதித்த சமதக்கினி இருடியின் மகனார் ஆகலானும்; அம்மரபில் வந்த இருடிகள் எல்லாருள்ளும் சிறந்தவர் ஆகலானும்; ஆரியமொழிக்கண் காவியன் எனவும், அப் பெயரே தற்பவமாகித் தமிழில் காப்பியன் எனவும் வழங்குதல் பொருந்தும் ஆகலானும்; ஆரிய மொழியுள் கவி என்பது பிரமனையும் அவன்வழி வந்த முனிவர் சிலரையும் பிறரையும் உணர்த்துமாகலின், அவருள் பிரமனை உணர்த்துமாறு ‘தொல்’ எனும் அடை புணர்த்துத் ‘தொல்காப்பியன்’ என வழங்கினமையானும்; ‘தொல்காப்பியன்’ என இவ்விலக்கண ஆசிரியனுக்கும் மரபு பற்றிய பெயராக வந்தது. (பா. வி. பக். 185, 186).

தொலைவு -

{Entry: P16b__327}

கூறியது கூறல், மாறுகொளக் கூறல், பொருளில கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாகிப் பழித்தமொழியான் இழித்துக்கூறல், தன்னான் ஒருபொருள் கருதிக்கூறல், இன்னாவகையின் மனங்கோளின்மை என்பன வும் பிறவும் ‘தொலைவு’ எனப்படும் நூற்குற்றங்கள் ஆம். தொல்காப்பியம் ‘சிதைவு’ (மர. 108) எனச் சுட்டும் குற்றங்கள் இவை; ‘குன்றக்கூறல்’ (நன்.12) முதலாகிய ஈரைங் குற்றங்களும் இவை. (யா. வி. பக். 554).

ந section: 69 entries

நடுவுநிலைக்குத் துலைநா உவமம் ஆதல் -

{Entry: P16b__328}

ஆசிரியன் அழுக்காறின்மை அவாஇன்மை உடையன். பெருக்கத்திற்குக் காரணம் அழுக்காறின்மையே, கேட்டிற்குக் காரணம் அவாஉடைமையே; இவையன்றி நண்பு பகை முதலிய பகுதிகள் காரணம் ஆகமாட்டா” என்பதனைச் சான்றோர் ஆம் நல்லாசிரியர் நன்கு உணர்வது இயல்பு. ‘கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக் - கோடாமை சான்றோர்க்கு அணி’ என்றார் தெய்வப்புலவர் ஆதலின், கேடு வாராமைப் பொருட்டும் பெருக்கம் வருதற்பொருட்டும் அவர் நெஞ்சம் கோடார்.

துலாக்கோல் ஒரு பக்கம் சாய்தற்குக் காரணம் அதன் தட்டில் வைக்கப்பட்ட பொருளது மிகுதியும் குறையுமே; நண்பு முதலிய பகுதிகள் காரணமாக மாட்டா. அம்மிகை குறைகளை நீக்கிச் சமன்செய்து சீர்தூக்குவதுஅல்லது நண்பு முதலிய பகுதிகள் பற்றித் துலைநா கோட்டம் செய்யாது.

இவை பற்றி நல்லாசிரியற்குத் துலைநா நடுவுநிலை பற்றி வந்த உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 72).

நடுவு நிலைமை வகை -

{Entry: P16b__329}

நண்பு நண்பன்மை என்னும் பகுதியும், மேல் மேலன்மை என்னும் பகுதியும், சுற்றமும் சுற்றமன்மை என்னும் பகுதியும், கல்வி கல்லாமை என்னும் பகுதியும் என அந்நான்கு வகையி னும் ஒருவன் வழுவாமல் ஒப்ப நிற்றல், நான்கு வகைப்படும் நடுவுநிலைமை என்பது. (பா. வி. பக். 71).

நல்கலின் நால்வகைக் கருவிகள் -

{Entry: P16b__330}

ஆசிரியன் மாணாக்கர்க்குப் பாடம் ஈதற்கு நால்வகைக் கருவி களாவன:

காரணமின்மையாகிய இயற்கையருள், குறிப்பறிந்தொழுகல் முதலிய பணிசெய்தல் பற்றியும், பொருள் முதலாயின கொடுத்தல் பற்றியும், இன்சொல் கூறுதல் பற்றியும், ஒன்றற்கு ஒன்று மிகும் தன்மையுடையனவாகிய மூவகைச் செயற்கை யருள் - என்பன. (பா. வி. பக். 124)

நல்லாசிரியன் இயல்பு -

{Entry: P16b__331}

ஆத்திரையன் பேராசிரியன் கூறிய ‘வலம்புரிமுத்தின்’ என்னும் பொதுப்பாயிரத்தான் அறியப்படுவது.

வலம்புரி முத்தினைப் போன்ற நற்குடிப்பிறப்பும், ஆகாய கங்கையைப் போன்ற தூய்மையும், அவ்வாகாயகங்கை நிலவுலகிற்குப் பயன்படுமாறு இழிந்து வந்தாற்போன்று பிறர்நலம் கருதி நற்கருமம் புரியும் ஒழுகலாறும், பதினாறு கலையும் நிறைந்த முழுமதி போன்ற கல்வியும், திங்களும் ஞாயிறும் காலம் தவறாது உலகத்தார் கண்ணுக்குத் தோன் றிச் செயற்படுமாறு போலக் காலம் தவறாது செயற்படும் வாய்மையும், சிறிதும் குறைவில்லாத அழுக்காறின்மை என்ற பண்பும், பிறர்பொருளைக் கள்ளக் கருதாத உள்ளமும், துலாக்கோலின் நாவினை ஒத்த செம்மை யாகிய நடுவுநிலை மையும் - ஆகிய எண்வகை உறுப்பினையும் உடையனாகி, உறுதியாகப் பிறர்க்கு உதவும் வாழ்க்கையும், அதற்கேற்ற முயற்சியும், உலகியலை அறிந்து அதற்கேற்றவாறு நடப்ப தற்கு உளதாம் அறிவும், கல்விப் பொலிவோடு உருவின் மிக்கதோர் உடம்பும், போற்றாரையும் பொறுக்கும் பொறு மையும், மறை பிறர் அறியாமை நெஞ்சினை நிறுத்தற்கு உளதாம் நிறையும், மறக்கக் கூடாத கல்விச் செய்தியை மறவாமையும், கண்டார் போற்றத்தக்க அறிவும், வேண்டார் அஞ்சத்தக்க பீடும், பிறர் மதிக்கத்தக்க ஆற்றலும், அதனால் உளதாம் புகழும், சொற் பொருளைக் கேட்டார் உணரத்தக்க வகையில் அரிதாம் பொருளையும் எளிதாக்கி உள்ளத்தே பதியுமாறு கூறும் நாவன்மையும், தன்னிடம் கற்க வந்த மாணாக்கர் தன்பால் கற்றலையே பெரிதும் விரும்பும் வகையில் பாடம் சொல்லும் ஆற்றலும் ஆகிய தொன்மை மரபு கூறும் பெருஞ்சிறப்புடைய ஒருவனே நல்லாசிரியன் ஆவான்.

இனி, நல்லாசிரியன் இயல்பாக நன்னூல் கூறுவது வருமாறு:

உயர்குடிப் பிறப்பும், உயிர்களிடத்துக் கருணையும், தெய்வ வழிபாடும், பெருந்தகைமையும், பலவகைக் கலைகளையும் பயின்ற தெளிவும், எடுத்துக்கூறும் ஆற்றலும், நிலம் மலை துலாக்கோல் மலர் - என்னும் நான்கனையும் ஒத்த இயல்பும், உலகநடையை நன்கு தெரிந்துகொண்ட அறிவும், இவை போன்ற பிற நற்குணங்களும் அமையப்பெற்றவனே நூலை மாணாக்கர்க்குக் கற்பிக்கும் தகுதியுடைய நல்லாசிரியன் ஆவான். (நன்.26)

நல்லாசிரியனுக்கு உவமைகள் -

{Entry: P16b__332}

மலையும் நிலமும் பூவும் துலாக்கோலும் என்னும் நான்கும் ஆம்.

அளக்கலாகாத உயரமும் பரப்புமுடையதாய், பொருள் வளமுடையதாய், அசைக்கலாகாத நிலையுடையதாய், நெடுந்தொலைவினின்று காணப்படும் தோற்றமுடையதாய், மழையின்றி நிலமெல்லாம் வறண்டுபோயினும் தன்பாலுள்ள வர்க்கு நீர் தந்து உதவுவதாய் நிற்பது மலை. நல்லாசிரியனும் பிறரால் அளக்கலாகாத கல்விப்பரப்பும் கலைச்செல்வமு முடையனாய், வாதுபோரின்கண் பிறரால் அசைக்கப்படாத புலமை நிலையுடையனாய்,. நெடுந்தொலைவிலுள்ளா ராலும் அறியப்படும் கல்விப்பெருமையால் தோற்றமுடைய னாய், பொருட்செல்வம் வறந்த காலத்தும் தன்பால் பயிலும் மாணாக்கர்க்குக் கல்வித்திருவினை வழங்குதற்கண் சலியாமை யுடையான்.

முழுதும் தெரிதற்கரிய பெருமையுடையதாய், குலமலைகள் காடுகள் முதலியவற்றைத் தாங்கி நிற்கும் திண்மையுடை யதாய், தன்னை அகழ்வாரையும் தாங்கிக் கொள்ளும் பொறை யுடையதாய் பருவம் அறிந்து தன்பால் பயிர்த்தொழில் மேற்கொள்ளும் உழவர்க்கு அவர்தம் முயற்சிக்கு ஏற்பப் பயன் கொடுத்தலுடையதாய்க் கிடப்பது நிலம். நல்லாசிரியனும் பிறரான் வகுத்தறியப்படாத கல்விப் பெருமையுடையானாய், வாதுபோரில் தன்னைக் கல்வியான் வெல்ல வருவார்க்கு உள்ளம் கலங்காத உறுதிப்பாடுடையானாய், தன்னை யடுத் துள்ளோர் செய்த பிழை முதலியவற்றைப் பொறுத்தலுடை யானாய், ஏற்ற காலத்தே மாணாக்கர் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்பப் பயன் கொடுக்கும் பண்பினனாய்த் திகழ்வான்.

நற்காரியத்திற்கு மங்கலப்பொருளாய், எதற்கும் இன்றி யமையாததாய், யாவரும் விரும்பி மேற்கொள்ளுமாறு மென்மையுடையதாய், உரிய போதின்கண் மலர்ந்து தோன்று வது பூ. நல்லாசிரியனும் நற்காரியத்திற்கு ஏற்ற மங்கலம் புரிபவனாய், எவ்வினைக்கும் மேற்கோளாக இன்றியமையாத வனாய், யாவராலும் மகிழ்ந்து பாராட்டப்படும் வண்ணம் மென்மைக் குணம் மிக்கவனாய், உரிய காலத்தே மாணாக் கர்க்குப் பாடம் சொல்லுவதன்கண் முகமலர்ச்சியுடைய வனாய்க் காணப்படுவான்.

தன்கண் வைத்த பாரத்தை ஐயம் தீர வரையறுத்துக் காட்டுதலும், மெய்ம்மையான நடுநிலைக்கண்ணே நிற்றலும் உடையது துலாக்கோல். நல்லாசிரியனும் தன்பால் மாணாக் கன் வினவிய பொருளையும் தான் பாடம் சொல்லும் நூற்பொருளையும் ஐயம் தீர உணர்த்த வல்லனாய், மனக் கோட்டம் இல்லாது, பகை நண்பு நொதுமல் என்னும் முப்பகுதிதோறும் வழுவாமல் ஒப்ப நிற்கும் நடுவுநிற்றல் உடையனாய் விளங்குவான். (நன். 28, 27, 30, 29).

நவில்தொறும் புதுவதுவாய் நலன் அளிப்பது -

{Entry: P16b__333}

மாறனலங்காரம் சுட்டும் பத்துவகை அழகுகளுள் ஒன்று; கற்குந்தோறும் புதுவதாய் இன்பம் அளிப்பது. (மா. அ. 24)

நவின்றோர்க்கினிமை -

{Entry: P16b__334}

பயில்வோர்க்கு இன்பம் பயப்பதாகிய இவ்வழகு, நன்னூல் குறிக்கும் பத்துவகை அழகினுள் ஒன்று. (நன் 13)

நன்மொழி புணர்த்தல் -

{Entry: P16b__335}

நன்னூல் கூறும் நூலழகு பத்தனுள் ஒன்று; நல்ல சொற்களைச் சேர்த்துவைத்தல். ‘செம்மை சிறுமை’ (நன். 135) ஓர் எடுத்துக்காட்டு. (நன். 13)

நன்னீரம் -

{Entry: P16b__336}

நல்ல நீர்; நன்மை என்னும் அடை ஈண்டு உவர்நீரை விலக்கி இனிய நீரை யுணர்த்திற்று; கற்பிக்கப்படுவோனாம் நன் மாணாக்கனுக்குச் சொல்லப்படும் ஆறு உவமங்களுள் ஒன்று. நன்னீர் தன்னிடம் எத்தன்மையர் தோய்ந்தாலும் அவர் மாசு நீக்குதலுடையது; நன்மாணாக்கனும் தன் உடன் பயின்றான் மனமாசு நீக்கற்குரியான். ‘நன்னீரம்’ என்றதனை ‘நன்னிறம்’ என்று பாடமோதிய இலக்கணவிளக்க நூலாரைச் சண்முக னார் மறுப்பர். நன்னிறம் என்ற பண்பு மாணாக்கன் என்ற பொருளுக்கு உவமமாதல் இயலாது, நல்ல நிறம் தீய நிறம் என்ற வழக்கு யாண்டும் இல்லையாதலின் என்பர். (பா. வி. பக். 139, 141)

நன்னூல் உத்திகள் -

{Entry: P16b__337}

நுதலிப் புகுதல், ஓத்து முறைவைப்பு, தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக் காட்டல், முடிவிடங் கூறல், தானெடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்சொற் புணர்த்தல், இரட்டுற மொழிதல், ஏதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந் தொழுகல், இறந்தது விலக்கல், எதிரது போற்றல், முன் மொழிந்துகோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்தும் என்றல், உரைத் தாம் என்றல், ஒருதலை துணிதல், எடுத்துக்காட்டல், எடுத்த மொழியின் எய்த வைத்தல், இன்னது அல்லது இதுவென மொழிதல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், பிறநூல் முடிந் தது தான் உடன்படுதல், தன்குறிவழக்கம் மிக எடுத்துரைத் தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல், உய்த்துணர வைப்பு என முப்பத்திரண்டாம். (நன். 14)

நன்னூலார் மாணாக்கர்க்குக் கூறிய உவமை பொருந்தாமை -

{Entry: P16b__338}

நன்னூலார், மாணாக்கரைத் தலை இடை கடை என மூவகைப்படுத்தி, அம்மூவகையினர்க்கும் முறையே அன்னம் பசு, மண் கிளி, இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி - என முத்திறங்களையும் உவமை கூறினார். இவ்வுவமை பொருந் தாமைக்குச் சண்முகனார் காட்டும் காரணங்கள் வருமாறு:

நன்னூலார் ஆசிரியனும் ஆசிரியனாகாதானும் என மேல் ஆசிரியரை இருபகுதியாக்கிக் கூறினாற்போலவே, ஈண்டும், மாணாக்கனும் மாணாக்கனாகாதானும் என மாணாக்கரை இருபகுதியாக்கிக் கூறலே முறை; தலை இடை கடை என முப்பகுதியாக்கி மொழிதல் முறையாகாது.

மாணாக்கரை முப்பகுதியாக்கிக் கூறியவர்க்கு, ஆசிரியரையும் அவ்வாறே முப்பாலாக்கிக் கூறலே முறை.

மாணாக்கரை முப்பாலாக்கிக் கூறியவர், மாணாக்கரல்லா தாரையும் முப்பாற்படக் கூறலே முறை; களிமடி மானி எனப் பகுப்பின்றிக் கூறியது முறையாகாது.

ஆசிரியர்க்கு உவமமாகக் கூறிய நிலனையே ஈண்டு ‘மண்’ என இடைமாணாக்கர்க்கு உவமம் கூறுதல் பொருந்தாது.

நிலம் பலதன்மைகளுடையது ஆதலின், தெரிவரும் பெருமை முதலாக அத்தன்மைகளை நல்லாசிரியர்க்கு உவமமாக நிலனுக்குக் கூறியவர், இடைமாணாக்கர்க்கு உவமமான மண்ணுக்கு ஏற்ற தன்மைகளை கூறாது விடுத்தார்; விடுப்பவே, தெரிவரும் பெருமை முதலான தன்மைகளே ஈண்டு மண் ணுக்கும் பொருந்தும் எனப் பயில்வோர்க்குப் பொருள் மயக்கம் நிகழும்.

கிளியினை அன்னத்தினும் சிறப்புடைத்தாக முன்னோர் கூறினார். அதற்கு முரண்பட, ‘கிளந்தவா கிளப்பது’ என்னும் ஒப்புமைக்குணமாகாத ஒன்றனை நன்னூலார் தம் மனத்துள் கொண்டு, அன்னத்தைத் தலைமாணாக்கர்க்கும், கிளியை இடை மாணாக்கர்க்கும் உவமம் ஆக்கியமை பொருந்தாது.

இல்லிக்குடம் எத்தனை முறை நீர்பெய்யினும் நீரை முற்றும் ஒழுக விடுதலால் பயன்படாமையின் அதனை மாணாக்க ரல்லாதார்க்கு உவமமாக்கல் ஒருவாறு பொருந்தின் பொருந்தலாம் அன்றி, கடைமாணாக்கர்க்குப் பெறப்படுவ தொரு குணஒப்புமை இன்றாய் முடியும். ஆகவே ‘இல்லிக் குடம்’ என வாளா கூறியமை உவமம் ஆதற்கு இல்லை.

யாடும் எருமையும் மாணாக்கராகாதவர்க்கு உவமமாம் என முன்னோர் கூறியிருப்பவும், நன்னூலார் அவற்றைக் கடை மாணாக்கர்க்கு உவமமாகக் கூறினார். அது ‘முன்னோர் நூலின் முறையே நன்னூற், பெயரின் வகுத்தனன்’ என்ற சிறப்புப் பாயிரத்திற்கு முரணாம். (பா. வி. பக். 153, 154.)

நாகு -

{Entry: P16b__339}

எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண்மைமரபு பற்றி வரும் பெயர்; நீர் வாழ்வனவற்றுள் நந்து என்னும் சங்கினத் தின் மரபு பற்றிய பெயராதற்கும் உரியது. (தொ. மர. 62, 63.)

நால்வகை நூல்கள் -

{Entry: P16b__340}

அவையாவன இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாய அறநூலும், இம்மை மறுமை என்னும் இரண்ட னையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மையே பயப்பதாகிய இன்ப நூலும், அம்மூவகை நூலின் சொல்லை யும் பொருளையும் உள்ளவாறு அளந்து காட்டும் கருவி நூலும் என்பன. (பா. வி. பக். 62,63)

நாலறிவுயிர் -

{Entry: P16b__341}

உற்றுணர்வும், நாவுணர்வும் மூக்குணர்வும், கண்ணுணர்வும் ஆகிய நான்குணர்வும் உடையன நாலறிவுயிர்களாம். அவை நண்டும் தும்பியும், அவற்றுக்குக் கிளையாவன வண்டு தேனீ குளவி போல்வனவும், பிறப்பான் ஒத்த பிறவும் ஆம். (தொ. மர. 31 பேரா).

நியமச் சூத்திரம் -

{Entry: P16b__342}

முன்னர் ஒன்றனால் முடியவைத்துப் பின்னும் அதனையே எடுத்துக்கொண்டு விதிமுகத்தான் விலக்குவதும், விலக்கும் வகையான் விதிப்பதும் செய்யும் சூத்திரம். (யா. க. பாயிர உரை)

எ-டு : ‘உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே

அப்பொருள் இரட்டாது இவணை யான’ (தொ. எ. 80 நச்)

‘உப்ப காரமொடு’ என்று, முன்னர் 76ஆம் நூற்பாவில் கூறியதனொடு ஞகார இறுதியை மாட்டெறிந்தார்; ‘அப் பொருள் இவண் இரட்டாது’ என, உப்பகாரத்திற்கு ஓதியதனை (76), ஈண்டு விலக்கி விதித்தார்.

நியமம் ஐவகை -

{Entry: P16b__343}

பெற்றதற்குவத்தல் (- விதிவயத்தால் தான் அடைந்தவற்றுக்கு மகிழ்தல்), பிழம்பு நனி உலர்த்தல் (-நூல் சொல்லியவாறு கிருச்சிர சாந்திராயணம் முதலிய விரதங்களான் உடலை யுலர்த்தி உற்ற நோய் நோன்று தவம்செய்தல்), கற்பன கற்றல் (-கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டு, அதனை ஓர்த்து உள்ளம் உள்ளது உணர்தல்), கழிகடுந்தூய்மை (-மண் முதலானவற் றான் நீரினானே புறம் மாசின்றாக உடலை மண்ணுதலும், ஆசையின்மை என்னும் மண்ணான் அரிய வாய்மைப் புனலினாலே, மாசின்றாக மணத்தை மண்ணுதலும் செய்த லான் வருவது), பூசனைப் பெரும்பயம் ஆசாற்கு அளித்தல் (-பிறர் தனக்கு வழிபாடு செய்தலான் வரும் பயன்களைத் தன் ஆசிரியனுக்குக் கொடுப்பது) என்பனவாம். (பா. வி.பக். 39, 40)

நிலம் நல்லாசிரியருக்கு உவமம் ஆதல் -

{Entry: P16b__344}

தெரிதற்கரிய பரப்புப்பெருமையும், திண்மையும், பொறுமை யும், உழவர் தன்பால் பருவ மறிந்து முயன்ற முயற்சியின் அளவு பயன் கொடுத்தலும் நிலத்தின் இயல்பாவன. நல்லாசிரியரும் அருங் கல்விப்பரப்புத் தம்பால் உடைமையும், பிறரால் வாதுபோர் செய்து அசைக்க முடியாத புலமைத்திண்மை, மாணாக்கர் பிழையைப் பொறுத்தல், மாணாக்கர் உரிய பருவமறிந்து முயன்றமைக்கு ஏற்பப் பயன் உதவுதல் என்று மிவற்றையுடை மையும் தம் இயல்பாக உடையர். (நன். 27)

நிலம் முதலிய உவமை விளக்கம் பொருந்தாமை -

{Entry: P16b__345}

நிலத்துக்குச் சொல்லப்பட்ட தெரிவரும் பெருமை முதலா யின மலைக்கும் உரியன; மலைக்குச் சொல்லப்பட்ட அளக்க லாகா அளவு முதலாயின நிலத்துக்கும் உரியன. நிறைகோற்குச் சொல்லிய நடுநிலையே ஐயம் தீர்த்தலாக முடிதலின் இரண்டும் இருவேறு குணம் ஆகா. பூவிற்குச் சொல்லிய இயல்புகளும், பூ மங்கல வினைக்கே அன்றி மங்கலமாகாத பிணவினை முதலாயவற்றிலும் சூட்டப்படுதலாலும், பூ இன்றியே வெற்றிலை பாக்கும் சந்தனமும் மஞ்சளும் முதலா யின கொண்டும் சில மங்கலவினை நடைபெறுதலாலும், துறந்தாரும் அமங்கலியரும் முதலாயினோர் பூவினை மகிழ்ந்து மேற்கோடல் இன்மையானும், பொருந்தமாட்டா. (பா. வி. பக். 132, 132)

நிலமாட்சி -

{Entry: P16b__346}

‘நிலம் நல்லாசிரியர்க்கு உவமம் ஆதல்’ காண்க. (நன். 27)

நிறைகோல் மாட்சி -

{Entry: P16b__347}

தன்னிடத்து வைக்கப்பட்ட பாரத்தை ஐயம்தீர வரையறுத்து உணர்த்துதலும், பாரம் வைக்கப்படாவிடத்துத் தான் முதற்கண் நடுவுநிலையில் நிற்றலும், பாரத்தை வரையறுக்கு மிடத்தும் ஒருபால் கோடாது நடுவு நிற்றலும் எனுமிவை. (நன். 29)

நின்று பயனின்மை -

{Entry: P16b__348}

நூற்குற்றம் பத்தனுள் ஒன்றாக நன்னூல் கூறுவது. அஃதாவது சொல் அல்லது சொற்றொடர் பொருட்பேறின்றி நிற்றலா கிய குற்றம். (நன். 12.)

நினைவு (1) -

{Entry: P16b__349}

பற்றற்றானை யாதானும் ஓர் உருவத்தாயினும் உருவம் அன்றி யாயினும் உள்ளத்து இருத்தி, யாதாயினும் ஒரு மந்திரத் தாயினும் மந்திரம்அன்றியாயினும் கருதுதல். உருவத்தால் குறித்தல் சகுண தியானம்; அருவத்தால் குறித்தல் நிர்க்குண தியானம்; மந்திரம் கோடல் சகற்பம்; மந்திரமின்மை அகற்பம். (பா. வி. பக். 42.)

நுட்பவுரை -

{Entry: P16b__350}

நூலுக்கு உரைக்கும் நால்வகை யுரையுள் ஒன்று; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற உரைப்பது; மாறுபடத்தோன்றும் கடாவினைக் காரணம் காட்டி மறுக்கும் உரை. (இறை. அ. 1 உரை)

நுதலிப் புகுதல் -

{Entry: P16b__351}

நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு தந்திர உத்திகளுள் ஒன்று; சொல்லப்புகும் செய்தியை முதற்கண் சுட்டிப் பின் விளக்கப் புகுவது. (நன். 14)

எ-டு : ‘பூமலி அசோகின் . . . . . . . . . . . . நன்கியம்புவன் எழுத்தே’ (நன். 56)

நுதலியது அறிதல் -

{Entry: P16b__352}

இது தொல்காப்பியம் சுட்டும் உத்திவகை முப்பத்தி ரண்டனுள் ஒன்று.

சூத்திரத்தொடரை வெளிப்படையாக நோக்கின் பயனில்லது போலத் தோன்றினும், அதற்கேற்ற வகையான் கருதி உணரப் படும் பொருள் இன்னது எனக் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)

எ-டு : ‘வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்’ (தொ. சொ. 46)

என்பது கிளவியாக்கத்துள் “வழுவற்க” என்பதற்கு எழுந்த நூற்பா என்றறிதல் போல்வன. ஓத்து நுதலியதும், ஓத்துள் சூத்திரம் நுதலியதும் போல்வன நுதலியது அறிதலின் பகுதியாய் அடங்கும். இந்நுதலியது அறிதல் நூலின் வேறாய பாயிரத்தும் வரும் என்பதனான் இது முதற்கண் வைக்கப் பட்ட உத்திவகையாம். (பேரா)

நுதலியது அறிதல் -

{Entry: P16b__353}

சூத்திரத்தில் சொன்ன பொருள் உணர்த்தலன்றி இதன் கருத்து இது என உணர்த்தல். (656 இள.)

எ-டு : ‘எழுத்தெனப் படுப

அகரமுதல் னகரஇறுவாய்

முப்பஃ தென்ப

சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே’ (தொ. எ. 1)

என்ற நூற்பா எழுத்து இனைத்து என வரையறுத் துணர்த்தல் நுதலிற்று என்று கருத்துரைத்தல் போல்வன.

(இக்கருத்தைப் பின்பற்றியே நன்னூல் ‘நுதலிப் புகுதல்’ எனவும், மாறனலங்காரம் ‘உள்ளிய துணர்த்தல்’ எனவும் நுதலியது அறிதலைக் குறிப்பிடும்.)

‘நுதலிய நெறியின’ என்றதன் கருத்து -

{Entry: P16b__354}

இறைவன் அருளிய நூல்வழி வருவன எல்லாம் வழிநூல்களே யாம். பரம்பொருளாகிய இறைவன் தன்னை வழிபட்டார் வேண்டுவனவற்றை வேண்டியவாறு அருள்பவன் ஆதலின், அவனருளான் செய்ததனையே முதல்வன் கண்ட நூல் என்றும், அங்ஙனம் அவ்வாசிரியனான் செய்தளிக்கப்பெற்ற முதனூற் பொருளைத் தொகுத்தும் வகுத்தும் தொகைவிரி யாகச் செய்தும் அவ்வக்காலத்தார் பயன் கொள்ளும் வண்ணம் வழிவழியாகச் செய்யப்படும் வழிநூல்களுள் ஒன்றனை முன்னதற்கு வழிநூலாகவும் பின்னதற்கு முத னூலாகவும் சொல்லுதற்கு ஏற்றலான், ஒன்று ஒன்றனை நோக்க முதல்நூல் என்றும் வழிநூல் என்றும் கருதிக் கொள்ளப்படும். (தொ. மர. 92 ச. பால)

நுதலிய பொருள் -

{Entry: P16b__355}

நூற்பாக்களில் சொல்லப்பட்ட கருத்து. இது சிறப்புப்பாயிரம் நுவலும் செய்திகளுள் ஒன்று. (நன். 47)

நுவல்வோன் -

{Entry: P16b__356}

நூலைப் பாடம் சொல்லும் ஆசிரியன். (நன். 3)

நுவலும் திறன் -

{Entry: P16b__357}

ஆசிரியன் மாணாக்கற்குப் பாடம் சொல்லும் கூறுபாடு. அவ்விலக்கணம் நன். 36ஆம் நூற்பாவால் விளக்கப்பெறும்.

ஆசிரியன் மாணாக்கர்க்குப் பாடஞ்சொல்லுந்திறமாவது, இரு திறத்தார்க்குமுரிய காலத்தையும் இடத்தையும் நன்கு ஆராய்ந்து கொண்டு, மேம்பட்ட இடத்தே வீற்றிருந்து, தான் வழிபடும் கடவுளைத் துதித்து, தான் பாடம் சொல்லப்புகும் நூற்பொருளை முன்னமேயே மனத்தின் சிந்தித்து முறையே கொண்டு, விரைவுபடாமலும் வெகுளாமலும் முக மலர்ச்சி யுடையனாகி, மாணாக்கன் தான் பாடம் சொல்லுவதை மனத்திற் கொள்ளும் திறத்தினை யுணர்ந்து, அவ்வாறே நல்ல மனத்தோடே நூற்பொருளைக் கற்பித்தலாம். (நன். 36)

நூல் -

{Entry: P16b__358}

இலக்கணம்; ஒத்த சூத்திரத்தினை உரை நடாத்தல் வேண்டிய விடத்துப் பிறந்த காண்டிகையும் அக்காண்டிகை யாலும் விளங்காதவிடத்து அதனையும் விளங்கக் கூறும் விசேடவுரையும் உடைத்தாய், பத்துவகைக் குற்றமும் இன்றி, நுண்பொருளை யுடையனவாகிய முப்பத்திரண்டு உத்தி வகையொடு பொருந்தி வருவது. (தொ. பொ. 653 பேரா.)

நூல் என்று சொல்லப்படுவது முன்னும் பின்னும் மாறு படாது, தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி, அடங்கி நின்ற பொருள் விரித்துச் சொல்லப்பட்டு, பருப்பொருட் டாகாது நுண்பொருட்டாகப் பொருளை விளக்குவது. (தொ. செய். 166 பேரா.)

நூல் என்று சொல்லப்படுவது தான் நுதல எடுத்துக் கொண்ட பொருளை முதற்கண் விளங்கச் சுட்டி, ஓத்துக் களையும் அவற்றுள் சூத்திரங்களையும், முறையாக நிறுத்தி, முதல் வழி சார்பு என மூவகை மரபினையுடையதாய், தொகை வகை விரி என்னும் முறையான் செய்திகளை வசையற ஆராய்ந்து கூறி, ஞாபகத்தானும் செம்பொருளானும் பொருளையுணர்த்தவல்ல யாப்புநெறி யுடைத்தாய், முன்பின் தொடர்பு அமைதியுடைத்தாய், சொல்லப்படும் பொருளை யெஞ்சாமல் தன்னகத்தே கொண்டு, தன்னகத்துச் செய்திக்குப் பிறிதொரு நூலினை அவாவாமல் முற்றுவது. (இறை. அ. 1. உரை)

பத்துக் குற்றமுமின்றி, முன்னோர் வகுத்த முறையானே பிறழ்ச்சியின்றி, ஓத்து-படலம்-சூத்திரம்-காண்டிகை-விருத்தி- முதலாக ஆராயப்பட்ட வகையாகப் புணர்த்து அமைவது நூலாம். (மா. அ. 6)

நூல் உத்தி -

{Entry: P16b__359}

‘உத்தி’ காண்க.

நூல் உரைக்கத் தக்கார் -

{Entry: P16b__360}

தன் மகன், தன் ஆசாற்கு மகன், தன் மன்னவற்கு மகன், நிறையப் பொருள் கொடுப்பவன், தன்னை வழிபடுவோன், தான் பாடம் சொல்லியவற்றை மறவாதவனாகிய உரை கோளாளன் என்னும் இவ்வறு வகையாருள் நூலுரைக்கத் தக்க மாணாக்கர் அடங்குப. மேலும், செம்மையாக உணர வல்லான், பொய்யாயவற்றை நீக்கி மெய்ப்பொருளையே காணவல்லான், பலதிறப்பட்டகருத்து வேறுபாடுடைய உரைகளையும் கேட்பான், ஆசானிடத்தும் நூற்கல்வி கேள்வியிடத் தும் தீராத காதலுடையான், ஆசானைத் தெய்வம் போலவே நன்கு மதிப்பான், எக்காலத்தும் தாமத குணவயப்பட்டுத் திரிபுணர்ச்சியில்லாதான் - என இவ் ஆறு மாண்பும் ஒருங்கே யுடையவராயும் நூலுரைக்கத் தக்க மாணாக்கர் அமைப. (பா. வி. பக். 134, 135)

நூல் உரைப்போன் -

{Entry: P16b__361}

பாடம் சொல்லும் ஆசிரியன்.

நூல் உறுப்பின் வகை -

{Entry: P16b__362}

சூத்திரத்தானும், ஓத்தினானும், படலத்தானும், பிண்டத்தா னும் இயலுதல் பற்றி நூல் நான்கு வகைப்படும். (பா.வி.பக். 109)

நூல் எச்சம் -

{Entry: P16b__363}

எழுவகையான் உரைக்கப்படும் சூத்திர உரையுள் ஒன்று; இசையும் குறிப்புமாகிய எச்சங்களைப் புலப்படுத்தி உரைப் பது போலும். நூலுரை வகையாக மயிலைநாதரும் (நன். 20) சுட்டுவர். (யா. க. பாயிரம். உரை)

நூல் எனும் பெயர்க் காரணம் -

{Entry: P16b__364}

பஞ்சு கொண்டு கதிரினால் இழைத்து நூற்கப்படும் நூல் போலச் சொற்கொண்டு மதிவன்மையால் தொகுத்து அமைக்கப்படுவது நூல்.

மரம் முதலியவற்றின் கோட்டத்தைத் தீர்த்துச் செப்பம் செய்யும் எற்று நூல் போல, மனத்தினது கோட்டமாகிய அறியாமையைத் தீர்த்துச் செம்மை செய்வது நூலாம்.

நூல் போலுதலின், இலக்கணம் நூலெனப்பட்டது; உவம ஆகு பெயர். (நன். 24, 25)

“நூல் போறலின் நூலென்ப; பாவை போல்வாளைப் பாவை என்றது போல. என்னை? நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளான் கைவல்மகடூஉத் தனது செய்கைநலம் தோன்ற ஓரிழைப் படுத்தலாம், உலகத்து நூல் நூற்றல் என்பது; அவ்வாறே, சுகிர்ந்து பரந்த சொற்பரவைகளான், பெரும் புலவன், தனது உணர்வு மாட்சியின், பிண்டம் படலம் ஓத்துச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்து நூற்கப்படலின் என்பது. இனி ஒருசாரார், நூல் போலச் செப்பம் செய்தலின் நூல் என்ப. இனி, தந்திரம் என்னும் வடமொழிப் பொருளை நூலென வழங்குதல் தமிழ்வழக்கெனக் கொள்க. இது நூல் என்ற சொற்குப் பொருள்” என்பது இறையனார் அகப் பொருள் உரை.

நூல் செய்யுமாறும் நூல் செய்தற்குரியானும் -

{Entry: P16b__365}

நூற்பொருள் பற்றிய அறிவு குற்றமற உடையோனாய், முதனூற் செய்தியை உணர்ந்து மனம் கொள்ளும் பயனை ஆராய்ந்து, உலக வழக்கினது திட்பம் தெளிந்து, இருவகை வழக்கினையும் உணர்ந்தோனே அவ்வறிவு தோன்ற நூல் செய்தற்குரியான்.

சூத்திரமும் உரையும் என்று சொல்லப்பட்ட அவ்விரு திறத்தினையும் பகுதிப்படப் படைத்தலும் உரைத்தலும் ஆகிய இவ்விரண்டும் நூல் செய்யுமாறு என்ப, நூற்பயனை நுனித்த நுண்ணறிவுடையார். (பா. வி. பக். 111)

நூல் செய்தான் பாயிரம் செய்யாமை -

{Entry: P16b__366}

பிறர்க்குத் தோன்ற மாட்டா நுண்பொருள்களையெல்லாம் தான் தோன்றச் செய்து பல துறைகள் அமையப் பெரு நூலைச் செய்து முடிப்பினும், அந்நூலாசிரியன், தனது புகழாகிய சிறப்புப் பாயிரத்தைப் பாடித் தற்புகழ்ந்து கோடல் தக்க தன்றாம். ஆகவே பிறர் அது கூற வேண்டும். நன். 52 (தொ. எ. 1. இள)

நூல் : சொற்பொருள் -

{Entry: P16b__367}

பாவை போல்வாளைப் பாவை என்றாற்போல, நூல் போல் வதனை நூல் என்ப. நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளான் கைவன் மகடூத் தன் செய்கை நலம் தோன்ற மாண்பினான் ஓரிழைப்படுத்தலே நூல் நூற்றலாம். அவ்வாறே பிளவு பட்டுப் பரந்த சொற்கடல்களான் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியினான் சூத்திரம் - ஓத்து - படலம் - பிண்டம் - என்னும் யாப்பு நடைபடக் கோத்து அமைப்பது நூலாம்.

நூல்நயம் -

{Entry: P16b__368}

1. நூலின் அழகு, 2. கல்விநயம். (யா.க. பாயிரம். உரை). ( L)

நூல் பயிலக் கருவிகள் -

{Entry: P16b__369}

சில நூற்பாக்களை வாசித்த அளவில் பொருள் புலனாகா ஆயின், முன்னும் பின்னுமுள்ள நூற்பாக்களின் துணை கொண்டு அவற்றின் பொருளைத் துணிக. வெளிப்படாத விதிகளை, கூறியது கொண்டு அதனொடு தொடர்புடைய கூறாததனையும் கொள்ளும் வாய்ப்பாகிய உபலக்கணத்தால் ஆய்ந்து உணர்க. ஒரு நூலில் சுட்டப்படும் விதி தான் கற்ற நூல்களில் காணப்படும் விதிக்கு மாறாக இருப்பின், இவ்விதி வேறொரு நூற்கருத்தினை உட்கொண்டு சொல்லப்பட்ட தாக மாணாக்கன் கருதுக. சில நாள் பழகின் கூரிய அறி வுடையராயினும் பலியா; பல நாள் பழகின் மந்தராயினும் பலிக்கும். விரைந்து வாசித்துக்கொண்டேபோயின், செய்திகள் அறிவு கூரியோருக்கும் தெளிவாகப் புலனாகா; நிதானித்து வாசிப்பின் அவை மந்தருக்கும் புலனாகாமல் போகா. இனிக் கற்க வேண்டியதன்கண் உள்ளத்தை மிகச் செல்லவிடாது, கற்றதன்கண் செலுத்திச் செய்திகளை நன்கு உளம் கொள்க. நூலினை உரையொடு பலகாலும் விரைந்து கற்பதனைவிட, நூற்பாவினைப் பலமுறை பார்த்துப் பொருளை வரம்பு செய்தல் மிக்க தெளிவைத் தரும். ஆசிரி யற்கேயாயினும் வேற்றுச் செய்திகளில் மனம் ஈடுபட்ட விடத்தே அது கல்விக்கண் அழுந்தாது ஆதலின், அவன் அச்செய்தியில் ஈடுபாடு தீர்ந்த பின்னரே கல்விக்கண் ஈடுபடு தல் வேண்டும். (ஆசிரியற்கே இந்நிலை என்றபின், மாணாக் கற்குச் சொல்ல வேண்டுமோ என்பது) உடலோடு அழியும் சாதி செல்வம் முதலியவற்றது உயர்ச்சியினும் உயிரொடு செல்லும் கல்வியது உயர்ச்சி மேம்பட்டது ஆதலின், அதற்கு இன்றியமையாததாகிய ஆசிரியனை வழிபட்டு அவன் கருத்தின்வழி ஒழுகுதல் மாணாக்கற்கு மிகவும் வேண்டற் பாலது.

உரையில் பழகுதலைக் காட்டிலும் சூத்திரத்தில் மிகவும் பழகுதலும், தனக்குரிய நாட்டை விட்டுக் கற்றற்கு மறு நாட்டிற் செல்லுதலும் முதலாக, இன்னும், நூல் கற்றற்குரிய கருவிகள் பல உள. (இ. கொ. 8, 9).

நூல் பயிலத்தக்கார் திறம் -

{Entry: P16b__370}

நூல் பயிலத்தக்க நன் மாணாக்கர், “எம்மினும் கடையார் இலர்” என்று கருதி, இறுமாப்பு இன்றி, நற்குலம். நற்குணம் நற்கலை நற்றவம் உடையவர்களை இகழாது பணிந்து ஒழுகி, பழி பாவங்களை அஞ்சி, புண்ணியம் புகழ் அறங்களைப் போற்றி, பிறப்பு இறப்புக்களில் இனி அகப்படாது அஞ்சித் தப்பி ஓடி, பசு தன்னை இரை அருத்தியவர்க்குப் பயன் கொடுப்பது போலத் தாமும் கல்விப்பயன் கொடுப்பார் ஆவர். (இ. கொ. 10)

நூல்பயிலத் தகாதோர் திறம் -

{Entry: P16b__371}

நூல் பயிலத்தகாத தீ மாணாக்கர். “எம்மினும் உயர்ந்தோர் இலர்” என்று கருதி, இறுமாப்பு மேற்கொண்டு, நற்குலம் நற்குணம் நற்கலை நற்றவம் உடையவர்களை இகழ்ந்து பணியாது ஒழுகி, பழிபாவங்களைத்தேடி, புண்ணியம் புகழ் அறங்களைப் போக்கி, பிறப்பு இறப்புக்களில் மீண்டும் உழலுதற்கு ஏதுவான தீவினை செய்து, பாம்பு தன்னை இரை அருத்தியவர்க்கு விடம் கொடுப்பது போலத் தாமும் செய்ந் நன்றி கொன்று, கொடுமையே புரிந்து வாழ்வார் ஆவார், நூல் பயிலத் தகாதோர். (இ. கொ. 10)

நூல் பயிலும் இயல்பு -

{Entry: P16b__372}

நூற்பயிற்சி செய்யும் தன்மைகளாவன: உலகவழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இருவகை வழக்கினையும் அறிதல், மூலபாடங் களை மறவாமை, ஆசானிடத்துக் கேட்ட நூற்பொருளைப் பலகால் சிந்தித்தல், ஆசானை அடுத்து முன் பாடம் கேட்ட வற்றைக் குறைவு தீர மனத்தில் படியுமாறு மீண்டும் கேட்டல், ஏனைய மாணாக்கரொடு பழகுதல், தான் ஐயுற்ற பொருள் களை அவர்களை வினவி அறிதல், அவர்கள் தன்பால் வினவியவற்றிற்குத் தான் விடை கூறுதல் என்பனவாம். இவற்றை மாணாக்கன் தனக்கு முறைமையாகக் கொள்ளின் அவனது அறியாமை மிகவும் நீங்கும். (நன். 41)

நூல்யாப்பு -

{Entry: P16b__373}

நூல் யாக்கப்படும் அமைப்பு; விரிந்து கிடந்த முதல்நூற் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல், ஆண்டுத் தொக்குக் கிடந்த செய்திகளை விரித்துக் கூறுதல், சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் கூறுதல், ஒருமொழியி லுள்ள நூலை மற்றொரு மொழியிற் பெயர்த்துக் கூறுதல் என இது நான்கு வகைப்படும். நூல்+யாப்பு - இடையே இகரச் சாரியை பெற்று ‘நூலியாப்பு’ எனப் புணரும்.(நன். 50)

நூல் வழக்கு -

{Entry: P16b__374}

1. செய்யுள் வழக்கு 2. சாத்திரமுறை. (சீவக. 214 உரை) (L)

நூலழகு பத்து -

{Entry: P16b__375}

சுருங்கச் சொல்லுதல், சொற்கள் சுருங்கச் சொல்லினும் பொருள் நன்கு விளங்க வைத்தல், படிப்பவர்க்கு இன்பம் தருதல், நல்ல சொற்களைப் புணர்த்தல், சந்த இன்பம் உடையதாதல், ஆழ்ந்த கருத்துக்களையுடையதாதல், படலம் ஓத்து சூத்திரம் என்னு மிவற்றை ஏற்ற முறைப்படி வைத்தல், உயர்ந்தோர் வழக்கத்தொடு மாறுபடச் சொல்லாமை, சிறந்த பொருளைப் பயத்தல், எளிதில் விளங்கத்தக்க உதாரணங் களை உடையதாதல் - என்னும் இவை. (நன். 13)

நூலாசிரியன் -

{Entry: P16b__376}

இலக்கணநூலை இயற்றியோன். (அதனைப் பாடம் சொல்லு வோன் நூலுரை ஆசிரியன்) (L)

நூலிலக்கணம் -

{Entry: P16b__377}

‘நூல்’ காண்க.

நூலிற் பிழைபாடு இலனாதல் -

{Entry: P16b__378}

ஒரு நூலினை ஒருமுறை பாடம் கேட்ட மாணாக்கன், மீண்டும் ஒரு முறை கேட்பானாயின், அவன் அந்நூற்கண் பிழைபடுதல் மிகவும் இலன் ஆவன். (மூன்றாம் முறையும் கேட்பானேல், தான் முறை அறிந்து பிறர்க்குச் சொல்ல வல்லனாம்.) (நன். 42)

நூலின் இருவகை -

{Entry: P16b__379}

மரபு நிலையில் திரியாதவாறு எல்லாரானும் உரைக்கப்படும் நூல். முதல்நூல் எனவும் வழிநூல் எனவும் கருதிக் கொள் ளும் அடிப்பாட்டான் இருவகைப்படும். (தொ. பொ. 648 பேரா.)

நூலின் பகுதி -

{Entry: P16b__380}

ஒரு பொருள் நுதலிய சூத்திரம், இனமொழி கிளந்த ஓத்து, பொதுமொழி கிளந்த படலம், மூன்று உறுப்பு அடக்கிய பிண்டம் என நூலின் பகுதிகள் கூறப்படும். பிண்டத்தை உள்ளடக்கிய பிண்டி என்பதும் உண்டு.

சூத்திரம் மாத்திரம் அமைந்த நூல் - இறையனார் அகப்பொருள்

சூத்திரமும் ஓத்தும் அமைந்த நூல் - யாப்பருங்கலம்.

சூத்திரம், ஓத்து, படலம் மூன்றும் அமைந்த நூல் - தொல் காப்பியம், நன்னூல்.

பிண்டத்தை அடக்கிய பிண்டி - அகத்தியம் (இயல், இசை, நாடகம் என்ற மூன்று பின்டத்தையும் அடக்கியது.) (தொ. செய். 168).

நூலின் வகை -

{Entry: P16b__381}

‘நூலின் இருவகை’ காண்க. சார்பு நூல் என மூன்றாம் வகை கூறப்படுவது தொல்காப்பியர்க்கு உடன்பாடன்று என்பது பேராசிரியர் உரை. (தொ. மர. 648).

பிற்காலத்தார் முதல்நூல் வழிநூல் சார்புநூல் என மூன்றாகக் கூறுப. (நன். 5)

நூலின் விகற்பம் -

{Entry: P16b__382}

இலக்கணம் என்று பொருள்படும் நூல், முதல் வழி சார்பு என மூவகைப்படும். (யா. க. பாயிரம் உரை)

நூலினது வரலாறு -

{Entry: P16b__383}

நூல் பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரங்களையும் முன்னேயுடையதாய், முதல் வழி சார்பு என மூவகையுள் ஒன்றாய், நால்வகை உறுதிப்பொருள்களாகிய பயனைத் தருவதாய், எழுவகை மதங்களையும் தழுவி, பத்து வகைக் குற்றங்களையும் நீக்கிப் பத்துவகை அழகுடன் அமைந்து, முப்பத்திரண்டு உத்திகளைக் கொண்டு, ஓத்து படலம் என்னும் உறுப்புக்களோடு, அவற்றுள் சூத்திரங்களைக் கொண்டு, காண்டிகையும் விருத்தியும் ஆகிய வேறுபட்ட நடைகளைப் பெற்று வரும். (நன். 4)

நூலினை இன்னார்க்கு ஈதல் வேண்டும் என்பது -

{Entry: P16b__384}

‘நூல் உரைக்கத் தக்கார்’ காண்க.

நூலுக்குப் பெயரிடும் வகை -

{Entry: P16b__385}

ஒரு நூற்கு, அந்நூற்கு முதனூலும், அந்நூல் செய்தோனும், அந்நூலின் அளவும், அந்நூலுள் சொல்லப்பட்ட மிகுதி யான பொருளும், முழுமைப் பொருளும், அந்நூலாசிரியற் குப் பொருளுதவி செய்தல் முதலியவற்றால் அதனைச் செய்வித் தோனும், அந்நூலின் தன்மையும் (-குணமும்) இவை முதலாகிய காரணங்களானும், காரணம் கருதாது இடுகுறி யானும் பெயர் எய்தும்; நூலின் தொடக்கமாகிய முதற்குறிப் பினாற் பெயர் எய்துதலும் சிறுபான்மை.

இவற்றுக்கு எடுத்துக்காட்டாக முறையே தமிழிலுள்ள இராமாயணம், பாரதம்; அகத்தியம், திருவள்ளுவர்; பன்னிருபடலம், நாலடி நானூறு; (இறையனார்) களவியல்; அகப்பொருள்; இளந்திரையம்; சிந்தாமணி, நன்னூல்; கலைக்கோட்டுத்தண்டு - எனக் காண்க. ஆத்திசூடி, கண்ணி நுண் சிறுத்தாம்பு முதலியன முதற்குறிப்பினாற் போந்த பெயர்கள். (நன். 49)

நூற்குற்றம் பத்து -

{Entry: P16b__386}

குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களின் குறைவு படக் கூறுதல், அவற்றின் மிகுதிப்படக் கூறுதல், பயனின்றி முற் கூறியதனையே மீண்டும் கூறுதல், முன் கூறியதற்குப் பிற்கூறியது மாறுபடக் கூறுதல், குற்றமுடைய சொற்களைப் புணர்த்தல், பொருள் இதுவென துணியக் கூடாதவாறு மயங்கக் கூறுதல், பொருளாகிய கருக்கொள் ளாது வெளிறு படக் கூறுதல், சொல்லப்புகுந்ததனைச் சுருங்க வுரைத்துவிட்டு இடையே தொடர்பில்லாததனை விரித்துக் கூறுதல், நூல்தொடக்கம் முதல் முடிவுகாறும் சொற்செறிவு பொருட் பொலிவு தொடரப் பெறாது செல்லச்செல்லத் தேய்ந்து முடியக் கூறுதல், பயனில சொற்களைப் பெய்து கூறுதல் - என இவை. (நன். 12)

நூற்பயன் -

{Entry: P16b__387}

நூல் கேட்டு விளங்கிய நுண்ணுணர்வினோன், அபாயம் இல்லாததோர் உபாயத்தினால் அறம் பொருள் இன்பம் வீடு என இவற்றை நிரம்புமாறு அறிந்து நிகழ்த்துமாற்றான், அந்நான்கனையும் முறையானே நூல் பயப்பதாம். (யா.க. பாயிர உரை)

அறம் முதலிய உறுதிப்பொருள் நான்கனையும் நூல் பயின்றோன் அடைதல் நூற்பயனாம். (நன். 10 )

பயனாவது இது கற்க இன்னது பயக்கும் என்பது. (பா. வி. பக். 7)

நூற்பாவின் அழகு -

{Entry: P16b__388}

சொற்குற்றம் பொருட்குற்றம் இன்றி அமைதல், சுருங்கச் சொல்லல் என்னும் வனப்போடு அமைதல், முறை பிறழாமல் செய்திகள் அமைதல், நுட்பமான கருத்துக்களைக் கொண்டு அமைந்து பல நூற்பாக்களுக்கும் உதவுதல், தனது இன்றிய மையாமையால் தான் நீக்கப்படாத சிறப்புடன் திகழ்தல், சுருங்கச் சொன்னாலும் அளவுபடாத அரும்பொருளை அடக்கியிருத்தல் என்பன நூற்பாவின் அழகாம்.

சூத்திரத்திற்குப் பாயிரமாகக் கூறவேண்டும் செய்திகளைச் சூத்திரமாகச் செய்தல், சூத்திரத்தின் காண்டிகையுரையைச் சூத்திரமாகச் செய்தல், சூத்திரத்தின் கருத்துப்பொருளை எடுத்துக் கூறுதல், போலியான் எய்திய உரையை நீக்கி உண்மையுரையைக் கூறுதல் - என உரைநிலை நால்வகை யாகச் செய்யப்படும் திறத்துடனே குற்றமற நாடிப் புணர்க்கப் படுதலும் அழகாக எண்ணப்பட்டது. (இ. வி. பாட். 133)

நூற்பாவின் கிடக்கை முறை -

{Entry: P16b__389}

நிறுத்த முறையானே கூறும் யாற்றது ஒழுக்கு, இடைவிட்டுக் கூறும் தேரைப்பாய்வு, முன்னும் பின்னும் பொருள் எய்தக் கூறும் சீயநோக்கு, நடுக்கொண்டு கூறும் பருந்தின் வீழ்வு என நான்காம். ‘சூத்திரநிலை’ காண்க. (இ. வி. பாட். 132)

நூற்புணர்ப்பு -

{Entry: P16b__390}

தந்திரஉத்தி; ‘இதுயோக விபாகம் என்னும் நூற்புணர்ப்பு’ (தொ. சொ. 11. சேனா.) ( L)

நூற்பெயர்க்குச் சிறப்புவிதி -

{Entry: P16b__391}

‘நூலுக்குப் பெயரிடும் வகை’ காண்க.

நூற்பெயர் விகற்பம் -

{Entry: P16b__392}

நூல் பெயர் பெறுமிடத்து, செய்தான் செய்வித்தான் இடு குறி அளவு சிறப்பு முதலான பல விகற்பத்தாலும் நிகழும். அகத்தியம், தொல்காப்பியம் - சாதவாகனம், இளந்திரையம் - நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு - பன்னிருபடலம் - களவியல் - என்பன முதலாக இவற்றுக்கு உதாரணம் முறையே காண்க. (பா. வி. பக். 6)

நூற்பொருள் -

{Entry: P16b__393}

1. நூலிற் கூறப்படும் பொருள். 2. நூல் அட்டவணை (L)

நூன்முகம் -

{Entry: P16b__394}

1. பாயிரம் (திவா. பக் 231) 2. நூலினது தொடக்கம். 3. நூற் றுறை (யாழ். அக) (L)

நெய்யரி உவமமாதல் -

{Entry: P16b__395}

கற்பிக்கப்படுவோனாகிய நன்மாணாக்கற்கு அமைந்த உவமை ஆறனுள் ஒன்று (நன்னூலார் கடைமாணாக்கர்க்கு இவ் வுவமை காட்டியமை பொருந்தாது என்பர் அரசஞ்சண் முகனார்.)

நெய்யரி என்பது வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை.நெய்தல்-மயிர்போல்வனவாகிய பல மென்மைப் பொருள்களை இணைத்தல். அரி-ஐம்மை (-மென்மை) யுடைய பொருள்களை உணர்த்தலான் ஆகு பெயர். நெய்த அரியினை யுடையது நெய்யரி எனப்பட்டது. நெய்யரி யாவது பன்னாடை; பன்னியதாகிய ஆடை என இருபெயரொட்டு. பன்னுதல்-பின்னுதல், நெய்தல்; ஆடை-உவம ஆகுபெயரால், ஆடை போல மரத்தின் அரையினைச் சுற்றும் பொருளை உணர்த்திற்று. தேன் முதலாய நற் பொருளைக் கொண்டு கோதினைத் தள்ளுதற்கு நெய்யரி கருவியாகப் பயன்படுதலின், ஆசிரியன் சொல்லியவற்றுள் நற்பொருளையே கொண்டு அல்லவற்றை நீக்கக் கடவ நன் மாணாக்கற்கு அதனை உவமை கூறினார்.(பா.வி.பக். 139, 154)

நேரினமணி -

{Entry: P16b__396}

‘நேர் இன மணி’ எனவே, ஒரு சாதியின்கண்ணும் தம்மில் ஒத்தனவே ஓத்தின்கண் கூறல் வேண்டும் என்பது. (தொ. செய். 170 நச்)

ப section: 96 entries

படலத்தின் இலக்கணங்களை ஒரு சூத்திரத்தில் தொகுத்தல் -

{Entry: P16b__397}

சார்புநூலின் வேறுபாடுகளுள் இதுவும் ஒன்று.

எ-டு :

எழுத்ததிகாரத்தின் இலக்கணங்களை ‘எண் பெயர் முறை பிறப்பு’ (இ.வி. 8) எனவும்,

சொல்லதிகாரத்தின் இலக்கணங்களைத் ‘தனிமொழி தொடர் மொழி’ (160) எனவும்,

பொருளதிகாரத்தின் இலக்கணங்களைப் ‘போக்கறு மரபின் பொருளெனப் படுவது’ (374) எனவும் கூறுதலாம். (இ. வி. பாட். 142 உரை)

படலத்தின் இலக்கணம் ஓத்தில் கிடத்தல் -

{Entry: P16b__398}

சார்புநூற்குச் சொல்லப்பட்ட ‘திரிபு’ எனப்பட்டவற்றுள் ஒன்று. அஃதாவது ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்ததி காரத்தில் கூறிய பொதுவகையான் புணரும் இயல்பும், விரிந்த சூத்திரப் பொருள அன்றித் தொக்குப் புணரும் இயல்பும், குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் நின்று புணரும் இயல்பும் இந்நூலுள் உயிரீற்றுப்புணரியலில் கூறப்படுதலும்;

சொல்லதிகாரத்தில் கூறிய வேற்றுமையியலும் வேற்றுமை மயங்கியலும் விளிமரபும் இந்நூலுள் பெயரியலில் கூறப் படுதலும்;

பொருளதிகாரத்தில் களவியலும் கற்பியலும் பொருளியலும் மெய்ப்பாட்டியலும் அகத்திணையியலில் கூறப்படுதலும் ஆம். (இ. வி. பாட். 142 உரை)

படலத்து ஒழிபோடு பிண்டத்து ஒழிபு சேர்ந்து கிடத்தல் -

{Entry: P16b__399}

சார்புநூற்குச் சொல்லப்பட்ட ‘திரிபு’ எனப்பட்டவற்றுள் ஒன்று. அஃதாவது, பாட்டியலுள் கூறப்படும் பாட்டின் இயல் முதலிய ஏழும் (பாட். 1) படலத்து ஒழிபு எனவும், மரபு முதலிய ஏழும் (பாட்.1) பிண்டத்து ஒழிபு எனவும் சேர்ந்து நிற்றலாம். (இ. வி. பாட். 142 உரை)

பசுவின் பொதுப்பெயர் -

{Entry: P16b__400}

பெற்றம், எருமை, மரை, இம்மூன்றற்கும் பசு என்னும் பெண் பாற்பெயர்(ஆ) பொதுப்பெயராம். புனிற்றா, செங்கட் காரான், மரைஆ எனக் காண்க. (தொ. மர. 60. பேரா.)

பத்துவகை அழகுகள் -

{Entry: P16b__401}

சிதைவு எனக் கூறப்பட்ட பத்தனையும் எதிர்மறுத்துணரின் அழகு பத்தும் பெறப்படும் என்றார் தொல்காப்பியனார். அவை யாவன கூறியது கூறாமை, மாறுகொளக் கூறாமை, குன்றக் கூறாமை, மிகைப்படக் கூறாமை, பொருளில மொழியாமை, மயங்கக் கூறாமை, கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆகாமை, பழித்த மொழியான் இழுக்கம் கூறாமை, தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறாமை, என்ன வகையினும் மனங்கோள் உடைமை என்பன. (தொ. மர. 109 பேரா.)

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழ முடைத்து ஆதல், முறையின்வைப்பு, உலக மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல் என இவை. இவை ‘மாண்பு’ எனவும் குணம் எனவும்படும். (நன். 13)

சூத்திரம் சில்வகை எழுத்தால் செறிந்து அகலாத நடைத்து ஆதல், ஆழ்ந்த பொருளுடைத்தாதல், இலக்கண வல்லுநர்க் குப் பொருள் புலப்படுவதாதல், பொருள்நலம் உடைத்தாதல், சொல்நலன் உடைத்தாதல், ஓசையினிமை யுடைத்தாதல், கற்றோர்க்குப் பயன் தருவதாதல், உலகத்தொடு மாறு படாமை, உதாரணம் புணர்ப்பதாதல், கற்குந்தோறும் புதுவதாய் இன்பம் பயத்தல் என இவை. (மா.அ. 24) (ஈண்டு அழகுபத்தும் காண்க.)

பத்துவகைக் குற்றம் -

{Entry: P16b__402}

கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னால் ஒரு பொருள் கருதிக் கூறல், என்ன வகையினும் மனம் கோளின்மை என இவை. இவை ‘சிதைவு’ எனப்படும். இவற்றுள் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல் என்ற ஐந்தும் வழுவமைதியாகத் தழுவிக்கொள்ளப்படும். (தொ. மர. 108 உரை)

குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூச்சொல் புணர்த்தல், மயங்கவைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயனின்மை என இவை. (நன். 12)

பொருளில கூறல், கேட்போர்க்குப் பொருள் விளங்காமல் மருளுதற்கு இடனாதல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றா தல், குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், எடுத்த யாப்பிற்கு இணங்கும் ஓசையின்றிக் கூறுதல், எதிர் மறுத் துணர்த்துதல் என இவை. (மா. அ. 23)

பத்து விதங்கள் -

{Entry: P16b__403}

சொல், சொற்பொருள், சோதனை, மறைநிலை, இலேசு, எச்சம், நோக்கு, துணிபு, கருத்து, செலுத்துதல் எனப் பத்து வகைப்படும் இலக்கண உரை. (யா. க. பாயிரம் உரை)

பதின்மாசு -

{Entry: P16b__404}

பத்துவகைக் குற்றம். (சாமி. 3)

பதின்மூன்று திறம் -

{Entry: P16b__405}

சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத் தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் நாட்டல், ஆசிரியவசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் - என இவை. (யா. க. பாயிரஉரை.)

பதின்மூன்றுவகை உரை -

{Entry: P16b__406}

சூத்திரம் தோன்றல் முதலாகிய பதின்மூன்று திறம்; அது காண்க.

பயன் கூறற்குக் காரணம் -

{Entry: P16b__407}

“இன்னார் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்தமையான் இஃது உயர்வுடைய நூலாம்” என மாணாக்கன் அறிந்தானாயினும், “இந்நூல் கற்க இன்ன பயக்கும்” என அறியானாயின் கற்ற லின்கண் ஊக்கம் செல்லாமையான், பயன் கூறல் வேண்டும் என்பது. (பா. வி. பக். 191)

சிறப்புப் பாயிரம் கூறுவனவற்றுள் இதுவும் ஒன்று.

பயன்வகை -

{Entry: P16b__408}

ஈகை எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதலும், கொள்வோ னான் நன்கு மதிக்கப்படுதலும், அதனை அவன் பெற்றடைந்த பயன் காரணமாக ஈவோனுக்கு இம்மையில் உளதாகிய பயனும், ஈதல் காரணமாக இம்மை மறுமை யிரண்டிலும் உளதாகிய பயனும்’ - எனப் பயன் நான்கு வகைப்படும். (பா. வி. பக். 126)

பயனுக்குப்பயன் -

{Entry: P16b__409}

ஒருவன் எழுத்து அறியவே, அவனது இழிதகைமை நீங்கும். அவன் அது நீங்கப்பெறின், மொழித்துறைக்கண் இடர்ப்பாடு களைக் களைந்து தெளிவு பெறுவான்; அத்தெளிவு பெறின், முதல்வன் இயற்றிய நூற்பொருளையுணர்ந்து அவா அறுத்து மெய்யுணர்வால் வீடு பெறுவான். இது பயனுக்குப் பயனாம். (பா. வி. பக். 198)

பரிபாடைச் சூத்திரம் -

{Entry: P16b__410}

தந்திரஉத்தியுள்ளேபட்டு அடங்குமாறு செய்திகளைக் கூறும் சூத்திரம். (யா. க. பாயிர உரை.)

பருத்திக் குண்டிகை இயல்பு -

{Entry: P16b__411}

பஞ்சினை உள்ளே அடைக்கக் கொண்டபோதும் அரிதா கவே உட்கொண்டு, வெளிப்படுத்தும்போதும் இன்னும் அரிதாக மிகச் சிறுகச் சிறுகவே கொடுக்கும் இயல்பிற்றுப் பருத்திக் குடுக்கை.

நல்லாசிரியன் அல்லாதானும் தான் பாடம் கற்ற காலத்தும் ஆசிரியன் மிக முயன்று கற்பிக்கச் சிறிது சிறிதாக அக்கல்விப் பொருளை ஏற்று, பின்னர் மாணாக்கற்கு ஈயும் காலத்தும் இன்னும் அரிதாக மிகவும் சிறுகச் சிறுகவே ஈயும் இயல் பினன் ஆவான்.

இவ்வாற்றால் நல்லாசிரியன் அல்லாதானுக்குப் பருத்திக் குன்டிகை உவமையாம். (நன். 34)

பருத்திக் குண்டிகையும் ஆசிரியரும் -

{Entry: P16b__412}

நல்லாசிரியர் அல்லாதார்க்குப் பருத்திக் குண்டிகை உவம மாமாறு ‘பருத்திக் குண்டிகை இயல்பு’ என்பதன்கண் காண்க.

பருந்தின் விழுக்காடு, பருந்தின் வீழ்க்காடு -

{Entry: P16b__413}

பருந்தின் வீழ்வு என்னும் சூத்திர நிலை; பருந்து நடுவேயிருந்து தான் கருதும் பொருளை எடுத்துக்கொண்டு போவது போலப் பல சூத்திரங்களின் தொடர்பால் முடிக்கப்படும் பொருளை முடித்துப் போம் இயல்பினது இது. (இறை. அ. 4 உரை)

மகரக்குறுக்கம் கூறும் சூத்திரம் ‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக் குறுகும்’ (நன். 96) என்பது, ‘லள மெய்திரிந்த’ (120) என்ற நூற்பாச் செய்தியின் தொடர்பால் முடிக்கப்பட்ட வாறு காண்க.

பருந்தின் வீழ்வு -

{Entry: P16b__414}

சூத்திர நிலை நான்கனுள், முன்பின் சூத்திரங்களோடு இயைபில்லாது சேய்மையிலுள்ள சூத்திரத்தினோடு இயைபு பட்டு நிற்பது. (நன். 19)

பருப்பொருள் -

{Entry: P16b__415}

நூலின் பிண்டப்பொருள். ‘பருப்பொருட்டாகிய ‘பாயிரம்’. (இறை. அ. 1 உரை) (L)

‘பல்புகழ் நிறுத்த படிமையோன்’

{Entry: P16b__416}

பல்புகழையும் மாயாமல் நிறுத்திய தவ ஒழுக்கத்தை யுடையோன் (தொல்காப்பியன்) என்றவாறு. பல் புகழாவன; இயற்கையாகிய நுண்ணறிவானும் செயற்கையாகிய கல்வி அறிவானும் வந்த புகழும், அவ்வறிவானே நூல் இயற்றி நமக்கும் பயன்பட அளித்த புகழும், தவ வொழுக்கத்தான் வந்த புகழும், அவ்வொழுக்கத்தான் ‘ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்’ ‘கூற்றம் குதித்தலும்’ முதலாயினவும் ஞானமும் அமைதலான் வந்த புகழும் - என இவை. (பா. வி. பக். 186)

பல்புகழாவன: ஐந்திரம் நிறைதலும், அகத்தியத்தின்பின் இந்நூல் வழங்கச் செய்தலும், அகத்தியனாரைச் சபித்த பெருந்தவத் தன்மையும், ஐந்தீநாப்பண் நிற்றலும், நீர்நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் மிகுதலும், பிறவுமாம். (தொ. சிறப்புப். நச்.)

‘பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல’ -

{Entry: P16b__417}

தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; ஒரு நூற்பாவின் அமைப்புப் பல பொருள்களும் கொள்ளுதற் கேற்ற சொற்றொடரைப் பெற்றிருப்பினும், தெளிவு கருதி அதனை ஒரு பொருளையே தருவதாக மாற்றி அமைக்காது, பயில்வோர் அந்நூற்பாவின் பல பொருள்களில் நல்ல பொருளையே கொண்டு பயனுறுவார் என்று விடுத்தல்.

எ-டு :

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி

இருபாற்கு முரித்தே சுட்டுங் காலை (தொ. சொல். 193 நச்.)

என்புழி, ஒருவர் என்ற சொல் இருபாலாரையும் தழுவி நிற்கும், அச்சொல்லான் இருபாலாரும் சொல்லப்படுவர் என இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். ஆயின், அடுத்த நூற்பா அது பன்மைவினையைக் கொண்டு முடியும் என,

‘தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும்’ (194)

என்றமைவதால், “அஃது இருபாலாரையும் தன்கண் தழுவி நிற்கும்” என்று பொருள்செய்வதே அது பன்மைவினை கோடற்கு ஏற்றது எனக் கொள்ள உதவும் உத்திவகை இது.

நீயிர் என்று எழுவாய்வேற்றுமையாகத் திரியும் நும் என்ற சொல் உருபேற்கும் போது சாரியை பெறாது என்ற கருத்தை.

‘நும் என் இறுதி இயற்கை யாகும்.’ (தொ. எ. 187 நச்.) என்ற நூற்பாவிற் கொண்டு, ‘நுங்கண்’ என்புழி (சாரியைபெறாமல்) மகரம் ஙகரமாகத் திரிதலைக் கோடல் இதன் இனமாகும். (தொ. பொ. 665 பேரா.)

இவ்வுத்திவகை ஒருபுடைச்சேறல் எனவும் ஏற்புழிக் கோடல் எனவும் பெயர் பெற்றது.

‘பழித்தமொழியான் இழுக்கம் கூறல்’ -

{Entry: P16b__418}

நூற்குப் பயன்படாக் குற்றங்களுள் ஒன்று; தவறான கொச்சைச் சொற்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் புணர்ச்சி முதலிய வற்றிற்கு விதி கூறுதல் போல்வன.

‘விள’ என்பதே இயல்பான சொல். அதனை விடுத்து ‘விளாம்’ என்பதனை இயல்பான சொல்லாகக் கொண்டு அது ‘பழம்’ என்ற சொல்லொடு ‘விளாம்பழம்’ என இயல் பாகப் புணரும் என்று கூறுதல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு.

விளாமென் இறுதி பழமொடு புணரின்

தளாவியற் றன்றி இயற்கை யாகும்

என்று சூத்திரம் செய்தல் போல்வன பழித்த மொழியான் இழுக்கம் கூறலாம். (தொ. பொ. 663 பேரா.)

பறழ் -

{Entry: P16b__419}

இஃது இளமைமரபு பற்றிய பெயர்களுள் ஒன்று; மூங்கா, வெருகு, எலி, அணில், குரங்கு, நாய், பன்றி, புலி, முயல், நரி - இவற்றின் இளமையைக் குறிக்க நிகழும். (தொ. மர. 1, 7, 10 )

பாட்டி -

{Entry: P16b__420}

1. பெண்பாலையுணர்த்தும் இம்மரபு பற்றிய பெயர் பன்றி, நாய், நரி என்னும் மூன்றற்கும் உரித்து. (தொ. மர. 65. 66 பேரா)

2. பாடல்மகள்; ‘பாணர் வருக பாட்டியர் வருக’ (மதுரைக். 749) (L)

பாடங்கேட்கும் முறை -

{Entry: P16b__421}

கோடல் மரபு - நோக்குக.

பாடம் சொல்லுதல் வரலாறு -

{Entry: P16b__422}

ஆசிரியன் தனக்கும் தன் மாணாக்கர்க்கும் உரிய காலத்தையும் இடத்iதையும் நன்றாக ஆய்ந்துபார்த்து, மேம்பட்ட இடத்தில் வீற்றிருந்து, தான் வழிபடும் கடவுளைத் துதித்து, தான் பாடம் சொல்லப்படும் பொருள்களைத் தன் மனத்தே முறையே கொண்டு, விரைவின்றி, கோபமின்றி, முகம் இனிய னாய், மாணாக்கன் பாடத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அறிந்துகொண்டு அவன் உள்ளத்தில் கொள்ளுமாறு அந் நூற்பொருள்களைக் கற்பித்தலே அவன் பாடம் சொல்லும் வரலாறாம். (நன். 36)

பாயிர இலக்கணம் -

{Entry: P16b__423}

பொது எனவும், சிறப்பு எனவும் பாயிரம் இருவகைத்து. பாயிரமாவது வரலாறு. நூலினது வரலாறு, நூலைக் கற்பிக்கும் ஆசிரியனது வரலாறு, அவன் மாணாக்கனுக்கு நூலைப் பாடம் சொல்லும் வரலாறு, மாணாக்கனது வரலாறு, அவன் பாடம் கேட்டலினது வரலாறு - என்னும் இவற்றை விளங்கச் சொல்வது பொதுப்பாயிரமாம். நூலைச் செய்தவனது பெயர், நூல், வந்தவழி, நூல் வழங்கும் நிலத்து எல்லை, நூற்பெயர், தொகுத்தல் முதலிய நூல் யாப்பு, நூலிற் சொல்லப்பட்ட பொருள், நூல் கேட்டற் குரிய அதிகாரிக ளாவார் இவர் என்பது, நூல் கற்றதன் பயன் என்னும் எட்டனையும் நூல் செய்த காலம், நூல் அரங்கேறிய சபை, நூல் செய்த காரணம் என்ற மூன்றனொடும் சேர விளங்க உணர்த்துவது சிறப்புப் பாயிரமாம். (நன். 2, 3; 47, 48).

பாயிரத்தின் இன்றியமையாமை -

{Entry: P16b__424}

கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போலப் பருப்பொருட்டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும். ‘ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிரமில்லது பனுவ லன்றே’ என்றமையானும் பாயிரம் இன்றியமையாதது என்பது. (தொ.பாயிரம்.இள.)

பாயிரத்தின் வேறுபெயர்கள் -

{Entry: P16b__425}

முகவுரை (-நூற்கு முன் சொல்லப்படுவது), பதிகம் (ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள் களையும் தொகுத்துச் சொல்வது), அணிந்துரை (-நூலின் பெருமை முதலியவற்றை அலங்கரித்துச் சொல்வது), நூன்முகம் (நூற்கு முகம் போல முற்பட்டிருப்பது), புறவுரை (-நூலிற் சொல்லிய பொருளல்லாதவற்றை நூலின் புறத்தே சொல்வது), தந்துரை (-அப்பொருள்களைத் தந்துரைப்பது), புனைந்துரை - என்னும் பெயர்கள். (நன். 1)

பாயிரத்துக்கு உவமைப் பொருத்தம் -

{Entry: P16b__426}

பொதுவும் சிறப்புமாகிய பாயிரத்துக்கு உவமம் கொழுவும், வாயில் மாடமும், பாவையும் ஆம். நூற்கு உவமம் துன்னூசியும், நகரும், சுவரும் ஆம். கொழு, நூலினைச் செலுத்தும் ஊசியின் கூரிய பகுதியாகிய ஊசித்தொளை மேலுள்ள பகுதி; துன்னூசி - நூல் கோத்த காது.

கொழுவானது துன்னூசி நுழைதற்கு வழியாக்குகிறது; பாயிரம் மாணாக்கன் நூலுள் நுழைதற்கு வழியாக்குகிறது. வாயில்மாடம் நகருட் செல்லுதற்கு வழியாக்குவதோடு அழகு செய்தலையு முடையது; பாயிரம் நூலுட் செல்லுதற்கு அவனுக்கு வழியாக்குவதொடு நூலுக்கு அழகு செய்தலையு முடையது. பாவை சுவர்க்கு அணி செய்தலுடையது; பாயிரம் நூற்கு அணிசெய்தலுடையது. (பா. வி. பக். 3, 4)

பாயிரத்துக்குக் கூறிய உவமங்கள் -

{Entry: P16b__427}

துன்னூசி நுழைதற்கு வாயிலாக்கும் கொழு, நகருட் செல்ல வழியாக்குதலும் அணிசெய்தலுமுடைய வாயில் மாடம், சுவர்க்கு அழகு செய்ய வரையப்படும் பாவை என இம் மூன்றும் இரு வகைப்பாயிரத்துக்கும் உவமங்கள்.

தனது கலையின் வளர்ச்சிக்குத் தகப் புறத்திருளை நீக்கி ஆகாயத்தை விளக்கும் திங்கள், நாண் துறவாக் குலமகட்கு அழகு செய்யும் அணி, அடங்கா யானையை அடக்கித் தன் குறிப்பின்வழி நடத்தும் பாகன் என இம்மூன்றும் பொதுப் பாயிரத்திற்கு உவமங்கள்.

எஞ்ஞான்றும் ஒருபடித்தாக ஆகாயத்தை விளக்கும் ஞாயிறு, நாண் துறவாக் குலமகட்கு அணியினும் இன்றியமையாததாகிய ஆடை, தன் கணவன் கற்பித்தவழி நிற்றலுடையளாகிய கற்புடைய மனைவி என இம்மூன்றும் சிறப்புப் பாயிரத்திற்கு உவமங்கள். (பா. வி. பக். 3, 4)

பாயிரத்தோடு ஒத்த இலக்கணத்தன -

{Entry: P16b__428}

பாயிரம் ஈண்டுச் சிறப்புப்பாயிரம் என்க. ஆக்கியோன் பெயரன்றிச் செய்வித்தோன் பெயரும் உரைசெய்தான் பெயரும் கூறுதலும், தன் நூலுக்கே யன்றி அதன் முதல் நூலுக்கும் வழி கூறுதலும், நூலுக்கே அன்றிப் படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் பெயர் கூறுதலும், பெயரே அன்றித் தொகை முதலாய பிறவும் கூறுதலும், நூலது பிண்டத்திற்கே அன்றி அதற்கு உறுப்பாகிய படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் இன்னது நுதலின எனக்கூறுதலும், பயனே அன்றிப் பயனுக் குப் பயன் கூறுதலும், பாயிரம் கூறினார் பெயர் கூறுதலும், பாயிரத்துக்கு இலக்கணம் கூறுதலும், அவை போல்வன பிறவும் ஆம். (பா. வி. பக். 193)

பாயிரம் (1) -

{Entry: P16b__429}

பனுவலின் முகத்துத் திலகம் போல்வது பாயிரம். பொதுப் பாயிரம்தான் தெய்வக் காப்பும், கொள்வார் செயலும், நூல் நுவன்ற காரணமும், நூல் கேட்ட பயனும், பிறவும் கூறும். சிறப்புப்பாயிரம்தான் நூலாசிரியன் பெயரும், அரங்கேற்றிய நல்லரங்கமும், நூலினது புகழும், பிறவும் கூறும். பாயிரத்தி னும் நூறு மடங்கு உறுவது தெய்வ வணக்கம். இழிந்த நூல் பாயிரத்தால் உயர்வுறாது; நல்ல நூல் பாயிரமின்றியும் இழிவுறாது. ஆயினும் தெய்வத்துதியொடு நூற்பெயர் மாத்திரமாவது பகர்ந்து நூல் தொடங்குவது அழகாம். (அறுவகை. பனுவலியல்பு. 7-11)

பாயிரம் (2) -

{Entry: P16b__430}

1. முகவுரை, 2. பொருளடக்கம், 3. வரலாறு. (L)

பாயிரம் நூற்கு இன்றியமையாமை -

{Entry: P16b__431}

நுட்பமான செய்திகள் பிறர்க்குப் புலப்படாதவற்றையெல் லாம் தோற்றுவித்து, பல துறைகள் அமையப் பெரிய நூலைச் செய்து முடித்தாலும், தானே தற்புகழ்ந்து கொள்ளுதல் தக்கதன்றாம். (ஆகவே, நூல் செய்தவனுடைய புகழைப் பிறர் சிறப்புப் பாயிரமாகக் கூறல். வேண்டும்). (நன். 52)

மிகப்பலவாகிய வகைகளால் விரிந்த நூலாயினும் பாயிர மில்லாதது நூல் அன்றாம். (தொ. பாயிரம் இள.)

பாயிர வகை -

{Entry: P16b__432}

பொதுப்பாயிரமும் சிறப்புப் பாயிரமும் எனப் பாயிரம் இருவகைத்து. (நன். 2)

பார்ப்பு -

{Entry: P16b__433}

பறப்பனவற்றுக்குரிய இளமைமரபு பற்றியதொரு பெயர். (தொ. மர. 4)

பாரகாவியம் -

{Entry: P16b__434}

பெருங்காப்பியம். ‘பாரகாவிய மெலா மீரிரு தினத்தினிற் பகர’ (தமிழ்நா. 221) (L)

பிடி -

{Entry: P16b__435}

யானைக்குரிய பெண்பால் மரபு பற்றிய பெயர்; பெண்யாiன என்றவாறு. (தொ. மர. 51)

பிண்டஉரை -

{Entry: P16b__436}

பதங்கள் நீங்க உரைமாத்திரம் திரட்டிச் சொல்லப்படும் பொழிப்புரை. (L)

பிண்டசூத்திரம் -

{Entry: P16b__437}

தலைமைப் பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம். ‘நன்கியம்புவன் எழுத்தே’ (நன். 56) போல்வன. (நன். 20)

பிண்டத்தான் இயன்ற நூல் -

{Entry: P16b__438}

சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கிய பிண்டத்தான் இயன்ற நூல்; தொல்காப்பியம் போல்வது. (பா.வி. பக். 111). இயல், இசை, நாடகம் என்ற முக்கூற்றினையும் குறிப்பிட்ட அகத்தியம் ‘மகா பிண்டம்’ எனவும், ‘பிண்டி’ எனவும் கூறப்படும். (மா. அ. பாயிர. 20)

பிண்டி -

{Entry: P16b__439}

பிண்டத்தினை அடக்கி நிற்பது ‘பிண்டி’ எனப்படும். அது முதனூலாகிய அகத்தியம், இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் என மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். (தொ. செய். 172 நச்)

இதனை மாறன் அலங்காரம் ‘மகா பிண்டம்’ என்னும் . (மா. அ. பாயிர. 20).

பிண்டியாக அமைந்த நூல் -

{Entry: P16b__440}

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையுமடக்கிய (பிண்டியாக அமைந்த) அகத்தியம், அவிநயம் முதலாயின (பா.வி.பக். 111), பிண்டத்தினை அடக் கிய வேறொரு பிண்டம் என்று (தொ.செய். 172) நச்சினார்க் கினியர் உரைத்ததாகச் சண்முகனார் குறிப்பிடுகிறார்.

பிணவல் -

{Entry: P16b__441}

பன்றி, புல்வாய் (-மான்), நாய் என்பவற்றின் பெண்ணைக் குறிக்கும் பெண்பால்மரபு பற்றிய பெயர். (தொ. மர. 59 பேரா.)

பிணவு -

{Entry: P16b__442}

பிணவல் போலவே, பிணவு என்பதும் பன்றி, மான், நாய் என்பவற்றின் பெண்மைமரபு பற்றிய பெயர்; புலிக்கும் உரையிற் கொள்ளப்படும். (தொ. மர. 58 பேரா)

பிணா -

{Entry: P16b__443}

உயர்திணைப் பெண்மைக்குரிய மரபு பற்றிய பெயர். (தொ. மர. 61)

பிணை -

{Entry: P16b__444}

புல்வாய், நவ்வி, உழை, கவரி என்பன நான்கற்கும் உரிய பெண்பாலினை யுணர்த்தும் மரபு பற்றிய பெயர். (தொ. மர. 57 பேரா.)

பிள்ளை -

{Entry: P16b__445}

பறப்பன, தவழ்வன, பாம்பு, வெருகு, மூங்கா, பன்றி, புலி, முயல், நரி, குரங்கு, மனிதன், தாவரம் ஆகியவற்றுக்குரிய இளமைமரபு பற்றிய பெயர்; கீரி, நாவி என்பனவும் பிள்ளை என இளமைமரபு பற்றிய பெயரால் வழங்கப்படும். (தொ. மர. 6 பேரா.) (தொ. மர. 4,5, 11, 13, 23, 24 பேரா.)

பிறநூல் முடிந்தது தானுடன் படுதல் -

{Entry: P16b__446}

பிற நூலில் சொல்லப்பட்ட கொள்கையைத்தான் ஏற்றுக் கொள்ளுதல் என்னும் உத்தி. ‘பிறனுடன் பட்டது தானுடன் படுதல்’ என்பது தொல்காப்பியம் கூறும் உத்திவகை.

இராகத்தில் அளவிறந்து ஒலிக்கும் போது உயிர் பன்னிரண்டு மாத்திரை வரையிலும், ஒற்றுப் பதினொரு மாத்திரை வரையிலும் ஒலிக்கும் என்ற இசைநூலார் கொள்கைக்கு நன்னூலார் உடன்பட்டமை இவ்வுத்தி. (நன். 101)

வீரசோழிய உரையாசிரியரும் இவ்வுத்தியைப் பெயர் சுட்டி யுள்ளார், (கா. 180 உரை). இது தந்திர உத்திகள் முப்பத்தி ரண்டனுள் ஒன்று. (நன். 14)

பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல் -

{Entry: P16b__447}

நன்னூல் கூறும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிறர் கருத்தை ஒருபுடை ஏற்றுக்கொண்டு எஞ்சியதை விடுத்தல்.

ஙகரம் மொழி முதலாதலை ஏற்று, அது மற்ற எழுத்துக்கள் போல முதலாகும் என்ற கருத்தை விடுத்து, சுட்டிடைச் சொற்கள் யா - எ - என்னும் வினாஇடைச்சொற்கள் ஆகிய இவற்றின் வழியே அகரத்தொடு கூடிவரும் என்றமை இம்மதம். (நன். 106) (நன். 11)

பிறர்நூல் குற்றம் காட்டல் -

{Entry: P16b__448}

நன்னூலார் கூறும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிறர் செய்த நூல்களில் குற்றத்தை எடுத்துக்காட்டுதல்.

தொல்காப்பியனார், ஈரெழுத்தொருமொழி தொடர்மொழி என இரு கூறாக்கி, இரண்டற்கு மேற்பட்ட எழுத்துடைய மொழியே தொடர்மொழி என்றார்.

நன்னூலார் இரண்டெழுத்து மொழியும் தொடர் மொழியே என்று கூறுவது பிறர்நூலிற் கூறப்பட்ட செய்தியின்கண் குற்றம் கண்டு அதனை மறுத்துக் கூறியதாம்.

‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின் பதமாம்’ (நன். 128) (நன். 11)

பிறர் மதத்தை உடன்படல் -

{Entry: P16b__449}

நன்னூல் குறிக்கும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிற நூலாசிரியர் கருத்தை உடன்பட்டு ஏற்றுக்கோடல்.

ஙகரம் மொழி முதலாகும் என்பார் கருத்தைத் தாமும் உடன்பட்டு ‘ஙனம்’ என்ற சொல்லில் ஙகரம் முதற்கண் வருதலைச் சுட்டினார் நன்னூலார் (106) இஃது உடன்படல்.

‘நெடிலோ டாய்தம்’ (நன். 94) என்ற நூற்பாவில், தொல் காப்பியனார் குறிப்பிடும் அறுவகைக் குற்றியலுகரங் களையும் தாமும் ஏற்றுக் கொண்டமையும் அது. (நன். 11)

பிறர் மதத்தை மறுத்தல் -

{Entry: P16b__450}

நன்னூலார் குறிக்கும் எழுவகை மதங்களுள் ஒன்று; முன்னுள்ளவர் கருத்தை மறுத்துரைப்பது (அல்லது ஏற்றுக் கொள்ளாமை.)

‘நுந்தை’ என மொழிமுதற்கண் குற்றியலுகரம் வரும் என்று தொல்காப்பியனார் குறிப்பிட்டது நன்னூலாருக்கு உடன்பா டன்று; ஆதலால் அதனை அவர் விலக்கியமை, மறுத்தல் என்னும் மதமாம். (நன். 11)

பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல் -

{Entry: P16b__451}

தொல்காப்பியனார் சுட்டும் முப்பத்திரண்டு உத்தி வகையுள் ஒன்று; இயற்கையாக மனம் கொள்ளத்தக்க வாய்ப்பு இன்றாயினும், தொன்றுதொட்டு வந்த வழக்குநெறியான் இது கொள்ளத்தக்க பொருள் என்று கூறி விடுத்தல். (தொ. பொ. 665 பேரா.)

பிற நூலாசிரியன் உடம்பட்ட பொருளுக்குத் தானும் உடம்படுதல். (656 இள.)

பிண்டத்துக்கு முதல்சினை என்று பிரித்துப் பகுத்துரைக்கத் தக்க வேறுபாடு இன்றெனினும், அதனையும் முதல் சினைப் பொருள்களைப் போலக்கொண்டு வேற்றுமை யுருபுகளை இணைத்து,

‘பிண்டப் பெயரும் ஆயியல் திரியா

பண்டியல் மருங்கின் மரீஇய மரபே’ (தொ. சொ. 91 நச்.)

என வழக்குநெறியைப் பின்பற்றிக் கூறுதல் இவ்வுத்தி வகை.

முதல்நூலுள் ‘மேல்’ என்பது ‘மீ’ என மரீஇயிற்று என்று கூறப்பட்டது போலத் தாம் கூறாது, ‘மீ என மரீஇய இடம் வரை கிளவி’ (தொ. எ. 250 நச்.) என ‘மீ’ என்பது மருவிய சொல் என்பது மாத்திரம் கூறி, அஃது எச் சொல்லின் மரூஉ என்று கூறாமை விடுத்தது இவ்வுத்தி வகையின் இனம். (பேரா.)

தாம் கொண்ட பொருளுக்கேற்ப இளம்பூரணர் கூறும் எடுத்துக்காட்டு.

இரண்டாம் வேற்றுமை செயப்படு பொருட்கண் வரும் என்றார் பாணினியார். அது தமக்கும் உடன்பாடு என்ப தனைத் தொல்காப்பியனார், ‘இரண்டாகுவதே.............. அதுவே’ (சொல். 72 நச்.) எனக் கூறியமை.

பிறன்கோட் கூறல் -

{Entry: P16b__452}

நன்னூல் கூறும் 32 உத்திகளுள் ஒன்று; பிறன் கொண்ட கொள்கையைத் தனது நூலிற்சொல்லுதல்.

எ-டு : சொல்லின் இடையே சிலவிடத்து ஐகாரத்தின் பின்னரும் யகரமெய்யின் பின்னரும் நகரமெய்க்கு ஞகரமெய் போலியாக வரும் என்று சொல்லுவாரும் உளர். (நன். 124) என்பது. (நன். 14)

‘பிறிதொடு படாஅன் தன்மதம் கொளல்’ -

{Entry: P16b__453}

நன்னூலாசிரியர் சுட்டும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிறர் மதத்தொடு கலவாதவனாய்த் தன்மதத்தையே தான் கொள்ளுதல்.

செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணம் என்றார் நன்னூலார் (58). பிறர் கூறும் மாயையைக் கூறாது, செவிப்புலனாம் அணுத்திரளைக் கூறியது அருகதேவனது சத்தநூல் பற்றியே என்பது. இது பிறிதொடு படாஅன் தன் மதம் கொண்டு நூல் இயற்றியவாறு. (நன். 11)

பின்னது நிறுத்தல் -

{Entry: P16b__454}

முன் வைக்கவேண்டிய தொன்றனை அம்முறை தவறப் பின்னே வைத்தல் என்னும் உத்தி; நன்னூலார் சுட்டும் 32 உத்திகளுள் ஒன்று.

மாத்திரையின் இலக்கணம் பற்றிய சூத்திரத்தை (100), எழுத்துக்கட்குரிய மாத்திரையளவு கூறிய சூத்திரத்தின் (99) முன்னர்க் கூறவேண்டும்; அம்முறை பிறழப் பின்னே கூறியது இவ்வுத்தியின் பாற்படும். (நன். 14)

புடைநூல் -

{Entry: P16b__455}

சார்பு நூல்; அது காண்க. (நன். 8)

புதியன புகுதல் -

{Entry: P16b__456}

சொல் வழக்கு முதலாயின புதியவாகப் புகுதல். இது கால வேறுபாட்டிற்கு ஏற்ப மொழித்துறையுள் நிகழ்வதொரு மாற்றம். (நன். 462)

புரத்தலின் இயல்பு -

{Entry: P16b__457}

புரத்தல் - மாணாக்கற்கு ஆசிரியன் நூலினைப் பாடஞ் சொல்லுதல். அதன் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, கல்வி தொடங்கற்கேற்ற ஐந்தாண்டு ஏழாண்டு என்னும் பருவத்தின் நற்காலத்தொடு, மதி திதி வாரம் நாள் என்னும் நாற்காலமும் இடமும் என்னுமிவற்றைத் திடமாகக் குறித்து, கிழக்கு வடக்கு என்னும் மங்கலத்திசைகளை நோக்கியிருந்து, வழிபடு கடவுளை, வாழ்த்தி, ‘கல்வி கற்கும் இயல்பு நினக்கு இவை’ என அவன் கருத்துறக் கொள்வித்து, ஒன்றிய மனத்தோடே முகம் மலர்ந்து, பாடம் சொல்லத்தகும் நூல் நுதலிய திறத்தினை முதற்கண் தன் உள்ளங் கொள்ளக் கொண்டு, வெகுளி விரைவு இவையிலனாய், மாணவன் உள்ளம் கொளத்தகும் அக் குறிப்பினையு முணர்ந்து, பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் என்னும் உரைநடையால் நாளும் நாளும் விடாது பாடம் சொல்லுந்தோறும், பறவை போல் அணைத்துத் தழுவியும், மீன் போல் நோக்கியும், விட்டு நீங்கிய காலத்தும் ஆமைபோன்று உளத்தால் நினைந்தும், ஈன்று அணிமைப்பட்ட காலத்தே பசுப்போல அவன் இருக்கும் இடத்துச் சென்றும், தான் என்றும் சொல்லப்படுவ தாகிய அத்தகைமையைக் கண்டு, “வேட்டை வாளி போல இவன் சிறந்தோன்” என்று பெரியோர் கூறும்படியாக, அழுக்காறின்றிக் கொடுப்பதாம். வேட்டைவாளி குறித்த இலக்கினைத் தவறாது சென்று தைத்தலையுடைய அம்பு; அதுபோலவே, இம்மாணாக்கனும் பாடம் சொல்லிய வற்றைத் தவறாது உளம் கொள்ள வல்லனாவான் என்பது. வேட்டைவாளி குளவியுமாம். (மா. அ. 39)

புரப்போன் மரபு -

{Entry: P16b__458}

புரப்போன் - நூல் பாடம் சொல்வோன் ஆகிய ஆசிரியன். அவனுடைய இயல்பினைக் கூறுமிடத்தே, குலம் - குணம் - குரவரைப் போற்றும் நலம் - கடவுளை வழிபடுதல் - கருணை - புலனடக்கம் - பொறுமை - நிலைஇய தோற்றம் - உலகிய லறிந்து உயிர்க்கு உறுதி கொள்ளுதல் - கற்றவர் விரும்ப வாழ்தல் - ஒளிமதியினை நிகர்த்த கல்வி - ஞாயிற்றை நிகர்த்த வாய்மை தூய்மைகள் என்னுமிப்பதினான்கனுள் ஒன்றும் வழுவுதல் இலனாய், வாடாத மணமிக்க கற்பகப்பூ - கோடாத செங்கோல் செய்யும் கொற்றவனது நிதியறை - மிக்க சுவை யினையுடைய அமிழ்தம் - ஆயிரம் வாயினையுடைய சேடன் என்னும் இந்நான்கினையும் ஒப்பவனாய், கற்றனவற்றைக் கழகத்தில் சொல்லி உதவும் தன்மை - பிறன்பழி மறந்தும் கூறாமை - தற்புகழாமை - என்னும் மூன்றும் உடையனாய், முந்துநூல் கூறியவாறே இலக்கண இலக்கியம் இரண்டும் புதுமொழியாகப் புணர்க்கும் அறிவுநலமுடையோனாவான். (மா. அ. 29)

புல், மரன் இவற்றின் உறுப்புக்கள் -

{Entry: P16b__459}

புறத்தே மாத்திரம் காழ் (-உறுதி) பெற்று அகத்தே வெளி றுடையன புல் எனப்படும். அகத்தே காழ் (-வயிரம்) பற்றியன மரமாம். தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை என்பனவும் பிறவும் (- குரும்பை, நுங்கு, நுகும்பு எனப்படும் சுருண்ட குருத்தாகிய இளமடல் போல்வன) புல்லின் உறுப்புக்களாம்.

இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை, உள்ளிட்ட அவையெல்லாம் மரத்தின் உறுப்புக்களாம்; காய், பழம், தோல், செதிள், வீழ் என்பனவும் அவை; புல்லும் தழையும் பொங்கரும் முதலாயினவும் கொள்ளப்படும்.

ஊகம்புல்லும் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும் புல் எனப்பட்டடங்கி, ஊகந்தோடு சீழ்கந்தோடு முதலாகப் புல்லுறுப்பின் பெயர் பெறும். பிடா, காயா முதலிய புதலும், பிரம்பு முதலிய கொடியும் மரம் எனப்பட்டடங்கிப் பிட இலை காயாம்பூ முல்லைப்பூ என மரத்துறுப்பின் பெயர் பெறும்.

இனி விதிவிலக்காகப் புல்லினுள் ஒருசாரன இலை எனவும் பூ எனவும் படும். தெங்கங்காய் தெங்கம்பழம், பனந்தோல், பனஞ்செதிள், தாழைவீழ், இத்திவீழ், வேப்பங்காய், பலாப் பழம், வேப்பந்தோல், வேப்பஞ் செதிள் எனக்காய் முதலியன முறையே புல்லிற்கும் மரத்திற்கும் ஒப்ப உரியவாய் வருமாறும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 158 - 162)

(தொ. பொ. 640 - 643 பேரா.)

புல்லின் உறுப்புக்கள் -

{Entry: P16b__460}

‘புல் , மரன் இவற்றின் உறுப்புக்கள்’ காண்க.

புலவர் தம்மைப் புகழ்ந்துகொள்ளவும் கூடும் இடங்கள் (4) -

{Entry: P16b__461}

அரசவைக்கு விடுக்கும் சீட்டுக்கவியிலும், தம்முடைய கல்வி வலிமையை அறியாதோரிடத்தும், அவையிற் பிறரை வாதிட்டு வெல்லும்போதும், எதிரிப் புலவன் தம்மை இழித்துப் பேசுமிடத்தும் என இந்நான்கிடத்தும் புலவர் தம்மைப் புகழ்ந்து கொள்ளுதலும் ஏற்கும். (நன். 53)

புறக்காழன -

{Entry: P16b__462}

புறத்தே உறுதியைக் கொண்டு அகத்தே வெளிறுடையவை யாகிய புல் இனத்தவை. ‘புல் மரன் இவற்றின் உறுப்புக்கள்’ காண்க. (தொ. மா. 85 பேரா.)

புறநடை -

{Entry: P16b__463}

சூத்திரவகை ஆறனுள் ஒன்று. கிளந்தோதப்பட்ட முன்னர்க் கூறிய சூத்திரங்களின் புறத்தே நடத்தலையுடையது என்பது பொருள். புறன் அடை புறனடை எனவும் (புறத்தே அடுத்து வருதலையுடையது), புறன் நடை புறனடை எனவும், புறம் நடை புறநடை எனவும் இம்மூவகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளப்படும். ‘சூத்திர வகை’ காண்க. (இ.சொ. 86)

புறவுரை -

{Entry: P16b__464}

பாயிரம்; ‘பாயிரம் என்ற சொற்குப் பொருள் யாதோ எனின், புறவுரை என்றவாறு’ (இறை. அ. 1 உரை)

புறனடை -

{Entry: P16b__465}

‘புறம்’ புறன் எனவும் வருதலின் ‘புறநடை’ புறனடை எனவும் எழுதப்பெறும். ‘புறநடை’ காண்க. (இ.சொ. 86)

புறனடைச் சூத்திரம் -

{Entry: P16b__466}

எ-டு : எடுத்தும் படுத்தும் நலிந்தும் உச்சரிப்பதாகிய ஒலி முயற்சி வேறுபாட்டால், ஒன்றற்கு ஒன்று பிறப்பு வேறுபாடுகளும் எழுத்துக்களிடையே சிறிது சிறிது உளவாம். (நன். 88)

பல எழுத்துக்களுக்குப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட் டுள்ளன. ஓர் எழுத்தே வெவ்வேறு வகையால் ஒலித்தலை யுணர்த்த வேண்டும் இன்றியமையாமையை, மேலைப் பிறப்புச் சூத்திரங்களின் புறத்தே அவற்றை அடுத்து நடை பெறும் இச்சூத்திரம் உணர்த்தியவாறு. ‘தந்ததனை’ என்னும் சொல்லை யுச்சரித்து மூன்று தகரங்களும் ஒலிக்குமாற்றைக் காண்க. அவை முறையே எடுத்தல் படுத்தல் நலிதல் ஓசைப்பட வந்தவாறு. (நன். 20)

புனைந்துரை -

{Entry: P16b__467}

1. மிகைப்படுத்தி அழகுறச் சொல்லும் வாசகம். 2. பாயிரம். (L)

உலகியலை ஒட்டியும் ஒட்டாதும் கற்பனை செய்து கூறுவது புனைந்துரை. அஃது உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும், உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்த லும், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும் இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலும் என நான்கு வகைப்படும்.

இப்புனைந்துரை நாடகத்துக்குப் பயன்படுவது; நாடக உறுப்புப் பதினான்கனுள் ஒன்றாகிய ‘யோனி’ என்னும் உறுப்பால் குறிப்பிடப்படும் செய்தியாகும்.(தொ. பொ. 3 நச்.)

(கணேசய்யர் அடிக்.)

புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கத்திற்குப் புனைந் துரை பற்றிய செய்திகளை இணைத்துக் கொள்வதும் இன்றி யமையாதது.

பூ, நல்லாசிரியனுக்கு உவமையாதல் -

{Entry: P16b__468}

மங்கல காரியங்கட்கு உரியதாகி, தானின்றி யாதொரு செயலும் அமையாதாக, கண்டோரெல்லாம் விரும்பி மேலாகத் தன்னைச் சூடிக்கொள்ள, மென்மைத் தன்மையுடையதாய், மலர்தற்குரிய காலத்தில் முகம் மலர்ச்சியுடையது பூவின் குணம். அதுபோலவே, நல்லாசிரியனும் மங்கல காரியங்கட்கு உரியனாய், தான் எல்லாக் காரியங்கட்கும் இன்றியமையாத வனாய், கண்டோரெல்லாம் விரும்பித் தன்னை மேலாக மதிக்க, மென்மைக் குணமுடையனாய், பாடஞ் சொல்லுங் காலத்தே முகமலர்ச்சி யுடையனாய் இருப்பான். (நன். 30)

பெட்டை -

{Entry: P16b__469}

பெண்பாலை யுணர்த்தும் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று; ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான், பறவைகள் இவற்றின் பெண்பாலைக்குறிக்கப் ‘பெட்டை’ நிகழும். (சிறுபான்மை ‘சீயம் பெட்டைமேல் இவர்ந்து நின்றால்’ (சிந். 752) எனச் சிங்கத்திற்கும் பெட்டை கூறப்படும்.)(தொ.மர. 3, 52, 53 பேரா.)

பெடை -

{Entry: P16b__470}

பெண்பாலை யுணர்த்தும் மரபு பற்றிய ஒரு பெயர்; (‘பேடை’ போலவே, ‘பெடை’ என்பதும் நிகழும்.) பறவைகளின் பெண்பாலைக் குறிக்கவே வரும்.

எ-டு : அன்னப்பெடை (அன்னப் பேடை) (தொ. மர. 3, 54 பேரா.)

பெண் -

{Entry: P16b__471}

இது பெண்பாற் பொதுப்பெயராய் உயிரினங்களின் பெய ருக்கு அடையாக வரும். பெண்யானை, பெண் குரங்கு, பெண்பனை முதலாக வரும். அடையின்றி, வாளா ‘பெண்’ என இருப்பின் மக்கட் பெண்பாலையே சுட்டும். (தொ. மர. 3, 50, 61, 69 பேரா.)

‘பெண்பால் மரபு’ -

{Entry: P16b__472}

பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பன; மற்றுஆ என்பதும் (தொ.மர. 60) ஆம். (தொ. மர. 3)

பெயர்ச் சூத்திரம் -

{Entry: P16b__473}

சூத்திரவகை ஆறனுள் ஒன்று; இடுகுறியானும் காரணக் குறியானும் பொதுவகையானும் இலக்கணங்களுக்கு ஓர் உபகாரம் நோக்கி இஃது இதற்குப் பெயர் என இடுவது. (யா. வி. பாயிர உரை)

பேடை -

{Entry: P16b__474}

பெண்மையை உணர்த்தும் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று. எல்லாப் புள்ளின் பெண்பாற்கும் உரியதாக வருவது.

எ-டு : அன்னப் பெடை. (தொ. மர. 3, 54 பேரா.)

பொதுச்சூத்திரம் -

{Entry: P16b__475}

பொது இலக்கணம் கூறும் சூத்திரம்.

எ-டு : ‘நிறையுயிர் முயற்சியின்’ (நன். 74) என்பது எழுத்துக்க ளது பிறப்பின் பொதுவிலக்கணம் கூறும் சூத்திரம்.

பொதுப்பாயிர இலக்கணம் -

{Entry: P16b__476}

நூலினது வரலாறு, பாடஞ் சொல்லும் ஆசிரியனது வரலாறு, அவன் பாடம் சொல்லும் வரலாறு, பாடத்தை ஏற்றுக் கொள்ளும் மாணாக்கனது வரலாறு, அவன் பாடம் கொள்ளும் வரலாறு என இவ்வைந்தும் எல்லா நூற்கும் பொதுவுறச் சொல்லப்படும் - பொதுப்பாயிர இலக்கணமாம். (நன். 3)

பொதுப்பாயிரச் செய்தியுள் நூலியல்பு கூறுதல் பொருந்தாமை -

{Entry: P16b__477}

நன்னூலார் பொதுப்பாயிரம் ‘நூலியல்பு’ கூறும் என்றார். அது பொருந்தாது என அரசஞ் சண்முகனார் தமது பாயிர விருத்தியுள் மறுக்கிறார்: ஒன்றன் பெருமை முதலியவற்றைப் பிறர்க்கு உணர்த்துதலே புறவுரையாகிய பாயிரம் என்பது. அப்புறவுரை இருவகைத்தாய், நூல் செய்தானே கூறின் தற்புகழ்ச்சியாக முடிதலின் பிறரால் கூறப்படும் இயல்பிற்று. இன்னின்ன இலக்கணமுடைய ஆசிரியன், இன்னவாறு நூலைக் கூற, இன்னின்ன இலக்கணமுடைய மாணாக்கன், இன்னின்னவாறு கேட்டல் வேண்டும் என்ற செய்தி எல்லா நூற்கும் பொதுவாகி முடிதலின் பொதுப்பாயிரமாம். இன்ன பெயருடைய ஆசிரியன், இன்ன எல்லையுள் நடக்கும் இன்ன நூலின் வழித்தாக இன்ன பெயரிட்டு, இன்ன யாப்பால், இன்ன பொருளை அமைத்து, இன்ன பயனுடைத்தாக நூல் செய்ய, அதனை இன்னின்ன பெயருடைய ஆசிரியர் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்து நன்றெனக் கொண்டார் என்ற செய்தி ஒரு நூற்கே பெருமையாக முடிதலின் சிறப்புப் பாயிரமாம். இவ்வாறிருத்தலின், நூலியல்பு பாயிரமாகிய புறவுரையோ, நூலிலக்கணமாகிய அகவுரையோ எனில், ஆசிரியர் செய்யுளியலில், ‘பாட்டுரை நூலே......’ என்று ஏழ் நிலம் கூறி அவற்றுக்கெல்லாம் இலக்கணம் கூறினாராதலின், அவற்றுள் ஒன்றாகிய நூலின் இயல்பு அகவுரையாகிய இலக்கணமாதலன்றிப் பாயிரமாகிய புறவுரையாகாது. நூலினது இயல்பு கூறுதல் பாயிரம் எனில், ஏனைய பாட்டு உரை முதலிய ஆறனது இலக்கணமும் பாயிரம் கூறல் வேண்டும். நன்னூலார், ‘நூலின் இயல்பே நுவலின் ஓரிரு, பாயிரம் தோற்றி’ என்றதனால், பொதுப்பாயிர வகையுள் அவர் ஒன்றாகக் கூறிய நூலினது இயல்பு அப்பொதுப்பாயிர வகை ஐந்தனையும் சிறப்புப் பாயிரத்தையும் தோற்றுதல் பொருந்தாது. (பொதுப்பாயிரத்துள் அங்கமாக நூலினது இயல்பு கூறினால் அவ்வங்கம் பொதுப் பாயிரமாகிய அங்கியையும் புலப்படுத்தும் என்றல் வழுவாம்.) இன்ன காரணங்களால் பொதுப்பாயிர இலக்கணத்துள் நூலினது இயல்பு கூறுதல் பொருந்தாது என்பது. (பா. வி. பக். 156)

பொதுப்பாயிரத்தின் இன்றியமையாமை -

{Entry: P16b__478}

ஆயிர முகமாக நூல் அகலமுடைய தாயினும், பாயிரம் இல்லையேல் அது நூலாகாது. கொழுச் சென்றவிடத்தே துன்னூசி இனிது செல்லுமாறு போல, பருப்பொருளை யுடையதாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருளை யுடைய நூல் இனிது விளங்கும். அப்பாயிரம் கேளாவிடில், குன்று முட்டிய குருவி போலவும், குறிச்சி புகுந்த மான் போல வும் மாணாக்கன் பெரிதும் இடர்ப்படும். அப்பாயிரம் நூலுக்குப் புறத்தே இருந்துவைத்தும், கரு அமைந்த மாநகர்க்கு உரு அமைந்த வாயில்மாடம் போலவும், தகை மாண்ட நெடுஞ்சுவர்க்கு வகை மாண்ட பாவை போலவும் அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களே போலவும், நாண்துறவாக் குலமகட்கு மாண்துறவா அணியே போலவும், தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும், நூலுக்கு இன்றியமையாத சிறப்பினையுடையது என்று முந்து நூல்கள் உரைக்கின்றன. (பா. வி. பக். 2)

இனி நன்னூலார் இருவகைப் பாயிரமும் மாடத்துக்குச் சித்திரம் போலவும், மாநகர்க்குக் கோபுர வாயில் போலவும், நாட்டியமாதர்க்கு அணிகலன் போலவும் நூற்கு இன்றி யமையாச் சிறப்பின என்றார் (நன். 55) அது பொருந்தாமை யைச் சண்முகனார் மறுப்பர். (பா. வி. பக். 4)

பாவிற்கு அணி போல், சான்றோர் நாவுக்கு வாய்மை போல், திருமாலுக்கு அருள்போல், நூலுக்குப் பொதுப்பாயிரம் அமைந்துள்ளது என்னும், மாறன் அலங்காரம். (மா. அ. பாயிர. 64)

பொதுப்பாயிரத்தை உவமையான் உணர்த்தல் -

{Entry: P16b__479}

‘பொதுப்பாயிரத்தின் இன்றியமையாமை’ காண்க. விளக்கம் வருமாறு: கொழுவானது தைக்கும் ஊசி நுழைவதற்கு வழியாக்குவது; பாயிரம் நுலுள் நுழைவதற்கு வழியாக்குவது. வாயில்மாடம் நகர்க்குள் செல்வதற்கு வழியாக்குவது. பாயிரம் நூலுள் செல்வதற்கு வழியாக்குவது. பாவை சுவர்க்கு அணி செய்வது; பாயிரம் நூற்கு அணிசெய்வது. திங்கள் தனது கலையின் வளர்ச்சிக்குத் தகப் புறத்திருள் நீக்கி ஆகாயத்தை விளக்கும். பொதுப் பாயிரம் தன்னை அறிவதன் வளர்ச்சிக்குத் தக இடர்ப்பாடு (என்னும் இருளை) நீக்கி நூலினை விளக்கும். அணி குலமகட்கு அழகு செய்யும்; பொதுப் பாயிரம் அந்நூற்கு அழகு செய்யும். பாகன் அடங்காத யானையை அடக்கித் தன் குறிப்பின்வழி நடத்துவான்; பொதுப்பாயிரம், மாணாக்கர் அறிவுக்குப் பொருளான் அடங்காது தோன்றும் நூலினைத் தன் குறிப்பான் அடங்குமாறு காட்டி நடத்தும். (பா. வி. பக். 2, 3)

பொதுப்பாயிரம் -

{Entry: P16b__480}

இன்னின்ன இலக்கணமுடைய ஆசிரியன், இன்னவாறு நூலைக் கூற, இன்னின்ன இலக்கணமுடைய மாணாக்கன், இன்னவாறு கேட்டல் வேண்டும் என்ற புறவுரை எல்லா நூலுக்கும் பொதுவாக அமைதலின் பொதுப்பாயிரம் எனப்பட்டது. ‘பொதுப்பாயிர இலக்கணம்’ (நன். 2) காண்க.

(பா. வி. பக். 156)

பொதுமை குறித்துப் புகலுமிடம் -

{Entry: P16b__481}

ஆசிரியன் மாணாக்கன் என்னும் இருவர்க்கும் பொதுமை குறித்துக் கொள்ளும் இட (-நில)த் தினது இயல்பு நான்காம். அவை அந்நிலன் தூய்மை, மரச்செறிவு, நற்காற்று, வெப்ப மின்மை, தட்பமுடைமை இவற்றைப் பெற்றிருத்தலும்; நான்கு பக்கமும் அடைப்பினைப் பெற்றிருத்தலும்; ஆசான் தான் உரைக்கும் பொருளைத் தன் உள்ளத்தே அமைத்தற்கும், தாம் கேட்ட பொருளை மாணாக்கர் சிந்தனை செய்தற்கும் வேறுவேறு இடம், அவ்விருவர்க்கும் வருதல் போதல் நிகழ்த்தற்கு வேறு வேறு வழிகள் என இவற்றைப் பெற்றிருத் தலும்; நூல் வைத்தற்கு ஏற்ற பீடமும், வெயில் மழை தடுப்பதற்கேற்ற விதானம் தாங்கி நிற்கும் கால்களும் என இவற்றைப் பெற்றிருத்தலும் என்பன. (பா. வி. பக். 121)

பொருள் நலன் -

{Entry: P16b__482}

பாடற் பொருளில் தோன்றும் ஒன்பான் சுவையாகிய இன்பம்; மாறனலங்காரம் கூறும் பத்து அழகினுள் ஒன்று.

(மா. அ. 24)

பொருளிடையிடுதல் -

{Entry: P16b__483}

தொல்காப்பியம் கூறும் உத்திவகை முப்பத்திரண்டனுள் ஒன்று.

ஆசிரியன் தான் கூறி வருகின்ற பொருளுக்கு இடையே வேற்றுப்பொருளொன்றனை இயைபு பற்றி இணைத்துக் கூறுதலும், சொல்லும் பொருளுக்குத் தொடர்புடையது ஒன்றனை ஆண்டே கூறாது அவ்விடம் விடுத்துப் பிறிதோரி டத்தில் கூறுதலும் போல்வன.

எ-டு : விளிமரபில், உயர்திணைப்பெயர் விளியேற்கும் அதிகாரத்தில் விரவுப்பெயர் விளியேற்குமாற்றை, ‘முறைப் பெயர் மருங்கின்’ (சொல். 128 நச்.), முறைப் பெயர்க்கிளவி’ (138) ‘முறைப் பெயர்க் கிளவி’ (149) என்ற மூன்ற நூற்பாக்களால் இடையே அமைத்தல்.

உயர்திணைப்பெயர் விளி ஏலா எனக் கூறும் அதிகாரத்தே தான் நீயிர் - என்ற விரவுப்பெயர்கள் விளி ஏலா (139, 145) என்று கூறுதல் இவ்வுத்திவகை இனம்.

(தொ. பொ. 665 பேரா; சொல். 442, 453, 461 நச்.)

ஒரு பொருளை ஓதியவழி, அதற்கு இனமாகிய பொருளைச் சேரக் கூறாது இடையீடுபடக் கூறுதல்.

எ-டு : ‘பெண்மை சுட்டிய’ (சொல். 180 சேனா) என்னும் சூத்திரம் ஓதி, அதன் பகுதியாகிய ‘ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி’ (சொல். 194) என்பதனை இடை யிட்டு வைத்தல் போல்வன. (தொ. பொ. 656 இள.)

பொருளிடையிடுதல் : உத்தி வகை இலக்கணம் -

{Entry: P16b__484}

விதிக்கப்பட்ட இலக்கணம் இப்பொருளுடைய சொல்லைப் பற்றியது என எடுத்துக்காட்டிக் கூறுதல்.

(தொ. மர. 109 ச. பால)

எ-டு : ‘பனையென் அளவும் கா என் நிறையும்’ (எழுத். 169)

‘சாவ என்னும் செய என் எச்சம்’ (எழுத். 209)

பொருளில மொழிதல் -

{Entry: P16b__485}

நூலின்கண் வரப்பெறா எனப்படும் சிதைவு எனப்படும் பத்துக் குற்றங்களுள் ஒன்று. ஆயினும் இது பயன்படும் குற்றம் ஐந்தனுள் ஒன்றாய் வழுவமைதியாக அருகிவரப் பெறும்.

எ-டு : ‘ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும்;’ (தொ. எ. 269 நச்.)

‘அக்கென் சாரியை பெறுதலு முரித்தே

தக்கவழி அறிதல் வழக்கத் தான.’ (தொ. எ. 270 நச்.)

இவை ‘ஊ’ என்ற பெயர் ‘ஆ’ என்ற பெயர் போல னகரச் சாரியை பெற்று ஊன் என்று ஆகும்; அவ் ‘ஊ’ எனும் சொல் னகரச் சாரியையோடு அக்குச் சாரியையும் பெறும் என்று குறிப்பிடுவனவாம். ‘தக்க...... தான’ என்பது அத்துணை இன்றியமையாச் சூத்திரச் செய்தி கூறுவதன்று ஆதலின், ‘பொருளில மொழிதல்’ ஆம் ஆயினும் “அக்குச் சாரியை பெற்றவழி, முன்பு கூறிய னகரச் சாரியை விலக்குண்ணும் என்று கருதற்க; னகரச் சாரியையோடு அக்குச் சாரியையும் பெறும்; ஊகார இறுதிக்குரிய வல்லெழுத்து மிகுதலு முண்டு என்று கொள்க.” என்ற கருத்தைத் ‘தக்க .............. தான’ என்ற சொற்றொடர் தெரிவித்து, ஊ + குறை ஊன் + குறை ஊனக் குறை என்ற கருத்தைப் பெறப்பட வைத்தலின், இவ்விடத்து இப்பொருளில மொழிதல் பயன் தருவதால் வழுவமைதி யாயிற்று. (தொ. பொ. 663 பேரா.)

‘தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய்

மரபே இயன்றும் மயங்கியும் வந்தன வாங்கமைத்தோன்

அரவே ரகலல்குல் அம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்

குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே’. (யா. கா. 33)

இக்காரிகையுள், மகடூஉ முன்னிலையாக வந்த தொடர்கள் ‘பொருளில மொழிதல்’ என்ற வழுவாம்.

பொழிப்பு -

{Entry: P16b__486}

‘பொழிப்புரை’ காண்க. ‘பொழிப்பகலம் நுட்பம் நூலெச் சம்’ (நாலடி. 319)

பொழிப்புத் திரட்டுதல் -

{Entry: P16b__487}

பதங்கட்கு உரையெனக் கூறாது, உரையினை மாத்திரம் கூறுதல்; பிண்டப் பொருள் கூறுதல். (இறை. அ. 1 உரை)

பொழிப்புரை -

{Entry: P16b__488}

பதவுரையாக அன்றி, பதங்கள் நீங்க அவற்றின் பொருளை மாத்திரம் தொகுத்துச் சொல்லும் உரை. ‘தொகுத்துரை’ எனவும்படும். (நன். 21) ‘பொழிப்புத் திரட்டல்’ என்பதும் அது.

‘பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளை

பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே.’ (நேமி. உரை மேற்.)

போக்கறு திரு -

{Entry: P16b__489}

குற்றமற்ற செல்வம்; அறநிலை அறத்தான் வந்த திருவும், மறநிலை அறத்தான் வந்த திருவும், பனுவல் ஆராய்ச்சியான் வந்த கல்வி திருவும், ஞானத்திருவும், மாற்றார் நிலத்தைத் தன்னை அடுத்தார்க்கு நல்குகின்ற கொடைத்திருவும் அவை யெல்லா வற்றானும் எய்திய புகழ்த்திருவும் எனப் பலவகைத் திருக்களையும் குறிக்கும். (பா. வி. பக். 178)

போக்கறு பனுவல் -

{Entry: P16b__490}

குற்ற மற்ற நூல்; அஃதாவது நூற்கு ஆகா என்ற பத்துக் குற்றமும் இன்றி, முப்பத்திருவகை உத்தியொடு புணர்ந்த நூல்.

(பா. வி. பக். 178)

போக்கறு பனுவல், நிலம் தரு திருவின் பாண்டியன் அவை யத்து, அறம் கரை நாவின் நான்மறை முற்றிய, அதங் கோட்டாசாற்குக் காட்டி : இத்தொடர்களின் இயைபு -

தொல்காப்பியமாம் இந்நூல் இயல்பானே குற்றமில்லாத தாயினும், பெரியோர் கேட்டு நன்று என்று கூறாவிடில் பயன்படாமையின், ‘அறம் கரை............... ஆசான்’ இன்றியமை யாமையுடையான்.

அவ்ஆசானும் ஒருவனாய்க் கூறின் பயன்படாமையின், ‘அவையம்’ வேண்டிற்று.

அவையும் பாண்டியனை யன்றிக் கூடாமையின், ‘பாண்டியன்’ இன்றியமையாமையுடையான்.

பாண்டியனும் திரு இல்லாமல் அவையைப் பேணல் முடியா மையின் ‘திரு’ வேண்டிற்று.

அத்திருவும் ஈகையொடு கூடாவிடத்தே பயனின்மையான் அதற்குத் ‘தருகை’ வேண்டிற்று.

அத்தருகையும் ஆற்றல் இல்வழி மாற்றாரான் அழியும் ஆகலின், ‘நிலம்தரு மாற்றல்’ வேண்டிற்று.

அப்பனுவலும் குற்றமுளதாயின் கொள்ளப்படாமையான் அதற்குப் போக்கறுதல் வேண்டிற்று.

இவ்வாறு இவையெல்லாம் ஒன்றற்கொன்று தொடர்பாக முடிதலின் அம்முறையே ‘போக்கறு பனுவல்.............. ஆசாற்குக் காட்டி’ என்றார். (பா. வி. பக். 184)

போத்து -

{Entry: P16b__491}

பெற்றம் (-ஆ), எருமை, புலி, மரை, புல்வாய் என்னும் விலங்கு களும், நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு எனப்படுவனவாகிய சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்பனவும் ஆகிய இவற்றின் ஆண்பாலைக் குறிக்கும் மரபு பற்றிய பெயர்; நாரை முதலிய பறவைக்கும் இப்பெயர் ஆண்பாலைக் குறிக்க வருதலுண்டு. (தொ. மர. 2, 41, 42, பேரா.)

போதகாசிரியன் -

{Entry: P16b__492}

நூல் பயிற்றும் ஆசிரியன். (இ. கொ. பாயிரம்)

ம section: 79 entries

மக -

{Entry: P16b__493}

குரங்குக்கும் மக்களுக்கும் சொல்லப்படும் இளமைமரபு பற்றிய பெயர்களுள் ஒன்று.

வருமாறு : ‘ மக வுடை மந்தி போல’ (குறுந். 29)

‘மான்தோல் பள்ளி மக வொடு முடங்கி’ (பெரும்பாண். 89)

(தொ. மர. 1, 14, 23)

மகாபிண்டம் -

{Entry: P16b__494}

மிகவும் முற்பட்டதாகிய நூல்களை ஆராய்ந்து தெளிந்த கேள்வியையுடைய அகத்தியனால் கூறப்பட்ட அகத்தியம் என்னும் நூல் போல, இயல் இசை நாடகம் என்னும் மூன்று பிண்டத்தினையும் தனக்குறுப்பாகப் பொருந்துமாறு உட்கொண்டு நிற்றலையுடைய நூல். (மா. அ. 20)

மங்கல வாழ்த்து -

{Entry: P16b__495}

பிரபந்தத்தின் முதல் அல்லது இறுதியிற் செய்யப்படும் துதி.

மங்களாசரணை -

{Entry: P16b__496}

வாழ்த்து, வணக்கம், வத்து நிர்த்தேசம் என்ற முப்பகுதியுடைய நூன்முகம். (வேதா. சூ. 8) (L)

மடல் ஓலையைக் குறியாமை -

{Entry: P16b__497}

‘வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த (மஞ்சள் முன்றில்)’ (பெரும். 354)

‘நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்

ஒழிமடல் விறகின் கழிமீன் சுட்டு’ (புறநா. 29)

இவ்வடிகளில் ‘மடல்’ என்னும் சொல் நிகழ்கிறது.

உலர்ந்த தென்னம்பாளையை வார்போலக் கிழித்து, தெங்கின் ஓலை பனையோலை ஈத்திலை முதலியவற்றைப் பிணிக்கும் நாராகக் கொண்டு, குடில் முதலியன வேய்தலின் ‘வாடுமடல்’ என்பது பழுத்த ஓலையைக் குறியாது பாளை நாரினைக் குறிக்கிறது.

புள்ளோப்பும் சிறாரும் சிறுமியரும் பனங் கருக்கினைக் கொள்ளாமல், தானே வீழ்ந்த பனம் பூவாகிய மடலையே கொண்டு அதில் கனல் கொளுத்தி அக்கனலில் மீன் சுடுதல் இயல்பு. ஆதலின் ‘ஓழிமடல்’ என்பது தானே வீழ்வதாகிய பனம்பூவையே குறிக்கும்.

‘ஒழிமடல்’ என்றமையால், தானே கழிவதாகிய பனம் பூவாகியமடல் குறிக்கப்படுவதன்றி, பனங்கருக்குத் தானே கழிதலின்மையின் அது குறிக்கப்படுவதாகாது. மீன் சுடுதற்குப் பனங்கருக்கினைக் கொள்ளின் அது மிக்கெரியுமாதலின், மீன் சுடுபதம் நன்கு அறியப்படாது; பனம்பூவாயின், அது பொற்கொல்லரது ஊதுலைக்கண் கரித்துகள் எரியுமாறு போலச் சீராக எரிந்து மீன் சுடுதற்கு மிகவும் ஏற்றதாம்.

இன்ன காரணங்களால் மடல் இவ்வீரிடத்தும் ஓலையைக் குறிக்காமல் பாளையையே குறித்தல் புலப்படும்.

‘மடல் ஓச்சி’ என்னுமிடத்து, மடல் ஆகுபெயராலேயே மட்டையை உணர்த்திற்று. (பா. வி. பக். 129)

மடற்பனை இயல்பு -

{Entry: P16b__498}

தானே தன் பழங்களைக் கீழே உதிரக் கொடுத்தாலல்லாமல், பிறர் தன்பால் ஏறிவந்து அவற்றைப் பறித்துக்கொள்ள இடங் கொடாது, பனங்கருக்கினையுடைய பனை. இவ்வியல்பு, தானே இசைந்து பாடம் சொல்லினல்லாமல், பிறர் தன்பால் வந்து வினவிக் கேட்டறிய வாய்ப்புக் கொடாத நல்லாசிரிய னல்லாதானது இயல்புக்கு உவமையாக வந்தது. (நன். 33)

மடல் மட்டையாகாது என்பது -

{Entry: P16b__499}

“மடல் - பாளை; அஃது ஆகுபெயரான் மட்டையை உணர்த் திற்று” என்றல் பொருந்தாது. மடல் - மட்டை என்று பொருள் கொள்ளின். மட்டையின்றியே காய்க்கும் பனை ஒன்றிருப் பின் அப்பெண்பனையை ‘மடற்பனை’ என்பது இனம் சுட்டுதல் கூடும்; ஆயின் அவ்வாறு காய்க்கும் பனை யாண் டும் இல்லையாதலின், அவ்வடை இனம் சுட்டாது; ஆதலின் அப்பொருள் பொருந்தாது. (மடற்பனை - ஆண்பனை) (பா. வி. பக். 10)

மந்தி -

{Entry: P16b__500}

குரங்கு முசு ஊகம் இவை மூன்றன் பெண்பாலும் மந்தி என்னும் பெயர் பெறும். (தொ. மர. 67 பேரா.)

மயங்கக் கூறல் -

{Entry: P16b__501}

தொல்காப்பியனார் சுட்டும் ‘சிதைவு’ எனப்படும் நூற் குற்றங்களுள் ஒன்று; தெளிவுறாமல் கவர்படு மொழியால் மயங்கக் கூறுவது.

எ-டு : ‘இன்னின் இகர மாவி னிறுதி

முன்னர்க் கெடுதல் உரித்து மாகும்.’ (தொ. எ. 120 நச்.)

இன் சாரியையின் இகரம் ஆ என்ற சொல்லின் முன் வரும் போது கெடுதலும் உண்டு. ஆ + இன் + ஐ = ஆவினை, ஆனை - என்று கூற வந்தவர், அச்சொல்லை ஆவின் இறுதி, மாவின் இறுதி என இருவகையாகவும் பிரித்துப் பொருள் செய்யு மாறு வைத்து, மா + இன் + ஐ = மாவினை, மானை என்ற சொல்லையும் கொள்ளுமாறு வைத்தல் மயங்கக் கூறலாம். ஆயினும் ஆ, மா என்ற இரண்டு சொற்களுக்கும் பொருந்தும் இலக்கணம் இச்சூத்திரத்தில் அமைந்ததால் இது பயனுடைத் தாய் வழுவமைதியாயிற்று.

(ஒப்பக் கூறல் என்ற உத்திவகை பற்றிப் பேராசிரியர் உரைத்தது இது.) (தொ. பொ. 665)

“வழக்கு நூலே கூறுவன்” எனப் புகுந்தவன், அதனொடு தத்துவச் செய்திகளை இணைத்துக் கூறுதலும், தமிழ்மரபு பற்றிக் கூறவந்தவன் அதனொடு வடமொழி வழக்கையும் இணைத்து உடன் ஆராய்தலும் போல்வன பயன்படா மயங்கக் கூறல் என்ற குற்றமாகும். (தொ. பொ. 663 பேரா.)

மயங்க வைத்தல் -

{Entry: P16b__502}

நன்னூலார் சுட்டும் பத்துக் குற்றங்களுள் ஒன்று; குறித்த ஒரு பொருளை இன்னதென்று துணியக் கூடாத வகையால் கூறுவதொரு குற்றம். (நன். 12)

மரபியல் -

{Entry: P16b__503}

முன்னோர் வழங்கிய மரபு பற்றிய சொல்வழக்கையும், நூல் மரபையும், அவற்று உரைமரபையும் கூறும் இலக்கணப் பகுதி; தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் இறுதி இயல். ஓரறிவுயிர் முதலாகிய ஆறும் இவ்வியலுள்ளேயே கூறப் படும். இவ்வியற்குப் பேராசிரியர் உரை மிகச் சிறந்த தொன்று.

மரபியல் : பெயர்க்காரணம் -

{Entry: P16b__504}

பாட்டு முதலாய செய்யுட்கண் இருதிணைப் பொருள்களது தன்மையியல்புகளையும் ஒழுகலாறுகளையும் பற்றிக் கிளக்கு மிடத்து, அப்பொருள்களின் பண்போடமைந்த தன்மைகள் தெற்றெனப் புலப்படுமாறு சான்றோரான் வழிவழியாக வழங்கப்பட்டு வரும் மரபுகளையும் இருவகையாய நூலாக்க மரபுகளையும் பற்றிக் கூறுதலின், தொல்காப்பியத்தின் ஈற்றியல் மரபியல் என்னும் பெயர்த்தாயிற்று (தொ. மர. பாயிரம் ச. பால)

மரபியலுள் ஓதப்பெறும் மரபுகள் -

{Entry: P16b__505}

இவ்வியலுள் ஒதப்பெறும் மரபுகளாவன : இருதிணைப் பொருள்கட்கும் இயற்கையாக அமைந்த இளமை ஆண்மை பெண்மை பற்றி வழங்கும் பெயர்க் குறியீட்டு மரபுகளும், ஓரறிவுயிர் முதலாக உயிர்களைப் பற்றிய மரபுகளும், உயர் திணைக்கண் பண்பும் செயலும் பற்றிய குடிமைவகையான் அமைந்த நால்வகைக் குலம் பற்றிய வெளிப்பாட்டு மரபுகளும், உலக வழக்கினுடைய சில மரபுகளும், மரபு பிறழக்கூடாது என்றற்குக் காரணமும், முதலும் வழியுமாகிய நூல்களைப் பற்றிய மரபுகளும், அவற்றொடு தொடர்புடைய பிறவுமாம். (தொ. மர. பாயிரம். ச.பால)

மரபுநிலை திரிந்தன -

{Entry: P16b__506}

இனிச்

“சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே”

எனவும்,

“சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்

தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றும்”

எனவும், வரையறுத்து ஓதியவாறே சார்பெழுத்து மூன்று என்னாது சில உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக் களையும் உடன்சேர்த்து எண்ணுதலும், தன்மைச் சொல்லை உயர்திணையென்னாது விரவுத் திணையெனச் சாதித்தலும்,

“நடுவணைந்திணை”

என்னுஞ் சூத்திரத்தின் விதியொடு மாறுகொளப் பாலைக்கு நிலம் பகுத்துக்கோடலும், இன்னும் இவை போல்வனவும், மரபுநிலைதிரிதலின், வழிநூல் சார்புநூல் ஆதற்கு ஏலாவாய் இழுக்குப்படுமென்பது. அற்றேல், ஒன்றன்வழியேயன்றியுந் தாந்தாம் அறிந்தவாற்றானே நூல்செய்யப்பெறாரோ வெனின்;- அது மரபன்று என்பது நோக்கியன்றே ஆசிரியர்

“மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்”

என்னுஞ் சூத்திரவிதி நூலிற்கும் எய்துவித்து, நூலின் மரபு கூறப் புகுந்தாரென்க. காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின், அதுபற்றிச் செய்யும்நூலும் வேறுபட அமையும் பிறவெனின், முற்காலத்து வழக்கு வீழ்ந்ததனை வழுவென்று களையப் படுமாயினன்றே பிற்காலத்து வேறுபடப் பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழுவிக்கொள்வது? தொல்லாசிரியர் வழக்கே வழக்குப் பிற்காலத்து வேறுபட வழங்கப்படுமாயின் அவ்வழக்கு இலக்கணத்தொடு பொருந்தாதென விலக்குதற் கன்றே

“வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி யவர்கட் டாக லான”

என்றாராகலின், அமையாதென்க. புதியன புணர்த்தல் பழைய வற்றோடு முரணாதவழியேயென உணர்க. (சூ.வி. ப. 8,9)

மரபுநிலை திரியாதன -

{Entry: P16b__507}

திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன யாவையெனின்: - செய்யுளியலுட் கூறிய ஒற்றளபெடையை அளபெடை அதிகாரப்பட்டமை நோக்கி உயிரளபெடையைச் சார வைத்துக் கூறுதலும், தனிநிலை முதனிலை இடைநிலை ஈறெனு நால்வகையிடத்தை மூன்றிடமென அடக்குதலும்,

“மெல்லெழுத்து மிகுத லாவயி னான”

என்றவாறே தங்கை நங்கை எங்கை செவி தலை புறம் என மகாரங்கெட்டு இனமெல்லெழுத்து மிகுமென்னாது மகரமே இனமெல்லெழுத்தாய்த் திரியும் என்றலும்,

“அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே

முதனிலை யொழிய முன்னவை கெட்டு”

மெல்லெழுத்து மிகும் என்னாது அங்கையென்புழிக் ககரவகரங்கெட்டு மகரந்திரிந்து முடியுமென்றலும்,

“முதலீ ரெண்ணி னொற்று ரகரமாகும்.”

“இடைநிலை ரகர மிரண்டெனெண் ணிற்கு

நடை மருங்கின்று”

என்றவாறே கூறாது இரண்டனொற்றுயிரேக நின்ற ரகர வொற்றின்மேல் உகரம் வந்து செய்கைப்பட்டு முடியுமென்ற லும், நாகியாதென யகரம் வரும்வழி உகரம் கெட்டு இகரம் தோன்றும் என்னாது உகரமே இகரமாய்த் திரியும் என்றலும், நெடுமுதல் குறுகும் மொழிகளின்முன் பொதுப்பட ஆறன் உருபிற்கும் நான்கன் உருபிற்கும் அகரநிலையுமெனக் கூறி

“ஆற னுருபி னகரக் கிளவி

யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும்”

என்னாது,

‘குவ்வின் அவ்வரும்’

என்றொழிதலும், ஆடிக்குக் கொண்டான் என்புழி இக்குச் சாரியையென்னாது குச்சாரியை என்றலும், வற்றுச் சாரியை வகரங்கெட்டு அற்றென நிற்குமென்னாது அற்றுச் சாரியை யென்றே கோடலும், இன்னென்சாரியை இற்றெனத் திரியுமென்னாது இற்று என்பது வேறு சாரியை எனக் கோடலும், அக்கென் சாரியை மெய் மிசையொடுங்கெடும் என்னாது அகரச் சாரியையெனக் கோடலும், அ ஆ வ என மூன்றும் பலவறிசொல்லென்னாது உண்குவ உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து இடைநிலை எனக் கொண்டு அகர விகுதி என்றொழிதலும், அகம்புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை உழிஞைத்திணைகளின் மறுதலை வினையை வீற்று வினையாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடு பற்றி வேறு திணையாகவைத்து எண்ணுதலும், இன்னோ ரன்னவை பிறவுமாம். இவை இங்ஙனம் வேறுபடினும், புணர்ச்சிமுடிபும் சொன்முடிபும் பொருண்முடிபும் வேறுபடாமையின், மரபு நிலை திரியாவாயின. இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல முதலிய நூல்களை வழீஇயினவென்று இகழ்ந்து, பன்னிரு படலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியனார் கூறி தன்று எனவும், தொல்லாசிரியர் வழக்கொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறுப. (சூ.வி. ப. 7,8)

மரபு வகை -

{Entry: P16b__508}

வழக்கிடத்துளவாகிய வழக்குமரபு, செய்யுளிடத்துளவாகிய செய்யுள்மரபு என்பன. வழக்கிற்கே உளவாகிச் செய்யுட்கு ஏலாதனவும், செய்யுட்கே உளவாகி வழக்கிற்கு ஏலாதனவும், இரண்டற்கும் பொதுவாவனவும் என அவை குறித்துணரப் படும் என்பது. (இ. வி. பாட். 148)

மருள் நிலைத்தாதல் -

{Entry: P16b__509}

நூற்கு விலக்கிய ஈரைங் குற்றங்களுள் ஒன்று; கேட்போர்க்குப் பொருள் விளங்காமல் மயங்குதற்கு இடனாதல். இதனை நன்னூல் ‘மயங்க வைத்தல்’ என்னும்; தொல்காப்பியம் ‘மயங்கக் கூறல்’ என்னும். (மா. அ. 23)

மலர்மாட்சி -

{Entry: P16b__510}

மங்கலவினைகட்கு உரியதாய், இன்றியமையாததாய், யாவரும் தன்னை விரும்பிச் சூடிக் கொள்ளுமாறு மென்மைக் குணம் உடையதாய், உரிய காலத்தில் தன் முகம் மலரப் பெறுவது பூவினது மாண்பு. நல்லாசிரியனும் மங்கலவினை கட்கு உரியவனாய், எவ்வினைக்கும் தான் இன்றியமையாத வனாய், தன்னை யாவரும் மதிக்குமாறு மென்மைக்குணம் உடையனாய், பாடம் சொல்லும் காலத்தில் மாணாக்கர்முன் முகமலர்ச்சி யுடையனாய்த் திகழ்வான். ஆகவே நல்லாசிரி யனுக்கு மலர் உவமை கூறப்படுவதாயிற்று. (நன். 30)

மலை நல்லாசிரியருக்கு உவமை யாதல் -

{Entry: P16b__511}

அளக்கப்படலாகாத அளவும், தன்னிடத்துப் பொருளும், அசைக்க முடியாத நிலையும், நெடுந்தொலைவினின்றும் காணப்படும் தோற்றமும், பிறவிடமெல்லாம் வறண்டு போயினும் மழைக்கண் உண்ட நீரால் அருவியாக நீர்வளம் சுரத்தலும் மலையினுடைய மாண்புகள். நல்லாசிரியனும், தனது கல்விப்பரப்பும் அப்பொருளும் பிறரால் வரையறுத்து அளக்கப்படாதவனாய், வாதுபோர் செய்வோரால் துளக்கப் படாத கல்விநிலையுடையவனாய், பலராலும் அறியப்படும் கல்வியால் வந்த உயர்ச்சியும், தனக்குப் பொருள் வருவாய் குன்றினும் மாணாக்கர்க்குக் கல்விவளம் வழங்கும் கொடையு முடையனாய்த் திகழ்வான். ஆதலின் நல்லாசிரியனுக்கு மலை உவமை ஆயிற்று. (நன். 28)

மலை, நிலம், பூ, துலாக்கோல் உவமை -

{Entry: P16b__512}

குடிப்பிறப்புக்குரிய பொதுவியல்பாவன நகை, ஈகை, இன்சொல், இகழாமை, அன்பு, பணிவு, செப்பம், நாணம் என்னும் எட்டும் ஆம்.

மலையானது உயர்பிறப்புடைமையால் அதற்குரிய எட்ட னுள் ஈகையும் நகையும் உடையது; இன்சொல் இன்மையும் இகழ்தலுமுடையது.

நிலமானது அவ்விரண்டு குற்றங்களுமுடையதன்று; ஆயின் அன்பின்மையும் பணிவின்மையும் உடையது.

பூவானது அவ்விரண்டு குற்றங்களுமுடையதன்று; ஆயின் செப்ப மின்மையும் நாணின்மையும் உடையது.

துலாக்கோல் அவ்விரண்டு குற்றங்களுமுடையதன்று.

இவ்வாற்றால் மலை முதலிய நான்காலும் நல்லாசிரி யனுக்குரிய குடிப்பிறப்பியல் எட்டும் எஞ்சாமல் உணரப் படுதலின், அவனுக்குரிய இயல்பினைப் புலப்படுத்த வல்ல பிண்ட உவமையாக அவற்றை அம்முறையே ஓதினார். (பா. வி. பக். 17, 21)

மலைமாட்சி -

{Entry: P16b__513}

‘மலை நல்லாசிரியருக்கு உவமை ஆதல்’ காண்க. (நன். 28)

மற்றொன்று விரித்தல் -

{Entry: P16b__514}

நன்னூல் சுட்டும் நூற்கு ஆகாத குற்றம் பத்தனுள் ஒன்று; சொல்லப் புகுந்த செய்தியோடு இயைபில்லாத பிறிதொன் றனை விளக்கிக் கூறுதல் (நன். 12)

மறி -

{Entry: P16b__515}

இளமையைக் குறிக்கும் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று; யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய், வருடை இவற்றின் இளமையை உணர்த்தும். (தொ. மர. 12 பேரா.)

ஆடு, மான், குதிரை, அழுங்கு இவற்றின் இளமை மறி யெனப்படும். (திவா. பக். 61)

மறுத்தல் -

{Entry: P16b__516}

இலக்கண நூலாசிரியர் மேற்கொள்ளும் எழுவகை மதங் களுள் ஒன்று. பிறர்தம் நூற்கொள்கையை மறுத்தல். ‘நுந்தை’ என்னும் முறைப்பெயரில் முதலில் நகர மூர்ந்து குற்றியலுகரம் வரும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியது (எ. 67 நச்.) நன்னூலார்க்கு உடன்பாடன்று; அதனை அவர் கூறாதொழிந்தமை ‘மறுத்தல்’ எனும் மதம் (நன். 94) (நன்.11)

‘மறுதலை சிதைத்துத் தன் துணிவு உரைத்தல்’ -

{Entry: P16b__517}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று. ஒரு செய்தியை ஆசிரியன் கருத்துக்கு மாறாகக் கூறுவான் பிறன் உளனாயின், அக்கருத்திற்கே இடன் ஏற்படாத வகையில் அதனை மறுத்து நீக்கி, ஆசிரியன் தான் கொண்ட கருத்தினை வலியுறுத்தி வெளியிடுதல்.

வடமொழியில் அளபெடை மூன்று மாத்திரை ஒலியிற்று என்ற கருத்தினைத் தம் நூலுக்கு ஒவ்வாது என்று கொண்டு, ‘மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே’ (எழுத். 5), ‘நீட்டம் வேண்டின் அவ்வள புடைய, கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்’ (எழுத். 6) என்று, மற்றவர் கருத்தைத் தாம் மறுத்துத் தம் முடிபை நிறுத்தல் இவ்வுத்தி வகை.

‘எழுத்துத் தனித்திசைக்குங்கால் அதன் ஒலிவேறு; ஒரு சொல்லிடைப் படுத்திசைக்குங்கால், அதன் ஒலி வேறு’ என்ற கருத்தை மறுத்து,

‘மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்து வேறு இசைப் பினும் எழுத்தியல் திரியா என்மனார் புலவர்’ (எழுத். 53 நச்.) என்று கூறுதல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம். (தொ. பொ. 665 பேரா.)

மா (1) -

{Entry: P16b__518}

குதிரை, யானை, பன்றி இவற்றை மா எனும் பெயர் குறிக்கும். (விலங்கின் பொதுப்பெயராகவும் மா வரும்.) (திவா.பக். 58)

மாட்டுறுப் பினவா மனக்கொளக் கூறல் -

{Entry: P16b__519}

மாறன்அலங்காரம் சுட்டும் உத்திவகை முப்பத்திரண்டனுள் இருபத்தொன்பதாவதாகக் கிடந்தது; ஒரு சூத்திரத்துக்குப் பொருள் கொள்ளுமிடத்தே அகன்று பொருள் கிடப்பனவும் அணுகிக் கிடப்பனவுமான இருவகையையும் பொருள் முடியும் வகையால் கொணர்ந்து உரைப்பச் செய்வது. அது கேட்டோர் மனத்துட் கொள்ளுமாற்றால் இருத்தல் வேண் டும் என்பது. (அதற்கு, இளம்பூரணர் உரையன்றி நச்சினார்க் கினியர் எழுதின உரையைக் கண்டுகொள்க என்பது அவ்வுரையாசிரியர் உரை.) (மா. அ. 25)

மாட்டெறிதல் -

{Entry: P16b__520}

மாட்டு எனவும், மாட்டெறிந் தொழுகல் எனவும் படும். ‘மாட்டு’க் காண்க.

மாட்டெறிந் தொழுகல் -

{Entry: P16b__521}

நன்னூலாசிரியர் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; ஒரு சூத்திரத்திற் கூறப்பட்டதனை அதனை யொத்த பிற சூத்திரத்திலும் கொண்டு உய்த்துரைப்பது.

மேற்புணரியலுள், அல்வழிவேற்றுமைப் புணர்ச்சிக்கு விதித்த தோன்றல் திரிதல் கெடுதல் என்பனவற்றையும், செய்யுட்கு விதித்த வலித்தல் மெலித்தல் முதலிய ஒன்பது விகாரத்தை யும், பதவியலில், பகுபதம் பெறும் என மாட்டுதலின் இது மாட்டெறிந்தொழுகல் என்னும் உத்தி. (நன். 133)

இவ்வுத்தி வீரசோழியத்துள் 180ஆம் காரிகை உரையுள் குறிக்கப்பட்டுள்ளது. (நன். 14)

மாட்டேற்று -

{Entry: P16b__522}

மாட்டெறிந் தொழுகல்; அது காண்க.

மாண்பு -

{Entry: P16b__523}

சுருங்கச் சொல்லல் முதலிய பத்து நலன்கள். (நன். 13) (யா. க. பாயிர உரை)

மாணாக்கர் ஆகாதவர் -

{Entry: P16b__524}

கட்குடியன், சோம்புதலுடையான், அகங்காரமுடையான். காமமுடையான், கள்வன், நோயாளி, அறிவில்லாதான், மாறுபாடுடையான், கோபமுடையான், மிகத்தூங்குவான், மந்தபுத்தியுடையான், நூற்பரப்பைக் கண்டு பயில அச்ச முற்றுக் கலங்கும் உள்ளத்தான், அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாதான், பாவத்தொழில் புரிவான், பொய்ம்மையே யுடையான் என இத்தன்மையுடையார். (நன். 39)

மாணாக்கர்ஆதற்குரியார் -

{Entry: P16b__525}

தன்மகன், தன்னுடைய ஆசிரியன் மகன், அரசனுடைய மகன், செல்வம் மிகுதியாகக் கொடுப்போன், தனக்கு வழிபாடு செய்வோன், தான் சொல்லும் நூற்பொருளை விரைய மனத்திற்கொண்டு மறவாத அறிவு மாட்சியுடையோன் என இவர் ஆசிரியனால் பாடம் கற்பித்தற்குரியார். (நன். 37)

மாணாக்கர் இலக்கணம் -

{Entry: P16b__526}

‘மாணாக்கர் வகை’ காண்க. தலை மாணாக்கர், நீரினின்று பாலைப் பிரித்துண்ணும் அன்னம்போல, ஆசிரியன் சொல்லு மவற்றுள் கொள்ளத்தக்கவற்றையே கொள்வர். ஓரிடத்தேயே முளைத்த புல்லை நிரம்பவுண்டு அசையிடும் பசுப்போல, கலைவல்ல ஆசிரிய னொருவனிடத்தேயே வேண்டுவன நிறையக் கற்றுக் கற்றவற்றைச் சிந்தித்துத் தெளிவர். இனி, இடைமாணாக்கர் உழவனது உழைப்பிற்கேற்ற அளவே பயன் தரும் நிலம் போல, ஆசிரியனது பாடம் பயிற்று முயற்சி யளவே தாமும் கல்வி வல்லராவர்; சொன்னதையே சொல்வ தல்லது பிற சொல்ல மாட்டாத கிளி போல, ஆசிரியன் பாடம் சொன்னவற்றை யன்றிப் பிறவற்றை உய்த்துணர்ந்து தேர்ந்து அறியமாட்டாராவர். ஏனைக் கடை மாணாக்கர் மாணாக்கர்க்குரிய இலக்கணம் பெறாதவர் ஆதலின் ஈண்டுக் குறிக்கப் பெறார். (நன். 38)

மாணாக்கர் வகை -

{Entry: P16b__527}

தலைமாணாக்கர், இடை மாணாக்கர், கடை மாணக்கர், இவர்கட்கு உவமையாவன முறையே அன்னமும் ஆவும், நிலமும் கிளியும், இல்லிக்குடமும் ஆடு எருமை நெய்யரி என்பனவும் ஆம். (நன். 38)

மாணாக்கன் -

{Entry: P16b__528}

கற்பிக்கப்படுவோன்; கல்வியால் தன்னை மாண்புடையோ னாக்கிக் கொள்ளுதலுடையான் என்று பொருள் கூறுப. ஆடவர் கல்வி பெறுதலே பண்டு மிகுதியும் நிலவியமையின் ஆண்பாற் சொல்லாக அன் விகுதி பெற்றது. ‘மாணாக்கி’ பெண்பாற் சொல்லாகக் கோடல் ஆம்; இச்சொல் பெருங் கதையுள் பல இடங்களிலும் வந்துள்ளது.

மாணாக்கனது வரலாறு -

{Entry: P16b__529}

நூற் பொதுப்பாயிரம் சுட்டும் ஐந்து செய்திகளுள் நான்காவ தாகக் கிடந்தது. இதன்கண் மாணாக்கர் ஆதற்குரியார் இன்னார் என்பதும், அவர்கள்தம் வகையும், கடைமாணாக் கரேயன்றி மாணாக்கர் ஆகத்தகாதவர் இன்னார் என்பதும் நுவலப் பெறும். (நன். 37-39)

மாறனலங்காரம் கூறும் அழகுகள் -

{Entry: P16b__530}

1) அகலா நடைத்தாதல், 2) பொருள் புலப்பாடு, 3) பொருள் நலன், 4) சொல் நலன், 5) ஓசை இனிமை, 6) ஊதியம் பயத்தல், 7) நவில் தொறும் புதுவதுவாய் நலனளிப்பது என்னுமிவை இந்நூலுள் சிறப்பாகக் கூறப்படும் அழகுகள். (ஏனைய ஆழமுடைமை, உலக மலையாமை, உதாரணம் புணர்த்தல் இவை பிறவற்றிலும் சொல்லப்படும் பொதுவானவை.)

(மா. அ. 24)

மாறனலங்காரம் கூறும் உத்திகள் மூன்று -

{Entry: P16b__531}

பிற நூலுட் சொல்லப்படாது சிறந்த அம்மூன்றாவன : விரிந்தவை இவை என விழுமிதின் காட்டல், மாட்டுறுப் பினவா மனக்கொளக் கூறல், தீபக வகையால் சிறப்புறக் கூறல் என்பன. (மா. அ. 25)

மாறனலங்காரம் கூறும் குற்றங்கள் பத்து -

{Entry: P16b__532}

பொருளில கூறல், மருள் நிலைத்தாதல், இன்னாச்சொல் பெறல், வெளிறுபட்டழிதல், மொழிந்ததை மொழிதல், முரண்கொள மொழிதல், குறைபடக் கூறல், மிகைபட விளம்பல், சந்த இன்பம் தழுவுதலின்மை, எதிர்மறுத்துணர்த் தல் என்னுமிவை. (மா. அ. 23)

மாறுகொளக் கூறல் -

{Entry: P16b__533}

நன்னூல் நூற்கு ஆகா என விலக்கும் பத்துவகைக்குற்றங் களுள் ஒன்று; முன்சொன்னதற்கு மாறுபடுமாறு பின்னர் ஒரு செய்தியைக் கூறுதல். (நன். 12)

இஃது அமைத்துக் கொள்ளத்தக்க சிதைவாகும் ‘மரப்பெயர்க் கிளவிக்கு அ ம்மே சாரியை’ (தொ. எ. 415) என்ற நூற்பாக் கருத்தினை தெங்கங்காய், கீழ்கம்புல் என்றாற் போலப் புல்லிற்கும் கோடல் மாறுகொளக் கூறல் எனத் தழீஇக் கொள்ளப்பட்ட சிதைவாகும். (நச்.) (தொ. பொ. 663 பேரா.)

மிகைபடக் கூறல் -

{Entry: P16b__534}

நன்னூல் குறிக்கும் நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; ஒரு செய்தியை விளக்க வேண்டும் அளவின் மிகுமாறு சொற்கள் பல்கக் கூறுவது. (நன். 12)

மிகைபட விளம்பல் -

{Entry: P16b__535}

மாறனலங்காரம் சுட்டும் நூற்குற்றம் பத்தனுள்ஒன்று; மிகைபடக் கூறல். (மா. அ. 23)

முகவுரை -

{Entry: P16b__536}

நூல்முகத்தே அதன் பெருமையை முன்னுரைக்கும் பாயிரம்; பாயிரத்திற்குரிய பரியாயமாக வரும் காரணப் பெயர்களுள் ஒன்று. (நன். 1)

முடத்தெங்கின் இயல்பு -

{Entry: P16b__537}

பலவகையாகத் தனக்கு நீர் பாய்ச்சுதல் முதலியன செய்து உதவித் தன்னைப் பேணிக் காத்த உடைமையாளனுக்கு உதவாமல், அல்லாதவனுக்கு உதவும் இயல்பினையுடையது வளைந்த தெங்கு. இவ்வளைந்த தெங்கு போல்வான், நல்லாசிரியன் அல்லாதான் தனக்குத் தொண்டாற்றி வழிபாடு செய்து வரும் மாணாக்கனுக்குப் பாடம் கற்பியாமல், அவ்வியல்புகளில்லாத வேற்று மாணாக்கனுக்குத் தான் வலியச் சென்று பாடம் சொல்லும் இயல்பினனாதலின், அவ்வாசிரியனுக்கு முடத்தெங்கு உவமையாயிற்று; பயன்பற்றி வந்த உவமை. (நன். 35)

முடத்தெங்கும் ஆசிரியரும் -

{Entry: P16b__538}

‘முடத்தெங்கின் இயல்பு’ காண்க. (நன். 35)

முடித்துக் காட்டல் -

{Entry: P16b__539}

நன்னூலார் கூறும் உத்தி; மேலோர் முடித்தவாறே தானும் முடித்துக் காட்டுதல். ‘ பகுதி விகுதி’ என்னும் சூத்திரம் (133) முதல், ‘றவ்வொடு உகர உம்மை’ என்னும் சூத்திரம் (145) முடியப் பகுபதங்களை நன்னூலார் மேலோர் முடித்தவாறு முடித்துக் காட்டியமையால் இப்பதின்மூன்று சூத்திரமும் முடித்துக் காட்டல் என்னும் உத்தியின்பாற் படுவன. (நன். 14)

முடிந்தது காட்டல் -

{Entry: P16b__540}

இது தொல்காப்பியம் கூறும் முப்பத்திரண்டு உத்தி வகையுள் ஒன்று.

ஒரு பொருளை விளக்க வேண்டியஇடத்து, ஆசிரியன் தானே விளக்கம் கூறிப் புலப்பட வையாது, இது சான்றோர் அறுதியிட்டு உறுதி செய்த கருத்து என்றே கூறிவிடுத்தல்.

எ-டு : ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை பட்டியல் தந்து அப்பட்டியல் தான் வகுத்தது அன்று, ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்திய’ செய்தி என்று கூறுதல் (582) போல்வன இவ்வுத்தி வகை.

மாத்திரைக்கு அளவு கண்ணிமைப் பொழுதும், கைந்நொடிப் பொழுதும் என்று தான் குறிப்பிட்டது பண்டையோர் கொண்ட அளவு என்பதனைக் ‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே’ (தொ.எ. 7) என்று கூறுதல் போல்வன அதன் இனம். (தொ. பொ. 665 பேரா.)

முடிந்தது முடித்தல் -

{Entry: P16b__541}

நன்னூலார் கூறும் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று; சிறப்பு வாய்பாட்டால் முடிந்ததைப் புலப்படவேண்டிப் பொது வாய்பாட்டால் தொகுத்து முடித்தல்.

எ-டு : ‘மெய்கள் அகரமும்’ (நன். 126) என்னும் சூத்திரம் இவ்வுத்தியாம், எழுத்தியலில் விரிந்து முடிந்து கிடந்தவற்றைப் புலப்படவேண்டித் தொகுத்து முடித்தலால் என்பது.

‘நட வா மடி சீ’ (நன். 137) என்னும் சூத்திரம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள; ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், குற்றுகரம் என இருபத்து மூன்று ஈறுடையனவாக விகற்பித்து எடுத்துக்காட்டும் வாய்பாடுகள் எல்லாம், ‘செய்’ என்னும் பொதுவாய்பாட்டில் அடங்கும் எனக் கூறுதலின், முடிந்தது முடித்தல் என்னும் உத்தியாம். (நன். 14)

முடிந்த நூல் -

{Entry: P16b__542}

எஞ்சாது முற்றும் கூறும் நூல். (இறை. அ. 1 உரை)

முடிய வந்த மரபு பற்றிய பெயர்கள் -

{Entry: P16b__543}

ஆண்குரங்கினைக் கடுவன் என்றலும், மரப்பொதும்பினுள் வாழும் கூகையைக் கோட்டான் என்றலும், செவ்வாயினை யுடைய கிளியைத் தத்தை என்றலும், வெருகினைப் பூசை என்றலும் (வெருகு - காட்டுப்பூனை), ஆண்குதிரையைச் சேவல் என்றலும், இருள் நிறத்தினையுடைய பன்றியை ஏனம் என்றலும், எருமையேற்றினைக் கண்டி என்றலும், வழக்கிலும் செய்யுளிலும் வந்தமையால் முறைமையறிந்த நூலோரான் அவை நீக்கப்படலாகா. (கோழியை வாரணம் என்றலும், வெருகினை விடை என்றலும் உரையில் கொள்ளப்பட்டன.)

தத்தை என்பது பெருங்கிளி; சிறு கிளியும் தத்தை என்றே வழங்கப்படுதலையும் கொள்க.

பெண், ஆண், பிள்ளை என்பன அடையின்றி வாளா கூறிய விடத்தே, உயர்திணைக்கேற்ப மருவி வந்த மரபு பற்றிய பெயர்களாம். பெண் பிறந்தது, ஆண் பிறந்தது, பிள்ளை பிறந்தது என அடை கொடாது கூறின், அவை, உயர் திணைக்கே உரியன. (அஃறிணையாயின், ‘பெண் குரங்கு’ என்றாற் போலக் கிளந்து சொல்ல வேண்டும்) (தொ. பொ. 623, 624 பேரா.)

முடிவிடம் கூறல் -

{Entry: P16b__544}

நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; ஆசிரியன் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதி தோன்று மிடத்தைக் கூறுதல்.

எ-டு : ‘ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்’ (நன். 97) என்பது முடிவிடம் கூறல்; ‘குறில்வழி லளத்தவ் அணையின் ஆய்தம், ஆகவும் பெறூஉம் அல்வழி யானே’ (228) என்ற விதியுள்ள விடத்தைக் கருதிக் கூறுவதால் என்பது. (நன். 14)

முத்திறம் -

{Entry: P16b__545}

பொழிப்பு, அகலம், நுட்பம் என மூவகையுரை.

(யா. க. பாயிரம் உரை)

முதல் நூல் -

{Entry: P16b__546}

செய்வினையின் பயனை நுகராது மெய்யுணர்வுடையனாகிய முன்னோனால் செய்யப்பட்டதே ஒருதலையாக முதல்நூல் ஆவது.

தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்தில ராகலின், தலைவர்வழி நின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதல்நூலாம். பிற்காலத்துப் பெருமா னடிகள் (- இறையனார்) களவியல் செய்தவாறே செய்யினும் பிற்காலத்தின்கண்ணும் அது முதல்நூலாவதேயாம். அகத்தி யம் முதல்நூல், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் வழிநூல் என்றவாறு. (தொ. பொ. 649 பேரா.)

முதல்நூலின் இருவகை -

{Entry: P16b__547}

இயற்கை முதல்நூலும், செயற்கை முதல்நூலும் எனமுதல் நூல் இருவகைப்படும். முனைவனாம் இறைவன் தமருகத்தி னின்று ஆரியத்திற்கு முதல்நூலாக மாகேச்சுர சூத்திரம் தோன்றினாற் போல, அக்காலத்தில்தானே அவன் வாயி னின்று தமிழிற்கு முதல்நூலாக முப்பத்துமூன்று சொற்கள் தோன்றின. அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டன. அவை. நுணுகி ஆராய்ந்தவழி, இயல் இசை நாடக மென்னும் முத்தமிழ் இலக்கணமும் முப்பொருளும் முற்றத்தோன்றும் இயல்பினவாதலின், அச்சூத்திரங்கட்கு இசை நுணுக்கம் எனப் பெயர் வழங்கிற்று. இசையென்பது சொல். அதுவே தமிழிற்கு இயற்கை முதல்நூல் எனப்படும்.

இனிச் செயற்கை முதல்நூலாவது, தானே தலைவனாகிய அம்முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் அவன் அருளால் அவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழித்தாகப் பிண்டம் படலம் ஓத்துச் சூத்திரம் எனச் செயற்கைநலம் தோன்றச் செய்த நூலாம். அத்தலைவர் அமரமுனிவராகிய அகத்தியனும், நாரதனும், ஏனைய முனிவராகிய மார்க்கண் டேயனும், வான்மீகியும் முதலாகப் பலர்.

அவருள் கலசயோனியாகிய ஆசிரியன் அகத்தியன் சிவபெரு மானிடத்துத் தமிழின் இயற்கை முதல்நூலினையுணர்ந்து பின்னர் அதன் பொருளை முருகவேளிடத்துக் கேட்டுத் தெளிந்து முத்தமிழிலக்கணமும் முப்பொருளும் ஆதியில் முற்றக் கூறினான் ஆதலின், அவன் அருளிச் செய்த சிற்றகத் தியம் பேரகத்தியம் என்னும் இரண்டு நூலும் தமிழிற்குச் செயற்கை முதல்நூலாயின. நாரதன் முதலாயினாரும் அம் முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் ஆதலின், அவர்கள் பிறிதொரு செயற்கை நூலின் வழித்தாக நூல் செய்யார்;

முதல்நூல்வழி இயற்றப்படும் நூற்குரிய மரபு -

{Entry: P16b__548}

மரபியலோடு ஒத்த சூத்திரம் (தன்னுள் அமைந்த உரையினை விரிக்க வேண்டின) காண்டிகையினது பொருள் தோன்றக் கிளக்கப்பட்ட வகையினையுடையதாகி, பத்து வகைக் குற்றங் களுமின்றி, பொருந்துமாற்றான் 32 வகை உத்தியொடு பொருந்தி வருமாயின், புலவோர் அதனை நூல் என்பர்.

மேற்கூறிய நூலின்கண் சூத்திரங்களை உரை தோன்ற யாக்கு மிடத்தும், குற்றமறக் காண்டிகை ஒருங்கு தோன்றப் புணர்க்கு மிடத்தும், உணர்த்தப்படும் பொருளை உடன்பாட்டு முறையான் விதித்தல் - எதிர்மறை முறையான் விலக்கல் - என இருவகையான் குற்றமற ஆராய்ந்து புணர்க்கவும் படும்.

விதித்தல் பெரும்பான்மையும் விலக்கல் சிறுபான்மையுமாக நிகழும். இவை தனித்தனி வருதலன்றி, ஒரு சூத்திரத்தின் கண்ணே ஒருங்கு நிகழ்தலும் கூடும். (தொ. மர. 97, 98 ச. பால.)

நாரதன் இசைத்தமிழ் ஒன்றே முற்றக் கூறினான் எனவும், ஏனையோர் ஒரு தமிழாயினும் முற்றக் கூறாது சிற்சில பகுதியே கூறினார் எனவும் பிற நூல்களான் அறியப்படுகிறது. ஆதலின், அவர்கள் செய்த நூலெல்லாம் அகத்தியத்துக்கு இணையாகிய செயற்கை முதல்நூல் எனப்படும். (பா. வி.பக். 96,97)

முதல்நூலொடு மாறுகோடல் -

{Entry: P16b__549}

சூத்திரம் காண்டிகை உரை என்று சொல்லப்பட்ட இலக் கணங்கள் எல்லாம் சிதையாது மாட்சிமைப்படினும், முதனூலொடு மாறுகொள்ளின் அது வழிநூல் எனப் போற்றப் படாது குற்றமுடையதாகவே கருதப்படும்.

எனவே பொருளமைப்பில் வழிநூல் முதல்நூலொடு மாறு கொள்ளுவது அமைக்க முடியாத குற்றமாம். அத்தகைய குற்றமுடையது வழிநூல் ஆகாது என்பது. (தொ. பொ. 660 பேரா.)

முதல் மாணாக்கர் -

{Entry: P16b__550}

‘முதன் மாணாக்கர், காண்க.’

முதன் மாணாக்கர் -

{Entry: P16b__551}

தலை இடை கடை என மூவகைப்பட்ட மாணாக்கரிடையே முதல் நின்ற தலைமாணாக்கர். இவர்கட்கு, நீரொழியப் பாலையே பிரித்துண்ணும் அன்னமும், பலவாக ஓரிடத்துக் கண்ட இரையை வெவ்வேறிடம் திரியாதே ஆண்டேயே வயிறார உண்டு பின்னர் ஓரிடத்தே கிடந்து அசையிடும் பசுவும், உவமை சொல்லப்படுவன. அவை போலவே, இம்முதல் மாணாக்கரும், ஆசிரியன் சொல்லியவற்றுள், தாமதகுணத்தால் அவன் மொழிந்த வேண்டத்தகாதவற்றை நீக்கி, வேண்டுமவற்றையே மனங்கொள்வர்; கல்விச் செல்வம் நிறைந்த ஓராசிரியர்பாலேயே நிறையப் பாடங்கேட்டு, அக்கேட்டவற்றைத் தனித்துச் சிந்தித்து மனத்தே இருத்திக் கொள்வர். (நன். 38)

முதனூல் -

{Entry: P16b__552}

‘முதல்நூல்’ காண்க.

முந்து நூல் -

{Entry: P16b__553}

முந்து நூல் எனப் பொதுப்படக் கூறியமையால், ஆதி நூலா கிய இசைநுணுக்கமும் அகத்தியமும் அதற்கு இணை நூலாகிய தேவஇருடி நாரதன் முதலியோர் செய்த நூல் களும் என இத்தொடக்கத்தன முதல்நூல்களும், அவற்றின் வழிநூல் எனப்பட்ட மாபுராணம் பூதபுராணம், இசை நூலாகிய இசைநுணுக்கம் முதலான நூல்களும் என, தொல்காப்பியத்துக்கு முன் உளவாகிய தலைச்சங்கத்து நூல்களெல்லாம் கொள்ளப்படும். மாபுராணம் முதலியன தலைச்சங்கத்தே தோன்றினும், அவை அச்சங்கத்தார்க்கு நூலாகாமல் இடைச் சங்கத்தார் முதலாயினார்க்கே நூலானமையின் அவை ஈண்டு முந்துநூலுள் அடங்கா என்ப. (பா. வி. பக். 174)

முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று -

{Entry: P16b__554}

இது தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; முன் ஒருகால் பின்பற்றிய முறையை விடுத்து வேறு ஒருகால் தலைதடுமாற்றமாக முறை மாற்றிக் கூறி அதனால் சில கருத்துக்கள் பெறப்பட வைத்தல்.

“பன்னீருயிரும் மொழிமுத லாகும்” (தொ. எழுத். 89), ‘உயிர் மெய் அல்லன மொழிமுத லாகா’ (எழுத். 60) என உயிரை முன்னரும் மெய்யைப் பின்னரும் கூறிய முறையை மாற்றி, ‘க த ந ப ம எனும் ஆவைந் தெழுத்தும், எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (தொ. எழுத். 61) என மெய் பற்றி வரையறை கூறுதல் இவ்வுத்திவகை.

உயிர்மெய் பற்றிய நூற்பாவில் ‘புள்ளி யில்லா எல்லா மெய்யும்’ (தொ. எழுத். 17) என மெய்யை முற்கூறுவது இவ் வுத்திவகையின் இனமாகும்.

மயங்கக் கூறல், நிறுத்த முறையாற் கூறாது மற்று அதுவே பற்றாக மற்றொரு பொருள் கூறப்படும். இது தெளிவு கருதி முன்னைய முறை மாற்றிக் கூறப்படுதலின் மயங்கக் கூறல் என்னும் வழுவன்று. (தொ. சொல். 418 நச்., தொ.பொ. 665 பேரா.)

முப்பத்திரண்டு உத்திகள் -

{Entry: P16b__555}

உத்தி - நோக்குக.

யாப்பருங்கல விருத்தியுரையும் வீரசோழிய உரையும் இவற்றையே உத்திகளின் பெயராகக் குறிப்பன. மாறனலங் காரம் வேறு பெயர் கூறும். (நன். 14)

முப்பத்திரண்டு உத்தி வகைகள் -

{Entry: P16b__556}

உத்தி - நோக்குக. (தொ. பொ. 665 பேரா. இ. வி. பாட். 138)

முரண்கொள மொழிதல் -

{Entry: P16b__557}

நூற்கு ஆகா என விலக்கப்பட்ட பத்துக் குற்றங்களுள் ஒன்று. முன்னே கூறிய பொருளொடு மாறுகொள்ளுமாறு பின்னர்க் கூறுதல். ‘மாறுகொளக் கூறல்’ என்பதும் அது. (மா. அ. 23)

முரண்மொழி -

{Entry: P16b__558}

செய்யுட் குற்றங்களுள் ஒன்று; மாறுபட்டமொழியாவது. முன்னர்க் கூறிய தொன்றற்கு மாறுபட்ட மொழியாம்; அன்றி, நல்லோர் வகுத்த சாத்திரங்கட்கு மலைவாக மொழி வதுமாம். (யா. வி. பக். 565.)

முறைபிறழாமை -

{Entry: P16b__559}

இவ்வுத்திவகை இலக்கணம் - தான் எடுத்துக்கொண்ட அதிகாரத்திற்கும் இயலிற்கும் உரியவற்றைப் பிறழாமல் கூறுதலும், இதனை ‘இந்நிரலாகக் கூறுவல்’ என நிறுத்திய முறை பிறழாமல் கூறுதலுமாம்.

எ-டு : நூல் மரபிற் கூறியவற்றைப் பிற இயல்களுள் கூறாமை யும், பிற இயல்கட்குரியவற்றை நூல்மரபிற் கூறாமை யும். (தொ. மர. 109 ச. பால)

முறையின் வைப்பு -

{Entry: P16b__560}

நன்னூல் சுட்டும் நூலழகு பத்தனுள் ஒன்று; சொல்லப் புகுந்தவற்றை முன் நிறுத்திய முறைமைக்கு ஏற்பப் பிறழாது சொல்லுதல். நன்னூலுள் காணப்படும் தொகை வகை விரியாக அமைந்த நூற்பாக்கள் எடுத்துக்காட்டாவன.

சொல் பொருள் இயல் அதிகாரம் முதலியவற்றை யாதானும் ஏற்ற ஒரு வரிசைப்பட வைத்தல் எனினும் ஆம். (நன். 13)

முன்மொழிந்து கோடல் -

{Entry: P16b__561}

நன்னூல் கூறும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று. முன்னர் ஓரிடத்து ஒன்று சொல்லிப் பின்னர் அதனை வேண்டுமிடம் தோறும் எடுத்துக் கொள்ளுதல்.

பின் உயிரீற்றுப் புணரியலில் குற்றியலுகரப் புணர்ச்சியில் எடுத்தாளப் பயன்படுதல் நோக்கி, எழுத்தியலுள் குற்றிய லுகரத்தை ‘நெடிலோ டாய்தம்’ (94) என அறுவகையாகப் பாகுபடுத்தமை இவ்வுத்திக்கு எடுத்துக்காட்டாவது. (நன். 14)

முனைவன் -

{Entry: P16b__562}

1. இறைவன் (தொ. பொ. 649 பேரா.) 2. தலைவன். 3. முன்னோன். (கோவை. கொளு 329) (L)

மூடு -

{Entry: P16b__563}

மரபு பற்றி வரும் பெண்பாற்பெயர்களுள் ஒன்று. ஆட்டின் பெண்பாலை மூடு (கடமை என்னும் இரண்டு பெயரும்) குறிக்கும். இச்சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. பண்டைச் செய்யுளுள்ளும் மேற்கோள் காணப்பட்டிலது. (தொ. பொ. 558, 619 பேரா.)

மூவரின் நடை பெறுதல் -

{Entry: P16b__564}

நூலின் மூன்று வகையாகிய தந்திரம் சூத்திரம் விருத்தி எனுமிவற்றை நடத்தும் ஆசிரியர் மூவர் ஆவர். அவர் நூலா சிரியர் போதகாசிரியர் உரையாசிரியர் என்போர். (யா. வி. பக். 426)

மூவறிவுயிர் -

{Entry: P16b__565}

உற்றுணர்தல், நாச்சுவை கோடல், மோந்தறிதல் என இம்மூவறிவினை யுடைய உயிர்கள். அவை சிதலும் எறும்பும், அவற்றின் கிளையாகிய ஈயல், மூதாய் (-தம்பலப் பூச்சி) போல் வனவும், பிறப்பு ஆகிய மக்கட்குழவியும் விலங்கின்கன்றும் இம்மூவறிவுப் பருவத்தையுடை யனவும் அட்டை போல்வன வும் கொள்ளப்படும். (சிதல்-கறையான்).

(தொ. பொ. 585 பேரா.)

‘மேவாங்கு அமைந்த மெய்ந்நெறிக் காண்டிகை’ -

{Entry: P16b__566}

சூத்திரத்தில் அமைந்த சொற்பொருளை விட்டு நீங்குதலின்றி விரிவொடு பொருந்தி, குறித்த சூத்திரம் முடித்தற்காக ஏது நெறியானும் எடுத்துக்காட்டானும் பொருந்தியவாறு அமை யும் பொருள்நெறியை யுடைய காண்டிகையுரை.

அஃதாவது உரை மிக அகலலாகாது என்பது. “இம்மலை நெருப்புடையது” என்ற சூத்திரப் பொருட்கு, “புகையுடைத்து ஆதலின்” என்பது ஏது; “அடுக்களை போல” என்பது எடுத்துக்காட்டு. இவ்வாறு ஏது வகையாலும் எடுத்துக்காட் டாலும் சூத்திரப்பொருளை மிக அகலாதவாறு உரைக்க என்பது. (தொ. பொ. 648 இள.)

மொழிந்ததை மொழிதல் -

{Entry: P16b__567}

மாறனலங்காரம் கூறும் பத்துக் குற்றங்களுள் ஒன்று; ‘கூறியது கூறல்’ என்று நன்னூல் இதனைக் கூறும். (மா. அ. 23)

‘மொழிந்த பொருளொடு ஒன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்’ -

{Entry: P16b__568}

தொல்காப்பியம் சுட்டும் உத்திவகைகளுள் ஒன்று; சொல் லப்பட்ட செய்திகளை மனங்கொண்டு, முன்சொல்லப்படாத அவற்றிற்கு இனமாகியவற்றின் செய்திகளையும் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)

சூத்திரத்துட் பொருள் பலபடத் தோன்றுமாயின், முற்பட்ட சூத்திரத்துக்கு ஒக்கும் பொருளுரைத்தல்; அன்றியும் முற் பட்ட சூத்திரத்தினான் ஒரு பொருள் ஓதியவழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோடு ஒன்ற வைத்தலுமாம். (656 இள.)

மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல், மொழியாததனை முட்டின்று முடித்தல் என இரண்டாக்கி, இரண்டாவதனை உரையிற்கோடல் என்பர் இளம்பூரணர்.

தொ. எ. 32, 101, 258 நச். உரையில் இவ்வுத்தி காணப்படும்.

எடுத்து ஓதாததும் எடுத்து ஓதியதனோடு ஒத்த சிறப்பிற்றாம்.

‘தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா’. (தொ. பொ. 367) வெண்சீர்க்கு, வரும் சீரும் வெண்சீரேயாகியவழித் தளை வகை நிலைமை கொள்ளப்படமாட்டாது. எனவே, வெண்சீர் நிற்ப, இயற்சீர் வந்து ஒன்றின் தளை கொள்ளப்படும் என்றறிதல் இவ்வுத்தி வகையாம்.

‘னஃகான் ஒற்றே’ (சொல். 5) ‘ளஃகான் ஒற்றே’ (சொல். 6) ‘ரஃகான் ஒற்றும் பகர இறுதியும், மாரைக் கிளவியும் உளப்பட’ (சொல். 7) என்ற நூற்பாக்கண் ‘பகர இறுதி’ என்று கூறியதனை உட்கொண்டு, னஃகான் ளஃகான் ரஃகான் மார் என்பனவும் ஈற்றில் நிற்கும் என்று கோடலும், ‘ஆ ஏ ஓ அம் மூன்றும் வினாஅ (எழுத். 32) என்றவழி, யகர ஆகாரமும் கோடலும் போல்வன இவ்வுத்திக்கு இனம். (பேரா.)

மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தலாவது சூத்திரத்துள் பொருள்பல தோன்றுமாயின், முற்பட்ட சூத்திரத்திற்கு ஒக்கும் பொருளுணர்த்தல். ‘இலனென்னும் எவ்வம் உரை யாமை ஈதல்’ என்ற குறளுக்கு (223) ‘நல்லாறெனினும் கொளல் தீது’ என்ற குறளின் (222) பொருட்கு ஒன்ற, ‘இலன் என்னும் எவ்வம் உரையாமையும் ஈகையும் குலனுடையான் கண்ணே உள’ என்று உம்மை விரித்துப் பொருள் கூறுதல் போல்வன. (மா. அ. 25)

மொழியாததனை முட்டின்றி முடித்தலாவது ‘அரையளவு குறுகல் மகரம் உடைத்து... காலை’ (தொ. எ. 13) என்பதற்கு, அரைஅளவிற் குறுகிக் கால்அளவு பெறும் என்று கோடல். இஃது உரையிற்கோடல் எனவும் படும். (மா. அ. 25)

மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் -

{Entry: P16b__569}

தமிழக எல்லைக்கு அப்பால் வாழ்நரும் செந்தமிழ்ப் பனுவலின் திறனறிந்து பயன்கொள்ள முதனூலை அவர்தம் மொழியிற் பெயர்த்து நெறிவிளங்க யாத்துச் செய்தல்.

“பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ் நூலாகச் செய்வது இஃது” எனப் பேராசிரியர் உரை கூறுவார். அது பொருந்தாது.

தொகுத்தல் முதலிய மூன்றும் எந்த ஒரு முதனூலை நோக்கி நின்றனவோ, மொழிபெயர்த்தல் என்பதும் அந்த நூலை நோக்கி நிற்றலே முறையாகலானும், பிற பாடைப்பொருளை மொழிபெயர்த்து அமைப்பின் அது பிற பாடையார்க்கு வழிநூலும் பெயர்க்கப்பட்ட மொழியினர்க்கு முதனூலும் ஆவதன்றி வழிநூலாகாமையானும் பேராசிரியர் கருத்துப் பொருந்தாது. பிற பாடையினின்று மொழிபெயர்க்கப் பெற்ற பொருள் பெயர்க்கப்பட்ட மொழியாளர்க்குப் புதிதாகலின் வழிநூலாகாமை அறிக. அவ்வாறே தமிழினின்று பிறிது மொழியிற் பெயர்க்கப்பட்ட நூல் தமிழிற்கு வழிநூலாத லும், பெயர்க்கப்பட்ட மொழிக்கு முதனூலாதலும் பொருந் தும். (தொ. மர. 96 ச.பால.)

மொழிவாம் என்றல் -

{Entry: P16b__570}

இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; ஓரிடத்தில் கூறப்பட வேண்டிய பொருண்மை ஒன்றனை ஒரு காரணம் பற்றிப் பின் ஓரிடத்தில் குறிப்பிடுவோம் என்றல். (தொ. பொ. 665 பேரா.)

சில பொருளைக் கூறி, அவற்றுள் ஒன்றனை இன்ன இடத்துக் கூறுவாம் என உரைத்தல். (656 இள.)

தொடர்மொழிக் குற்றியலிகரம் பற்றிச் சுட்டி அதனைப் பற்றிய செய்தி குற்றியலுகரப் புணரியலில் கூறப்படும் என்ப தனை மொழிமரபில்,

‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே, உணரக்கூறின் முன்னர்த் தோ ன்றும்’ (எழுத். 35 நச்.) என்று கூறுவது இவ்வுத்திவகை. (பேரா.)

பின்னர் மெல்லினம் மிகுதலை உயிர்மயங்கியல் முதலிய வற்றில் குறிப்பிடப்போகும் ஆசிரியர், தொகை மரபிலேயே க ச த ப என்ற வல்லினமெய் வருமொழி முதற்கண் வரின், அவற்றிற்கு உரிய மெல்லின மெய்களாகிய ங ஞ ந ம என்பனவே முறையாக மிகுதல் நிகழும் (எழுத். 143 நச்.) என முன்கூட்டிக் கூறுதல் போல்வன அதன் இனம். (பேரா.)

ஒருமொழிக் குற்றியலிகரத்தை மொழிமரபு முதற்பாவில் (எழுத். 34) கூறிப் புணர்மொழிக் குற்றியலிகரத்தைச் சுட்டி, அது குற்றியலுகரப் புணரியலுள் விளக்கப்பெறும் என்ற கருத்தில், ‘புணரியல் நிலையிடைக் குறுதலு முரித்தே, உணரக் கூ றின் முன்னர்த் தோன்றும்’ (எழுத். 35) என்று கூறுதல் போல்வன. (மா. அ. 25)

மோத்தை -

{Entry: P16b__571}

ஆட்டினது ஆண்பாலை யுணர்த்தும் மரபு பற்றிய பெயர்.

(தொ. மர. 47 பேரா.)

ய section: 6 entries

யாப்பினுட் சிதைதல் -

{Entry: P16b__572}

முதல்நூலின் வழிநூல் செய்பவன், இழிந்தோர் வழக்கும் வழக்கன்றோ எனக் கூட்டி விரித்துச் செய்தல்; அழான் புழான் போல்வன இக்காலத்து இல என்று களைந்து தொகுத்துச் செய்தல்; தொகையும் விரியும் மயங்குமாறு ‘விரிந்தது தொகுத்தல்’ என்னும் உத்தியைப் பிறழ வுணர்ந்து, தொகை விரி என வேண்டா விடத்தே தொகுத்தே செய்தல். மொழிபெயர்த்தலைத் தன் மனம் பட்டவாற்றால் இதுவே மெய்யென மயங்கிக் கூறுதல் என்பன நான்கும் ஆம். (தொ. பொ. 662 பேரா.)

யாப்பினுள் ‘பிறவும்’ என்றதனால் அறியப்படுவன -

{Entry: P16b__573}

நூல் சூத்திரம் ஓத்து படலம் பிண்டம் ஆமாறும், அடியின்றி நடப்பனவும், ஓரடியாய் நடப்பனவும், புனைந்துரையாய் நடப்பனவும் ஆம். (யா. க. 95 உரை பக். 95)

யாப்பு (1) -

{Entry: P16b__574}

1. செய்யுள் (சூடா. X - 29) 2. யாழ்ப்பத்தரில் குறுக்கே வலியுறச் செய்யும் கட்டு (மலைபடு. 28) 3. சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் ஒன்று; ‘இவை ஆய்ந்த பின்னர் இது கேட்கற்பாற்று, என்ற இயைபு (நன். 47; சிறப்புப்பாயிரம் சிவஞானமுனிவர் உரை) (L)

யாப்பு (2) -

{Entry: P16b__575}

யாப்பாவது தொகுத்தல், விரித்தல், தொகை விரி, மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்பன. “இவை ஆய்ந்த பின்னர் இது கேட்கற்பாற்று என்ற இயைபே யாப்பாவது” என்று உனரத்த சிவஞான முனிவரை அரசஞ் சண்முகனார் பின் வரும் காரணங்களைக் காட்டி மறுப்பர்.

சிறப்புப்பாயிரம், ஆக்கியோன் பெயர் இது, முதல் நூல் இது, நூல் வழங்கும் எல்லை இது, நூற்பெயர் இது, நூல் நுதலிய பொருள் இது முதலாக ஏனைய ஆறும் பெயர் அறியக் கூறுவது போல், நூல் யாப்பின் பெயர் இது என்று பெயர் கூறுதலே முறையாவது; இஃதன்றி, மாணாக்கரது செயற்கை யறிவாகிய யாப்பைக் கூறுவதற்கு ஓரியைபும் இல்லை; இயைபின்றிக் கூறினும் அமையும் எனின், யாப்பு என்ற இவர் கூறும் செய்தி ‘கோடல் மரபு’ ஆகிய பொதுப்பாயிரத்துள் பெறப்படுதலால் ஈண்டும் கூறின் கூறியது கூறல் என்னும் குற்றமாம். “கூறியது கூறலாகாது; கோடல் மரபுள் கூறியது பொதுச்செய்தி. ஈண்டுக் கூறுவது சிறப்புச்செய்தி” என்று கூறின், அவ்வாறு பொதுப்பாயிரத்துள் ஆசிரியனுக்குக் கூறியது பொதுவியல்பு எனப்படும்; பின்னர்ச் சிறப்பியல்பு கூறாமை குன்றக் கூறலாய் முடியுமாதலின், பொருந்தாது என்பது. (பா. வி. பக். 239, 240)

யாப்புக் கூறலின் ஐயமறுத்தல் -

{Entry: P16b__576}

இன்ன நூலின் வழியதாகச் செய்யப்பட்டது என ‘வழி’ கூறுதலால், முந்துநூல் பொருளே வழிநூலிலும் உள்ளது என்பதே பெறப்படும் அன்றி, அம்முந்துநூல் இருக்க இவ் வழிநூலை யாது காரணத்தால் செய்தான் எனவும், அம் முந்துநூலில் வழுக்கள் இருத்தல் பற்றி அவை களைதற் பொருட்டுச் செய்தானோ எனவும் ஐயம் எழும். அவ்வையம் களைதற்பொருட்டு, முந்துநூலிற் கூறிய பொருள்கள் உணர்தற்கு அரியவாகத் தொக்குநின்றமையாலோ விரிந்து நின்றமையாலோ தொகைவிரியாக நின்றமையாலோ பிறிதொரு மொழிக்கண் நின்றமையாலோ, அப்பொரு ளையே உணர்தற்கு எளியவாகப் பயன்படுமாறு தொகுத்தல் முதலாகிய நால்வகைகளுள் இவ்வகையாற் கூறினான் என்று யாப்பும் கூறவேண்டும்; ‘வழி’ மாத்திரம் கூறின் சாலாது. (பா. வி. பக். 189)

யாப்புக் கூறலின் காரணம் -

{Entry: P16b__577}

‘வழியின் நெறியே நால்வகைத் தாகும்’ என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறலின் முதல்நூலுக்கு யாப்பு இன்று என்பது பெறப்படுதலின், வழிநூலுக்கு யாப்புக் கூறல் அமையும்; களவியலாகிய முதல்நூலுக்குக் கூறல் அமையாது எனின், ஆசிரியர் ‘வழியின் நெறியே’ எனப் பிரித்தமையின், முதல்நூல் நால்வகை யாப்பும் உடைத்தன்று என்பது பெறப்படுவதே யன்றி அவற்றுள் ஒரு வகையும் உடைத்தன்று என்பது பெறப்படாது; முனைவன் முற்றுணர்வினன் ஆதலின், மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்ற ஒன்று தவிர, ஏனைய தொகுத்தல் விரித்தல் தொகைவிரி என்ற மூவகை யாப்பும் ஏனைய நூலை நோக்கு மிடத்து அமையும் என்பது. (பா. வி. பக். 189).

வ section: 33 entries

வகுத்துக் காட்டல் -

{Entry: P16b__578}

நன்னூல் கூறும் 32 உத்திகளுள் ஒன்று; தொகுத்துச் சொல்லியவற்றை வெவ்வேறாக விரித்துச் சொல்லுதல் ‘எண் பெயர்’ (நன். 57) என்று தொகுத்துச் சுட்டியதனை மேல் வரும் சூத்திரங்கள் வகுத்துக் காட்டியவாறு. (நன். 14)

வகுத்து மெய்ந்நிறுத்தல் -

{Entry: P16b__579}

தொல்காப்பியனார் கூறும் 32 உத்திவகைகளுள் ஒன்று. முன்னர்த் தொகுத்துக் கூறிய செய்தியைப் பின்னர் விளக்கம் வேண்டிப் பகுத்துக் கூறுதல்.

எழுத்து முப்பத்து மூன்று (எழுத். 1) என்று தொகுத்ததனை, நெடில் குறில் உயிர் உயிர்மெய் வல்லினம் மெல்லினம் இடையினம் என்றாற் போலவும், உயர்திணை அஃறிணை என்று தொகுத்ததனை (சொல். 1) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்றாற் போலவும் வகுத்துக் கூறுதல்.

இரு திணை எனக் கூறிப் பெயர் வினைகள் உயர்திணை அஃறிணை விரவுத்திணை என மும்மூன்றாகக் கோடலும், அகமும் புறமும் கூறி, அகப்புறம் என மூன்றாகக் கோடலும் போல்வன வகுத்து மெய்ந்நிறுத்துதற்கு இனமாகும்.

இயற்சீர் பத்து எனவும் ஆசிரிய உரிச்சீர் ஆறு எனவும் வகுத்தவற்றையே (தொ. பொ. 325 - 328 பேரா.) மீண்டும் இயலசை மயக்கமாகிய நான்கனையே சிறப்பான இயற்சீர் எனவும், உரியசைமயக்கமாகிய நான்கனையே சிறப்பான ஆசிரிய உரிச்சீர் எனவும் (325) கோடலும் இதற்கு இனமாம். (தொ. பொ. 665 பேரா.)

வகைச் சூத்திரம் -

{Entry: P16b__580}

தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறுவேறாக வகுத்து உரைக்கும் சூத்திரம். (நன். 20)

‘எண் பெயர் முறை பிறப்பு’ (நன். 57) போல்வன.

வடவேங்கடம் -

{Entry: P16b__581}

வடக்கு - எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையுணர்தற்குத் தானே காரணமாகி நிற்கும் மங்கலத்திசை யாதலின், இச்சிறப்புப் பாயிரமும் நூலும் என்றும் நின்று நிலவுதல் வேண்டி, ‘வடவேங்கடம்’ என வடக்கு முற்கூறப்பட்டது, முதற்கண் மங்கலம் கூறல் ஆன்றோர் மரபு ஆகலின். (பா. வி. பக். 164)

வணக்கம் -

{Entry: P16b__582}

மங்களாசரணை மூன்றனுள் நூலின் முகப்பில் தெய்வம் குரு முதலியவர்க்கு வணக்கம் கூறுதல். (சி. போ. பா. பக். 1) (L)

வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் -

{Entry: P16b__583}

தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; பின் ஒரு நூற்பாவில் கூறப்பட்ட செய்தியைக் கொண்டு, முன் கூறப்படாத செய்தி ஒன்றனை உணரச் செய்தல்.

‘அகர இறுதி...... தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே’ (எழுத். 203) என்று கூறி அடுத்த நூற்பாவில் ‘ஞாங்கர்க் கிளந்த வல் லெழுத்து மிகுமே’ (எழுத். 204) என்றதால், “மிகுகின்ற ஒத்த ஒற்று வல்லொற்று” என்று பெறப்படவைத்தல் போல்வன இவ்வுத்திவகை.

‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே” (சொல். 1) என்றவழி, உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் திணை என்ற பெயர் எய்துவித்தல் இவ்வுத்திக்கு இனம். (தொ. பொ. 665 பேரா.)

ஒருங்கு எண்ணப்பட்டவற்றுள் ஒன்றனைப் பகுத்துக் கூறிய வழி, வாராததன்கண்ணும் அவ்விலக்கணத்தைக் கூட்டி முடித்தல். (656 இள.)

‘அறமுதல் நான்கினும்................ கருதப்படுமே’ (தண்டி. 10)

என்பது கொண்டு அறமுதலாகிய நாற்பொருள் குறைந்து வருவது சிறுகாப்பியம் என்பதனொடு, முன் பெருங் காப்பியத்துக்குக் கூறிய ‘கூறிய உறுப்பின் .......................... புலவர்’ (தண்டி.9) என்ற கருத்தையும் கூட்டி, சிறுகாப்பியம் வருணனை களிற் சில குறைந்தும் வரலாம் என்று கோடல். (மா. அ. 25 உரை)

வலம்புரிமுத்தின் குலம்புரி பிறப்பு’-

{Entry: P16b__584}

நல்லாசிரியனுக்கோதிய எண்வகை உறுப்புக்களில் முதலா வது ஆகிய பிறப்பு. தாய்மரபு தந்தைமரபு என்னும் இரு வகைக் காரணமும் குற்றமின்றிப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருவது ஆதலின் அதற்கு வலம்புரியும் மழைத் துளியுமாகிய இருவகையும் குற்றமின்றி மேம்பட்ட வலம்புரி முத்து உவமாயிற்று. (பா. வி. பக். 20)

வழக்கு இலக்கணம் -

{Entry: P16b__585}

“வழக்கு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது உயர்ந்தோர் இடத்ததாம், தோன்றுதல் அவரிடத்து ஆகலான் என்றவாறு. உயர்ந்தோராவார் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் தலைச்சங்கத்தாரும் முதலியோர்.” (இ. வி. பாட். 149)

“உயர்ந்தோர் ஆணையால் உலகநிகழ்ச்சி செல்கின்றது. என்றவாறு; எனவே, உயர்ந்தோர் எனப்படுவார் அந்தணரும் அவர் போலும் அறிவுடையோரும் ஆயினார். (தொ. பொ. 647 பேரா.)

“வழக்கெனப் படுவது” என்ற மரபியல் சூத்திரத்தான் வழக்கு உயர்ந்தோர்கண்ணதாயிற்று; அவர் அகத்தியன் முதலியோர் என்பது பாயிரத்துள் கூறினாம்” (தொ. பொ. 217 நச்.)

வழி -

{Entry: P16b__586}

வழி என்பது இந்நூல் இன்ன நூலின் வழித்தாகச் செய்யப் பட்டது என்பது.

முனைவனை வழிபட்டுத் தலைவராயினாரால் முதல்வன் கண்ட இயற்கை முதல்நூலின் வழியே செயற்கைநலம் தோன்றச் செய்யப்படுவன ஆதலின், அவை செயற்கை முதல்நூல் எனப்படும். செயற்கை முதல்நூலுக்கு இணைநூல் உண்டாதலின், அதன்வழித்தாகத் தோன்றும் நூலுள் ஆசிரிய மதவிகற்பம் உறுதல் இயல்பாயிற்று. அவ் வழிநூலும் அதன் வழித்தாக ஒரு நூலுளதாயின் அந்நூலுக்கு முதல் நூலாம். இவ்வாற்றான், ஒருவற்குத் தந்தையாயினும் பிறனொரு வனுக்கு மகனும் ஆயினாற் போல, முனைவன் கண்ட இயற்கை முதல்நூல் நீங்கலான ஏனைய நூலெல்லாம் முதல்நூலும் வழிநூலும் என ஈரியல்புடையன. (பா. வி. புக். 6, 98, 102.)

வழி நூல் -

{Entry: P16b__587}

வழிநூல்களாவன முதல்நூல்களிற் கூறிய பொருள்களொடு வேறுபடாமல் பின் தோன்றுவனவாகி, முதல்நூலாகிய அகத்தியத்தில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் மயங்கக் கூறினாற் போலக் கூறாது, ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என வேறோர் அதிகாரமாகத் தொகுத்துக் கூறுதலும், விரிந்த சூத்திரப் பொருளைத் தொகைமரபால் தொகுத்துக் கூறுதலும், எழுவாய் வேற்று மையின் பயனிலைகளாக ‘வினை வினா பெயர்’ என்று அகத்தியனார் தொகுத்துக் கூறியதனைப் ‘பொருண்மை சுட்டல்’ முதலிய ஆறாக (சொல். 67) விரித்துக் கூறுதலும், ‘எழுத்தெனப் படுப..... கடையே’ (எ.1) எனத் தொகையும் விரியுமாகக் கூறுதலும், வட சொல்லாற் கூறிய அறநூற் பொருளைத் தமிழ்மொழியால் தொகுத்தோ விரித்தோ கூறாமல் உள்ளது உள்ளவாறே மொழிபெயர்த்துக் கூறுத லும் ஆகிய இலக்கணங்களை யுடையனவாம். (இ. வி. 901)

வழிநூல் என்றற்குச் சிறப்புடையது முதல்நூல்வழிப் பிறந்த வழிநூல் என்றவாறு. அது தொல்காப்பியம்.

அகத்தியம் முதல்நூல்: தொல்காப்பியம் வழிநூல். தொல் காப்பியம் முதல்நூல்; பல்காயம் வழிநூல். ஆதி முதல்நூல் ஒழிய, ஏனை நூல்கள் ஒன்றற்கு வழிநூலாகவும் மற்றொன் றற்கு முதல்நூலாகவும் அமையும் ஆதலின், நூல்வகை முதலும் வழியுமென இரண்டே என்பது தொல்காப்பியனார் கருத்து. (தொ. பொ. 650 பேரா.)

வழிநூல் வகை -

{Entry: P16b__588}

தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்பன நான்கும் ஆம். தொகுத்தலாவது முதல்நூலுள் விரிந்து கிடந்தவற்றைச் சில்வாழ் நாட்சிற்றறி வின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறுதல். விரித்தலாவது முதல்நூலில் தொகுத்துக் கூறப்பட்டு விளங்காது நின்ற-தனை விளங்குமாற்றான் விரித்துக் கூறுதல். தொகைவிரி யாவது அவ்விரு வகையும் பற்றித் தொகுத்து முன் நிறுத்தி, அந்நிறுத்த முறையானே பின் விரித்துக் கூறுதல். மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தலாவது பிறபாடையாற் செய்யப் பெற்ற பொருளினைத் தமிழ்நூலாக, தொகுத்தும் விரித்தும் தொகைவிரியாகவும் செய்யாமல், கிடந்தவாற்றானே பொருள் பிறழாமல் செய்தல். (அதர்ப்பட - நெறிப்பட) (தொ. பொ. 652 பேரா.)

வழிநூலுக்கும் சார்பு நூலுக்கும் எய்தியதன் மேற்சிறப்பு விதி-

{Entry: P16b__589}

முன்னோராம் முதல்நூல் ஆசிரியர் சொன்ன பொருள் களையே பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ ஒத்திருக்க எடுத்துச் சொல்வதேயன்றி, அவரது சொல்லை யும் பொன்னே போலப் போற்றிக் கொள்ள வேண்டும் என்னும் கொள்கைக்கு அடையாளமாகவும், அம்முன்னோர் நூலையே பெயர்த்தும் செய்யாமல் அந்நூலினின்றும் வழிநூலும் சார்புநூலும் என வேறாக நூல்களைச் செய்தன ராயினும் “இந்நூலுள் ஆசிரியவசனம் இல்லையே” என்று பிறர் சொல்லும் குற்றத்தை நீக்க வேண்டுதற்காகவும், அம் முதனூலாசிரியர் மொழிந்த சில சூத்திரங்களை ஒரோவழித் தம் நூலுள் எடுத்து மொழியக்கடவர், வழிநூல் சார்பு நூலாசிரியர்கள். (நன். 9)

வழுஉச் சொற் புணர்த்தல் -

{Entry: P16b__590}

நன்னூல் சுட்டும் குற்றம் பத்தனுள் ஒன்று; குற்றமுடைய சொற்களைச் சேர்த்துவைத்தல்.

‘விளாம்என் கிளவி பழமொடு புணரின்

தளாஇயற் றன்றி இயற்கை யாகும்’ (தொ. பொ. 663 பேரா)

என்றாற் போல்வன. (‘விள’ என்பதனை ‘விளாம்’ என்றது வழுஉச் சொல்.) (நன். 12)

வன்ன மரபு -

{Entry: P16b__591}

எழுத்துக்களின் முதனிலை இறுதிநிலை இடைநிலை பற்றிய தொன்றுதொட்டு வரும் நெறி. (வீ. சோ. 181 உரை)

வாய்மைக்குத் திங்களும் ஞாயிறும் உவமமாதல் -

{Entry: P16b__592}

ஆசிரியன் நற்புலமையுடையோனாதலின், ‘திங்களொடு ஞாயிறு அன்ன வாய்மை’யுடையன். திங்கள் நன்மை பயத்த லின் நிகழ்ந்ததாகிய தன் உருக்காட்டுதலேயன்றி நிகழாத தாகிய களங்கமும் காட்டலான், வாய்மையுடைத்து. ஞாயிறு தீங்கு பயத்தலின் நிகழாததேயன்றி நிகழ்ந்த தாகிய தன் உருக் காட்டலும் இன்மையான், வாய்மையுடைத்து. நன்மை பயக்கும் உரைக்குத் திங்களும் தீங்கு பயவா உரைக்கு ஞாயிறும் உவமம் ஆதலின், ‘திங்களொடு ஞாயிறு’ என இரண்டும் கூறப்பட்டன. இவை வாய்மைக்கு உவமம்.

(திங்களின் ஒளியுடைய பரப்பு நன்மை பயப்பது, நிகழ்ந்தது; ஒளியில்லாக் களங்கமான பரப்பும் கலைவளரும்தோறும் தானும் உடன் வளர்ந்து, தேயும்தோறும் தானும் உடன் தேய்ந்து கலையொளியைக் கெடாது வருதலின், நன்மை பயப்பது; ஒளிக்கு உதவுதலின்மையின் நிகழாதது. இனி, ஞாயிறு தன் ஒளிப்பிழம்பாகிய நிகழ்ந்ததும் அதனகத்துப் புள்ளிகளாம் களங்கம் போல்வன இருத்தலாகிய நிகழாததும் கண்களைக் கூச வைக்கும் வெப்பமிக்க ஒளியுடையன வாதலின் அவையிற்றைக் காட்டாமையுடையது.) (பா. வி. பக். 66)

வாராததனான் வந்தது முடித்தல் -

{Entry: P16b__593}

தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; ஒரு நூற்பாவில் ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் முழுதும் கூறப்படவில்லை யாயினும், கூறப்படாததனையும் அந்நூற்பாவிலேயே அடக்கிக் கொள்ளுதல்.

எ-டு : ‘தொடரல் இறுதித் தம்முன் தாம்வரின்

லகரம் றகரஒற்று ஆதலு முரித்தே’ (எழுத். 214)

பல + பல = பற்பல; சில + சில = சிற்சில. நூற்பாவில் லகரம் றகர ஒற்று ஆகும் எனக் கூறப்பட்டதன்றி, அகரக்கேடு கூறப்படவில்லை; கூறப்படாத அகரக் கேட்டினைக் கொள்ளுதல் இவ்வுத்தி வகையாம்.

முதலில் ஆண்டுப் பின்னர்க் குறியிடுதலும், ஆட்சியும் குறியீடும் ஒருங்கு நிகழ்தலும், பின்னர் ஆட்சிக்கண் வாராமையும் போல்வன இதன் இனம்.

‘அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி’ என வினை யியலில் (சொல் 230) கூறிப் பின் எச்சவியலில் ‘நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி’ (சொல். 430) எனக் குறியிடுதலும், ‘அடைசினை முதல்.... வண்ணச் சினைச் சொல்’ (சொல். 26) என ஆட்சியும் குறியீடும் ஒருங்கு நிகழ்தலும், பின்னர் ‘வண்ணச்சினைச் சொல்’ என்பது யாண் டும் ஆளப்படாமையும் போல்வன இவ்வுத்தியினத்திற்கு எடுத்துக்காட்டு.

எதிரது போற்றல் பொருட்படைக்கண்ணது; வாராததனால் வந்தது முடித்தல் ஆட்சியும் குறியீடும் பற்றியது என்ற வேறுபாடு உணரப்படல் வேண்டும். (தொ. பொ. 665 பேரா.)

ஒருங்கு எண்ணப்பட்ட பொருள் ஒன்றனைப் பகுத்துக் கூறியவழி, ஆண்டு வாராததற்கு ஓதிய இலக்கணத்தை இதன் கண்ணும் வருவித்து உணர்த்தல். (656 இள.)

‘அற முதல் நான்கின்.... படுமே’ (தண்டி.10) என்ற பின் சூத்திரத்தை உட்கொண்டு, ‘கூறிய உறுப்பிற் சில குறைந்திய லினும், வேறுபாடின் றென விளம்பினர் புலவர்’ (தண்டி. 9) என்பதற்கு, அற முதல் நான்கும் அல்லாத ஏனைய உறுப் புக்களே என்று பொருள் செய்தல். மா. அ. (பக். 16) 25 உரை

வகுத்தமைத்தவற்றுள் ’ஒரு கூறு இதன்கண் வாராது’ என்று விலக்கியதைக் கொண்டு’ மறுகூறு வரும்’ என ஓர்ந்து கூறப்பட்ட விதியை முடித்துக் காட்டல். (தொ. மர. 109 ச.பால.)

எ-டு : பன்மைசுட்டிய பெயர், ஒன்று பல ஒருவன் ஒருத்தி என்னும் நான்கன் பாலும் வரும் என்றார்(பெயரியல் 28). பன்மை இருதிணைக்கண்ணும் உள எனினும், விரவுப்பெயர் இருதிணைக்கண்ணும் விரவுங்கால், பல்லோர்க் குறித்த பெயர் உயர்திணைக்கே வரும் எனவும் (பெய. 11)கள் என்னும் ஈற்றோடுவரின் அவை அஃறிணைக்கே ஆகும் எனவும்(பெய.15). மேல் வரையறை செய்தமையான், அவை விரவி வாரா என முடிந்தது. எனவே, அர் ஆர் ப என்னும் ஈறுகளையும் கள் என்னும் ஈற்றையும் உடையவற்றை நீக்கி, ஈற்றிடைச் சொல் இன்றி வரும் அஃறிணை இயற் பெயர் மாத்திரமே விரவிவரும் என முடித்தலாம்.

எ-டு : யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள்,’யானை’ ஈண்டுப் பன்மை சுட்டிய பெயர். (தொ. மர. 109 ச. பால)

வான்யாறன்ன தூய்மை -

{Entry: P16b__594}

தன் குடிப்பிறப்பியற்கையால் ‘சிற்றினம் அஞ்சும் பெருமை’ (குறள் 171) என்ப ஆதலின், சிற்றினம் சேர்தலை அஞ்சி அக்கீழ்களொடு கூடாமல் பெரியாரைத் துணைகோடலின், கீழாகிய நிலத்துத் துகளொடு கூடாத வான்யாறு (-தேவ கங்கை) போன்ற தூய்மையுடையான், நல்லாசிரியன். (பா. வி. பக்.60)

விகற்பத்தின் முடித்தல் -

{Entry: P16b__595}

விளங்குதல் வேண்டி பல வேறுபாடுகளின் சிறப்பு வாய்பாட் டாலே முடித்தல் என்னும் உத்தி; இது நன்னூல் குறிக்கும் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று.

‘றவ்வொடு உகரஉம்மை’ (நன். 145) என்னும் நூற்பாவுள், “றவ்வொடு உகர உம்மையும், தவ்வொடு உகர உம்மையும், பாந்தமும் இறந்த காலமும் எதிர்காலமும் ஏற்கும்” எனத் தொகுத்துக் கூறாது, அவற்றைத் தனித்தனியே கூறியது ‘விகற்பத்தின் முடித்தல்’ என்னும் உத்தி. (நன். 14)

விதிச்சூத்திரம் -

{Entry: P16b__596}

இதற்கு இதுவே விதி என்று முன் கூறப்படாத தொன்றை ஆணையிட்டுக் கூறுவது; அறுவகைச் சூத்திரங்களுள் ஒன்று:

எ-டு: தொடை பல தொடுப்பினும் தளை பல விரவினும் // முதல்வந் ததனால் மொழிந்திசின் பெயரே’ (யா. க. 53)

ஒரு செய்யுட்கண் தொடை பல தொடுத்து வரினும் தளை பல விரவி வரினும், அவற்றை முதற்கண் வந்த தொடை யானும் முதற்கண் வந்த தளையானும் பெயர் கூறுக என்று விதிக்கும் இது விதிச்சூத்திரமாம். (யா. க. பாயிர உரை.)

விரிந்தது தொகுத்தல் -

{Entry: P16b__597}

நச்சினார்க்கினியர் எடுத்தாளும் ஓர் உத்தி : ‘விரித்துத் தொகுத்தல்’ என்பர் இளம்பூரணர்.

எ-டு : முன்னர் (சொ. 204 - 209) ஆறு சூத்திரங்களான் உயர் திணைப் பன்மைத் தன்மை, உயர்திணை யொருமைத் தன்மை, செய்கு என்னும் தன்மை யொருமை வாய்பாடு, ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல், பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல், மாரைக் கிளவி என்பனவற்றை விரித்துக் கூறி, ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த, அந்நா லைந்தும் மூன்று தலையிட்ட, முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே’ (210) என அவ்விருபத்து மூன்றனையும் உயர்திணை வினைமுற்று ஆகும் எனத் தொகுத்துக் கூறுதல்.

அஃறிணை வினைமுற்றுக்களையும் அவ்வாறே விரித்து (218, 219) முன்னர்க் கூறி அடுத்துப் ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த, அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே’ (220) என்று தொகுத்துக் கூறியதும் விரிந்தது தொகுத்தலாம். (தொ. சொ. 210 நச்.)

விரிந்தவை இவையென விழுமிதின் காட்டல் -

{Entry: P16b__598}

மாறன் அலங்காரம் குறிக்கும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; தொகுத்தும் விரித்தும் காட்டியவற்றை மிகவும் விரிக்காமல் விழுமியனவாக விரித்து முடித்தல்.

எ-டு : ‘உயிர்மெய் ஆய்தம்.............. சார்பெழுத்தாகும்’ (நன். 60)

என்பதனுள், ‘சார்பெழுத்து’ எனத் தொகையால் ஒன்றும் வகையால் பத்தும் ஆகியவற்றை, ‘உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு’ என்னும் சூத்திரத்தான் (நன். 61) ‘ஒன்றொழி முந்நூற்றெழுபான் என்ப’ என விரித்ததன்மேலும், உயிர் மெய்க் குறில் உயிர்மெய் நெடில் உயிர்மெய் அகரம் எனவும் வல்லினம் மெல்லினம் இடையினம் எனவும் இறப்ப விரியாமல் விழுமிதாய்க் காட்டல். (மா. அ. 25)

விருத்தி (3) -

{Entry: P16b__599}

சூத்திரத்தில் உள்ள பொருள் மாத்திரமே யன்றி, அவ்விடத் திற்கு இன்றியமையாத எல்லாப் பொருளும் விளங்குமாறு தான் உரைக்கும் உரையானும், ஆசிரிய வசனமாகிய மேற்கோளானும், கருத்து பதப்பொருள் எடுத்துக்காட்டு வினா விடை என்னும் காண்டிகை யுறுப்பு ஐந்தனாலும், ஐயமற மெய்யான செய்தியைக் குறைவற விரித்துரைக்கும் உரை. (நன். 23)

விலக்கியல் சூத்திரம் -

{Entry: P16b__600}

சூத்திரவகை ஆறனுள் ஒன்று; பொதுவகையான் விதிக்கப் பட்ட தொன்றனை இன்னதற்கு ஆகாது என்று நீக்கிக் கூறுவது. (யா. க. பாயிர உரை)

எ-டு : ஓரெழுத்தொரு மொழியாகிய ஊகாரஇறுதி எழுத்துப் பேறாகிய உகரம் பெற்று நிற்கும் (எ-டு : தூஉக்குறை) என முன் சூத்திரத்துட் கூறியதனை அடுத்த சூத்திரத்தால் (தொ.எ. 268 நச்.) பூ என்னும் பெயர் அவ்வெழுத்துப்பேறளபெடை பெறாது, மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி வல் லெழுத்து மிக்கு முடிதலுமுடைத்து (வருமாறு : பூங்கொடி, பூக்கொடி) என்று விலக்கிக் கூறுவது. இவ்வாறு பொதுவாக விதிக்கப்பட்டதனை விலக்கும் இயல்புடைய சூத்திரம் இது.

விலங்கு உவமமாதல் -

{Entry: P16b__601}

விலங்கு - வேந்தன் ஆணையால், குற்றம் செய்தாரது காலினும் கையினும் இடப்படும் புனை. இவ்விலங்கு, வேந்தனான் ஒறுக்கப்பட்டாரை “இவர் குற்றம் செய்தார்” எனக் காட்டுதலின் வாய்மையின்மையும், சிறைப்பட்டோர் தப்பியோட முயலின் விடாது தடுத்தலின் உற்றுழி உதவாமை யும், அவருடைய பசி முதலியன கண்டு போக்காமையின் உறு பொருள் கொடுத்துதவாமையும் என இக்குற்றங்களுடைய காரணத்தான் மாணாக்கர் அல்லாதார்க்கு உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 140 முதலியன)

விழுமியது பயத்தல் -

{Entry: P16b__602}

நூலழகு பத்தனுள் ஒன்று; சிறந்த பொருளைத் தருதல். (நன். 131)

விளங்க வைத்தல் -

{Entry: P16b__603}

நூலழகு பத்தனுள் ஒன்று; சுருங்கச் சொல்லுமிடத்தும், சொல்ல விரும்பிய பொருள் ஐயமறப் புலப்படுமாறு தோன்ற உரைத்தல். (நன். 13)

விளங்கு உதாரணத்தது ஆகுதல் -

{Entry: P16b__604}

நூலழகு பத்தனுள் ஒன்று; எளிதில் விளங்கத்தக்க உதாரணங் களை யுடையதாதல். (நன். 131)

வெளிறுபட்டு இழிதல் -

{Entry: P16b__605}

நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல். எனவே, உய்த்துணரும் வகை சொல்லப் படாது வெளிப்படையாக நூல் யாக்கப்படுவதும் ஒரு குற்றம் என்றார். (மா. அ. 23)

வெற்றெனத் தொடுத்தல் -

{Entry: P16b__606}

நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; சொற்களைப் பொருளிலவாகப் பயனின்றித் தொடர்படக் கூறுதல். சூத்திரயாப்புள் மகடூஉ முன்னிலை வருதல் வெற்றெனத் தொடுத்தலாம் என்ப.

(நன். 12)

வேண்டாது கூறி வேண்டியது முடித்தல் -

{Entry: P16b__607}

தொல்காப்பியத்துள் சொல்லப்படாமல், உரையாசிரியர்க ளான் குறிப்பிடப்படும் ஓர் உத்தி; தேவையற்றது போன்ற செய்தி ஒன்று கூறி, அதனால் இன்றியமையாத செய்தி ஒன்றனைப் பெறப்பட வைப்பது.

எ-டு : விளிமரபில் உயர்திணையில் ‘இ உ ஐ ஓ’ என்ற நூற்பா முதல் (தொ. சொ. 120) இவ்வுயிரீறுகள் விளிபெறுமாறு விளக்கி, ‘ஏனை உயிரே உயர்திணை மருங்கின், தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்’ (124) என்ற நூற்பாவினைத் தேவையற்றது என்று கருதுமாறு கூறி, அதனால் இந்நான்கு ஈறுகளும் முன்னர் நூற்பாக்களில் குறிப்பிட்ட முறையன்றிப் பிறவாற்றானும் விளியேற்கும் என்று கொள்ள வைத்தல்.

(தொ. சொ. 124 சேனா.)

வேளாண்வாழ்க்கை முதலாயின எட்டுறுப்புள் அடங்குமாறு -

{Entry: P16b__608}

ஆத்திரையன் பேராசிரியன் கூறிய வேளாண்வாழ்க்கை முதலியன குடிப்பிறப்பு, தூய்மை, ஒழுக்கம், கல்வி, வாய்மை, வன்பு (-அழுக்காறின்மை), வெஃகாமை, சமனிலை என்ற எட்டுறுப்புக்களுள் அடங்கும். குடிமை எனப்பட்ட முத லுறுப்பின் பகுதியாகிய ஈகையின் விகற்பமே வேளாண் வாழ்க்கையும் அதற்கு ஏதுவாகிய தாளாண்மையும்; கல்வி எனப்பட்ட உறுப்பின் விகற்பமும் பயனுமே, ஏனைய எல்லாம் என்பது. (பா. வி. பக். 73)

வைசியர் மாலை, கொடி, பொருள் -

{Entry: P16b__609}

மாலை - வெட்சி, தாழை, ஆம்பல், சேடல், நெய்தல், பூளை, மருதம் ஆகிய பூக்களானாகிய மாலை. (சிலப். 22 : 68 - 70)

பொருள் - பசுக்களைக் காத்தும், வாணிபம் செய்தும், ஏர்த் தொழில் புரிந்தும் பெறும் பொருள். (பிங். 774)

கொடி - கருடக் கொடி (மதுரைத் தமிழ்ப் பேரகராதி பக். 919)

மலர் - காந்தள் - (மதுரைத் தமிழ்ப் பேரகராதி பக். 919)

வைசியன் : சொல்லாராய்ச்சி -

{Entry: P16b__610}

வைசியன் என்னும் பெயர் வீசுதல் என்னும் தொழிற்சொல் அடிப்படையாகப் பிறந்த வடசொல்லாம். வீசுவோன் - விற்போன் (பட்டினப்பாலை அடி 211). வீசுவோன் ‘வைசியன்’ என வடமொழியாக ஆக்கம்பெற்றது ‘வைசிகன்’ என்பது பிழையான பாடம் (அது வேசித்தொடர்புடையவன் எனப் பொருள்படும்.) (தொ. மர. 76 ச. பால.)